Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 12

oru naal

"எந்த நான்?" என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயந்து நின்று கொண்டிருந்தபோது, முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் கண்களில் காணப்பட்ட நம்பிக்கையின்மையையும் விட்டெறிவதற்கு படாதபாடு பட்டுக்கொண்டு அவன் சொன்னான்:

“நீ... நீ... நீயேதான். இல்லையா?'' அந்த பதிலில் இருந்த எழுத்துகளுக்கு நடுவில் இருக்கும் இடைவெளிகளின் வழியாக வெளிப்பட்ட உணர்ச்சிகளும் அதை வெளிப்படுத்திய சத்தங்களும் அவளுடைய உள் மன பயங்களில் குழி தோண்டி மரங்களாக வளர்ந்து நின்றன. அவிழ்க்க முடியாத முடிச்சு கொண்ட கயிறின் வட்டங்களுக்குள் அவள் ஊசலாடினாள். ஒரு நொடி நேரம் மட்டுமே. பிறகு, அது ஆழத்தில் எங்கோ உள்ள ஒரு வேதனையாக மாறியது. வேதனை மனதிற்கு ஊற்றாக ஆனது. பழைய பதினெட்டு வயது கொண்ட கல்லூரி காதலியாக ஆனதைப்போல... பழைய கனவு காணும் பெண்ணாக ஆனதைப்போல...

இது எதிர்பார்த்தது அல்ல. அதற்காக அவள் வரவில்லை. அவள் ஒரு திருமணமாகப் போகும் பெண். இன்னொருவனுக்கு மனைவியாக ஆகப் போகிறவள்.

தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் கடுமையான முயற்சி அவளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் சோர்வு கொள்ளச் செய்துவிட்டிருந்தது. அதற்கு எதிராக வேண்டுமென்றே போராடிக் கொண்டு, தன்னையே அறியாமல் நிறைந்துவிட்ட கண்களை புடவை தலைப்பால் ஒற்றி, வெளிறிப் போன புன்னகையை சிரமப்பட்டு வரவழைத்து, அவள் பார்த்தாள்.

என்ன காரணத்தால் என்று தெரியவில்லை. அவனுடைய கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது. அந்த நிறைந்திருந்த கண்ணீரில் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதைப்போல... மிகுந்த அன்புடன் அவன் கூறியதைப் போல அவள் உணர்ந்தாள்.

“என்ன... என்ன... என்ன ஆச்சு உனக்கு? அழறியா, முட்டாள்! உட்காரு... இந்த நாற்காலியில் உட்காரு.''

முட்டாள் என்ற, அன்பிலும் உரிமையிலும் மூழ்கச் செய்திருந்த அந்த வார்த்தை, பழைய ஒருவரோடொருவர் கொண்டிருந்த காதலின் பாரிஜாத வாசனை கலந்து விட்டிருந்த தாலாட்டாக இருந்தாலும், கிடைக்காத அணைப்பின் ஞாபகமாக இருந்தாலும், தன்னை இழக்காமல் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என்ற பதைபதைப்பு நிறைந்த கடுமையான முயற்சியுடன் அவள் மெதுவாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். படிப்படியாக தன்னை அவள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள். எந்தவித சலனமும் இல்லாத முகமூடியை அணிந்துகொண்டாள்.

அந்தப் பக்கத்தில் இருந்த அவன் அப்போது அவளையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னால் நம்ப முடியவில்லை. நீ... நீதான் இதுவான்னு என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. பழைய நீதானா? எல்லாம் பழைய மாதிரிதானா? இங்கே எப்படி வந்தாய்? இங்கு எதற்காக வந்தாய்?''

முகத்தையும் கண்களையும் மீண்டும் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு, தலைமுடியின் நுனிகளை செவியின் பின்பக்கமாய் ஒதுக்கிவிட்டு, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

“மன்னிக்க வேண்டும். என்னையே அறியாமல் கண்கள் நிறைந்து விட்டன. அழுவதற்கோ அழ வைப்பதற்ககோ நான் வரவில்லை. நான் வரவேண்டியதிருந்தது. வராமல் இருக்க முடியாது. நேரில் சந்திக்க வேண்டும் என்பதும் பேச வேண்டும் என்பதும் அவசியமான விஷயங்களாக இருந்தன. இப்போது கேட்டீர்கள் அல்லவா- பழைய நீதானா என்று? அந்த பழைய நான்தான் இது என்றாலும், எல்லா விஷயங்களும் பழைய மாதிரியே அல்ல என்ற உண்மையைக் கூற வேண்டும் என்றும் நான் நினைத்தேன்.''

திடீரென்று என்ன காரணத்தாலோ அவன் இன்னொரு ஆளாக மாறினான். காயம் பட்ட நிகழ்கால மனிதனாக ஆகி, உறுதியான குரலில் குறுக்கே புகுந்து சொன்னான்:

“வேண்டாம். மேலும் கபடத்தனத்துடன் என்றால் வேண்டாம். நினைவிலாவது என்னுடைய பழையகால காதல் மிகவும் புனிதமானதாக இருக்கட்டும். காதலி, அப்பாவியானவளாகவும் கள்ளங்கபடமற்றவளாகவும் இருக்கட்டும். தயவு செய்து அவளை மோசமானவளாக ஆக்கக்கூடிய எதையும் கூறாமல் இரு. அவளைப் பற்றி களங்கப்படுத்துவது மாதிரி எதுவும் சொல்லாமல் இரு.''

முகத்தில் அடித்ததைப்போல அந்த வார்த்தைகள் இருந்தன. கூற நினைத்தது எதையும் கூற ஆரம்பிக்கவே முடியாத அளவிற்கு பலத்த அடியை அது கொடுத்தது. தன்னுடைய கடமையையும் சுமையையும் பொறுப்பையும் உணர்த்த வேண்டும் என்று நினைத்தாள். அவை உண்டாக்கிவிட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்று நினைத்தாள். அதை அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்றாலும், புரிந்துகொள்வான் என்று அவள் நினைத்திருந்தாள். இப்போது இனிமேல்... இனிமேல் என்ன கூறுவது? இறுதியில் தொண்டை அடைக்க கூறினாள்:

“நான் அறிந்திருந்த அன்பு மனம் கொண்ட, இரக்க குணம் கொண்ட ஒரு மனிதரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்தேன். என்னுடைய கவலை, வேதனை, காயங்கள் இவை ஒவ்வொன்றையும் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் முடியக்கூடிய அன்புமயமான ஒரு மனிதரை... இரக்க மனம் கொண்ட ஒருவரை...''

அவன் அவளை தலையிலிருந்து கால்வரை வெறித்துப் பார்த்தான். வெளிறி வெளுத்துப்போய் உயிரற்ற சிரிப்பின் இரக்கமற்ற பகை உணர்வுடன் கேட்டான்:

“சொல்லு... உன்னுடைய கவலைகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? வேதனைகள் எந்த ஆழத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்றன? காயங்களை எந்த ஆடையால் மூடி மறைத்து வைத்திருக்கிறாய்? நான் கொஞ்சம் பார்க்கட்டுமா? தெரிந்து கொள்ளட்டுமா? இரக்க மனம் கொண்டவனாகவும் அன்பு மயமானவனாகவும் ஆகட்டுமா?''

அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவளால் பேச முடியவில்லை. இந்த ஒரு முகத்தை அவள் பார்த்ததே இல்லை. இந்த சத்தத்தை அவள் கேட்டதே இல்லை.

மெதுவாக அவன் அமைதியான நிலையைக் கொண்டு வந்தான். போலித்தனமான அன்பு நிறைந்த, கோபத்தில் தோய்ந்த பதைபதைப்பு நிறைந்த வார்த்தைகளை பல்லாங்குழியில் இருக்கும் குன்றிமணிகளைப் போல எண்ணிப் பொறுக்கி சிதறவிட்டு நிறைத்தான்.

“கறுத்த கண்களுக்குள்ளேயோ, செவிக்குப் பின்னால் ஒதுக்கி விடக் கூடிய கூந்தல் சுருளிலோ, அப்படி ஒதுக்கி விடும் விரல் நுனிகளிலோ, இளமையின் சுறுசுறுப்பிலோ, வாசற்படியில் வந்து கால் வைத்துக்கொண்டிருக்கும் புதிய உறவுகளின் செல்வச் செழிப்புகளிலோ... இவற்றில் எங்கே நீ சொன்ன வேதனைகளும் கவலைகளும் காயங்களும் இருக்கின்றன? உனக்கு மட்டுமே கடவுள் தந்திருக்கும் இந்த சாபங்கள்?''

அதன் இறுதிப் பகுதியை மட்டுமே காதில் கேட்டதைப்போல பதில் வந்தது.

“எனக்கு மட்டுமே அல்ல என்ற விஷயம் எனக்குத் தெரியும். என்னை காதலித்த இன்னொரு அதிர்ஷ்டமற்ற மனிதரும் இந்தக் கடவுளின் விதிக்கும் சாபத்திற்கும் பலியாகி விட்டிருக்கிறார் என்பதும் தெரியும்.''

அவனுடைய வார்த்தைகளில் கிண்டலும் வெறுப்பும் கலந்திருந்தன.

“சமாதானம்! ஆறுதல்! இன்னொருவனையும் நாசமாக்க முடிந்தது அல்லவா? கடவுளின் விதி! சாபம்! சந்தோஷம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel