Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 8

oru naal

ஒரு விடுகதையின் முடிச்சைப் போட்டுவிட்டு அவள் போய்விட்டாள்.

இன்னொரு நாள்... முன்னால் குழந்தைகள் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். ஆலமரத்திற்குக் கீழே இருந்த யக்ஷி அம்மனை நெருங்கியபோது, அவள் அந்தப் பக்கம் பார்த்தவாறு கேட்டாள்:

“பாவம் யக்ஷி அம்மன்! இல்லாத பக்தனை எதிர்பார்த்து இப்படியே... இல்லையா?''

பதில் கூறுவதற்கு பதிலாக அந்தப் பக்கமும் கேள்வியையே தந்தேன்.

“இல்லாத பக்தனா? அப்படியென்றால், தினமும் குளிப்பாட்டி, குங்குமம் வைத்து, செத்தி மாலையைச்சூட்டி, துளசி இலைகளை அணிவித்து உட்கார வைப்பது யார்?''

சிறிது நேரம் வாய் திறக்கவில்லை. பிறகு சற்று பயந்துபோய் விட்டதைப்போல பலவீனமான குரலில் சொன்னாள்:

“நான்தான் இந்த யக்ஷி அம்மன் என்று சில நேரங்களில் தோன்றும்.''

எதிர்பார்த்திராத வார்த்தைகளாக இருந்ததால், முதலில் சற்று அதிர்ச்சியடைந்து விட்டேன்.

“இல்லாத பக்தனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் இந்த யக்ஷி என்று கூறுகிறீர்களா?''

அவளுக்கு மிகுந்த ஏமாற்றம் உண்டாகிவிட்டதைப்போல தோன்றியது.

“இல்லாத... எந்தச் சமயத்திலும் இல்லாத... இல்லையா?''

நான் உறுதியான குரலில் சொன்னேன்:

“இல்லாத... என்று கூறுகிறீர்களா? யார் சொன்னார்கள்? இருக்கிறானே? இப்போதே இருக்கிறானே? இதுவரை தெரிந்து கொள்ளவில்லையா? பார்த்ததில்லையா?''

யாருமே இல்லாத யக்ஷி அம்மன் இருக்கும் ஆலமரத்திற்கு முன்னால் இது நடக்கிறது. வெளிறிப் போன முகத்துடன் அவன் தலையைத் திருப்பி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். திடீரென்று எங்கிருந்தோ கிடைத்த ஒரு உள் குரலின் சக்தியால் உந்தப்பட்ட நான், யக்ஷி அம்மனின் பாதங்களில் யாரோ அர்ப்பணித்திருந்த துளசி இலைகளில் ஒரு இலையை எடுத்து, பின்னால் நீண்டு கறுத்து அடர்த்தியாகத் தொங்கிக் கொண்டிருந்த அவளுடைய தலை முடியில் சொருகிவிட்டு சொன்னேன்:

“என் யக்ஷிக்கு... தருவதற்கு மலர் இல்லை. அதற்குப் பதிலாக மலரைப் போன்று மென்மையாக இருக்கும் இலை... துளசி இலை...''

அப்போது அப்படிச் செய்தாலும், அதை யாராவது பார்த்து விட்டிருப்பார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. அவளேகூட அதை எப்படி ஏற்றுக்கொள்வாள் என்ற பதைபதைப்பும் இருந்தது. அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். சுற்றுப்பகுதியில் யாருமே இல்லை. அவளுடைய முகத்திலும் முன்பிருந்த பதைபதைப்பு சிறிது கூட இல்லாமலிருந்தது. கையை பின்னால் நீட்டி அந்த துளசி இலையை தலைமுடிகளுக்குள்ளே இருந்து எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டே அதை தீவிரமாக முகர்ந்து பார்த்தாள். தொடர்ந்து அந்த துளசி இலையை, பின்னால் தொங்கிக் கொண்டிருந்த அடர்த்தியான கூந்தலுக்குள் மறைத்து வைத்துவிட்டு எனக்கு நேர் எதிரில் நின்று கொண்டு சொன்னாள்:

“தேவியின் பிரசாதத்தை நீங்களே தந்தது என்னுடைய அதிர்ஷ்டம். மிகப் பெரிய அதிர்ஷ்டம்!”

அப்போது அந்த கறுத்த கண்களெனும் கடலலையில், அடி முதல் தலைவரை குளித்துப் புனிதமாகி, அந்த பார்வையெனும் காந்த சக்தியில் கரைந்து போய், நான் என்னை அடையாளம் தெரிந்துகொண்டேன்.

காதலி.

அவளுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட விஷயத்தைக் கூறுவதைப்போல, ரகசியத்தை மனம் திறந்து கூறுவதைப் போல கேட்டாள்:

“மோகனன், உங்களுடைய அம்மா ஒரு கதை எழுதியிருக்காங்க... ஞாபகத்தில் இருக்குதா?” "தேவியும் பக்தனும்...''

“ஆமாம்.''

“ஆனால், அதில் தேவியையும் அவளை வழிபடுபவனையும் ஒன்று சேர்ப்பதற்குத் தயாராக இல்லையே! இரண்டு பேருக்கும் இரண்டு வழிகள்... அப்படி இருக்கும்போது, இது... சம்மதிப்பாங்களா? இங்கேயும் இரண்டு பாதைகளில் செல்பவர்கள்தானே? இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தானே?''

முதலில் கூறிய விஷயம் உரத்த குரலில் சிரிக்கக் கூடியதாக இருந்தது. தொடர்ந்து சொன்னேன்:

“பெண்ணே! அது லலிதாம்பிக அந்தர்ஜனத்தின் கதாபாத்திரங்கள் அல்லவா? இது அவங்களோட மகனும் அவனுடைய மணப்பெண்ணும் அல்லவா?''

அவளுடைய முகத்தில் வேண்டிய அளவிற்குப் பிரகாசம் உண்டாகவில்லை என்று தோன்றியது. அப்போது அதைப் பார்த்ததும், கேலி செய்ய வேண்டும்போல தோன்றியது.

“சற்று முன்பு நீ எதற்கு கணவனாக வரப்போகும் ஆளின் பெயரைச் சொன்னாய்? மோகனன் என்று... நம்பூதிரியின் மனைவி, தன்னுடைய கணவனின் பெயரைக் கூறக்கூடாது. கூறினால், கணவனுக்கு சாபம் உண்டாகும்.''

அவள் அதிர்ச்சியடைந்து விட்டதைப்போல தோன்றியது. பயத்துடன் கேட்டாள்:

“அப்படியா? சாபம் உண்டாகுமா? பிறகு... நான் என்ன சொல்லி அழைப்பேன்? சொல்லுங்க...''

சிரித்துக் கொண்டே, இரக்கத்துடன் நான் விளக்கிச் சொன்னேன்:

“அறியாமல் செய்தால் குற்றமில்லை. புரியுதா? இனிமேல் கூறினால்தான் சாபம் உண்டாகும். அதனால் இனிமேல் என்னை குஞ்ஞன்புவின் அப்பா என்று அழைத்தால் போதும்.''

எதுவும் புரியாமல் அவள் கேட்டாள்:

“குஞ்ஞன்புவின் அப்பாவா? குஞ்ஞன்பு என்பது யார்?''

நான் விளக்கிச் சொன்னேன்.

“நீ வடக்கன் பாடலைப் படித்திருக்கிறாய் அல்லவா? அதில் கூறப்பட்டிருக்கிறதே!

"குன்றில்மேல் இருக்கிறான் ஒருவன்; குஞ்ஞன்புவின் அப்பனோ வேறு யாரோ?"

குஞ்ஞன்பு என்று அந்தப் பாடலில் கூறப்பட்டிருப்பது- எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் மகன். புரியுதா? குஞ்ஞன்பு என்று நீ கூறப் போவது- உனக்கு பிறக்கப் போகும் மகனை. எப்படி? புரிந்துகொண்டாயா?''

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. சந்தோஷமும் வெட்கமும் பதைபதைப்பும் உற்சாகமும்- இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவள் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, உண்மையாகவே அவளைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் போல எனக்குத் தோன்றியது. அந்த உள்ளங்கையில் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால், அப்படி எதையும் செய்யவில்லை. மாலை நேரத்தில் மங்கலான நிழல் வெளிச்சத்தில் இன்னொரு நிழலைப்போல நின்று கொண்டிருந்த அவளுடைய நாசியை நோக்கி- அந்த தேவியின் பிரசாதத்தை முகர்ந்து பார்த்த அந்த நாசியை நோக்கி, சற்று தொடுவதற்காக வலது கையின் சுட்டு விரலை மட்டும் மெதுவாக நீட்டினேன். தொட்டும் தொடவில்லை என்று தோன்றியபோது, அதைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டேன்.

"வேண்டாம்... இப்போது வேண்டாம்... அசுத்தப்படுத்தக் கூடாது... எப்போதோ... அன்று... அப்போது மட்டும் போதும்...”

அதற்குப் பிறகு ஒரு நாள் அவள் கேட்டாள்.

“அன்று ஏன் தொடவே இல்லை! இப்போ தொடுவீங்க... இப்போ தொடுவீங்கன்னு நினைச்சு நான் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தேனே!''

அவளுக்கும் என்னிடமிருந்த அதே விருப்பம் இருந்தது என்ற புரிதல் சந்தோஷத்தைத் தந்தது. எனினும், மனப்பக்குவம் இருப்பதைப்போல மிகவும் சிரமப்பட்டு பொய்யாகக் காட்டியவாறு சொன்னேன்:

“இருக்கட்டும். திருமண நாள் வரட்டும்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel