Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 19

oru naal

“நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் பற்றி என்னவெல்லாம் கூறி வைத்திருக்கிறீர்கள்? இப்போது கூறியதைப்போல எதுவும் இல்லையே! எல்லாவற்றையும் கற்பனை பண்ணி... உண்டாக்கி... இல்லையா?''

நான் தொடர்ந்து சொன்னேன்:

“கற்பனை பண்ணியும் அதை உருவாக்கியும்தான் கதையைக் கூற வேண்டும் என்று என்னிடம் எப்போது யார் கூறியிருக்கிறார்கள்?''

“அது கதைதானே? உண்மை இல்லையே!''

அவளுடைய தூக்கக் கலக்கம் வந்து விட்டிருந்த கண்களையே பார்த்துக்கொண்டு சொன்னேன்:

“வாழ்க்கையில் இருக்கும் உண்மைகள்தான் சற்று தாண்டும் போது கதைகளாக ஆகின்றன என்று நான் கூற வேண்டுமா? நமக்கிடையே இருந்த உண்மைகளையும் கதைகளாக நினைத்துக் கொள்ள வேண்டிய காலம் எப்போதோ கடந்து சென்றுவிட்டது என்ற உண்மையையும் நான் ஞாபகப்படுத்த வேண்டுமா? என்னுடைய மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நான் அதை மட்டுமே செய்திருக்கிறேன். கதைகளை கதைகளாகக் கூறுவது...''

அதற்கு பதில் வரவில்லை. ஏதோ தூரத்தில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதைப்போல பேசினாள்:

“மோகனன், உங்களுடைய மகளை முன்பு ஒருமுறை ஒரு திருமணம் நடைபெற்ற இடத்தில் வைத்துப் பார்த்தேன்.''

இடையில் புகுந்து கோபம் இருப்பதைப்போல காட்டிக் கொண்டு சொன்னேன்:

“மோகனனா? எத்தனை முறை இதையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருக்கிறாய்? மோகனன்! மோகனன்! எதுவுமே இல்லையென்றாலும் நான் வயதில் மூத்த ஆள் அல்லவா? பெயரைக் கூறலாமா?''

எதையோ நினைத்து கவலை தோய்ந்த சிரிப்புடன் தொடர்ந்து சொன்னாள்:

“உண்மைதான்... அப்படி கூறியிருக்கக் கூடாது. ஞாபகம் இருக்கிறது... குஞ்ஞன்புவின் அப்பா... இல்லையா? அப்படித்தானே?''

கவலையுடன் நான் திருத்தினேன்:

“இல்லை... அப்படி இல்லை.. அன்று நான் சொன்னது தவறாகிவிட்டது. குஞ்ஞன்பு பிறக்கவே இல்லை. அவன் கோபித்துக் கொண்டு போய்விட்டான். அம்மா வேறு பக்கம் போய்விட்டாள் என்று கூறி, பிறப்பதற்கு சம்மதிக்கவில்லை. இப்போது வேறு ஒரு மகளும் மகனும் மட்டும் இருக்கிறார்கள். குஞ்ஞன்பு இல்லை.''

அவள் உறக்கம், கவலை ஆகியவற்றின் போராட்டத்தில் இருக்கிறாள் என்று தோன்றியது.

“மகள்! திருடி! ஒன்றுமே தெரியாததைப்போல அன்று... அந்த திருமணம் நடைபெற்ற இடத்தில் வைத்து அறிமுகமானாள். பிறகு... தலையிலிருந்து கால் வரை வெறித்துப் பார்த்து நின்று கொண்டு என்னை வெட்கப்படும்படி செய்தாள். இன்னும் கொஞ்சம் சிறு குழந்தையாக இருந்திருந்தால், நான் வாரி எடுத்து அந்தக் கண்களில் முத்தம் கொடுத்திருப்பேன். அந்தக் கண்களைப் பார்த்தபோதே புரிந்துவிட்டது... முன்பு பார்த்த கண்கள் என்று...''

நான் சொன்னேன்:

“அதற்குப் பிறகு அவள் பெரிய ரசிகையாக ஆகி அல்லவா திரும்பி வந்தாள்? வீட்டிற்கு வந்து தன் தாயிடம் கூறுவதைக் கேட்டேன். "அப்பாவின் அழகுணர்வு முன்பும் மிகவும் அருமையாக இருந்திருக்கிறது என்பதற்கான சான்றைப் பார்த்தேன்” என்று கூறிக்கொண்டிருந்தாள்.''

தன்னுடைய அழகைப் பற்றிய அந்த சிறந்த பாராட்டை ரசிக்கவில்லையென்றாலும், கவனிக்கவே இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக கிண்டலாக சொன்னாள்:

“அப்பாவின் மகள்தானே? வாயில் நாக்கு குறைந்தால்தானே ஆச்சரியம்?''

தொடர்ந்து கேட்டாள்:

“மகன் நியூயார்க்கில்... இல்லையா?''

ஆச்சரியத்துடன் பார்த்தேன். பாவம்... என் மகனைப் பற்றி எதற்கு தெரிந்துகொள்ள வேண்டும்? எப்படி தெரிந்துகொண்டாள்? அந்த சந்தேகத்தைப் புரிந்து கொண்டதைப்போல் விளக்கினாள்:

“என் மகள் பார்வதி நியூயார்க்கில்தானே இருக்கிறாள்? அவள் சொல்லி, தெரிந்து கொண்டேன். அவளுடைய மிகவும் நெருங்கிய நண்பனாம்.''

அதிர்ச்சியுடன் கேட்டேன்:

மிகவும் நெருங்கிய நண்பன்! ஏதோ பிறந்து வளர்ந்து நடந்த பாதையில் உண்டான நினைக்க முடியாத பயம் வார்த்தைகளாக வந்தன:

“உண்மையாகவா? மிகவும் நெருங்கிய நண்பனா? அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே! ஏதாவது வெள்ளைக்காரப் பெண் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கு அழைத்தால்கூட சொல்பவனாயிற்றே! உண்மையாக இருந்தால், கஷ்டம்தான். தேவையில்லை. அடுத்த தலைமுறைக்கு பரவுகிற பழைய சாபம்...''

அவள் முழுமையான அமைதியுடன் இருந்தாள். சமாதானப் படுத்துவதைப்போல அவள் கூறினாள்:

“பயப்பட வேண்டாம். அவர்கள் நெருங்கினாலும் ஆபத்து எதுவும் உண்டாகவில்லை. பார்வதி அவளுடைய தாயைப்போல கோழை அல்ல. அவளுக்கு விருப்பமுள்ளதை மன தைரியத்துடன் செய்வதற்கு அவளுக்குத் தெரியும்.''

நான் சொன்னேன்:

“ஆனால், எனக்கு பயமாக இருக்கிறது. பார்வதி அவளுடைய அன்னையைப்போல இல்லாவிட்டால், என்னுடைய மகனும் தன்னுடைய தந்தையைப்போல இல்லை. தனக்கு விருப்பமானதை மன துணிச்சலுடன் அவனும் செய்வான். கடந்த காலத்தின் கோழைத்தனங்களை வஞ்சனையாகவும், அந்த வஞ்சனையைப் புரிந்துகொள்ளாமல் அதற்குப் பின்னாலும் பின்னாலும் குவியலாகக் குவியும் கோழைத்தனத்தை முழுமையான முட்டாள்தனமாகவும் நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன் அவன். அவனிடம் பழிக்குப் பழி என்ற ரத்தம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்ற பயம் எனக்கு இருக்கிறது.''

அவளுக்கு எந்தவொரு அதிர்ச்சியும் உண்டானதாகத் தெரியவில்லை.

“பிறக்காமல் போன குஞ்ஞன்புவின் தந்தையின் மகன்தானே அவன்? அவன் அப்படிப்பட்ட ஒருவனாக எந்தச் சமயத்திலும் ஆக மாட்டான். விரும்பினாலும் முயற்சித்தாலும் முடியாது. இங்கே பாருங்க... எனக்கு ஒரு கனவு இருக்கிறது. மிகவும் அழகான ஒரு கற்பனை... சிந்தனை... அது உண்மையாக நடக்காமல் போகாது. பாருங்க... நம்முடைய இந்த பிள்ளைகள்... நம்மால் முடியாததை அவர்கள் அடைவார்கள். அது மட்டும் உண்மை. அப்போது கோபமெல்லாம் விலகி, குஞ்ஞன்பு திரும்பி வருவான். அவன் நம்முடைய பேரனாகப் பிறப்பான். நாம் அனுபவித்த கவலைகள் அனைத்தையும் அவனுடைய பிஞ்சு கன்னங்களின் புன்சிரிப்பு அழித்துவிடும். அவனைக் கொஞ்சுவதற்கு காலம் நமக்கு ஆயுளைத் தரும்.''

தன்னுடைய உள்மனதில் மென்மையாகவும் பலவீனமாகவும் இருக்கும் ஆசைகளின்- பிறவி கிடைக்காத குழந்தையின் கன்னங்களில் முத்தம் பதித்து, அந்தப் பிஞ்சு கண்களை அவள் திறக்கச் செய்து கொண்டிருக்கிறாளே! வெளிச்சத்தின் மெல்லிய கீற்றுகளின் நிழல் ரேகைகூட கூச்சத்தை உண்டாக்கக்கூடிய சின்னஞ்சிறு கண்கள்... காலமென்னும் அடர்த்தியான இருள் படர்ந்த குன்றின் மேலே எங்கோ ஒரு பந்தத்தின் வெளிச்சம்... குஞ்ஞன்புவின் தாத்தாவா வேறு யாராவதா?

அவளிடம் என்ன கூறுவது?

அனைத்தையும் சமர்ப்பணம் செய்த ஒரு பழைய கால காதலின் முழு அடிப்படையாகவும் இருந்த அந்த பாழாய்ப் போன நிழலிடம்...? வாடி கீழே விழுந்துவிட்ட அந்த பழைய சூரியகாந்தியிடம்?

எதுவும் கூறுவதற்கில்லை.

அவள் பதிலெதையும் கேட்க விரும்பவில்லை என்று தோன்றியது. ஏனென்றால், மீண்டும் கேட்டாள்:

“அன்று நான் சொன்னது எந்த அளவிற்கு உண்மையாகிவிட்டது. இல்லையா? உண்மையைச் சொல்லுங்க. உங்களின் மனைவி என்னைவிட எந்த அளவிற்கு சிறந்தவள்! எந்த அளவிற்கு பொருத்தமானவள்! வாழ்க்கையும் எவ்வளவு சந்தோஷமாகவும் இனிமையாகவும் அமைந்துவிட்டது. இல்லையா? உண்மையைச் சொல்லுங்க...''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel