Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 5

oru naal

முகத்தை நோக்கி சிறிதுகூட பார்க்காமல் திருவனந்தபுரத்திற்கே உரிய தனி குணத்தை அவன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அறிமுகப்படுத்தினான் என்று அவள் கூறிய சம்பவம் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. தொடர்ந்து கூறிய விஷயங்கள் சரியாக இல்லையென்றாலும், நியூடெல்லியில் நடைபெறும் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான இளைஞர்கள் திருவிழாவில் பங்கு பெறுவதற்குச் செல்லும் கலைக் குழுவிற்கு மலையாள வகுப்பில் பயிற்சி தந்து கொண்டிருந்தார்கள். அந்த குழுவில் பாடகியாக அவள் இருந்திருக்கிறாள். அவளுடைய வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவனும் அவனுடைய நண்பனுமான ராமச்சந்திரனும் பாடகனாக அந்த குழுவில் இருந்தான். அவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்ப்பதற்காக கல்லூரி யூனியனின் பொறுப்பில் இருந்த அவன் பல வேளைகளிலும் அங்கு செல்வதுண்டு என்பதென்னவோ உண்மைதான். அப்படிப்பட்ட சமயங்களில் சற்று அதிகமாகவே மாணவிகள் இருந்த அந்த கூட்டத்தில் இந்த இளம்பெண்ணையும் ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தி வைத்திருக்கலாம். அன்று கம்யூனிசம் என்ற இனிய, அழகான நினைப்பு ஒன்றைத் தவிர வேறு எந்தவொரு மென்மையான விஷயங்களும் மனதில் இருக்கக்கூடாது என்று மிகவும் கறாராக கொள்கை வைத்துக் கொண்டிருந்த அவன் அவர்களைப் பொதுவாக பார்த்து பற்களைக் காட்டினானே தவிர, யாரையும் குறிப்பிட்டு கவனம் செலுத்திப் பார்க்கவில்லை என்பது மட்டும்தான் உண்மை. எனினும், சமூகச் செயல்பாட்டின் அடித்தளமான அந்த தீவிர அரசியல் கொள்கையை மீறக்கூடிய ஒரு கனவு வாழ்க்கையின் அடையாளங்களே அவை என்றும் அவன் தனி மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. அந்த வகையில் இலக்கியத்திலும் கலையிலும் தனக்கென்று சொந்தமான கோட்பாடுகளை உண்டாக்கி வைத்துக் கொண்டிருந்தான். அதனால், அவனுக்கு நண்பர்களாக கிடைத்தவர்களும் பொதுவாகவே அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இன்று புகழ்பெற்ற ஓவியராக அறியப்படும் எ. ராமச்சந்திரன் அன்று ஒரு இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மாணவனாகவும் இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருந்த பாடகனாகவும் இருந்தான். அவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக ஆனதற்கு, இரண்டு பேரின் மனங்களிலும் இருந்த பொதுவான நட்புணர்வு மட்டுமே காரணமாக இருந்தது. இருவரும் காதல் வலையில் சிக்கியதும் ஒரே காலத்தில் நடைபெற்ற கவலைக்குரிய விஷயமாக இருந்தது. கதையிலும் கவிதையிலும் கலையிலும் நிம்மதியையும் விடுதலை உணர்வையும் அமைதியையும் தேடித் திரிந்து கொண்டிருந்த அவன், எப்போதும் ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனாகவே இருந்தான். கற்பனை பண்ணியவாறு அலைந்து கொண்டிருக்கும் மனிதன். கம்யூனிசமும் புரட்சியும் அன்று அவனுக்கு கற்பனையான கனவாகவும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவும் தைரியத்தை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகவும் இருந்திருக்க வேண்டும். அந்த காரணத்தால்தான்- அன்று சட்ட விரோதமான கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் பிரிவில் இருந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் நிற- இன வேறுபாடு இல்லாத சமத்துவம் நிறைந்த அழகான உலகத்தைப் படைப்பதற்காக தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவன் முடிவு செய்தான். அன்று ஓலை வேய்ந்த குடிசையாக இருந்த திருவனந்தபுர நந்தவனம் போலீஸ் கேம்ப்பை நெருப்பு வைத்து எரித்த துணிச்சலான செயலில் பங்கு பெறுவதற்கு அவன் முடிவு செய்ததற்குக் காரணமும் அதுதான். மறைவிடங்களில் இருந்ததால், அன்று எல்லாரும் ரகசியமாக "ஆசான்’’ என்ற புனைப்பெயருடன் அழைத்துக் கொண்டிருந்த தோழர் கெ.வி. சுரேந்திரநாத், நகர கமிட்டியின் செயலாளர் என்ற முறையில் சற்று சர்வாதிகாரத் தன்மையுடனும் சற்று கடுமை கலந்தும் கறாராக தடுக்காமல் இருந்திருந்தால், அன்றைய மாணவர்கள் பிரிவின் தலைவனாக இருந்த தோழர் சன்னி செபாஸ்ட்டியனின் அறிவுரையின்படி தான் உட்பட அங்கிருந்த பெரும்பாலானவர்களும் அந்த நெருப்பிலோ அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளிலோ உயிரைப் போக்கி விட்டிருக்க வேண்டும் என்பதும் உண்மையாகவே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு விஷயம்தானே? ஏதோ ஒரு கொள்கையை, கற்பனை நிறைந்த கனவை மிகப் பெரிய வழிகாட்டியாக மனதில் நினைத்துக் கொண்டு நடந்து திரிந்த, நிரந்தர கனவுகள் நிறைந்த நாட்களாக அவை இருந்தன. இலக்கியத்திலும் கலையிலும் அன்று அதே மாதிரியான நிலைதான் நிலவிக்கொண்டிருந்தது.

தவிர்க்க முடியாத ஒரு தேவை. வயதுக்கே உரிய ஒரு நிர்பந்தம்.

அவன் பல வேளைகளில் சாயங்கால நேரங்களில் வாட்டர் ஒர்க்ஸில் இருக்கும் பூங்காவிற்குச் சென்று அமர்ந்து கொண்டிருப்பான். பெரும்பாலும் தனியாகவே. இல்லாவிட்டால் மிகவும் நெருங்கிய நண்பர்களான ராமச்சந்திரனுடனோ ஒ.என்.வி.யுடனோ சேர்ந்து. ராமச்சந்திரனும் ஒ.என்.வி.யும் இருந்தால், சாயங்கால வேளைகள் இசைமயமானதாகவோ, கவிதைமயமானதாகவோ ஆகிவிடும். இரண்டு பேராலும் மிகவும் அருமையாக கவிதைகள் கூற முடியும். அந்த கவிதை இன்பத்தில் மூழ்கிப்போய் நேரம் ஓடிக்கொண்டிருக்கும். தனியாக இருந்தால், கையிலிருக்கும் புத்தகத்தின் ஒன்றோ இரண்டோ பக்கங்களைப் புரட்டுவதுதான் தாமதம், அதற்குள் சொந்த கற்பனையில் மூழ்கி ஏதோ தூரத்திலிருக்கும் கனவு உலகங்களுக்குள் போய்விடுவான். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைகளில் இருந்து விடுதலை ஆகக் கூடிய பயணங்கள்... புனித யாத்திரைகள்...

இவ்வளவு சிறிய வயதில் அப்படியென்ன பிரச்சினைகள்? மிகவும் இரக்கப்படத்தக்க ஒரு இளமைக் காலத்தின் தாங்க முடியாத வேதனைகள்... வாலிபத்தின் கரிந்துபோன கனவுகள்... அவனுக்கென்றே இருந்த கவலைகள்... நிறைவேறாத ஆசைகள்... பதைபதைக்கச் செய்த இல்லாமைகள்... அன்பு என்ற ஒன்று இல்லாத வெறுமைகள்... கூட்டுக் குடும்பத்தில் இருந்தவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலைகள்...

பூங்காவின் சிவந்த மாலை நேரத்தின் கவலை நிறைந்த தனிமைச் சூழலில் நண்பர்களின் கவிதை கூறலிலோ, புத்தகத்தின் தாள்களைத் திறந்ததால் உணர்ந்த இனிய நினைவுகள் நிறைந்த பழைய சம்பவங்களிலோ தன்னுடைய சுமைகளை இறக்கி கண்களை மூடி அவன் படுத்திருந்தான்.

ஒருநாள், ஒரு சாயங்கால நேரத்தில் ஒ.என்.வி.யுடன் சேர்ந்து வாட்டர் ஒர்க்ஸ் பூங்காவில் அமர்ந்திருந்தபோது, எங்களுக்கு முன்னால் இருந்த மணல் பரப்பில் ஒரு சிறுமியும் அவளுடைய அண்ணன் என்று தோன்றக்கூடிய ஒரு சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நல்ல ஆர்வத்துடன் இருந்த சிறார்கள். நேரம் இருட்ட ஆரம்பித்த பிறகும், குழந்தைகள் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், நாங்கள் அவர்களிடம் வீட்டையும் முகவரியையும் விசாரித்தோம். வீடு மிகவும் அருகிலேயே இருந்தது. யக்ஷி அம்மன் கோவில் இருந்த ஆலமரத்திற்குப் பின்னாலிருந்த பாதையில். அவர்களின் தந்தை திருவிதாங்கூர்- கொச்சி மாநிலங்களின் இணைப்பைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்து வந்த தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிறிது தூரமே இருந்தாலும், இருட்ட ஆரம்பித்திருந்த நேரத்தில், ஆள் அரவமில்லாமலிருந்த பாதையின் வழியாக குழந்தைகளைத் தனியே விட வேண்டாம் என்று நினைத்து நாங்கள் அவர்களை வீட்டின் வாசலில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தோம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel