Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 22

oru naal

அவை என்னுடைய உள் மனதின் வாடிய பகுதிகளிலிருந்து கீழே விழுந்து சிதறி பரவிக் கிடக்கும் சிந்தனைச் சிதறல்கள்....

என்னுடைய தனிமை வேதனைகள் நிறைந்த இந்த உணர்வுகள் உங்களுடைய இதய ஓசைகளின் இரண்டறக் கலக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படுகிறேன்.

இதில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் என்னுடைய வாழ்க்கையில் உண்டாக்கிய திருப்பங்களையும் பாதிப்புகளையும் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

நாற்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால், என்னுடைய வாலிபப் பருவத்தின் ஆரம்பகால கனவுகளில் சிலிர்ப்புடன் வந்து நின்ற இளம் பெண்! நீ எதேச்சையாக இதை வாசித்து, உன்னை அடையாளம் தெரிந்து கொண்டால், என்னை மன்னித்து விடு. இதை எழுத வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு உண்டானபோது, நீ உட்பட யாரும் உன்னை, இதில் அடையாளம் காணக் கூடாது என்று நான் மனப்பூர்வமாக உறுதியாக நினைத்தேன். என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு கவனித்து, ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் எச்சரிக்கையாக எழுதினேன். எனினும், அடையாளம் கண்டுகொள்ள - உனக்கு மட்டுமாவது - முடிந்தால் என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்க வேண்டும்.

வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தை உண்டாக்கிய, மிகவும் அதிகமாக ஆட்சி செய்த ஆளைப் பற்றி, சம்பவத்தைப் பற்றி எழுத வேண்டிய சூழ்நிலை வரும்போது இதைத் தவிர நான் வேறு எதை எழுதுவது?

உன்னை இதிலிருந்து நான் எப்படி விலக்கி வைக்க முடியும்? மறக்க முடியும்?

வாசகர்களை எப்படி ஏமாற்றுவது? வஞ்சிப்பது?

என்னையே எப்படி ஏமாற்றுவது? மோசம் செய்வது?

இந்தப் பெரிய உலகத்தில் மிகவும் சாதாரண சிறிய உயிர்களேயான மட்டுமான நம்முடைய காதல் தோல்விகளின் வாடாத இந்த மலர்கள், வழியோரத்தில் இருக்கும் இந்த வேலிக்கும் கீழே கிடக்கட்டும். வண்ண அழகு இல்லை. இனிமை இல்லை. வாசனை இல்லை.

வேறு யாரும் இதை அடையாளம் காணமாட்டார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். எனினும், இவையும் மலர்களாக இருந்தன என்று காலம் சாட்சியாக இருந்து கூறுமல்லவா?

இளமையின் ஆரம்ப காலத்தில் நம்முடைய கனவுகளையும் ஆசைகளையும் விருப்ப சிந்தனைகளையும் உயிரின் ஒளியைக்கூட சமர்ப்பணம் செய்து, என்னுடைய குருதியையும் நீரையும் கொடுத்து விதைத்து நனைத்து வளர்த்து உண்டாக்கிய மலர்கள்! வரலாற்றின் பாதையோரத்தில் அவை அனாதையாக அங்கு கிடக்கும்போது கூட, ஒரு காலத்தில் அது நமக்கு எந்த அளவிற்கு விருப்பத்திற்குரியதாக இருந்தது என்ற உண்மை என்னவொரு ஆறுதலாக இருக்கிறது! இல்லையா?

முன்பு ஒரு காலத்தில், ஒரு விஜயதசமியின் குளிர்ச்சியான அதிகாலைப் பொழுதில், கன்னியாகுமரியில் இருக்கும் தேவியின் ஆலயத்தில் எதோச்சையாக சந்தித்தபோது, உதயசூரியன் தூரத்தில் எங்கோ, பரந்து விரிந்த கடலின் கண்களால் பார்க்க முடியாத தொலைவில், தலையை உயர்த்திக் கொண்டிருந்தபோது, அந்த இளம் குளிரின் நடுக்கத்தில் நான் நின்று கொண்டிருந்தபோது, என்னையே அறியாமல் ரிக் வேதத்திலிருந்து இரண்டு வரிகளைக் கூறியதை நீ நினைத்துப் பார்க்கிறாயா? அதிகாலைப் பொழுதின் துடிப்பைப் பற்றி- சூரிய பிரகாசத்தைப் பற்றி உள்ள இரண்டு வரிகள். அதைக் கேட்டவுடன் நீ சொன்னாய்:

“இந்த சமஸ்கிருதத்தையெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை. எதுவுமே புரியாமல் கேட்டு என்ன பிரயோசனம்?'' அர்த்தம் தெரியாமலே உபநயனத்திற்கும் சமாவர்த்தனத்திற்கும் இடையில் உள்ள பிரம்மச்சர்ய விரத காலத்தில் உச்சரிப்பு சுத்தமில்லாமல் ஓதி அளித்ததாக இருந்தாலும், பிற்காலத்தில் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை நான் வாசித்திருக்கிறேன். நினைவில் அது இருந்ததால், நான் அதைக் கூறினேன்:

"IN LOVE THOU MADEST THE DAWN GLOW

IN LOVE THOU MADEST THE SUN SHINE.’’

உனக்கு அது மிகவும் பிடித்திருந்தது என்று தோன்றியது. ஏதோ புதிய அர்த்தம் கொண்ட பிரபஞ்சத்தையும் லட்சியத்தையும் கண்டதைப் போல அந்த நொடியே உன்னுடைய முகம் சிவந்து விட்டது.

கண்கள் ஒளிமயமாக ஆனது. அந்தக் கண்களில் காதலின் அடையாளங்கள் அலையடிப்பதை நான் பார்த்தேன். உன்னுடைய தம்பியும் தங்கையும் வேறு யாரோ ஒரு ஆளும் உன்னுடன் இல்லாமலிருந்தால், நான் உன்னுடன் சேர்ந்து நின்று கொண்டு வேறொரு சுலோகத்தை செவியில் முணுமுணுத்திருப்பேன்.

“உயர் வாகைதன் மலர்

உன் மேனிக்குத்தான் அன்பே!”

‘’அந்த பழைய வாகை மரத்தைப்போல நீயும் அடியிலிருந்து மேலே வரை தளிர்த்து, பூத்து நின்று கொண்டிருந்தாய் அல்லவா? அந்த ரிக்வேத சுலோகத்தை எத்தனை முறைகள் நீ என்னைத் திரும்பத் திரும்ப கூற வைத்திருக்கிறாய்? இறுதியில் நீயே மனப்பாடமாக ஆக்கிக் கொள்ளும் வரை... இல்லையா? பிறகு... பல நாட்களில், பல சந்தர்ப்பங்களில் நீ புதிய அர்த்தங்களுடன் அதைக் கூறி கேட்கச் செய்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அது உண்டாக்கிய காதலின் நறுமணம் இதோ... இப்போதும்.... இங்கே...

வாகை மரத்தின் வாடி காய்ந்த இலைகளாக காலம் உதிர்த்து விழுந்து கொண்டிருக்கும் முதுமையடைந்த இந்த காலம்போன காலத்தில், ஒரு பழைய இளமைக் கால பைத்தியக்காரனின் வலிப்பு ஓலத்தைப் போல நான் அந்த சுலோகத்தை மீண்டும் கூறட்டுமா?

"IN LOVE THOU MADEST THE DAWN GLOW

IN LOVE THOU MADEST THE SUN SHINE.’’

எவ்வளவு குறைவான நாட்கள்தான் என்றாலும், அது ஒரு உண்மையாக இருந்தது அல்லவா? உண்மையின் அழகு. அழகின் திருவிழா. திருவிழாவின் ஆன்மிக உற்சாகம்...

பழைய அர்த்தங்கள் இல்லையென்றாலும், அந்த தெளிவான உச்சரிப்பு குறைந்து போய் விட்டிருந்தாலும், என்னுடைய வயதான வார்த்தைகளின் பலவீனத்தில் ஸ்வரம், ராகம், தாளம் ஆகியவை இல்லாமல் போய் விட்டிருந்தாலும், இதற்குப் பின்னால் முன்பு இருந்த காதலையும் உண்மைத் தன்மையையும் நீ இப்போதும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். உன்னுடைய முகம் சிவந்து பிரகாசமாவதையும் கண்கள் ஒளிர்வதையும் இதோ... இப்போதுகூட என்னால் பார்க்க முடிகிறது. அந்த கறுகறுப்பான கண்களின் ஆழங்களில் உள்ளே இருக்கும் கண்ணீர்த் துளிகளில், எந்தக் காலத்திலும் வாடாத மலர்களின் வண்ணங்கள் இருக்கின்றன என்று நம்புவதற்கு நான் ஆசைப்படுகிறேன். மரணமடையாத இளமையின், அழியாத காதலின் எல்லையற்ற நீண்ட பயணத்தில் அவை அர்ச்சனைப் பூக்களாக ஆகட்டும் என்று பிரார்த்திக்கவும் செய்கிறேன். இந்தப் பிரார்த்தனை வேளையில் ஏதோ பழைய பக்தி நூலில் இருந்த வரிகள் எனக்கு முன்னால் வந்து நிற்கின்றன.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel