Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 7

oru naal

நீளமாகவும் சிவந்தும் காணப்பட்ட முகத்தின் அழகும், வெளுத்த உடலின் தோற்றமும், இளமையின் வனப்பும், உற்சாகமும் மலர்ச்சியும் நிறைந்த நடவடிக்கைகளும் மனதிற்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு கேட்டேன்:

“ஃபிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறீர்கள் அல்லவா?''

உடனடியாக பதில் வந்தது:

“பிறகு... விக்டோரியன் கவிதைகளை வாசிப்பதற்கு முன்னால் முடிந்த வரைக்கும் மற்ற மொழிகளில் உள்ள கவிதைகளை வாசித்துப் பார்க்கிறேன். ஃபிட்ஸ் ஜெரால்டின் மொழிபெயர்ப்பிலிருந்துதானே எல்லா மலையாள மொழிபெயர்ப்புகளும் உண்டாகியிருக்கின்றன!''

ஓ! விஷயம் அப்படிப் போகிறதா? விக்டோரியன் கவிதைகளைப் படிப்பதற்கான ஆயத்தம்! ஜி. குமாரபிள்ளை சாரும் அய்யப்ப பணிக்கர் சாரும் அல்லவா பாடம் சொல்லித்தருவார்கள்? இவற்றையெல்லாம் வாசித்துப் பார்க்கும்படி அவர்கள் யாராவது கூறியிருப்பார்கள்! விஷயம் அவ்வளவுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. தற்போதைக்கு மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அந்தப் பெண்ணிடம் இருக்கும் விஷயம் அவ்வளவுதான். எனினும், உயர்ந்த சிம்மாசனத்திலிருந்து கீழே எறிவதைப்போல, ஒரு அறிவுரையின் சாயலில் நான் சொன்னேன்:

“எம்.பி. அப்பனின் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது. "வாழ்க்கை திருவிழா"... அதையும்கூட வாசித்துப் பாருங்க...''

பதிலுக்கு காத்திருக்காமல் கையிலிருந்த புத்தகத்தை ராமச்சந்திரனிடம் நீட்டிக்கொண்டே சொன்னேன்.

“இங்கே பார்... இது மிகவும் அருமையா இருக்கு. நீ கொஞ்சம் வாசித்துப் பார்.''

அவன் புத்தகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு சொன்னான்:

“ஓ! ஜி மொழிபெயர்த்த புத்தகமா? Recently he is at his lyrical best. எனினும், இன்று இதை வாசிக்க வேண்டியவன் “நான் அல்ல''.

தன்னுடன் வந்து நின்றிருந்த இளம் பெண்ணைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான்.

“இன்று இந்த இளம்பெண் படிக்கட்டும். Sweet… extremely sweet voice. நீ அப்படியே உட்கார்ந்து விடுவாய். Stunned ஆகிவிடுவாய்...''

அந்த இளம் பெண் சற்று பதைபதைத்து விட்டதைப்போல தோன்றியது. முகம் அளவிற்கும் அதிகமாக சிவந்துபோய் காணப்பட்டது. சிவப்புநிற வாகை மலர்களில் மோதி கீழே விழுந்துகொண்டிருந்த சாயங்கால நேர வெளிச்சம் அந்த சிவப்பு நிறத்தை மேலும் அதிகமான பிரகாசத்துடன் திகழச் செய்தது. ராமச்சந்திரன் மிகவும் வற்புறுத்திய காரணத்தால், அவள் எங்களுக்கு முன்னால் இருந்த பெஞ்சின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த கவிதையை வாசித்தாள். ஏதோ ஆகாய தேவதையின் இனிமையான குரல் ஒலிப்பதைப்போல தோன்றியது. கவிதையை வாசித்து முடித்துவிட்ட பிறகும், அதன் அலையோசை காற்றில் இனிமையாக கேட்டுக்கொண்டே இருந்தது.

"தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ

அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!’’

கவிதைக்கே உரிய அழகும் இனிமையும் அதை வாசித்ததால் உண்டான இதய மலர்ச்சியும் மனதில் உற்சாகத்தை எழச்செய்தன. இனம் புரியாத உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து, நிமிடங்கள் செயலற்ற நிலையில் தளர்ந்துபோய்க் கிடந்தன.

“கடவுளே! நேரம் மிகவும் அதிகமாகிவிட்டதே!'' என்றோ வேறு என்னவோ கூறியவாறு அவள் குழந்தைகளின் அருகில் சென்று தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து வெளியே வேகமாக நடந்து சென்றாள். நான் உட்கார்ந்திருந்த நிலையைப் பார்த்து ராமச்சந்திரன் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன் கேட்டான்:

“உனக்கு என்னடா ஆச்சு?''

ஒரு நிமிட முழுமையான அமைதிக்குப் பிறகு, எதுவுமே இல்லை என்பதைப்போல சொன்னேன்.

“தூரத்தையும் தாண்டி தூரத்தில்... ஆச்சரியம்!''

சிரிப்பின் அளவையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்தும் முறையையும் அதிகரித்துக் கொண்டு ராமச்சந்திரன் அழுத்தமான குரலில் சொன்னான்:

“இல்லை... அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!''

அதற்குப் பிறகு பூங்காவிற்குச் செல்வது என்பதை வாடிக்கையான விஷயமாக ஆக்கினேன். பெரும்பாலும் நண்பர்களை விலக்கி விட்டு, தனியாகச் சென்று கொண்டிருந்தேன். அது ஏன் என்று புரிந்திருக்கும் அல்லவா? ஆமாம்... அதற்குத்தான். முடிந்தவரையில் தனியாக பார்ப்பதற்கு.. பேசுவதற்கு... குழந்தைகள் இருவரும் கீழே இருந்த மணல் பரப்பில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு பாதுகாப்பிற்காக வரக்கூடிய அக்காவும் நானும் மேலே இருக்கும் ஆள் இல்லாத நடைபாதையின் ஓரத்தில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். மேலே வாகை மரத்தின் பச்சிலைப் பந்தலோ பூம்பந்தலோ மாறி மாறி காட்சியளித்துக் கொண்டிருக்கும். அவற்றுக்கு மத்தியில் நுழைந்து வரும் மாலை நேரத்து வெளிச்சத்தின் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறம்... சுற்றிலும் இருக்கும் பல வகைப்பட்ட செடிகளிலும் அவற்றின் பல வகையான மலர்களிலும் வண்ணங்கள் நிறைந்த தீப அலங்காரத்தை அது உண்டாக்கியது. அந்த சாயங்காலப் பொழுதின் அழகில் மூழ்கிப் போய் உட்கார்ந்து நாங்கள் உரையாடிக் கொண்டிருப்போம். எங்களுடைய சிறிய உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினோம். எங்களைப் பற்றி மட்டும் பேசுவதற்கு மறந்து போய், பேசினோம். கவிதை, கதை, கலை- எல்லா விஷயங்களிலும் அவளுக்கு நல்ல அறிவு இருந்தது. ஒருநாள் கையில் அந்த வாரம் வெளிவந்திருந்த ஒரு வார இதழுடன் அவள் வந்தாள். அதில் என்னுடைய சற்று நீளமான ஒரு கதையின் முதல் பகுதி இருந்தது. அது பிரசுரமாகியிருந்த பக்கத்தில் விரலால் அடையாளம் வைத்தவாறு அவள் வந்தாள். வந்தவுடன் சொன்னாள்: “இது நன்றாக இருக்கிறது.''

நான் கிண்டலாகச் சொன்னேன்:

“ஏதாவதொரு பெண் நான் எழுதியது நன்றாக இருக்கிறது என்று கூறினால், அப்போதுதான் எழுதியது மோசமானது என்று தோன்றும் என்று ஸி.ஜெ. தாமஸ் கூறியிருக்கிறார்.''

அவள் அந்த நகைச்சுவையை சரியாக கவனிக்கவில்லை என்று தோன்றியது. முகத்தில் முதலில் இருந்த அதே சீரியஸ்தனம்தான் தொடர்ந்து காணப்பட்டது. பிறகு என்னையே கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டாள்:

“இது... இந்தக் கதை... உங்களின் சொந்த அனுபவமா?''

நான் அவளுடன் சேர்ந்து கொண்டேன்:

“இல்லை என்று கூறுவதற்கு இல்லை. அனுபவங்களும் அவற்றின் தொடர்ச்சிகளும் சாயல்களும் நமக்கே தெரியாமல் கலையில் வந்து சேர்ந்து கொள்கின்றன.''

அவள் அதைக் காதில் வாங்கினாளோ என்னவோ? அவள் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்தபோது, வேறு எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல இருந்தது. இறுதியில் மீண்டும் கேட்டாள்:

“கடைசியில், அந்த ஆளால் அவளையே திருமணம் செய்துகொள்ள முடிந்ததா?''

நான் சிரித்தேன்:

“கதை முழுவதும் முடியட்டும். அப்போது புரியும்.''

வழக்கத்தில் இல்லாத அமைதி அதற்குப் பிறகும் தொடர்ந்து நிலவியது. இறுதியில் தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல சொன்னாள்:

“இந்தக் கதை எனக்கு ஏதோ ஒரு பெரிய தைரியத்தைத் தருகிறது.''

நான் கேட்டேன்.

“எதற்கு? எதைச் செய்வதற்கான தைரியத்தை?''

அப்போது பின்வாங்கினாள்.

“இல்லை... தவறாகக் கூறிவிட்டேன். தைரியம் தரவில்லை. பயந்தைச் சற்று விலக்கியது...''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel