Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 18

oru naal

“வருவேன் என்று தெரியும்... இல்லையா? பெரிய நோயால் பாதிக்கப்பட்டு இப்படி படுத்திருப்பதைப் பார்த்து, பழைய வேதனைகளை மறந்து சந்தோஷப்படுவதற்கு... பழைய பகையையும் வெறுப்பையும் புகைத்து மூச்சை அடைப்பதற்கு... அப்படித்தானே?''

உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த குரலில் பதில் வந்தது:

“அதற்கான ஆற்றல் நான் காதலித்த ஒரு ஆளுக்கு எந்தச் சமயத்திலும் இல்லை என்ற விஷயம் எனக்குத் தெரியாதா?''

உள்ளே இருக்கும் கோபம் தெரியாமல் நான் கூறினேன்:

“நான் அன்பு செலுத்திய ஒரு ஆள்! வெறும் ஆள்! இல்லையா? இவ்வளவு வயசாயிடுச்சுல்ல? இரண்டு தலைமுறைகளை வளர்த் தெடுத்த பாட்டியாகி விட்டாய் அல்லவா? சொந்த மனசாட்சியுடன் இனி சத்தியம் பண்ணி கூறக்கூடாதா? காதலித்த ஒரு ஆளாம். பலரில் ஒரு ஆள் என்று கூறுகிறாயா? காதலித்ததைப் போல நடித்து விளையாடிய, ஏமாற்றிய என்ற கேவலமான அந்த உண்மையை வேறு யாரும் கேட்காதவாறு உனக்குள்ளேயே சொல்லிப் பழகிக் கொள். ஒருவேளை... காலப்போக்கில் கேட்டுக் கேட்டு பழகிவிட்ட பிறகு, உன்னுடைய மனசாட்சி மன்னிப்பு அளிக்கலாம்.''

தளர்ந்து நிலைகுலைய ஆரம்பித்த அவளுடைய கண்கள் ஈரமாயின. மிகவும் சிரமப்பட்டு மெதுவான குரலில் கேட்டாள். கண்ணீர்த் துளிகள் விழுவதைப்போல கேட்டாள்:

“இப்படி கூறியது... மோகனன், நீங்களா? எனக்குத் தெரிந்த உங்களால் இதைக் கூற முடியாது. அது மட்டும் உண்மை. உண்மையைச் சொல்லுங்க. இப்போது சொன்ன விஷயங்கள் நம்பக் கூடியவையா? அப்படியென்றால், பிறகு எப்படி... எதற்காக இங்கே வரவேண்டும் என்று தோன்றியது? என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது? இந்த அளவிற்கு கேவலமான ஒரு பூச்சிக்கு முன்னால் எதற்காக வந்து நிற்கிறீர்கள்?''

முடிந்த வரையில் உணர்ச்சியற்ற தன்மையை வரவழைத்துக்கொண்டு விளக்கிச் சொன்னேன்:

“சிறிதும் எதிர்பாராமல் இங்கே வந்தபோது ஒரு பழைய கால சிநேகிதி இந்த மருத்துவமனைக்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்திருக்கிறாள் என்ற விஷயத்தைத் தெரிந்து, சுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மனிதர்களுக்கே உரிய இயல்பான தூண்டுதல் காரணமாக மட்டுமே வந்தவன் நான். என்னுடைய பழைய கால வாழ்க்கை நிலைகளுக்கும் காயங்கள் நிறைந்த உணர்வுகளுக்கும் நிகழ்கால நிலைமைகளுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அந்த பழைய கால கவலைகள் அனைத்தும் எப்போதோ மரணமடைந்துவிட்டன. முன்பு காதலித்த ஒரு தெரிந்த பெண்ணின் உடல்நலம் குறித்து விசாரிக்கிறேன். அவ்வளவுதான். இங்கே கேவலமான பூச்சியோ சொர்க்க தேவதையோ யாருமில்லை.''

வார்த்தைகளில் இருந்த உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த காரணத்தால் இருக்க வேண்டும்- அதேபோல பதில் கூற முயற்சித்தாள்:

“ஒரு பழைய கால சிநேகிதி... அப்படித்தானே? எங்கோ காதலித்த ஒரு பழைய தெரிந்த பெண்! எது எப்படி இருந்தாலும், காதல் காதலாக இருந்தது அல்லவா? காதலிப்பது என்பது எப்போதும் தன்னுடைய உணர்ச்சியை இன்னொரு ஆளுக்கு கீழ்ப்படியச் செய்யும் உள் மனப்போக்கு என்றாலும், விரும்பக் கூடிய ஒரு பலவீனம் அல்லவா? அறிந்தே செய்யும் கீழ்ப்படிதல் என்ற வீழ்ச்சிதானே? அந்த வீழ்ச்சியிலும் பலவீனத்திலும் சிக்கிக்கொண்ட ஒரு ஆளுக்கு, அந்த ஆள் வேறு வகையில் பிறப்பு உறவுகளுடனும் கடமைகளுடனும் அன்பு செலுத்தக்கூடியவர்கள் முன்னாலும் இதேபோல வீழ்ச்சிகளும் பலவீனங்களும் உண்டாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்பது தெரியாதா? பிறவி தொடர்புகளுக்கு முன்னால் கேடு கெட்ட நிலையில் இருக்கும் அந்த கீழ்ப்படிதல் எப்படி ஏமாற்றுதலாக ஆகும்? குடும்பத்தின் சூழ்நிலைகள், வாழ்க்கையின் நிலைகள் ஆகியவற்றின் பலவீனமான உணர்ச்சிச் சூழல்களில் அதை வெறும் ஒரு செயலற்ற நிலையாகப் பார்க்கக்கூடிய கண் ஏன் இல்லாமற் போனது? எல்லா கதாபாத்திரங்களிடமும் ஒரே மாதிரி நீதி காட்ட வேண்டிய ஒரு கதாசிரியருக்காவது அது இருந்திருக்க வேண்டாமா?''

உணர்ச்சியே இல்லாமல் திருப்பி அடித்தேன்:

“ஒரு கதாசிரியருக்கு வாழ்க்கையும் கதையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற இந்த புதிய தத்துவப் பாடம் நன்றாகத்தான் இருக்கிறது. எப்படிப்பட்ட கொலைச் செயலையும் நியாயப்படுத்தக் கூடிய இந்த தார்மீகப் பார்வை நன்றாகவே இருக்கிறது. என்னுடைய பழைய கால சிநேகிதி எந்த அளவிற்கு வளர்ந்து விட்டிருக்கிறாள்! பெரியவளாக ஆகியிருக்கிறாள்! நல்லது! சந்தோஷம்!''

அழுவதைப்போல இருந்தது பதில்:

“நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. அதற்குத் தகுதியானவள் இல்லை என்ற விஷயமும் எனக்குத் தெரியும். வேண்டிய வயதும் பக்குவமும் மனபலமும் இல்லாமலிருந்த ஒரு இளம் பெண்ணின் பழைய கால இக்கட்டான நிலையை ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான். அந்த குறைபாடுகள்... அவை உண்டாக்கிய பாதிப்புகள்... எழுத்துப் பிழைகள்... அவை எதையும் மறக்கவில்லை. எனினும்...''

முடிந்து போய்விட்ட விஷயங்கள் என்று நினைத்திருந்த பழைய கவலைகளை அந்த முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளும் வார்த்தைகளும் தட்டி எழுப்பக் கூடியவையாக இருந்தன. தளர்ந்து போன உணர்ச்சிகள் நிறைந்த பலவீனமான வார்த்தைகளின் மூலம் விளக்கினேன்:

“இல்லை... நான் இவை எதையும் கூறுவதற்காக வரவில்லை. கூறிக்கூறி வழி தவறிச் சென்றுவிட்டது. குழப்பம் உண்டாகிவிட்டது. நான் வருவேன் என்று எப்படி தெரிந்துகொண்டாய், எப்படி எதிர்பார்த்தாய் என்று கேட்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்தேன். முன்பே வேண்டாம் என்று விட்டெறிந்து விட்டு... இல்லை... வேண்டாம்... நான் எதையும் கேட்கவில்லை. எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பவுமில்லை. அனுபவிக்க வேண்டியவை அனைத்தையும் என்னை...''

அவள் இடையில் புகுந்து சொன்னாள்:

“எதிர்பார்த்தேன் என்று இங்கு யாரும் கூறவில்லையே! இல்லை... நான் எந்தச் சமயத்திலும் எதிர்பார்த்ததில்லை. எதிர்பார்ப்பதற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்று எனக்குத் தெரியும். எதிர்பார்க்காமல் இருப்பதற்கு நானே கற்றுக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்கிடையில்தான் உங்களின் மனைவி இங்கே வந்தாங்க...''

அதிர்ச்சியடைந்து விட்டேன்:

“யார்? மனைவியா? யாருடைய மனைவி?''

அவள் தொடர்ந்து சொன்னாள்:

“உங்களுடைய மனைவி... இங்கு சிகிச்சைக்காக வந்திருக்காங்கள்ல... அவங்க... கீழே உள்ள தளத்தில்... ஏன்... அவங்க இங்கே வரக்கூடாதா? வந்தாங்க... வந்தபோது இரண்டு நாட்களில் தன் கணவர் வருவார் என்று சொன்னாங்க.''

அதிர்ச்சியடைந்து நின்றேன்.

“அவள் எதற்கு இங்கே வந்தாள்?''

“தன்னுடைய கணவரை அந்தக் காலத்தில் வசீகரித்து கெட்ட மனிதனாக ஆக்குவதற்கு முயற்சித்த - நல்ல குணமில்லாத பெண்ணைச் சற்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கலாம். பாவம்... மூட்டுவலியின் வேதனையுடன் இந்த படிகளில் ஏற முடியாமல் ஏறி வந்தாங்க.''

“அதற்குப் பிறகு?''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel