Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 15

oru naal

இல்லை... எதுவுமே நடக்கவில்லை. பாவம்! நல்ல மனிதன். அந்த கார் சென்ற வழியையே பார்த்தேன். பிரார்த்தனை செய்வதைப்போல முணுமுணுத்தேன்:

“சுபமஸ்து... all the best.''

அதற்குப் பின்னால் தூசி படிந்த முப்பத்தொன்பது வருடங்கள் அந்த வழியே கடந்து சென்றன...

பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து நான் வாழ்க்கையின் அன்றாடச் செயல்களில் மூழ்கினேன். சிறிதும் எதிர்பாராமல் என்றுதான் கூற வேண்டும்- அந்த பழைய கால சிநேகிதியின் ஊரிலேயே நான் திருமணம் செய்தேன். வீட்டில் உள்ளவர்களின் தீர்மானத்தில் நடைபெற்ற வெறும் ஒரு சாதாரண திருமணம். திருமணத்திற்கு முன்னால் பழைய காதலைப் பற்றிக் கூறியிருந்தும், பழைய தோழி தந்திருந்த கடிதங்களையும் பரிசுப்பொருட்களையும் காட்டிய பிறகும், என்னை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்த ஒரு நல்ல மனதைக் கொண்டவளாக மணமகள் இருந்தாள். கால ஓட்டத்தில் நான் தந்தையாக ஆனேன். தாத்தாவாக ஆனேன். சமீபத்தில் ஒருநாள் வயதான தன்னுடைய தந்தை, தாயுடன் சில நாட்கள் போய் தங்கியிருந்து விட்டு வரலாம் என்று ஊருக்குச் சென்றிருந்த என் மனைவி, அங்கிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள்:

“பழைய ஒரு மூட்டுவலி இருக்கிறது அல்லவா? Arthritic. அது மீண்டும் வந்து மிகவும் தொல்லையைத் தந்து கொண்டிருக்கிறது. நான் இங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். பதைபதைப்பு அடைவதற்கு எதுவுமில்லை. நானே அழைக்கிறேன் என்பதே அதற்கு சான்றாக போதும்! இரண்டு நாட்களுக்குள் போகலாம் என்று டாக்டர் கூறியிருக்கிறார். இங்கு வந்தபிறகு நல்ல நிம்மதி இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவுமில்லை என்பதை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறேன்.''

பதைபதைப்பு அடைவதற்கு எதுவுமில்லை என்று கூறினாலும், சற்று கலக்கத்துடன்தான் நான் சென்றேன். இல்லாவிட்டால் மருத்துவமனையில் சேர்த்திருக்க மாட்டார்களே!

நவீன வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனை அது. என் மனைவி கூறியதும் சரிதான். உடல்நலக்கேடு சற்று குறைந்து விட்டிருந்தது. பெரும்பாலும் நாளை திரும்பிச் செல்லலாம். அவள் பதைபதைப்புடன் கேட்டாள்:

“வழக்கம்போல பரிதவிச்சிட்டீங்க... அப்படித்தானே.''

நான் கிண்டல் பண்ணினேன்:

“மனைவி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற விஷயத்தைத் தெரிந்து, பதைபதைப்பு அடையாமல் இருக்கும் கணவனையா உனக்குப் பிடிக்கும்?''

அவள் சிரித்தாள். அவ்வளவுதான். பிறகு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சிரிப்பைத் தொடர்ந்து கொண்டே, குரலைத் தாழ்த்தி ஒரு ரகசியத்தைக் கூற முயற்சிப்பதைப்போல, மெதுவான குரலில் கேட்டாள்:

“நான் ஒரு ரகசியத்தைக் கூறட்டுமா? இனியும் பதைபதைப்பு அடைவீர்களா?''

என்ன கூற இருக்கிறாள் என்பதைப் பற்றி ஒரு அறிகுறியும் கிடைக்காமல் நான் கேட்டேன்:

“ரகசியமா? பதைபதைப்பா? எதற்கு?''

முன்னாலிருந்த ரகசிய வெளிப்பாட்டைச் சிறிதும் விடாமலே சொன்னாள்:

“சரி... கேளுங்க. இந்த மருத்துவமனையின் உரிமையாளரும் சீஃப் டாக்டருமாக இருப்பவர் மிஸ்டர் ரவி மேனன்.''

நான் கிண்டல் பண்ணினேன்:

“பதைபதைப்பு அடையக் கூடிய ரகசியம் அதுவா? இப்படிப்பட்ட ஒரு மருத்துவமனையை கட்டும்போது, யாராவது ஒரு மனிதர் அந்த பொறுப்புகளை ஏற்றுத்தானே ஆக வேண்டும்?''

அவள் சிரிப்பை நிறுத்தவேயில்லை.

“முழுவதையும் கேளுங்க. இந்த டாக்டர் ரவி மேனன்... உங்களுடைய பழைய கல்லூரி கால காதலி இருக்கிறாளே... உலக அழகி என்று தூக்கத்தில்கூட நீங்கள் சத்தம் போட்டுக் கூறும் அந்த ஊர்வசி! அந்த பெண்ணின் அருமை மகன்தான் இந்த இளமையும் அழகும் கொண்ட டாக்டர்...''

வார்த்தைகளுக்கு நடுவில் குத்தலும் கிண்டலும் கலந்திருந்தாலும், உண்மையிலேயே அது ஒரு செய்தியாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனினும், இதில் பதைபதைப்பு அடைவதற்கு என்ன இருக்கிறது? அவளிடம் நான் எதையாவது கூறுவதற்கு முன்னால், ஓரக் கண்களில் விளையாட்டுத் தனத்தை வெளிப்படுத்தியவாறு அவள் தொடர்ந்து சொன்னாள்:

“பழைய காதலியும் இங்கே நோயாளியாகப் படுத்திருக்கிறாள். இதற்கு நேராக மேல் மாடியில். அறை எண் பதினான்கில்.''

பதைபதைப்பு இல்லை என்று கூறுவதற்கில்லை. கேட்டேன்:

“உனக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்? அவளுக்கு என்ன உடல் நலக்கேடு?''

என் மனைவி விளக்கிக் கூறினாள்:

“டாக்டர் ரவி மேனன் கூறித்தான் விஷயமே தெரியும். இங்கே தந்த முகவரியைப் பார்த்து, நான் உங்களுடைய மனைவி என்பதைத் தெரிந்துகொண்டு என்னைப் பார்ப்பதற்காக வந்தார். நீங்கள் அவருடைய தாயுடன் சேர்ந்து படித்திருக்கிறீர்கள் என்றும், மிகவும் நெருங்கிய நண்பர் என்றும், தன்னுடைய தாய் இந்த விஷயங்களைக் கூறியிருக்கிறாள் என்றும் சொன்னார். ஒரு அறுவை சிகிச்சை முடிவடைந்து, மேல் மாடியில் அவள் படுத்திருக்கிறார் என்று சொன்னதும் டாக்டர் ரவி மேனன்தான்.''

ஆர்வத்தை வெளிப்படுத்தினாலும், பதைபதைப்பு அடையப் போகிற குணத்தைக் கொண்ட ஒரு பெண் அல்ல என்ற விஷயம் தெரிந்திருந்தாலும், சாதாரணமான பெருந்தன்மையுடன் நடந்து கொள்வாள் என்பது தெரிந்திருந்தாலும் எந்தச் சலனமும் இல்லாததைப் போல காட்டிக்கொண்டு, வெறுமனே ஏதோ கேட்கிறோம் என்பதைப் போல கேட்டேன்:

“என்ன அறுவை சிகிச்சை?''

எல்லாவற்றையும் புரிந்துகொண்டதைப்போல, சமாதானம் கூறுகிற மாதிரி அவள் சொன்னாள்:

“யூட்டரைன் கேன்சர் என்று சந்தேகப்பட்டிருக்கிறார்கள்... எது எப்படியோ- ஆபரேஷன் முழுமையான வெற்றியுடன் அமைந்துவிட்டது என்றும், இனி எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் டாக்டரே கூறினார். நேர் மாடியில்தானே... சற்று போய் பாருங்க. மிகவும் நெருங்கிய நண்பர் என்று கூறினீர்களே! பார்ப்பதற்கு ஆர்வமில்லாமல் இருக்காது.''

வார்த்தைகளுக்கு நடுவில் கள்ளங்கபடமற்ற தன்மை என்று தோன்றக் கூடிய குத்தலையும் கிண்டலையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கூறுவதற்காக, சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பிறகு மனதைத் திறந்து கேட்டேன்:

“பிறகு குத்தலான வார்த்தைகளைக் கூறுவதற்கும், கிண்டல் பண்ணுவதற்கும்தானே!''

அவள் சமாதானப்படுத்தினாள்:

“எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு பார்ப்பதற்கு ஆர்வம் உண்டாகும் என்ற விஷயம் எனக்கு தெரியும். அது நான் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் நடக்காமல் இருக்காதே. பிறகு... நான் சொல்லித்தான் பழைய பெண்ணைப் பார்ப்பதற்காக போனீர்கள் என்று வந்தால் எனக்குத்தானே க்ரெடிட்?''

சந்தோஷத்துடன் சொன்னேன்:

“Thanks.You are really wonderful''. மேலே செல்லும் படிகளில் நடக்க ஆரம்பிக்கும்போது, அவள் திருப்பி அடித்தாள்:

“நான் மட்டுமல்ல... இன்னும் எவ்வளவோ ஆட்கள் wonderful தான்... பல வகைகளில்...''

அந்த வார்த்தைகளில் இருந்த சுவாரசியம் மனதில் உண்டாக்கிய சந்தோஷத்துடன், திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே நான் படிகளில் ஏறினேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel