Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 4

oru naal

அந்த எல்லையற்ற நிலையில் வெறும் ஒன்று சேரல் மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது- அதுதான் தெய்வத்தின் முடிவு என்பதை முன்கூட்டியே நீ அறிந்திருந்தாயோ? எனக்கு அங்கு வந்து சேர்வதற்கும் ஒன்று சேர்வதற்கும் முடியவில்லை என்ற உண்மையையும் முன்கூட்டியே நீ தெரிந்திருந்தாயோ?

நம்முடைய அந்த முதல் சந்திப்பு வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்த ஒரு சம்பவமாக ஆகிவிட்டது! வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை உண்டாக்கிய அந்தச் சம்பவம்... இயல்பான குணத்தில் கூட மாற்றங்களை உண்டாக்கிய உன்னுடைய செயல்....

நான் நினைத்துப் பார்க்கிறேன்... நாம்... முன்பு... முன்பு... ஒரு காலத்தில்... ஒரு காலத்தில்...

வாழ்க்கையை மிகவும் பாதித்த ஒரு சம்பவம்? வாழ்க்கையில் திருப்பத்தையும் அடிப்படையான மாற்றத்தையும் உண்டாக்கிய ஒரு சம்பவத்தின் தொடர்ச்சி...?

அது என்ன? ஒரு சாதாரண மனித வாழ்க்கையில் பெரியதும் சிறியதுமான எப்படிப்பட்ட சம்பவங்களெல்லாம் நடைபெறுகின்றன? தற்காலிகமாகவோ தூரச் செயல்களாலோ உண்டான விளைவுகளுக்கும் விருப்பங்களுக்கும் விருப்பமின்மைகளுக்கும் காரணமாக இருந்து கொண்டு மனப்பூர்வமான பார்வையின் அடிப்படையில், அவை உண்டாக்கிய வினைகள் மற்றும் எதிர் வினைகளின் அடிப்படையில் நல்லவை என்றோ கெட்டவை என்றோ விமர்சிக்கப்படக்கூடிய சம்பவங்கள்... அவை இயல்பு வாழ்க்கையிலும் சூழல்களிலும் மனிதனின் உள்- வெளி சூழ்நிலைகளிலும் உண்டாக்கக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ள முடியாத மாற்றங்கள்... மனரீதியாகவும் குணரீதியாகவும் நிலவக்கூடிய சூழ்நிலைகளிலும் செயல்களிலும் அவை உண்டாக்கக்கூடிய ஆபத்தான காயங்கள் தரும் சந்தோஷங்களும் துயரங்களும்...

இந்தச் சம்பவங்களுக்கு உள்ளே வேறு பிரிவுகளோ உட்பிரிவுகளோ கூட இருக்கலாம். அதற்குக் காரணமாக இருப்பது- இயற்கை

சக்திகளோ, சமூகமோ, தனி நபரோ என்று இருக்கலாம். தனி நபர் என்னும்பட்சம், ஆணோ பெண்ணோ என்றும்...

சாதாரணமாக ஒரு மனிதனின் இயல்பான குணத்திலும் ரசனைகளிலும் தினசரி நடவடிக்கைகளிலும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையிலும் பாதிப்பு உண்டாக்க வேண்டுமென்றால், அந்த மாதிரியான ஒரு சம்பவம்- விருப்பங்களும் தனித்துவம் கொண்ட குணங்களும் வடிவமெடுப்பதும் தனித்தன்மை உண்டாகத் தொடங்குவதும் நடக்கக் கூடிய இளமைக் காலத்தின் ஆரம்ப காலங்களில் எங்கோ நடக்க வேண்டும்.

நான் மனதிற்குள் தேடிப் பார்க்கிறேன். ஞாபகங்களின் வழியாக இளமைக் காலத்தின் கடந்து சென்ற வழிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

பழைய திருவனந்தபுரம். கறுப்பு நிற கயிறைப்போல இருக்கும் பிரதான சாலை. கூட்டம் சிறிதும் இல்லை. ஒடுகலான சிவந்த மண் நிறைந்த சந்துகள். முரட்டுத் தனமான தரைகளும், அம்மன் கோவில்களும், சந்திப்புகளும் நிறைந்த சிறிய நகரம். மரங்களும் பெரிய மலைகளும் கடலும் ஏரிகளும் நிறைந்த ஒரு சிறிய அழகான இடம். அங்கிருக்கும் அந்த பழைய சிறுசிறு சந்துகள் எல்லாவற்றையும் இப்போதுகூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அந்த ஒடுகலான சந்துகளின் வழியாக நடந்து நான் வெள்ளையம்பலத்தை அடைகிறேன். வெள்ளை நிறத்திலோ அல்லது வேறு ஏதோ நிறத்திலோ இருக்கக் கூடிய எந்தவொரு கோவிலுமே இல்லாத வெள்ளையம்பலம். அன்று அங்கிருந்த ஒரு ஆலமரத்திற்கு அடியில் குங்குமத்தைத் தேய்த்து சிவப்பாக்கி, செத்திப்பூ மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்த- யக்ஷி அம்மன் என்று அழைக்கப்பட்ட சற்று நீண்ட உருண்ட ஒரு அப்பிராணி பாறைக்கல் மட்டுமே கோவிலுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொருளாக இருந்தது. வயதான ஒரு பெண் அதைப் பேணிக் காத்துக் கொண்டும், அக்கறையுடன் கவனித்துக் கொண்டும், சுற்றிச் சுற்றி வந்து கொண்டும் இருந்தாள். பக்தர்கள் மிகவும் குறைவான அளவிலேயே இருந்தார்கள் என்பதுதான் ஞாபகம். அதற்கு அருகிலேயே, இப்போது இருப்பதைப்போலவே அப்போதும் இருந்த வாட்டர் ஒர்க்ஸ். அங்கு அழகும் எளிமையுமாக இருந்த பூங்கா. அதற்கு உள்ளே அமைதியாக நின்று கொண்டிருந்த அரிகு மரங்களின் அருமையான நிழல் தீவுகள். அந்த நிழல் பகுதிகளில் இருந்த சிமெண்ட்டில் செய்யப்பட்ட பெஞ்ச்களும் நாற்காலிகளும். அந்த நாற்காலிகளில் ஒன்றில் சிந்தனையும் ஆர்வமும் சந்தோஷமும் நிறைந்த முகத்துடன் முன்னால் பார்த்துக்கொண்டிருந்த அந்த மெலிந்த, இருபத்தொரு வயதைக் கொண்ட இளைஞனை நான் அடையாளம் கண்டுபிடிக்கிறேன்.

பல்கலைக்கழக கல்லூரியில் மலையாளம் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த மாணவன். என். மோகனன். அவனுக்கு முன்னால் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் பதினெட்டு வயது மதிக்கக்கூடிய ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அதே கல்லூரியில் ஹானர்ஸ் வகுப்பில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. அவளுடைய பெயர்? ஓ! வேண்டாம். அதைக் கூறுவது சரியாக இருக்காது. அவளை அவள் என்று மட்டும் அறிந்து கொள்ளுங்கள். அவள் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சுக்குப் பின்னால் பத்து இருபதடிகளுக்குக் கீழே இருந்த மணல் பரப்பில் நான்கோ ஐந்தோ வயதைக் கொண்ட ஒரு அழகான சிறுமியும் ஆறேழு வயதைக் கொண்ட ஒரு சுறுசுறுப்பான சிறுவனும் ஓடி விளையாடி உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய- அந்த இளம்பெண்ணின் தம்பியும் தங்கையும்தான் அவர்கள். அவர்களை பூங்காவில் விளையாடுவதற்காக அழைத்துக் கொண்டு வருவதும், பத்திரமாகத் திரும்ப வீட்டிற்குக் கொண்டு போய் சேர்ப்பதும் என்ற பொய்யான காரணங்களுடன் அக்காவின் தினசரி மாலைநேரப் பயணங்கள் இருந்தன.

எதிர் பக்கத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் காதல்வயப்பட்ட கண்களுடன் அந்த இளம் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். காதல்வயப்பட்டு என்று கூறினால், ஈர்க்கப்பட்டு என்பதா அர்த்தம்? அப்படியென்றால், அப்படித்தான். எனினும், எனக்கு எனக்கென்றே இருக்கக்கூடிய சந்தேகம் இருக்கிறது. பதினெட்டிலிருந்து இருபத்தொன்று வயது வரை மட்டுமே இருக்கக்கூடிய என்று தெரிய வருகிற ஒருத்தியை இளம்பெண் என்று குறிப்பிடாமல் பெண் என்று அழைக்கலாமா? பெண் என்ற பிரிவில் அவள் சேர்வாளா? அருமையான இளமையின் முதல் கட்டத்தில் ஏதோ ஒரு இடத்தை அடைந்துவிட்டிருந்த அந்த இளைஞனை, தன்னுடைய அழகாலும் அறிவு வெளிப்பாட்டாலும் நன்னடத்தையாலும் தன்னையே அறியாமல் ஈர்ப்பு உண்டாக்கி விட்டிருக்கும் ஒரு இளம் பெண்தானே அவள்!

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டது அன்று முதல் முறையாக அல்ல. அங்கு ராமச்சந்திரன் அறிமுகப்படுத்திய பிறகு, எவ்வளவோ முறைகள் அதே இடத்தில்தான் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். கல்லூரியில் கூட்டத்தில் சேர்ந்து வேறு. ஆனால், அவள் கூறுகிறாள்- அவன் கல்லூரியின் தலைவனாகவும் கதைகள் எழுதக் கூடியவனுமாக இருந்த காரணத்தால் ஏற்கெனவே நன்கு தெரியும் என்றும், அந்த இடத்தில் அறிமுகமாவதற்கு முன்பே ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்திருக்கிறான் என்றும். அப்போது அவன் பெரிய மிடுக்குத் தனத்தையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தி, சிரிப்பல்லாத ஒரு சிரிப்பை வெளிக்காட்டி, எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel