Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 20

oru naal

மிகுந்த கவலையை உண்டாக்கக் கூடிய கேள்வியாக அது இருந்தது. எனினும், சொன்னேன்:

“ஒன்றுக்கு பதிலாக இன்னொன்று இல்லை. பெண்ணே! எதுவும் எப்போதும் சரியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. முன்பு நீ கூறுவாய் அல்லவா...? உலகம் மிகவும் பரந்தது என்று... அப்படியா? அப்படி இல்லையே! அது உருண்டு கொண்டே இருக்கிறதே! அதனால்தானே நாம் ஆரம்பமான இடத்திற்கே திரும்பவும் வந்து சேர்ந்திருக்கிறோம். இப்போது பலவீனமான உடல் உறுப்புகளையும், நிறைவேறாத ஆசைகளையும் கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். மரணத்தை நெருங்கியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களாக ஆகிவிட்டோம். எதற்குமே லாயக்கற்றவர்களாக ஆகிவிட்டோம். இங்கு இளமைக் காலத்தில் பார்த்த சிவப்பு நிற வாகை மலர்கள் இல்லை. நம்பிக்கைக்கான தைரியத்தை அளிக்கும் அப்பிராணியான யக்ஷி இல்லை. எதற்கும் தைரியம் இல்லாத... நம்மீதே நம்பிக்கை இல்லாத... அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கும் நாம் மட்டும்...

கடந்த காலத்தின் ஏதோ பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்று தோன்றியது. இப்போது உறங்கிவிடும் என்று தோன்றிய கண் இமைகளை பாதியாகத் திறந்து வைத்துக்கொண்டு அந்த பழைய கால நினைவுகளுடன் கேட்டாள்:

“பழைய அந்த கதையின் நாயகனால் இறுதியில் அவளையே திருமணம் செய்துகொள்ள முடிந்ததா?''

திருப்பிக் கேட்டேன்:

“கதையை வாசித்து அதில் வாழவும் செய்த உனக்குத் தெரியாதா?''

உறக்கத்தின் பாசி படர்ந்த தரையில் தடுமாறிக் கீழே விழ இருந்த வார்த்தைகளில் பதில் வந்தது:

“எனினும், கதாசிரியரின் பேனா முனைதானே சர்வ சக்தி படைத்தது? எந்த நிமிடத்திலும் திருத்தி எழுதலாமே! சந்தோஷ முடிவாக ஆக்கிக் கொள்ளலாமே! யாரையும் அழ வைக்காமல் இருக்கலாமே!''

மருந்தின் கடுமையான விளைவாலோ, அவளிடம் இருந்த களைப்பின் விளைவாலோ அல்லது இரண்டும் சேர்ந்து உண்டாக்கிய செயலற்ற தன்மையாலோ- என்ன காரணத்தால் என்று தெரியவில்லை- கண்கள் உறக்கத்தை நோக்கி சொருகிச் சொருகிப் போய்க் கொண்டிருந்தன. கண்களைத் திறந்து வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு, இமைகளை மூடி... மூடி... திறந்து கொண்டு, மிகமிக பலவீனமான குரலில் இருந்தது அவளுடைய வேண்டுகோள்.

அந்த கவலை நிறைந்த முகத்தைப் பார்த்தபோது, பழைய வாகை மரத்திற்குக் கீழே இருந்த இளம்பெண் எனக்குத் தோன்றினாள். ஆர்வம் நிறைந்த முகத்துடன்- முகத்தில் விழுந்த மாலை நேர ùளிச்சத்தின் பொன் நிறத்துடன். அந்த இளம்பெண்ணிடம்தான் பதில் சொன்னேன்:

“ஒரு கட்டத்தைத் தாண்டியவுடன், கதாசிரியரிடமிருந்து கதாபாத்திரங்கள் கதைகளைப் பிடித்துப் பறித்துக்கொள்கிறார்கள். தங்களுடைய இருப்பையும் தனித்துவத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்குத் தோன்றுவதை அவர்கள் செய்துகொள்கிறார்கள். பேசுகிறார்கள். சில கதைகள் சோகத்தில் முடியும். சில கதைகள் நகைச்சுவையில் முடியும். இங்கு கதாசிரியர் அமைதியான சாட்சியாக நின்று கொண்டிருக்க கட்டாயப்படுத்தப்படுகிறான்.''

தூக்கத்தில் உளறுவதைப்போல பதில் வந்தது. நிறுத்தியும் நீட்டியும் இழுத்தும் பறக்கச் செய்தும்...

“அப்படியென்றால், நான் கூறட்டுமா? நான் வாசித்ததும் வாழ்ந்ததுமான அந்தக் கதை சோகமயமானது என்று சிலர் சொன்னார்கள். வேறு சிலர் "காதல் கதை’’ என்றார்கள். வேறு சிலர் "காமெடி’’ என்று குறிப்பிட்டார்கள். அனைத்தும் சேர்ந்த ஒன்று அது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நாயகனை நாசமாக்கிய அதன் நாயகி இப்போது இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிவடைந்து, உறுப்புகளில் பாதிப்பு உண்டாகி, பெண்ணாகவே இல்லாமல் ஆகி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். கடவுள் அவளுக்கு சாபமிட்டுவிட்டார். ஒரு மார்பகமும் கர்ப்பப்பையும் அரித்துப் போய்விட்டன. விதி அவளுக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டது. இனி எந்தவொரு பிறவியிலும் அவளால் ஒரு பெண்ணாகப் பிறக்க முடியாது. எந்தவொரு கதையிலும் நாயகியாக யாராலும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. யாரையும் மோசம் பண்ணவும் முடியாது. முன்பு கெஞ்சி கெஞ்சி கேட்டும், மன்னிப்பு தரவில்லை அல்லவா? இப்போது கேட்க மாட்டேன். கிடைத்தாலும், இனி பயனுமில்லை.''

மிகுந்த தடுமாற்றத்துடன் தொடர்ந்து சொன்னாள்:

“அன்று மோசம் பண்ணிவிட்டுப் போகத் தோன்றியது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது இல்லையா? இல்லாவிட்டால் என் பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட கதிதான் கிடைத்திருக்கு மல்லவா? அந்த பாவம் மனிதனைப்போல மருத்துவமனையிலிருந்து மருத்துவமனைக்குப் பின் தொடர்ந்து இந்த நரக வேதனை முழுவதையும் அனுபவிக்க வேண்டியதிருந்திருக்குமே!''

அதிர்ச்சியடைந்து கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். திறந்து கிடந்த சாளரத்தின் வழியாக வெளியே எங்கோ பார்த்துக்கொண்டு, தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாத யாருடைய காரியத்தையோ கேட்டுக்கொண்டிருப்பதைப்போல அந்தச் செயல் இருந்தது. ஆனால், வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு மனதிற்கு வெறுமை பரவி விட்டிருந்தது. அப்படி உட்கார்ந்து கொண்டிருந்ததில், கேட்டுக்கொண்டிருந்த பேச்சு நின்று போனதும் அமைதி நிலவிக் கொண்டிருந்ததும் தெரியவேயில்லை. தூரத்தில் எங்கோ மலர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஒரு வாகை மரத்தின் சிவப்பு பந்தலுக்குக் கீழே எப்போதோ மலர்ந்து போய் விட்டிருந்த ஒரு வெளுத்த, சுறுசுறுப்பான இளம்பெண்ணை மனம் தேடிக் கொண்டிருந்தது. அந்த செயலின் இறுதியில் ஏமாற்றமடைந்து திரும்பி வந்து முன்னால் பார்த்தபோது, அவள் கண்களை மூடிப் படுத்திருந்தாள். ஒருவரோடொருவர் எதுவுமே பேசிக்கொள்ளாமல், அவள் கண்களை மூடிப் படுத்திருந்தாள். அந்த முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு அவன் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் சூறாவளியும் கடலின் இரைச்சல் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன.

இதில் எங்கே தவறு நேர்ந்தது? எங்கு சரியாக நடந்தது? தவறு, சரி ஆகியவற்றின் வேறுபாடுகளை யார் முடிவு செய்வது? அதற்கான பின்விளைவையும் பிராயச்சித்தத்தையும் அளிப்பது யார்?

ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு உணர்ச்சி பொங்க அழைத்தேன்:

“சக்கீ!''

காதல் வயப்பட்டிருந்த உணர்ச்சிமயமான காலங்களில், கடிதங்களில் அவளை அழைத்திருந்த செல்லப் பெயர் அது. அவள் அதைப் பற்றி ஒருமுறை எழுதவும் செய்திருக்கிறாள்.

“எப்போதும் என்னை சக்கீ என்று மட்டும்தானே அழைத்திருக்கிறீர்கள்? எனக்கு அது மிகவும் விருப்பமான பெயராக இருந்தாலும், எந்தச் சமயத்திலும் என்னுடைய உண்மையான பெயரைச் சொல்லி என்னை அழைத்ததே இல்லையே! அப்படி அழைத்துக் கேட்பதற்கு எவ்வளவு ஆசையாக இருக்கிறது தெரியுமா? நான் அறிமுகமான புதிதில் ஒரே ஒருமுறை பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறீர்கள். சார், அது என்று என்று ஞாபகத்தில் இருக்கிறதா?''

அந்த ஞாபகத்தில் பலத்தால் மீண்டும் அழைத்தேன்:

“சக்கீ!''

அவள் எதையும் கேட்டதாகத் தோன்றவில்லை. உறங்கி விட்டாள் என்று தோன்றியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel