Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 11

oru naal

ஒன்று சேர்ந்து படித்தும், அன்பு நிறைந்த மிடுக்கான நினைவுகளுடன் வளர்ந்தும், பெரியவர்களான நாம் ஒன்று சேர்ந்து செலவழித்த விலை மதிப்பான நாட்கள்! ஒருவேளை அந்த நேரத்தில், மழைக் கால வானத்தின் வெறுமையாகக் காணப்படும் தூரப் பகுதிகளில் எங்கோ, எதிர்பாராமல் வந்து சேர்ந்த, கருகருவென்று போராடிக் கொண்டிருக்கும் மேகங்களுக்கிடையே உண்டான சண்டையால் எழும் சத்தத்தின் தாழ்வான முழக்கம் வந்து தொட்டு அழைத்ததைப் போல, உன்னுடைய மனதிலும் பழைய நினைவுகளின் வாசல் கதவு திறக்கக் கூடிய சூழ்நிலை வரலாம்.

உன்னையே அறியாமல் நீயும் அதே பழைய காதலுடன் திரும்பிப் பார்க்கவேண்டி வரலாம்.

என்னுடைய, உன்னுடைய பழைய காதல் நினைவுகள் காற்றில் பயணிக்கும்போது ஒன்றொடொன்று சந்தித்தன என்பதும் நடக்கக் கூடியதுதானே! அப்போது ஏதோ பழைய ஈர்ப்பின் கருணையால் அவை ஒன்றோடொன்று இறுக அணைத்துக்கொண்டால்...?

அந்த அணைப்பில் நம் இருவருக்கும் மட்டுமே சொந்தச் சொத்துகளாக இருக்கும் எத்தனையோ அனுபவங்கள் பச்சை மரங்களாக ஆவதையும், பலவிதப்பட்ட வண்ணங்களைக் கொண்ட மலர்களாக ஆவதையும், மனதை மயக்கக்கூடிய நறுமணமாக பரவுவதையும் நான் பார்க்கிறேன். நான் மிகவும் பதைபதைப்புடன் நின்றுவிடுகிறேன்.

நான் இனிமேலும், இப்போதும் உன்னைக் காதலிக்கிறேன், சக்கி!''

அந்தக் கடிதம் கிடைத்த பின்னராக இருக்க வேண்டும்- எதிர்பாராமல் அலுவலகத்தின் அறைக்குள் நுழைந்து வந்தாள்.

மதியத்தைத் தாண்டிய பரபரப்பு இல்லாத நேரமாக அது இருந்தது. ஏதோ உயிரற்ற கோப்பின் முகப்பில் இருந்த எழுத்துகளின் மீது கண்களை ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் போல பொய்யாகக் காட்டிக் கொண்டு, என்னுடைய விதியின் விபரீதத்தைப் பற்றியும், தலையெழுத்தைப் பற்றியும், மனதில் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, உதவியாளர் தொலைபேசியில் சொன்னார்:

“ஒரு விசிட்டர் வந்திருக்காங்க.''

பார்வையாளருக்கான நேரமாக இல்லையென்றாலும், என்னுடைய அமைதிக்கு ஒரு தற்காலிகத் திரையைப் போட்டதைப் போல இருக்குமே என்று நினைத்துக் கொண்டே சொன்னேன்:

“சரி... வரட்டும்.''

தொடர்ந்து அறையின் பாதி கதவைத் திறந்து மூடும் சத்தத்தைக் கேட்டேன். வழக்கம்போல அரசாங்கத்தின் தேவைக்காக வரக்கூடியவர்கள் யாராவது இருப்பார்கள் என்ற நினைப்புடன், ஃபைலில் இருந்து தலையை உயர்த்தி அலட்சியமாகப் பார்த்து, திடீரென்று மீண்டும் பார்த்தேன். ஒரு நிமிட நேர அதிர்ச்சியடைந்த கவலை கண்களையும் மனதையும் பதைபதைக்கச் செய்தது. எந்த அளவிற்கு எதிர்பாராதது! அவள்! வெறுமையிலிருந்து வெடித்து விழுந்ததைப்போல அவள்! மெதுவாக எழுந்து நின்று, ஆச்சரியத்தை வெளிப்படுத்தி பெரிதாக்கிய விழிகளுடன் நோக்கி திகைப்புடன் நின்றிருந்தேன்.

இல்லை... எனக்கு தவறு நேரவில்லை. அவள்... அவளேதான்...

எல்லாம் முன்பு நடந்ததைப்போலத்தான். காதலன் தன்னுடைய முட்டாள்தனமான கற்பனையில் கண்டிருந்த எல்லாவிதமான குணங்களும் அழகும் நிறைந்து நிற்க, காலையில் வைத்த சந்தன அடையாளம்கூட நெற்றியில் இருந்தது. இயல்பாக எப்போதும் நடப்பதைப்போல இடையில் அவ்வப்போது செவியின் பின்பக்கமாக நீவி ஒதுக்கி விடக்கூடிய முடிச்சுருள்கள், கைவிரல்களை எதிர்பார்த்து இரண்டு கன்னங்களிலும் விழுந்துகிடந்தன. வெளியே இருந்த வெயிலின் வெப்பத்தின் கடுமை காரணமாக இருக்க வேண்டும்- கன்னங்கள் மேலும் சிவந்து காணப்பட்டன.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். நீண்ட நேரம் எங்களையே அறியாமல் கண்களை வேதனைப்படுத்திக் கொண்டு வெறுமனே நின்றிருந்தோம். திருமணம் செய்துகொள்ளப் போகும் இருபது வயதைக் கொண்ட அந்த இளம்பெண்ணும், இருபத்து மூன்று வயதைக் கொண்ட சோர்வடைந்து போன, அந்த நிராகரிக்கப்பட்ட காதலனும்.

அவனுக்கு எவ்வளவோ பதில்கள் கிடைக்க வேண்டியதிருந்தும், அவளுக்கு ஏராளமான விளக்கங்களும் நியாயங்களும் கூறுவதற்கு இருந்தும், ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ள முடியாமல் அதே இடத்தில் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். பிறகு ஏதோ ஒரு யுகத்தில் இனம் புரியாத உள்ளேயிருந்து வந்த ஒரு புரிதலின் காரணமாகவோ, குற்ற உணர்வு காரணமாகவோ அவளுடைய கண்கள் பின்வாங்கின.

ஆனால், முன்னால் அப்போது பேரமைதி முழுமையாக நிறைந்து நின்றிருந்தது என்ற விஷயம் தெரிந்தபோது மனதில் துயரம் அதிகமானது. இந்த பேரமைதியின் முழுமையை நேரடியாக சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் அவள் இல்லையே! ஏராளமான சிந்தனைகளுக்குப்பின், இறுதியாக அவள் இந்த இடத்தைத் தேடி வந்திருக்கிறாள்.

அவனுடைய எந்தவிதமான சலனமும் இல்லாத முகத்தின் சதைகளையும், உயிரற்றுக் காணப்பட்ட கண்களையும் பார்த்து அவள் பதைபதைத்துப் போனாள்.

ஒருவேளை யார் என்று அடையாளம் தெரியவில்லையோ? இல்லாவிட்டால் அப்படிக் காட்டிக் கொள்கிறானா?

திடீரென்று அவளுக்கு பயமும் பரிதாப உணர்ச்சியும் உண்டாயின. அப்படி உண்டாக வேண்டிய அவசியமில்லை. வந்திருக்க வேண்டியதில்லை. இந்த அலுவலக இடத்தையும் நேரத்தையும் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்திருக்கிறாள். வேறு எந்த இடமாக இருந்தாலும், சந்திக்க வேண்டிய மனப் பிரச்சினைகள் மிகவும் அதிகமாக இருக்கும். தவிர்க்கலாம். பதில் கூறாமல் இருக்கலாம். விளக்கங்கள் கூற வேண்டாம் என்று இருக்கலாம். பார்க்க வேண்டும் என்ற தீர்மானமும் கூற வேண்டியதைக் கூறக்கூடிய முறையில் கூறிப் புரிய வைக்க முடியும் என்ற ஆசையும் நடக்கும். மனசாட்சிக்கு சிறிதளவாவது நிம்மதி கிடைக்கும்.

ஆனால், இப்போது... இதோ இங்கே நினைத்ததைப்போல காரியங்கள் எதையும் கூற முடியவில்லை. மனதில் தயார் செய்து உறுதிப்படுத்தி வைத்திருந்த வார்த்தைகளின் பற்றாக்குறை தொல்லையைத் தருகிறது. அந்த வார்த்தைகள்கூட நாக்கின் நுனியில் வந்து நிற்க மாட்டேன் என்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இன்னொரு விஷயம் வேறு. முன்னால் இருக்கும் மேஜைக்குப் பின்னால் எழுந்து நின்றிருக்கும் சோர்வடைந்து காணப்படும் அந்த இளைஞன், சிறிது நாட்களுக்கு முன்பு வரை தனக்கு யாராக இருந்தான் என்பதையும் என்னவாக இருந்தான் என்பதையும் பற்றிய ஞாபகம், வயதிற்கு வந்திருக்கும் சூழலை அடைய மட்டும் செய்திருக்கும் அந்த இளம் பெண்ணின் இதயத்திற்குள் எங்கிருந்து என்று தெரியாமலே வேகமாக நுழைந்தது. முன்னால் இருந்த அந்த முகமும், முகவெளிப்பாடுகளும் அவளை மிகவும் ஆழத்தில் தொட்டு தளர்வடையச் செய்தது.

இல்லை... இதை இதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை நீடித்துக் கொண்டிருக்கச் செய்ய முடியாது. உறுதியுடன் எடுத்துக் கொண்டு வந்த அனைத்து முடிவுகளும் ஒரு வேளை இடிந்து நொறுங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அவளேகூட நிலை தடுமாறி விழலாம். அதை அனுமதிக்கக் கூடாது. வந்தது அதற்காக அல்லவே! எங்கிருந்தோ சிறிது தைரியத்தைப் பிடித்துக்கொண்டு வர முடிந்தது என்றாலும், கீழே பார்த்து- தரையில் இருந்த கற்களைப் பார்த்து மட்டுமே அவளால் கூற முடிந்தது:

“நான்... நான்... இது நான்தான்...''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel