Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 9

oru naal

அந்தத் திருமண நாளை தள்ளி வைக்க வேண்டியதிருந்தது. தேர்வு முடிய வேண்டும். ஏதாவது வேலையைத் தேட வேண்டும். பிறகு... அவளுடைய தேர்வும் முடிய வேண்டுமே!

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஆறாம் ஆண்டு நான் எம்.ஏ.வில் பட்டம் பெற்றேன். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பல்கலைக்கழகக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் வெங்கிடேஸ்வரனின் அன்பின் காரணமாகவும் செல்வாக்காலும் ஒரு தனியார் கல்லூரியின் ஆசிரியராக ஆனேன். வேலை கிடைத்தவுடன் முதலில் செய்த காரியம் காதலித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்ற விஷயத்தை அவளுடைய தந்தைக்கு அறிவித்ததுதான். அதில் அவருக்கு சம்மதம்தான் என்றும் அவளுடைய தேர்வு முடிந்தவுடனே திருமணத்தை நடத்தலாம் என்றும் தகவல் கிடைத்ததுதான் தாமதம், உலகத்தையே காலுக்குக் கீழே கொண்டு வந்த அளவிற்கு உற்சாகம் உண்டானது. இரண்டு வருடங்கள் கடக்க வேண்டும். எனினும், பரவாயில்லை. மெதுவாக திட்டமிடலாம். தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள் நடந்து கொண்டிருந்தன. அனைத்து விருப்பங்களையும் ஆசைகளையும் கனவுகளையும் ஒருவரோடொருவர் வெளிப்படுத்திக் கொண்டும், கற்பனை பண்ணிக் கொண்டும் செயல்களை செயல்படுத்திக் கொண்டிருந்தோம். ஒருவரையொருவர் எந்த அளவிற்கு பிரிய முடியாதவர்களாக ஆகி விட்டிருக்கிறோம் என்ற உண்மை அந்த காலகட்டத்தில் இருவரையும் மேலும் புரிதல் கொண்டவர்களாக ஆக்கியது. அந்த காத்திருத்தலின் இறுதி நாட்களில் எதிர்பாராத வகையில் ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டம் அதுவாகவே தேடி வந்தது. தேர்வின் முடிவுகள் தெரிந்தவுடன், நான் வேலை செய்து கொண்டிருந்த அதே தனியார் கல்லூரியிலேயே வேலை பார்ப்பதற்காக அவளும் வந்து சேர்ந்தாள். இனிமேல் சந்தோஷப் பெருக்கைப் பற்றி கூறவா வேண்டும்? அன்றைய தனியார் கல்லூரி ஆசிரியரின் நூற்று இருபத்தைந்து ரூபாய் சம்பளம் போதுமானதாக இல்லாமற் போயிருந்தால், நாங்கள் அன்றே ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பித்திருப்போம் என்பதுதான் என்னுடைய எண்ணம். அது மட்டுமல்ல- மேலும் சிறிது காத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒரு அரசாங்க வேலைக்கு பி.எஸ்ஸி.யில் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். அது கிடைத்து வேலையில் சேரும் பட்சம், விஷயம் மேலும் நல்லதாக இருக்குமே! ஆனால், அந்த வேலையில் சேர்வதற்கு நான் இடம் மாறிச் சென்றபோதுதான், மிகவும் கேவலமான அந்த சதிச் செயல் நடைபெற்றது. அவளுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும் சம்மதம்தான் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த என்னை எல்லா வகைகளிலும் ஏமாற்றிவிட்டு, அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் மிகவும் ரகசியமாக, வேறு திருமண ஆலோசனைகளுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மிகவும் ரகசியமாகவும் தீவிரமாகவும்.

பொட்டையும் பொடியையும் வாசனை பிடித்த அவள், உடனடியாக முறையான திருமண ஆலோசனையுடன் வீட்டிலிருப்பவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று கடிதம் எழுதினாள். அன்றே நான் போய் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். மகாகவி ஜி. சங்கரக்குறுப்பும் என்னுடைய மாமாவும் சேர்ந்து பெண் கேட்பதற்காகச் சென்றார்கள். குறுப்பு மாஸ்டரின் கவிதையில்தானே இந்தக் காதலே ஆரம்பமானது! அதனால் அதன் நல்ல முடிவுக்கு மாஸ்டரும் சேர்ந்து

சென்றது நல்ல ஒரு தீர்மானமும், சிறப்பான ஒரு விஷயமும் என்று நான் நினைத்தேன்.

ஆனால், அதிர்ஷ்டமில்லை என்று நினைக்கிறேன். மாஸ்டரும் மாமாவும் சென்றிருந்த நாள், அவள் தாயுடைய தந்தையின் எதிர்பாராத மரணம் நடைபெற்ற நாளாகிவிட்டது. திருமண விஷயமாக பேசச் சென்றவர்கள் மரணத்தைப் பற்றி விசாரிக்கச் சென்றவர்களாக மாறி, திரும்பி வந்தார்கள். வீட்டில் இருப்பவர்களின் துயரமும் மரணத்திற்குப் பின்னால் இருக்கக் கூடிய காரியங்களும் முடியட்டும். அதற்குப் பிறகு திருமண விஷயமாக சென்று பேசுவோம் என்று அவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், அவையெல்லாம் நடக்கும் வரை அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் காத்திருக்கவில்லை. அவர்கள் திருமண முடிவுடன் மிகவும் தூரத்தில் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவளை வேலையை ராஜினாமா பண்ண வைத்து, வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி செய்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து எங்களுக்கிடையே தொடர்பு கொள்வது மாதிரி எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாமலும் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் பார்த்து வைத்திருந்த புதிய மணமகன் என்னைவிட எப்படிப் பார்த்தாலும் பணவசதி படைத்த- வெளிநாட்டில் மிகப் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த- அவர்களுடைய ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆளாக இருந்தான். இந்த அளவிற்கு நல்ல நிலையில் இருக்கும் ஒரு மனிதன் கிடைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில், இனிமேல் இவன் எதற்கு என்று அவர்கள் நினைத்திருக்கலாம். வெறும் ஒரு சாதாரண அரசாங்க வேலையில் இருக்கக் கூடிய இவனை? தங்களுடைய சொந்த மகள்மீது கொண்டிருக்கும் பாசத்தை அப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். நான் முழுமையாக நிலைகுலைந்து போனேன். அவளுடன் எப்படி தொடர்பு கொள்வது? இறுதியில் ஒரு வழியைக் கண்டு பிடித்தேன். அவளுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நெருங்கிய பழக்கம் கொண்ட வயதான ஒரு ஆசிரியை, திருமண விஷயமாக பேசுவதற்காக செல்வதைப் போல தந்திரமாகச் சென்று என்னுடைய கடிதத்தை அவளிடம் கொடுத்தார். கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான்.

"இந்த ஆசிரியையை வழியனுப்ப வருவதைப்போல, வெளியே வாசற்படிகள் இருக்கும் இடத்திற்கு அவருடன் சேர்ந்து வா. வெளியில் எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கும் காரில் அவளுடன் மிகவும் வேகமாக ஏறிக்கொள். நான் அதில் உட்கார்ந்திருப்பேன்.

நாம் தனியாக ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்கான தன்னம்பிக்கை இருக்கிறது அல்லவா? மீதி விஷயங்கள் நேரில்.’’

ஆனால், வாசற்படிகள் வரை வரக்கூடிய தைரியம் அவளுக்கு இல்லாமற் போய்விட்டது. ஆசிரியையிடம் கூறியிருக்கிறாள்:

“உலகம் மிகவும் பெரியது. என்னைவிட எப்படிப் பார்த்தாலும் சிறந்தவளாகவும், அதிக அழகைக் கொண்டவளாகவும், நல்ல குணத்தைக் கொண்டவளாகவும் இருக்கக்கூடிய இளம்பெண் கிடைப்பாள் என்று மோகனனிடம் சொல்லுங்க.''

ஆசிரியை வேண்டுமென்றே கற்பனையாக ஒரு சிறிய மிரட்டலை வெளிப்படுத்தியிருக்கிறார்:

“மோகனனின் கையில் உன்னுடைய பல கடிதங்களும் புகைப்படங்களும் இருக்கின்றன அல்லவா? ஆண்கள் அல்லவா? இடது... வலது என்று பார்க்காமல் திருப்பி அடித்தால், உன் வாழ்க்கை நாசமாகிவிடுமே!''

அப்போது அவள் கூறியிருக்கிறாள்:

“டீச்சர், எனக்குத் தெரிந்த அளவிற்கு உங்களுக்கு மோகனனைப் பற்றி தெரியாது. எந்தச் சமயத்திலும் எனக்கு எதிராக அவர் செயல்படமாட்டார். என்னை அந்த அளவிற்கு பிடிக்கும் என்ற விஷயம் எனக்குத் தெரியும்... எனக்கு அவர்மீதும் அந்த அளவிற்கு அன்பு இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் பெரியவர்களும் சேர்ந்து முடிவு செய்ததற்கு எதிராக இருப்பதற்கு என்னால் முடியாது என்ற விஷயத்தை மோகனனால் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel