Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 3

oru naal

"உயரத்தையும் விஞ்சி உயரத்தில் இருக்கும்

பரந்து விரிந்த முடிவில்லா வானமே!

பரம்பொருளாய் புனிதமாய் ஒளிர்ந்திடும்

பேரழகு தத்துவமே வணக்கம்!

தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ!

அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!"

அதற்குப் பிறகும் குறுப்பு மாஸ்டரின் எப்படிப்பட்ட கவிதைகளையெல்லாம் ஒன்றாக உட்கார்ந்து வாசித்திருக்கிறோம். இன்று மீண்டும் நான் அதை எடுத்து முன்னால் வைத்தாலும், அவற்றை முழுமையாக வாசிக்க முடியவில்லை. எப்போதுமில்லாத வகையில் அவளைப் பற்றிய நினைவுகள் என்னை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன. வேதனை கொள்ளச் செய்கின்றன.

"தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ

அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!"

உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகலாம். திருமணமான மனிதன். சந்தோஷம் நிறைந்த ஒரு இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன். எல்லாவற்றையும் தெரிந்து, புரிந்துகொண்டு, பொறுத்துக்கொண்டு, ஒத்துழைத்து, அன்பு செலுத்திக் கொண்டிருக்கும் மனைவியும், அன்பு நிறைந்த பிள்ளைகளும் உள்ளவன். ஒரு குழந்தைக்காவது அன்பான தாத்தாவாக இருப்பவன். இவனுக்கு வயதான காலத்தில், பழைய இளமைக்கால காதலின் பாதிப்பால் உண்டான செயல் மீண்டும் நடக்கிறதா? இதய நோயும் ஆஸ்துமாவும் எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும்- பாதிக்கக் கூடிய எந்தவொரு எதிர்பாராத நிமிடத்திலும் விடைபெற்றுக்கொள்ள வேண்டிய இந்த வயதான வேளையில்!

உண்மையைக் கூறட்டுமா? இதில் காதல் இல்லை. வழிபாடு இல்லை. விரக வேதனை இல்லை. ஆழமான எந்தவொரு உணர்ச்சி ஈர்ப்பும் இல்லை. எனினும், என்னிடம் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு வேறு ஏதோ இருக்கிறது என்ற உண்மையை மறுத்துக் கூறுவதற்கும் இல்லை. மனிதனுக்கு மனிதன்மீது தோன்றக்கூடியது என்றெல்லாம் கூறுவார்களே... அதைப்போல ஏதோ ஒன்று.

இப்போதிருக்கும் நிம்மதியும் அழகும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கைச் சூழலைவிட்டு, திரும்பிச் செல்லக்கூடிய ஒரு பயணம் எந்தவொரு நிமிடத்திலும், ஒரு காலத்திலும் எனக்கு நடக்காது. அதைச் செய்வதற்கு என்னைக் கட்டாயப்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ எந்தவொரு சக்தியாலும் முடியாது. அவளை என்றல்ல; வேறு யாரையும் இனி காதலிக்கவோ மோகம் கொள்ளவோ முடியாது. அதற்கு தேவையான உடல்ரீதியான- மனரீதியான தெம்பும் இல்லை. ஒரு காலத்தில் பிரியத்திற்குரியவளாக இருந்தாள் என்றாலும், அவள் மிகவும் பயங்கரமானவளாக வடிவமெடுத்தவளாயிற்றே! கவலையை அளித்த ஒரு அனுபவத்தின் தீராத விளைவாக இல்லாமல், அவமானச் சின்னமாக இல்லாமல், அவளை நினைத்துப் பார்த்ததே இல்லையே! எனினும், இப்போதைய நிலைமையைப் பார்த்தபோது, இவ்வளவு நாட்களுக்குப் பிறகும், காலம், அனுபவங்கள், நோய் ஆகியவற்றின் பாதிப்பால் பல மாறுதல்கள் உண்டாகிவிட்ட பிறகும், மாறாமல் இருக்கக்கூடிய ஏதோவொன்று... பழைய ஏதோ ஒன்று இன்னும் எஞ்சியிருக்கிறதோ? என்னுடைய நினைவிலும் புரிந்துகொண்ட விஷயங்களிலும், அப்படிப்பட்ட நிம்மதியற்ற தன்மை நிறைந்த ஈர்ப்பும் நெருக்கமும் கொண்ட ஒரு அடையாளம்கூட மனதில் தங்கி இருக்காமல் இருந்ததே! வேதனையையும் அழிவையும் மட்டுமே அளித்த ஏதோ ஒன்றின் கசப்பான விளைவாக மட்டும்தானே அவளைப் பற்றிய தெளிவில்லாத நினைவுகள்கூட இருந்தன!

ஆனால், இன்று நடந்த இந்த சந்திப்பின் கவலை நிறைந்த சூழல் காரணமாக, எல்லா விஷயங்களும் தலைகீழாக மாறிப் போய்விட்டதோ? தூக்கக் கலக்கத்தின் பாதிப்பில் எழும் அந்த பரிதாபமான தேம்பி அழும் சத்தம், எந்தச் சமயத்திலும் நிற்கவே செய்யாத ஒரு வலியின் ஆழமான வேதனையாக, எப்போதும் மனசாட்சியின் வெளிகளில் ஒலித்துக்கொண்டிருக்குமோ? அடங்காத ஒரு குற்றவுணர்வின் எச்சமாக என்னுடைய நினைவின் வாசலில் நீ இப்போதும் இருந்து கொண்டிருப்பாயோ?

முன்பு பிரியமாக இருந்தவளே! கூறு... அன்று உண்டான காயத்தில், வேதனையில், அவமானத்தில் கூறிவிட்ட கடுமையான வார்த்தைகள் பலவும் உன்னுடைய நிரந்தரமான சாபமாக ஆகிவிட்டன என்று நினைக்கிறாயா? மிகப் பெரிய நோயாக உன்னை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாயா? காயம்பட்ட அன்பின் ஆழங்களுக்குள்ளிருந்து உண்டான செயலற்றதும், தற்காலிகமானதுமான கோபத்தின் கூர்மையான முனைகளுக்கு இந்த அளவிற்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா?

அப்படியென்றால், நான் கவலைப்படுகிறேன்.

நீண்ட காலத்திற்குப் பிறகு நான் மீண்டும் நினைக்கிறேன். நீ எப்போதும் கூறுவாய் அல்லவா?

ஒருநாள் நாம் சிறிதும் எதிர்பாராமல் சந்தித்தோம். இரண்டு இடங்களில் உள்ளவர்கள்... இரண்டு வேறுபட்ட வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்கள்... இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்... எனினும், ஒரு நாள், ஒருவரையொருவர் அடையாளம் புரிந்து கொண்டு காதலித்தோம். ஒருநாள் இனி நாம் எந்தச் சமயத்திலும் பிரிய முடியாத வாழ்க்கையில் ஒன்று சேருவோம். வானத்தின் தொலைவை நோக்கி விரலை நீட்டிக்கொண்டு நீ சொன்னாய்:

"அதோ பாருங்கள்... அதுதான் அஸ்வதி நட்சத்திரம். அதற்கு அருகில் இருப்பது சுக்கிர நட்சத்திரம். அவர்கள் கணவனும், மனைவியும். அதைத் தாண்டி தெரிகிற ஏழு நட்சத்திரங்களின் கூட்டம் இருக்கிறதே! அதுதான் சப்தரிஷிகள். அவர்கள் அந்த கணவன்- மனைவி இருவரையும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அஸ்வதியும் சுக்கிரனும் நாம்தான். அந்த ஆசீர்வாதம்... அதுதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது."

இப்போது உன்னைச் சந்திக்க வேண்டி வந்த இந்த துன்பம் நிறைந்த சூழ்நிலையில் நான் என்னையே அறியாமல் கேட்கிறேன்:

"இந்த துயரமான சூழ்நிலையிலா நாம் ஒன்று சேர வேண்டும்? உன்னுடைய- என்னுடைய நோயும் துன்பமும் அதிகமாக இருக்கக்கூடிய இந்த வாழ்க்கையின் இறுதி மாலையின் கவலை நிறைந்த நிமிடங்களில்...? பதிலே இல்லாத வேளைகளின் கொடூரமான பரிணாம கட்டங்களில்...? கலிகால கல்கியின் ஆரவாரங்களும் கோலாகலங்களும் மேகங்களின் மோதல்களும் பயமுறுத்திக் கொண்டு, கொடுமையான வேதனை நிறைந்த கடுமையான மழையைப் பெய்யச் செய்து கொண்டிருக்கும் இந்த கறுத்த இரவுப் பொழுதின் இறுதி யாமத்தில் அற்ப ஆயுளில் முடிவதற்காகவே வந்ததா அந்த ஒன்று சேரல்?"

ஒன்று சேர்வதும் பிரிவதும் எப்போதோ நடந்து முடிந்துவிட்டது என்று நம்பிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. முதலாவதின் இனிமையும் இரண்டாவதின் வருத்தமும் இரண்டாகவே இருக்கட்டும். முதலாவதை மட்டும் நாம் நினைத்துக் கொண்டிருந்தால் போதும்...

சக்கீ! உன்னுடைய உண்மையான பெயரை அழைப்பதற்கு விதி எனக்கு வாய்ப்பைத் தரவில்லை. வேண்டாம்... சக்கீ என்று மட்டுமே அழைத்துக் கொண்டிருந்த- அந்த பழைய காலத்தின் நினைவு மட்டுமே போதுமே நமக்கு சந்தோஷத்தையும் முக்தியையும் அளிப்பதற்கு? உனக்கு அது ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா?

இதோ, இப்போது சப்தரிஷிகளும் அஸ்வதியும் சுக்கிரனும், வேறு கோடானகோடி நட்சத்திரங்களும் இமை அசைக்காமல் நின்று கொண்டிருக்கும் வானப்பரப்பின் மேலே மின்மினிப் பூச்சிகளும் விட்டில் பூச்சிகளும் கண்களில் படுகிற மாதிரி பின்புலம் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த இரவுப் பொழுதின் தனிமையான சூழ்நிலையில், தனியாக இருக்கும் இந்த வீட்டின் தனித்துவமான பேரமைதியில் நான் நினைத்துப் பார்க்கிறேன்-

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel