Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 17

oru naal

"மாறுதல் இருக்கும். ஆளே மாறி விட்டிருப்பேன்!"

கூற வேண்டுமென்று நினைத்தேன்:

"மாறுதல் இல்லை பெண்ணே! ஆள் மாறியது சமீபகாலத்திற்கு இடையில் அல்லவே! முன்பொரு நாள்... அன்று... அன்று... அன்றல்லவா?"

ஆனால், கூறவில்லை. தூக்கத்தில் உளறுவதைப்போல கேட்டேன்:

“பாட்டி... இல்லையா?''

அவள் சொன்னாள்:

“ஆமாம்... ஒன்றுக்கு அல்ல. நான்கு பெற்றெடுத்ததில் மூன்றுக்குச் சொந்தமான ஆறு பேரக்குழந்தைகளுக்கு... நாலாவதாக பிறந்தவள் மகள். அவள் நியூயார்க்கில் இருக்கிறாள். திருமணம் ஆகவில்லை. மெடிஸினில் போஸ்ட் க்ராஜுவேஷன் முடிந்த பிறகுதான் திருமணம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள். அவள்... பார்வதி- அவளுடைய குழந்தையையும் பார்த்துவிட்டுத்தான் இடத்தை காலி பண்ணுவது என்ற ஆசை இருக்கிறது. நடக்குமோ என்னவோ? முடிவு கடவுளுக்குத்தான் தெரியும்.''

பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் வளர்க்கக் கூடிய எந்த சாதாரண இல்லத்தரசியும் கூறக்கூடிய வார்த்தைகள். ஆனால், இறுதியாகக் கூறியது எதுவும் காதில் விழவில்லை. ஒரே ஒரு வார்த்தைதான் உள்ளே கேட்டது:

பாட்டி!

அந்த வார்த்தை உள்ளே இருந்த ஏராளமான கதவுகளையும் ஒன்றுக்குப் பிறகு இன்னொன்றாய் திறந்துவிட்டது. வாகை மரத்தின் சிவப்பு நிற மலர்கள் விரிந்து நின்றிருந்த- பரந்த வானத்தின் சிவப்பு நிறம் சாளரத்தின் வழியே தெரிந்தது. அந்த வாகை மரத்திற்குக் கீழே ஏதோ ஒரு பழைய கால வசந்தத்தின் வாடிய கற்பனை அழகைப் போல ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். அவள் வெட்கத்துடன் கூறிக்கொண்டிருந்தாள்:

“பாருங்க, மோகனன்! எனக்கு பல முறைகள் வாந்தியும் தலை சுற்றலும் உண்டாகும்படி செய்யாதீங்க. இரண்டு முறைகள் போதும்... தெரியுதா?''

இப்போது என்ன சொன்னாள்? பாட்டி... நான்கு பிள்ளைகளில் மூன்று பேருக்குச் சொந்தமான ஆறு பேர்களின்...

ஏதாவது பதில் கூற வேண்டுமே! என்ன கூறுவது? முன்பு கூறிக் கூறி முடிவடையாத ஆர்வம்... இப்போது... பல வருடங்களுக்குப் பிறகு எதிரெதிரே உட்கார்ந்திருக்கும்போது, மனதில் ஆசைப்பட்டும் ஆசைப்பட்டும் வார்த்தைகள் இல்லாமல்... செயலற்ற தன்மை... பேரமைதி.

இந்த பேரமைதியை எப்படி இல்லாமற் செய்வது? இந்த உரையாடலின் அறுபட்ட இணைக்கும் கண்ணிகளை எப்படி ஒன்று சேர்த்து சீர் பண்ணுவது?

சிரமப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. அவள் மீண்டும் கேட்டாள்:

“என் பிள்ளைகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க வேண்டாமா? என்னுடைய உடல்நலக் கேட்டையொட்டி பார்வதியைத் தவிர எல்லாரும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரம் கடந்தால் இங்கே வந்துவிடுவார்கள். பார்க்கலாம். மூத்த வயதில் உள்ள பலருக்கும் பிரபல கதாசிரியரான உங்களைத் தெரியும். உங்களின் ரசிகர்கள் சந்திப்பதற்காகவும் அறிமுகமாக நேர்ந்ததற்காகவும் சந்தோஷப்படுவார்கள்.''

அவன் சிரிக்க முயற்சித்தான். முன்பு தாயின் ரசிகத்தன்மையை சொந்தமாக்கிக் கொள்வதற்காக முயற்சித்ததால் உண்டான வேதனை, அவனையே அறியாமல் அந்த சிரிக்கும் முயற்சியில் கரியைத் தோய்த்து விட்டிருந்தது. ஏதோ கடந்தகாலத்தை நோக்கிக் கொண்டிருப்பதைப் போல சொன்னான்:

“வேண்டாம்... பிள்ளைகளைப் பார்க்க வேண்டாம். பழைய குழந்தைக் கடத்தல் விஷயத்தில் இன்னும் ஏதாவது எஞ்சி இருந்தால், ஆபத்தமான விஷயமாக ஆகிவிடும். எனக்கு இருக்கிறது என்று வேறு சிலர் மனதில் நினைத்திருந்த அந்த கெட்ட குணத்தின் மூலம் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய பாதிப்புகள் உண்டாகிவிட்டன. நடக்கக் கூடாத பல விஷயங்கள் நடந்துவிட்டன. மிகவும் வேதனைகளைத் தந்த இழப்புகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியது வந்தது. இனியும் அப்படிப்பட்ட ஒன்று வேண்டாம். அதற்கான உடல்நலம் இல்லை. ஆயுளும் இல்லை. முடியாது... வயதான காலத்தில் எல்லாவற்றையும் இன்னொரு முறை தாங்கிக்கொள்ள முடியாது.''

அந்த வார்த்தைகள் அவளுடைய மனதிற்குள் எங்கோ நுழைந்து மிகவும் தளர்வடையச் செய்ததைப்போல தோன்றியது. ஆனால், தளர சம்மதிக்காமல் கேட்டாள்:

“உண்மையைச் சொல்லு. அன்று எனக்கு சிறிய ஒரு தவறுதானே நடந்தது? குழந்தைகளைக் கடத்திச் செல்வதற்காக வந்தேன் என்று தவறாகக் கூறிவிட்டேன் என்றல்லவா கூறினாய்? உண்மையாகவே எதைக் திருடினேன்? அதையும்விட விலை மதிப்புள்ள ஒன்றை. இதயம். குழந்தைகளின் இதயத்தை அல்ல. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வந்த அவர்களைவிட மூத்த பெண்ணின் இதயத்தை. ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் அந்தப் பெண் இதயமே இல்லாமல் அலைந்து திரிந்தாள். இன்றும்... இப்போதும் அது திரும்ப கிடைக்கவில்லை.''

தழுதழுத்த குரலில் திருப்பிக் கேட்க முடிந்தது. எனினும், தார்மிக சக்தியின் துணையுடன் கேட்டான்:

“சொல்லு... இவ்வளவு காலம் ஆயிடுச்சுல்ல? இனிமேலாவது உன்னுடைய உள் மனதைப் பார்த்து சொல்லு. அது ஒரு தலைப்பட்சமான திருட்டா? திருட்டுத்தானா? ஒருவரோடொருவர் இரண்டறக் கலந்து அறியாமலே ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டது அல்லவா?''

ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் அவள் சொன்னாள்:

“ஆமாம்... அதுதான் நடந்தது. அதே புனிதத் தன்மையுடன் நாம் அதை பத்திரமாகக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறோம் அல்லவா? போதாதா? கடவுளின் ஆசீர்வாதத்திற்கு வேறு என்ன வேண்டும்?''

பதில் கூறுவதற்கு எதுவுமே இல்லை. வேண்டுமென்றால் கூறலாம். "நான் கடவுள் அல்ல. பக்தன் அல்ல. வெறும் சாதாரணமான ஒரு மனிதன்.’’

அவனுடைய முகத்தில் தெரிந்த இனம் புரியாத பரிதாபத் தன்மையைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவள் நினைவுபடுத்தினாள்:

“முன்பு என்ன எழுதி அனுப்பியிருந்தீர்கள் என்பது ஞாபகத்தில் இருக்கிறதா? இறுதியாக எழுதிய அந்தக் கடிதத்தில்? நான் ஞாபகப்படுத்திக் கூறட்டுமா?

எதிர்காலத்தில் எங்கேயாவது மீண்டும் பார்க்க நேர்ந்தால், காதலுடன் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முயற்சியாக இருக்கும். -இல்லையா? அப்படித்தானே எழுதியிருந்தீர்கள்? அதற்குப் பிறகு இப்போது என்ன, எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்களா? அந்த காதல் எங்கே போனது? அதற்குப் பின்னாலிருந்த வசந்தகாலத்தின் நினைவுகள்?''

யார் பார்த்தாலும் அழுகை மட்டுமே என்று கூறுவதைப் போன்ற புன்சிரிப்பைத்தான் நான் மிகவும் சிரமப்பட்டு வெளிப்படுத்தினேன். அந்த அவலட்சணமான அடையாளங்கள் முகத்தில் பரவலாகத் தெரிந்தன.

என்னுடைய இயலாமையைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவளுடைய முகம் இரக்கப்படுவதைப்போல ஆனது. அப்போது அவள் சொன்னாள்:

“இங்கே வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். என்ன, நின்று கொண்டே இருக்கிறீர்கள்? உட்காருங்க... ப்ளீஸ்...''

ப்ளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டு அவளுக்கு அருகிலேயே உட்கார்ந்தேன். கற்பனை பண்ணிய கனவுகளையும் நினைத்துப் பார்க்க முடியாத பலவீனங்களையும் உணர்ச்சிகளின் வெறித்தனங்களையும் குடைந்து விட்டெறிந்து, படிப்படியாக சுய உணர்வின் இயற்கைத் தன்மையான தனி காட்டுவாழ் மனிதனின் இயல்பு குணத்தை மீட்டெடுத்திருக்க வேண்டும். அதனால் கேட்டேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel