Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 21

oru naal

உறக்கத்தின் அடர்த்தியான ஆழத்தை நோக்கி இறங்கி இறங்கி போய்க் கொண்டிருப்பதைப்போல.... மூச்சுவிடும் போது வந்த சீரான ஓசை ஒரு உறக்கப் பாடலின் அல்ல- பழமையான ஒரு பாடலின் இசையைப் போல இருந்தது.

அந்த முகத்தின் அமைதித் தன்மையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அந்த நாசி, அந்த பழைய பதினெட்டு வயது கொண்ட இளம்பெண்ணின் நாசியைப்போலவே வெளுத்து, சிவந்து, உயர்ந்து... முன்பு சற்று தொட வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஏங்கி, சுட்டு விரலை நீட்டிய.... வேண்டாம்.... எண்ண வேண்டாம்... வேண்டாம்....

திடீரென்று தாங்க முடியாத ஒரு அதிர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு, அழுத்தப்பட்ட தேம்பலின் நடுங்கிக் கொண்டிருக்கும் சத்தம்... பார்த்தபோது, அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டு அங்கிருக்க முடியவில்லை. மீண்டும் அழைத்தேன்:

“சக்கீ! சக்கீ! சற்று கண்களைத் திற. நான் கூறவேண்டிய ஒண்ணைக் கேளு...''

ஆனால், அவள் அசையவில்லை. வாய் திறந்து பேசவில்லை. உறக்கத்திலேயே அந்த தேம்பல் சத்தம் வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. படிப்படியாக அந்த அழுகைச் சத்தம் இல்லாமற் போனது. இடையில் அவ்வப்போது மட்டும் கேட்டுக் கொண்டிருந்த பெருமுச்சுகள்.... இறுதியில் பாதி மட்டுமாக ஆன அந்த மார்பகத்தின் நடுக்கங்கள்... பிறகு... பிறகு... அதுவும் இல்லாமற் போனது.

சிறிது நேரம் அந்த அழகான முகத்தைப் பார்த்து ஆறுதலடைந்து கொண்டிருந்தேன். பிரார்த்தித்தேன்.

“ஒரு பழைய நண்பனின் எந்தக் காலத்திலும் முடிவடையாத அன்பு, ஒரு தாலாட்டுப் பாடலாக உன்னை ஆசீர்வதிக்கட்டும்...''

மெதுவாக எழுந்தேன். குனிந்து, அந்த உடலில் தெரியாமல் விரலின் நுனிகூட பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கொண்டே, அந்த போர்வையின்மீது இருந்த மடிப்பைப் பிடித்து உயர்த்தி, கழுத்து வரை இருக்கும் வண்ணம் சரி பண்ணி விட்டேன். அதற்குப் பிறகு ஒரு நிமிட நேரம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். ஏதோ ஆகாயத்து தேவதை பாடுவது காதில் விழுந்தது.

"தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ!

அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!"

ஓசை எதுவும் உண்டாக்காமல் வெளியே வந்தேன். அந்த அழுகைச் சத்தம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ துயரத்தின் வெளிப்பாட்டைப்போல... படிகளின் வழியாக கீழே பாதி வந்தபோது, கையில் ஒரு பையுடன் மேனன் மேல்நோக்கி வந்து கொண்டிருந்தான். பார்த்ததும், பரபரப்பு கலந்த முழுமையான உரிமையுடன் கேட்டான்:

“சார், போறீங்களா? நான் வந்த பிறகுதான் போவேன் என்று ஒத்துக் கொண்டீர்களே?''

விளக்கிச் சொன்னேன்.

“கொடுத்திருந்த மருந்து சற்று கனமானது என்று தோன்றுகிறதே! நான் சொல்லும்போதே, உறக்கம் ஆரம்பமாகிவிட்டிருந்தது. பேசிக் கொண்டிருப்பதற்கு இடையிலேயே தூங்கியாச்சு... அதனாலதான் நான் புறப்பட்டுட்டேன்...''

அவன் அதை எதிர்பார்த்ததைப்போல தோன்றியது.

“சாப்பிட்ட ஒரு மருந்தின் ஸைட் எஃபெக்ட் உறக்கம்தான். எனினும், சார் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால் தூங்க மாட்டாள் என்றும், மதிய உணவு சாப்பிட்டு முடித்தபிறகு, அதை மாற்றலாம் என்றும் நான் நினைத்திருந்தேன். பரவாயில்லை... இனி உறங்கி எழுந்திருப்பதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்... சார், உங்களைப் போவதற்கு முன்பு பார்க்கலாம் அல்லவா?''

நான் சொன்னேன்:

“நிச்சயமாக பார்க்கலாம்.''

மேல்நோக்கி நான்கைந்து படிகள் ஏறி நடந்து விட்டு, பின்னால் திரும்பி, எனக்கு அருகில் வந்து சிரித்துக் கொண்டே அவன் சொன்னான்:

“சார், முன்பு முதல் முறையாகப் பார்க்கும் ஒரு அறிமுகமில்லாத மனிதனாக இருந்தும், என்னிடம் கருணை காட்டி ஒரு பொய்யைச் சொன்னீர்கள். உங்களுடைய மனதை வேதனைப்பட வைத்து, என்னை சமாதானப்படுத்துவதற்காக பொய்யைச் சொன்னீர்கள்.''

பதைபதைப்புடனும் கவலையுடனும் நான் தடுமாறிய குரலில் கேட்டேன்:

“நானா? உங்களிடமா? பொய்யா?''

அந்த இதயத்திலிருந்து வரும் சிரிப்பின் இனிமையுடன் சொன்னான்:

“ஆ! அதே நீங்கள்தான்... ஒரு பொய் ஞாபகத்தில் இருக்கிறதா? அன்று சொன்னீர்கள் அல்லவா? ஒருதலைப்பட்சம் என்றோ என்னவோ... அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு சொன்ன பொய் அல்லவா? அவள்... என்னுடைய மனைவி எல்லா விஷயங்களையும் என்னிடம் கூறிவிட்டாளே!''

இப்போது நான் அவனை இறுகக் கட்டிக் கொண்டேன். என்னையே அறியாமல் கட்டிப்பிடித்து விட்டேன்.

மெதுவான குரலில் சொன்னான்:

“Great... great... really great''.

அங்கு... அந்த மருத்துவமனையின் படிகளில் இருந்து இறங்கி, இவை அனைத்தையும் கதைகளாக மாறுவதற்கு முன்னால் குறித்து வைக்கவேண்டும் என்பதற்காக நான் ஓடி வந்தேன். ஆனால், என்ன செய்யட்டும்? இந்த விஷயங்கள் பெரும்பாலும் பழையவையே. அதனால்தான் சிறிதளவு மட்டுமே சிந்திக்கக் கூடிய, சிறு உலகத்தை மட்டுமே பார்க்கக்கூடிய, எதையும் பார்க்க மறுக்கும் சிறிய மனிதர்கள் வாழும் நம்முடைய உலகத்திற்குள்ளேயே அவை கதைகளாக மாற ஆரம்பிக்கின்றன. கதாபாத்திரங்கள் கதையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். என்னையும் இன்னொரு கதாபாத்திரமாக அவர்கள் ஆக்குவதற்கு முன்னால், நான் விலகி நிற்கிறேன். நான் வெறும் ஒரு கதாசிரியர் மட்டுமே.

ஒரு சாதாரண குடும்பத்தில், சாதாரண கல்வியைப் பெற்று, வெறும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன்... என்னுடைய சிந்தனையோ செயலோ எதுவும் புனிதமானதோ உயர்ந்ததோ அல்ல. பொறாமைப்படுகிற மாதிரி என்னிடம் எதுவுமில்லை. மரணத்துடனோ அதற்கு முன்போ நானும் மறக்கப்பட்டு விடுவேன். அதைப் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை. விதியின், கடவுளின் குரூரத்தைப் பற்றி புகாரோ பதைபதைப்போ இல்லை. சத்தியமாக.

ஆனால், வாலிபத்தின் இளமையான எண்ணங்கள் உண்டாக்கிய ரசனைகளின், உணர்வுகளின் சங்கமத்தில் நான் ஒரு இளம் பெண்ணையும் அவளின் மூலம் வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் நேசிக்க ஆரம்பித்தேன். அதிகமாக... அதிகமாக... நேசித்தேன். அது ஒரு கொடை என்றும், அதே அளவில் அந்த நேசிப்பு திரும்பவும் கிடைத்திருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன். ஏனென்றால், அதிலிருந்து எனக்கு மிகவும் அருமையான கனவுகளும் கற்பனைகளும், வெவ்வேறு வகையான சிந்தனைகளும், தனிப்பட்ட சந்தோஷங்கள் நிறைந்த இனிய கொண்டாட்டங்களும் கிடைத்தன. கஷ்டம்! பல வேளைகளில் பெரும் வேதனை நிறைந்த பெருமழைகளும் கிடைத்தன. அதில் கவலை தோன்றவில்லை. அதன் சங்கமம்தானே அதன் உண்மையே.

அவற்றை எழுத்துகள் என்னும் கடவுளின் வடிவத்தில் வரைய நான் விரும்பியிருக்கிறேன். வாசிப்பு என்ற தேவாலயத்தில் கதையின் களத்தை எழுதி நடையில் வைக்க கடுமையாக முயற்சித்திருக்கிறேன்.

இந்தக் களத்தின் கோடுகளுக்குள் விழுந்து கிடக்கும் நிம்மதி யின்மையின், அச்சத்தின், சந்தோஷ வெளிப்பாடுகளின், ஆறுதல்களின் வர்ணஜாலம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel