Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 13

oru naal

எது எப்படியோ அவை அனைத்தும் இப்போது முடிந்துபோன கதைகளாச்சே! சொல்லு... இங்கே இப்போது எதற்காக வந்தாய்? எந்தச் சமயத்திலும் வெளியே வரமுடியாது என்று கேள்விப்பட்டிருந்த வீட்டுக் காவலில் இருந்து எப்படி உன்னுடைய விருப்பப்படி வெளியே வர முடிந்தது?''

இனியாவது விளக்கிக் கூற முடியும் என்ற முழுமையான விருப்பத்துடன் அவள் மெதுவான குரலில் ஆரம்பித்தாள்:

“எதற்காக வந்திருக்கிறேன் என்பதை நான்தான் கூறி விட்டேனே! பார்ப்பதற்கு, பேசுவதற்கு, மனதிலிருக்கும் சுமையை சிறிதளவாவது இல்லாமற் செய்வதற்கு... என் திருமண விஷயமாச்சே! சில நண்பர்களை நேரில் போய் அழைக்க வேண்டும் என்று கூறிவிட்டு வெளியே வந்திருக்கிறேன். தங்கை லட்சுமியும் உடன் வந்திருக்கிறாள். வெளியில் இருக்கிறாள்.''

போலித்தனமான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பொய்யான சிரிப்புடன் அவன் கேட்டான்:

“ஓஹோ! உன்னுடைய திருமணமா? என்றைக்கு? அந்த அதிர்ஷ்டசாலியான மணமகன் யார்?''

கேள்வியில் கலந்திருந்த கிண்டலும் வெறுப்பும் குத்தலும் தெளிவாகத் தெரிந்தாலும், பரிதாபமான குரலில் அவள் திருமணம் நடைபெறும் நாளையும் மணமகனுடைய பெயரையும் கூறினாள். முழுவதையும் கூறி முடிப்பதற்கு முன்பே, அவன் இடையே புகுந்து சொன்னான்:

“அந்த மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிக்கு என்னுடைய வாழ்த்துகளைக் கூறு.''

அவளுடைய கையில் இருந்த தாளாலான உறையைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டான்:

“கையில் இருப்பது திருமண அழைப்பிதழ்கள்... இல்லையா? ஹாய்... என்னை பழைய நண்பர்களில் ஒருவனாக நினைத்து ஒரு அழைப்பிதழை எனக்குத் தா... ப்ளீஸ்... என்னுடைய பெயர் என். மோகனன். ஒரு உறையில் பெயரை எழுதி, ஒரு அழைப்பிதழை எனக்கும் தா... ப்ளீஸ்... இவ்வளவு பெரிய ஒரு ஆள் அழைத்திருப்பதாக எனக்கும் தெரியட்டும்...''

அந்த வார்த்தைகளில் கலந்திருந்த கோபம் தெளிவாக விளங்கியது. இனி இங்கே நேரத்தை வீண் செய்யக் கூடாது. அவள் ஒரு நிமிடத்தைக்கூட கடத்தாமல், எழுந்து நின்றாள். தாங்க முடியாத கவலையும் காயமும் கலந்த வார்த்தைகளில் கூறினாள்:

“தேவையில்லை மோகன். இந்த அளவிற்கு கொடூரத்தனம் தேவையில்லை. முன்பு அன்பு செலுத்திய பெண்ணாச்சே என்ற கருணையாவது காட்டக் கூடாதா?''

அதே வேதனையும் காயமும் கலந்த வார்த்தைகளிலேயே திருப்பி அடித்தான்:

“அதைத்தான் நானும் கூற விரும்புகிறேன். இவ்வளவு கொடூரத்தனம் தேவையில்லை. முன்பு காதலித்த ஆளாச்சே என்ற இரக்கத்தையாவது காட்ட வேண்டும்.''

எந்த சமயத்திலும் திறக்கப்படாத கதவில் தலையை வைத்து மோதிக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் அவளுக்குப் புரிந்துவிட்டது. இனியும் இங்கே நின்று கொண்டிருந்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. வெளியே நடந்தாள். அவன் காதில் விழுகிற மாதிரி மெதுவான குரலில் கூறிக்கொண்டே நடந்தாள்.

“வேணும்... எனக்கு இது வேணும்...

ஒரு மன்னிப்பு எந்த சமயத்திலும்

கிடைக்காத வாழ்க்கை! சபிக்கப்பட்ட

வாழ்க்கை! யாருக்கும்

தேவையில்லாத வாழ்க்கை!''

அவன் எதுவும் பேசாமல், உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான்; கேட்டான்.

அவள் போய்விட்டிருந்தாள். அறையின் பாதி கதவுகள் ஒன்றோடொன்று மோதி உரசும் கரகர சத்தம் சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு, அந்த சலனமும் சத்தமும் நின்றுவிட்டன. அவன் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான்.

ஒரு காலகட்டம் முடிவடைந்துவிட்டிருந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு மனப் போராட்டம் அதிகமானது. ஒரு நிம்மதியும் இல்லாத நிலை. இறுதியில் ஒரு நீண்ட யாத்திரைக்கான தீர்மானத்தை எடுத்தான்.

ராமச்சந்திரன் சாந்தி நிகேதனில் ஓவியக்கலை படித்துக் கொண்டிருந்தான். முதலில் அங்கு செல்லலாம் என்று திட்டமிட்டான். இந்த சம்பவத்தின் ஆரம்பத்திலும் அவன் இருந்தான் அல்லவா? அது மட்டுமல்ல- ஒரு வகையில் பார்க்கப் போனால் ஒரு முறை அல்ல. இரண்டு முறை அறிமுகப்படுத்தி வைத்து, இந்த விஷயத்திற்கு ஆரம்பத்தை உண்டாக்கியதே அவன் தானே! அப்போது ஞாபகம் வந்தது- ராமச்சந்திரன் சாந்தி நிகேதனுக்குச் செல்வதற்கு காரணமாக இருந்தவளே அவள்தான். மலையாளம் ஹானர்ஸில் தேர்ச்சி பெற்று, எப்போதும் தன்னுடைய துறை என்று மனதில் நினைத்திருந்த ஓவியக் கலையைக் கற்பதற்காக, சாந்தி நிகேதனுக்குள் நுழைய அனுமதி கிடைத்தும் செல்வதற்கு வழியில்லாமல், பொருளாதார ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தளர்ந்து போயிருந்த அவனுக்கு தன்னுடைய தந்தையின் உத்தியோகத்தின் உதவியுடன் ஒரு ஸ்காலர்ஷிப்பை ஏற்படுத்திக் கொடுத்து உதவியாக இருந்தவளும் அவள்தான். அதைப் பற்றி ராமச்சந்திரன் அன்று அப்படி கூறினான்:

“உன்னை அறிமுகப்படுத்தி வைத்ததற்காக உன்னுடைய மனைவி என்னுடைய கல்வி நிலையத்தில் செய்த நன்றியின் வெளிப்பாடு... உன்னுடைய அரசாங்கத்தின் மொழியில் கூறுவதாக இருந்தால், கைக்கூலி...''

அவன் கூறிய ஒரு வார்த்தையை மட்டுமே அன்று கவனித்துக் கேட்டான்.

மனைவி! உன்னுடைய மனைவி!

பிரார்த்தனை செய்தான். கடவுளே! நல்ல நேரத்தில், நல்ல நாக்கிலிருந்து இந்த வார்த்தைகள் வருகின்றன.

ஒருநாள் அவள் கூறியதும் ஞாபகத்தில் வந்தது. எண்ணெய் தேய்க்காத கூந்தலை அள்ளி முடித்து, கசங்கி குலைந்து காணப்பட்ட புடவையை வாரி இழுத்துச் சுற்றி, மிகவும் அலட்சியமாக பூங்காவிற்கு வந்த ஒரு விடுமுறை நாள்... வீட்டின் சமையலறையிலிருந்து நேராக வருவதைப்போல இருந்த அந்த வருகையைப் பார்த்துவிட்டு கேட்டான்:

“என்ன பாட்டி விசேஷம்?''

தன்னுடைய தோற்றத்தையும், பிறகு கேள்வி கேட்டவனின் முகத்தையும் பார்த்து வெட்கம் தோய்ந்த மெதுவான குரலில் சொன்னாள்:

“ஆடைகளும் அழகும் எப்படி இருந்தாலும், முதலில் மனைவியாகவும் பிறகு அம்மாவாகவும் ஆனபிறகு பாட்டியாக ஆனால் போதும்.''

அதற்குப் பிறகு ஒருநாள் வீட்டிலிருந்து அவள் கொண்டு வந்த ஏதோ பலகாரப் பொட்டலத்தை நீட்டியபோது, ஒருவேளை அசைவ சமாச்சாரங்கள் ஏதாவது கலந்ததாக இருக்குமோ என்ற பயத்தில் சுத்த சைவ உணவைச் சாப்பிடக் கூடியவனான அவன் வேண்டாம் என்று கூறி, விளையாட்டாக இருப்பதைப்போல காட்டிக் கொண்டு, உறுதியான குரலில் கூறினான்:

“வேண்டாம்... குழந்தை, வேண்டாம். இப்போது வயிறு ஃபுல்லாக இருக்கிறது. அது மட்டுமல்ல- தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தயார் பண்ணிய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது இல்லை. அசுத்தமாகிவிடும்.''

அப்போது திருப்பி அடித்தாள்:

“பெரிய சுத்தம் அது இது என்று காட்டினால், உங்களை நான் மாதத்திற்கு மூன்று நாட்கள் பட்டினி போடுவேன். தெரியுதா?''

அந்த வார்த்தைகளில் இருந்த நெருக்கமும் மன உறவும், வேதனை கலந்த தேம்பல்களாக மாறி மூச்சை அடைக்கச் செய்தன.

அப்போது சிறிதும் எதிர்பாராமல் வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று திறந்தபோது, எந்தச் சமயத்திலும் பார்த்திராத ஒரு மனிதன் நின்றிருந்தான். சிறிதும் அறிமுகமில்லாதவன். இளைஞன். அழகன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel