Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 16

oru naal

மேலே இருந்த தளத்தை அடைந்ததும், சற்று நின்று மெதுவாக அறையைக் கண்டுபிடித்து, சிறிது நேரம் அமைதியாக நின்று ஓய்வு எடுக்க வேண்டும். சிறிதளவு மனரீதியாக தயாராகிக்கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் யார்? எத்தனை வருடங்கள் கடந்து சென்றாலும் யார்?

ஒருவரையொருவர் எப்படி சந்தித்துக் கொள்வது? எதுவுமே வேண்டியதில்லை. மேல் தளத்தை அடைந்ததும், படிகளின் பக்கவாட்டு கைப்பிடியைப் பிடித்து நின்றுகொண்டு, தலையை உயர்த்தி பதினான்காம் எண் அறை எங்கே இருக்கிறது என்று கண்களால் தேடினேன். அதைக் கண்டுபிடித்து ஒரு நொடி நேரம்கூட ஆகவில்லை- அதற்கு முன்பு அதே அறைக்குள்ளிருந்து ஒரு மனிதன் வெளியேறி வந்து கொண்டிருந்தான். முதல் லிஃப்டை நோக்கி நடந்து கொண்டிருந்த அந்த மனிதன் என்னைப் பார்த்திருக்க வேண்டும்- நேராகத் திரும்பி நடந்து வந்தான். முன்னால் வந்து வழியைத் தடுத்துக்கொண்டு நின்று, ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் கேட்டான்:

“மிஸ்டர். மோகனன்தானே?''

அந்த மனிதர் யார் என்று தெரியாமலே “ஆமாம்...'' என்று கூறினாலும், உடனடியாக ஞாபகம் வந்தது.

முன்பு பெர்ஷியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞன்! மணமகன்! இப்போது நெற்றியின் இரு பக்கங்களிலும் மெல்ல மெல்ல ஏறி வந்துகொண்டிருந்த வழுக்கை... எஞ்சியிருந்த தலை முடியில் சாம்பல் நிறம்... வேறு மாறுதல்கள் எதுவும் இல்லை. காலம் அந்த அழகில் கை வைக்கவே இல்லை. இப்போதும் அழகன்! மிடுக்கான தோற்றத்தைக் கொண்டவன்! கையை இறுகப் பற்றிக் கொண்டே சொன்னேன்:

“ஹலோ... புரிந்துவிட்டது... புரிந்துவிட்டது... மிஸ்டர் மேனன்... காலம் எவ்வளவு ஆயிடுச்சு! இப்போதும் நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?''

அவன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டே சொன்னான்:

“நாம் ஒருவரையொருவர் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லையென்றால், உலகத்தில் பிறகு யார்தான் சார் அடையாளம் கண்டுபிடிப்பார்கள்?''

அறியாமலே ஒருவரையொருவர் வேதனைப்படுத்திக் கொண்ட இரண்டு சுத்தமான ஆன்மாக்கள் என்றோ அல்லது வேறு எதுவோ அந்த வார்த்தைகளில் ஆழமான சோக நாதங்களை உண்டாக்கிக் கொண்டு இருந்தனவோ? இல்லை என்றுதான் தோன்றியது. ஏனென்றால், அந்த அளவிற்கு வெள்ளமென பாய்ந்து வந்து கொண்டிருந்த வார்த்தைகளில் சந்தோஷம் ததும்பிக் கொண்டிருந்தது. வார்த்தைகள் மழை என பொழிந்து கொண்டிருந்தன.

“சார், உங்களுக்கு அப்படியொன்றும் பெரிய அளவில் மாற்றமெதுவும் உண்டாகவில்லை. அப்படி உண்டாகியிருந்தால், என்னால் கண்டுபிடித்துவிட முடியும். வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் இடையில் அவ்வப்போது ஓவியங்களைப் பார்ப்பதுண்டு. சார், உங்களுடைய கதை வந்திருக்கிறது என்று தெரிந்தால், எங்கிருந்தாவது என் மனைவி அதை வாங்கிக்கொண்டு வந்து விடுவாள். சார், இங்கு... இந்த மருத்துவமனைக்கு நீங்கள் வருவீர்கள் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய மிஸஸ் இங்கு சிகிச்சைக்காக வந்திருக்கிறாங்க என்று ரவி சொன்னான். இப்போ பரவாயில்லை... இல்லையா? நான் பார்த்தது இல்லை. என்ன கூறிச் சென்று அறிமுகமாவது? அழைத்துக்கொண்டு போவதற்கு முன்னால், என்னைச் சற்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.''

மிகுந்த பதைபதைப்பில் இருந்தேன் நான். எனினும், சொன்னேன்:

“மிஸஸுக்கு உடல்நலம் எவ்வளவோ பரவாயில்லை.''

அதற்குமேல் அதிகமாக எதுவும் பேச வேண்டிய சூழ்நிலை வரவில்லை. அவன் எதிர்பார்க்கவும் இல்லை என்று தோன்றியது. கவலை நிறைந்த உரிமையுடன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்- என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று, அந்த பதினான்காம் எண் அறைக்குள் நுழைத்து, அங்கேயிருந்த கட்டிலில் தளர்ந்த போய் படுத்திருந்த தன்னுடைய மனைவியிடம் கூறினான்:

“பாரும்மா... நம்மைப் பார்ப்பதற்காக இன்றைக்கு ஒரு வி.ஐ.பி. விருந்தாளி வந்திருக்கிறார்.''

திரும்பி என்னிடம் சொன்னான்:

“உட்காருங்க சார்... நான் இதோ வந்து விடுகிறேன். வீட்டுக்குப் போய் இந்த அம்மாவுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு இதோ வந்துவிடுகிறேன். நான் அதற்காக கிளம்புறப்போதான் உங்களைப் பார்த்தேன். பிறகு... ஒரு விஷயம். இவள் இப்போ ஒரு மாத்திரை சாப்பிட்டிருக்கிறாள். கொஞ்சம் தூங்க வைக்கக் கூடியது. எனினும், தூங்க விட வேண்டாம். மதிய உணவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கினால் போதும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.''

வார்த்தைகளின் அதே அவசரத்துடன் அவன் சென்றான். போகிற போக்கில் மீண்டும் அழைத்துச் சொன்னான்:

“சார், நீங்க நான் வந்த பிறகுதான் போகணும். நிச்சயமா...''

சிறு குழந்தைகளிடம் இருப்பதைப் போன்ற நடத்தை! என்ன ஒரு கள்ளங்கபடமற்ற தன்மை! திகைத்துப்போய் நின்றுவிட்டேன்.

எதையுமே பார்க்க முடியவில்லை. வெளியே வெளிச்சத்திலிருந்து உள்ளே சற்று மங்கலாக இருந்த அறைக்குள் வந்ததால் உண்டான இருண்ட பார்வை மட்டுமல்ல- எத்தனையோ வருடங்களுக்கு அப்பால் எங்கோயிருந்து வந்திருக்கும் ஏதோ ஒரு துடித்து நின்று கொண்டிருந்த மறையாத உணர்ச்சி எல்லா உறுப்புகளின் இயக்கங்களையும் மனவோட்டங்களையும் கனவுகளையும் கவலைகளையும் ஒரே நிமிடத்தில் செயல்பட விடாமல் செய்து விட்டதைப்போல தோன்றியது. என்னை நானே சுற்றுவதைப் போல உணர்ந்தேன். கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்றேன். பிறகு... உள்ளே எங்கோ நிலவு உதித்ததைப்போல இருந்தது. சிறிது சிறிதாக அனைத்தும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன.

மருத்துவமனையின் அறை. நீல நிற சாளரத்தின் திரைச்சீலைகள். நீல நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்த மேஜையின்மீது மருந்து புட்டிகள். டெட்டாலின் கடும் வாசனை.

இறுதியில் அதையும் அடையாளம் தெரிந்துகொண்டேன். அறையின் நடுமத்தியில் இருந்த சீலிங் ஃபேனுக்குக் கீழே போடப்பட்டிருந்த கட்டிலில் வெள்ளை நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் வெள்ளைப் போர்வையால் பாதி மறைக்கப்பட்டிருந்த உடல். நெற்றியில் ஒன்றோ இரண்டோ கோடுகள். எப்போதும் இருக்கக்கூடிய சந்தனக்கீற்று இப்போதும் மறையாமல் இருந்தது. கண்களைச் சுற்றி கறுப்பான நிழல் பகுதி. எனினும், அதே பழைய கண்கள்தான். ஆமாம்... காந்த சக்தி இருக்கிறதா என்ன? வேண்டாம்... அது எதையும் சிந்திக்க வேண்டாம்.

எதுவுமே பேசாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவள் சொன்னாள்:

“பார்க்க வேண்டாம். இப்போ உண்மையாகவே பாட்டிதான்... காலம் எவ்வளவோ ஆயிடுச்சு அல்லவா? அந்த மாறுதல் இருக்கும்... ஆளே மாறி விட்டிருப்பேன்.''

முகத்தையே- வயதும் பிரசவங்களும் உடல்நலக்கேடுகளும் மருந்தும் சேர்ந்து முத்திரைகளைப் பதித்து விட்டிருந்தாலும், இப்போதும் பழைய அழகிற்கு எந்தவொரு குறைவும் உண்டாக்காமல் இருக்கும்- அந்த முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். நினைவு என்னும் சுவர் அலமாரிக்குள்ளே இருந்து தூசி தட்டி துடைத்தெடுத்து வைத்ததாக இருந்தாலும், உள்ளே எப்போதும் புதிதாகவே இருந்த ஓவியம்...

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel