Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 2

oru naal

ருத்துவமனையின் மாடியில் இருந்த அந்த அறையில் நோயால் பாதிக்கப்பட்டு படுத்திருந்த அவளைப் பார்த்துவிட்டு, நான் திரும்பி என் மனைவியின் அறைக்கு வந்தேன். தன்னுடைய சிகிச்சை முழுவதும் முடிவடைந்து, நாளை திரும்பிச் செல்வதில் உண்டான உற்சாகத்துடன் அவள் இருந்தாள். அவளிடம் சொன்னேன்:

“நீ என்னை அங்கு போகும்படி கூறியிருக்க வேண்டியதில்லை.''

அவள் கோபத்துடன் சொன்னாள்:

“நான் சொல்லி அனுப்பினேன்... அப்படித்தானே? அந்தப் பெண் மாடியிலிருக்கும் ஒரு அறையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறாள். வேண்டுமென்றால், ஆர்வம் இருக்கும் பட்சம் சற்று போய் பாருங்கள் என்று கூறினேன். அவ்வளவுதான். உங்களுடைய விருப்பப்படி பார்க்கச் சென்றுவிட்டு, இப்போது பழியை என்மீது சுமத்துகிறீர்களா? என்ன... பழைய தோழியைப் போய் பார்க்க முடிந்தது அல்லவா? வெளியே போகச் சொல்லிவிட்டாளா? என்ன நடந்தது?''

பதிலின் இறுதிப் பகுதி தெளிவில்லாமலிருந்தாலும், நான் கோபப்படவில்லை. அதற்கான எந்தவொரு மனநிலையும் இல்லை. மனதிற்குள்ளேயே கூறிக்கொள்வதைப்போல கூறினேன்:

“பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடப்பவர்கள் யாரையும் போய் பார்ப்பது என்பது சந்தோஷமான ஒரு விஷயம்தானே? குறிப்பாக இதற்கு முன்பு அறிமுகமானவர்களை...''

என் மனைவி அர்த்தத்துடன் மீண்டும் கேட்டாள்:

“வெறும் அறிமுகம்! அப்படித்தானே! போய் நீண்ட நேரமாகி விட்டதே! என்ன... பழைய கதைகள், நினைவுகள் எல்லாவற்றையும் பங்கு போட்டு, திரும்பவும் பழைய கல்லூரி மாணவனாக மாறிவிட்டீர்களா? எல்லாவற்றையும் திரும்பவும் தொடங்குவோம் என்று தோன்றுகிறதா?''

எதுவும் கூற வேண்டும் என்று தோன்றவில்லை. வேண்டுமென்றால், கேட்டிருக்கலாம்.

"நீ போய் பார்த்தாய். அறிமுகமாகிக் கொண்டாய். நிறைய பேசிக் கொண்டீர்கள். தேவையானதையும் தேவையில்லாதவற்றையும் கூறினாய்... கேட்டுக் கொண்டாய். இல்லையா? நல்ல சிநேகிதிகளாகப் பிரிந்து கொள்ளவும் செய்தீர்கள். இல்லையா?"

கேட்கவில்லை.

எதையும் கூறாமல் கேள்வி கேட்பதைப்போல அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

பழைய கல்லூரி இளைஞனாக ஆகிவிட்டேனா? நீ என்ன கேட்டாய். இது இயந்திரம் அல்லது மிருகம் சம்பந்தப்பட்ட விஷயமில்லையே! மனித உறவுகளின் சிக்கல்கள் நிறைந்த விஷயமாயிற்றே! அங்கு நாம் என்னவாக ஆக வேண்டும், யாராக ஆக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நாம் யார்? ஏதோ அடையாளம் தெரியாத சக்திகள் நம்மை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொன்றாக மாற்றி இருக்கச் செய்து கொண்டிருக்கின்றன. நாம் திட்டமிட்டிருக்காத ஒன்றைக் கூறி விடுகிறோம். செய்து விடுகிறோம். அதனால் உண்டாகக் கூடிய நல்ல விளைவுகளையும் மோசமான பாதிப்புகளையும் அனுபவிக்கவும் செய்கிறோம். சிந்தனைக்கும் செயலுக்கும் இங்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அவளைப் போய் பார்க்க வேண்டும் என்று உனக்கு ஏன் தோன்றியது? உன்னையே அறியாமல் ஏன் நெருக்கம் தோன்றியது? ஒருவர்மீது ஒருவர் கொண்ட நம்பிக்கையில் ஏராளமான விஷயங்களை அவள் உன்னிடமும் நீ அவளிடமும் கூறிக்கொண்டதற்குக் காரணம் என்ன?

இறுதியாக, மிகவும் இறுதியாக, மெதுவாக, இரக்கமோ உள் மன ஏக்கமோ என் மனதிற்குள் உண்டான வேதனையோ... எல்லாம் கலந்த வார்த்தைகளில் கேட்டேன்.

“அவளுடைய நோய் என்ன என்பது உனக்குத் தெரியுமல்லவா?''

சிறிது பதைபதைப்புடன் என் மனைவி சொன்னாள்:

“புற்று நோய் என்று சந்தேகப்பட்டு யூட்டிரஸ் ஆப்ரேஷன் செய்தார்கள். எல்லாம் சரியாகிவிட்டது என்று நான் கேள்விப்பட்டேனே!''

விளக்கிக் கூற வேண்டிய சூழ்நிலை உண்டானது.

“அது மட்டும்தான் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏற்கெனவே மார்பகங்களில் ஒன்றை நீக்கிவிட்டார்கள். இப்போது இது இரண்டாவது முறை. நான் ஒரு பெண்ணாக இல்லாமல் போய்விட்டேன் என்று அவள் என்னிடம் சொன்னாள்.''

தொடர்ந்து கூறிய விஷயத்தை வேண்டுமென்றே கூறவில்லை. வேண்டாம். அதைக் கூறாமல் இருப்பதே நல்லது.

என் மனைவியின் முகம் மிகவும் வாடுவதையும், முன்பு கூறிய வார்த்தைகளிலும் அதைச் சொன்ன முறையிலும் பரிதாபப்படுவதைப் போன்ற உணர்ச்சி பரவியிருப்பதையும் பார்த்தேன். மிகவும் கவலை நிறைந்த வார்த்தைகளில் அவள் கூறினாள்:

“கஷ்டம்! எனக்குத் தெரியாதே! ஒவ்வொரு விதியின் தன்மை, ஒவ்வொருத்தருக்கும் கடவுள் அளிக்கும் சோதனைகள்...!''

கணவனின் முகத்தில் உண்டான நிற வேறுபாட்டையும் குண மாறுபாட்டையும் பார்த்துவிட்டு, விஷயத்தை மாற்றிக்கொண்டு கூறினாள்:

“மதிய நேரம் தாண்டிவிட்டது. சீக்கிரமா வீட்டிற்குச் சென்று உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்க. நாளைக்கு நாம திரும்பிச் செல்ல வேண்டுமல்லவா? நீண்ட தூரம் வண்டி ஓட்ட வேண்டுமே?''

அவள் கூறியது உண்மைதான். அப்போது செய்ய வேண்டிய மிகவும் நல்ல விஷயம் அதுதான். உணவு சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. எங்கேயாவது சென்று ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து, என் மனதில் அமைதிச் சூழலை உண்டாக்க வேண்டும்.

இப்போது இரவு நேரம். இந்த பழைய பிரம்மாண்டமான கட்டிடத்தில், ஆள் நடமாட்டம் எப்போதும் இல்லாமலிருக்கும் மேல் மாடியில், கண்ணாடிச் சாளரங்கள் இருக்கும் சுவரோடு சேர்த்து போடப்பட்டிருக்கும் நாற்காலியில் நான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். வெளியே மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. விட்டில் பூச்சிகள் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. மிகவும் அருகிலேயே இருந்த விசாலமான குளத்தில் படர்ந்திருந்த பாசிக்கூட்டத்திற்கு மத்தியில் தெரிந்த தெளிவான நீரில் மெல்லிய நிலவின் தோற்றம் தெரிந்தது. ஏதோ நீர்வாழ் பிராணிகள் அசைந்த காரணமாக இருக்க வேண்டும்- இடையில் அவ்வப்போது நீர்ப்பரப்பின் மேற்பகுதியில் சிறிய சிறிய வட்டங்கள் உண்டாகிக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நிலவில் வளைந்து ஒடிந்த நிழலாட்டம் உண்டானது. மனதிலும் சலனங்களும் நிழலாட்டமும் நடந்து கொண்டுதானே இருந்தன.

ஜி. சங்கரக்குறுப்பின் கவிதை நூல் பாதியாக எங்கோ திறந்து என் கையிலும் மடியிலுமாகக் கிடந்தது. இன்று நான் அதை வேண்டுமென்றே திரும்பவும் வாசிப்பதற்காக எடுத்திருந்தேன். ஒரு மன நிம்மதிக்காக- அவளைப் பார்த்துவிட்டு வந்த பிறகு. ஒரு மரியாதைக்காக, ஒரு சடங்கிற்காக என்று மனதில் நினைத்துக் கொள்ள விரும்பினாலும், உள்ளுக்குள் விடாத வேதனையின் அறிகுறி மறைந்து கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. அதன் முணுமுணுப்பு இதயத் துடிப்பில் தெரிந்தது.

முன்பு எவ்வளவோ கவிதைகளை நாங்கள் ஒன்றாக அமர்ந்து வாசித்திருக்கிறோம்- ஆங்கிலத்திலும் மலையாளத்திலும். ஹெஸ்லி, கீட்ஸ், டைலன்தாமஸ், சங்ஙம்புழ, வைலோப்பிள்ளி, ஜி. சங்கரக் குறுப்பு, பி. பாஸ்கரன்... ஆனால், முதலில் தெரிந்து அறிமுகமான போது சிறிதும் எதிர்பாராமல் அவள் வாயில் இருந்து வந்து நான் கேட்டது ஜி. சங்கரக்குறுப்பின் வரிகளைத்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel