
தொடர்ந்து சில சம்பவங்களை அவள் கூற ஆரம்பித்தாள். ஒரு சாதாரண காதல் கதையாக மட்டுமே அது இருந்தது. அவளுடைய பெண்மைத்தனத்தை மேலே எழுப்பியது அந்த ஆண்தான். குட்டியை அவன் கிச்சுக் கிச்சு மூட்டியது, அவளை மடியில் படுக்க வைத்துக் கொஞ்சியது... இப்படிக் கூறுவதற்கு எவ்வளவோ காட்சிகள் இருந்தன!
கவுரி அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மனதிற்குள் இருந்த அந்த உணர்ச்சிப் பெருக்கு சற்று அடங்கி, அறிவு வேலை செய்ய ஆரம்பித்தபோது குட்டி சொன்னாள்:
"அந்த மனிதனுக்கு எப்போதும் நிம்மதியற்ற தன்மையை உண்டாக்குகிற ஒரு பிசாசாகவே நான் ஆகிவிட்டேன் என்பதை நினைக்கிறப்போத்தான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு. ஒரு காலத்தில் நான் அந்த ஆளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தவள்தான்!''
கவுரி சொன்னாள்:
"அக்கா, அப்படின்னா அந்தப் பழிவாங்கும் குணத்தை விட்டுடுங்க.''
அந்தக் கணமே குட்டியின் போக்கு மாறியது. அவள் மீண்டும் பிசாசாக மாறினாள். அவள் பற்களைக் கடித்துக் கொண்டு உரத்த குரலில் கத்தினாள்:
"இல்லை... இல்லை... அவளை நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன்.''
குட்டியின் பழி வாங்கும் உணர்ச்சி அவனுடைய மனைவியாக ஆகியிருக்கும் பெண்ணின்மீது திரும்பிவிட்டிருந்தது.
அன்று முழுவதும் அந்தப் பெண்கள் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு அந்த அளவிற்கு இடைவெளி இல்லாத உரையாடல் நடந்ததில்லை. அது இதயத்தைத் திறந்த உரையாடலாக இருந்தது. இனிமேல் அவர்கள் ஒருவரோடொருவர் மறைத்து வைப்பதற்கு எதுவும் இல்லை. அந்த வகையில் அவர்கள் எதிர்காலத்தை நோக்கிக் கடந்து சென்றார்கள்.
கவுரிக்கு எதிர்காலம் இருந்தது. தூக்குமரத்தில் ஏற வேண்டியதில்லை என்ற நிலை வந்தபோது, எதிர்காலம் என்ற ஒன்று உண்டாகிவிட்டது. அவள் எதிர்பார்த்து இருக்கலாம். கடந்த காலத்தை மறக்கலாம். மறப்பாள். ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். குட்டி சொன்னாள்:
"உன்னுடைய சிரமமான காலம் முடிந்துவிட்டது. நல்ல காலம் ஆரம்பமாகிறது. பெரிய மழையும் இடியும் முடிந்து விட்டன. எல்லாம் தெளிந்து கொண்டிருக்கிறது. எனக்கோ?''
அந்த ஒளி குறைந்த பிரகாசத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய பலமான எதிர்பார்ப்பிலும் ஒரு பயம் மனதின் மூலையில் கிடந்து தலையை நீட்டிக் கொண்டிருந்தது. எல்லாம் சரிதான். பெருமழையும் இடி மின்னலும் கடந்து சென்று விட்டன. அனைத்தும் தெளிவாகிக் கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு மூலையில் ஒரு கரிய மேகத்துண்டு கண்களில் தெரிந்தது. அது மறையாமல் அப்படியே இருந்தது. குட்டி கூறிய எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கவுரி கேட்டாள்:
"என் கழுத்தில் தாலி கட்டிய மனிதர் வந்துவிட்டால்...?''
அந்தக் கணத்திலேயே அவள் தொடர்ந்து சொன்னாள்:
"என் மனதில் எப்போதும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கிறது. அக்கா, சமீபத்தில் நீங்கள் சொன்ன அந்த நாளில் இருந்து எனக்கும் அதைப் பற்றித்தான் நினைப்பு. நான் விளையாடுறேன். சிரிக்கிறேன். எல்லாம் செய்கிறேன். ஆனால், ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கு!''
குட்டி அவளைத் தேற்றினாள்:
"ஓ... அந்த ஆளு வர மாட்டார். அந்த ஆளு அப்படியே போன மாதிரிதான்.''
"இல்லை... வந்துவிட்டால்...? அந்த பாவம் மனிதன் எவ்வளவோ சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கஷ்டங்களையெல்லாம் அவர் எதற்காகத் தாங்கிக் கொண்டிருக்கிறார்?''
குட்டி கேட்டாள்:
"அந்த ஆளு உன்னிடம் ஏதாவது கேட்டிருக்கிறாரா?''
லாக் அப்பிற்குள் அவன் வந்து பார்த்த பிறகு தங்களுக்கிடையே பேசிக் கொண்ட விஷயத்தை விளக்கமாக கவுரி குட்டியிடம் கூறினாள். அவன் கவுரிமீது அன்பு வைத்திருக்கிறான். அதனால்தான் வந்திருப்பதாக அவன் சொன்னான். அவள் என்றென்றும் அவனுக்குச் சொந்தமானவளாக இருக்க வேண்டுமென்று அவன் கேட்கவில்லை. அவள் தூக்குமரத்தில் ஏறுவதை கிருஷ்ணனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னால் முடிந்தவரைக்கும் அவன் செய்வான். நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட கவுரி எதையும் சிந்திக்க முடியாதவளைப் போல கேட்டாள்:
"அதற்கு என்ன அர்த்தம் அக்கா?''
"எதற்கு?''
"அப்படிச் சொன்னதற்கு அர்த்தம்... நான் அவரோட மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாரா?'' குட்டிக்கு சந்தேகம் எதுவும் இல்லை.
"அதேதான்... பிறகு வேறு என்ன? ஒருத்தன் அன்பு வைத்திருக்கிறான். இந்த அளவிற்குக் கஷ்டப்படுகிறான். பிறகு இவையெல்லாம் எதற்கு?''
அது உண்மைதான். அதுவாகத்தான் இருக்கும்.
குட்டி வெளிப்படையாக மனதைத் திறந்து ஒரு கேள்வியைக் கேட்டாள்:
"உனக்கு அந்த ஆளுடன் வாழ்வதற்கு விருப்பமா, விருப்பமில்லையா?''
அப்படி அவள் நினைக்கவில்லை. கவுரிக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவன் அவள்மீது அன்பு வைத்திருக்கிறான். அவன் அவளைக் காப்பாற்றுவான். அது அவளுக்கு அவசியம்தான். எந்தவொரு பயமும் தேவையில்லை. குட்டி சொன்னாள்:
"அப்படின்னா நீ அந்த ஆளுடன் வாழணும்.''
கவுரிக்கு இன்னொரு தர்மசங்கடமான நிலை இருந்தது. "இருந்தாலும்... என் கழுத்தில் தாலி கட்டியவர் வந்துவிட்டால் நான் எப்படி முகத்தைப் பார்ப்பேன்?''
கருணையே இல்லாமல் குட்டி சொன்னாள்:
"அந்த ஆளு செத்துப் போயிருப்பாரு.''
இன்னொரு பயங்கரமான சம்பவத்தைச் சந்திப்பதைப் போல குட்டி நடுங்கினாள்:
"இல்லை அக்கா... அவர் வருவார்.''
அந்த விஷயத்தில் பெரிய அளவில் குட்டிக்கு நம்பிக்கை இல்லை.
கவுரி பயந்தாள்.
"அவர் வந்து கையைப் பிடித்தால்...? அதற்கான உரிமை அந்த மனிதருக்கு இல்லையா? கழுத்தில் தாலி கட்டியவனுக்கு?''
குட்டி தைரியத்துடன் கூறினாள்:
"நீ அந்தக் கையை தட்டிவிட்டுடணும். இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தேன்னு கேட்கணும். உனக்கு அந்த ஆளோட முகத்தைப் பார்த்துக் கேட்பதற்கு விஷயங்கள் இல்லையா?'' நினைத்து நினைத்துக் கேட்பதற்கு விஷயங்கள் இருந்தன.
குட்டி தொடர்ந்து சொன்னாள்:
"நானாக இருந்தால் அதைத்தான் செய்வேன்.''
ஒரு முடிவை அடைவதற்காக நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்த அந்தச் சிந்தனையில் ஒரு விஷயம் மறக்கப்பட்டுவிட்டதைப் போலவோ வெளியே வீசி எறியப்பட்டுவிட்டதைப் போலவோ தோன்றியது. கவுரி வாழ்க்கையில் தவறு செய்தவள் அல்ல. குட்டியும் தவறு இழைத்தவள் அல்ல. கணவனைத் தவிர, இன்னொரு ஆணைப் பற்றி நினைத்துப் பார்த்தது கூட இல்லை. கழுத்தில் தாலியைக் கட்டியிருப்பதால் உரிமையைக் கொண்ட ஆண் வந்தால் என்ன செய்வது என்பதை நினைத்துத்தான் கவுரி பயப்பட்டாள். கணவன் என்ற ஒருவன் இருக்க, இன்னொரு ஆணை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை நினைத்து அல்ல. இப்போது கவுரிக்கு அந்த மனசாட்சியின் உறுத்தல் இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook