
வெளியில் இருந்த இருட்டு பெற்றதைப்போல அவன் குடிசைக்குள் வந்தான்.
"ஏதாவது குடிச்சியா?'' - சாத்தப்பன் கேட்டான்.
"இல்லை. குடிக்கலாம்!''
"எனக்கு வேண்டாம். நீ குடி!''
"நான் விரதம் இருக்கேன்.''
"அப்படின்னா யாருக்கும் வேண்டாம்!''
இரண்டடி முன்னோக்கி வந்தபோதுதான், சாத்தப்பன் பூனையைப் பார்த்தான்.
"அய்யோ! கடவுளே! இந்தப் பூனை எங்கிருந்து வந்தது? வெளியே விரட்டி விடு!''
சாத்தப்பன் மரக் கொம்பையும் வேல் கம்பையும் எடுப்பதற்காக நடந்தான். அப்போது குஞ்ஞம்மா வந்து தடுத்தாள்.
"வேண்டாம்... என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?''
"எனக்கு பைத்தியம் பிடிக்கலை. இந்தப் பூனையைப் பார்க்க நான் விரும்பல!''
அவன் சொன்னது உண்மைதான். சாத்தப்பனுக்கு இந்த உலகத்திலேயே நிரந்தரமாக ஏதாவது வெறுப்பு எதன் மீதாவது இருக்கிறதா என்றால் அது பூனை மீதுதான். சிறுவயதாக அவன் இருக்கும்போதே அந்தப்பகை ஆரம்பமாகிவிட்டது. அதற்குக் காரணம் இருக்கிறது. சாத்தப்பனுக்கு நான்கோ ஐந்தோ வயது நடக்கும்போது, வீட்டில் நான்கு பூனைகள் இருந்தன. அவற்றில் ஒன்று- ஒரு காட்டுப் பூனை- அவனை பலமாகப் பிராண்டி காயம் உண்டாக்கிவிட்டது. அப்போது ஆரம்பித்தது இந்தப் பூனை எதிர்ப்பு. அதற்குப் பிறகு, தன்னுடைய எதிர்பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் பூனைகளுடன் பல நேரங்களில் அவன் போர் செய்திருக்கிறான். ஒன்பது பூனைகளை அவன் கொன்றிருக்கிறான். உலக்கையால் அடித்து, கட்டித் தொங்க விட்டிருக்கிறான். ஒரு பூனையை மட்டும் ஈட்டியால் குத்தி கொன்றிருக்கிறான். அந்த விஷயத்தில் சாத்தப்பன் முழுமையான பிடிவாதக்காரனாக இருந்தான். வாழ்க்கையை நடத்துவதே பூனையைக் கொல்வதற்குத்தான் என்பதைப்போல அவனுக்குத் தோன்றும். பூனை மனித இனத்தின் நிரந்தர எதிரி என்பான் அவன்.
அப்படிப்பட்ட சாத்தப்பனின் குடிசைக்குள் அதோ ஒரு பூனை நின்று சோறு சாப்பிடுகிறது! கடந்தகால வெறுப்பு முழுவதும் அவனுக்குள்ளிருந்து வெளிப்பட்டது.
"அந்த உலக்கையை எடு. அவனை சரி பண்ணிட்டு...''
"அய்யோ! அவன் அல்ல; அவள்...''
"அவள் பெற்றெடுப்பாள். அதற்குப் பிறகு அவன் உண்டாவான்!''
சாத்தப்பன் கண்களை உருட்டியவாறு, எல்லா விஷயங்களும் தெரிந்தவனைப்போல சொன்னான்.
"அய்யோ... கொன்னுடாதீங்க... பாவம் உண்டாகும்!''
"எனக்கு பாவம் உண்டாகாது. நல்லது நடக்கும். கொல்வேன்!''
அதைக் கூறிவிட்டு சாத்தப்பன் அடுப்பு ஊதும் குழாயைத் தேடி எடுத்தான். குஞ்ஞம்மா அதை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
"என்னை விடு, குஞ்ஞம்மா சோத்தியார்!''
"வேண்டாம்.''
"நான் கொல்வேன்.''
"செய்யக்கூடாது!''
"செய்வேன்.''
"எனக்காகவாவது...''
"அந்த கதையைச் சொல்லக்கூடாது!''
"இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு! முட்டாள்தனமா நடக்குறீங்களே! இது மனித வடிவத்தில் பிறந்தவர்கள் செய்யக்கூடிய ஒரு காரியமா? பூனையைத் தொடக்கூடாது. நான் சொல்றேன்...''- குஞ்ஞம்மா கொஞ்சம் கோபத்துடன் சொன்னாள். சாத்தப்பன் அடுப்பு ஊதும் குழாயைக் கையில் பிடித்துக் கொண்டு வெறித்துப் பார்த்தான். பூனையோ, இந்த போர்க்களத்திலிருந்து விலகி ஓடியது.
"உனக்கு அறிவு இல்லையா?'' - வெறி பிடித்த சாத்தப்பன் கேட்டான்.
"சொல்லித் தந்தா தெரிஞ்சிக்கிறேன்!''
"இங்க பாரு... பிறகு...''
"என்ன?''
"என் கைகள் அரிக்கின்றன!''
"ஓ... எனக்கு பயமொண்ணும் இல்லை.''
"என்ன? பயமில்லைன்றியா?''
மனைவிக்கு கணவனிடம் பயமில்லை என்று கூறுகிறாள்! சாத்தப்பனால் அந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. பெண்ணைத் திருமணம் செய்வதே பயப்படுவதற்கு ஒரு ஆள் இருக்கிறது என்பதற்காகத்தான் என்று அவன் புரிந்து வைத்திருக்கிறான். அவனுடைய குடிசையில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அதற்கு முன்பு நடந்ததில்லை. சக்கி கோர்ம்மனைப் பார்த்து பயந்திருக்கிறாள். வெளுக்கனைப் பார்த்து நீலி பயந்திருக்கிறாள். எனினும், மென்மையான ஒரு பெண் முகத்தை நோக்கி சிறிதுகூட பயமில்லை என்று கூறுவதைக் கேட்டீர்களா? அந்த வார்த்தைகளைக் கூறியதற்கு அடிப்படை என்ன? அவள் சோத்தியார்... எதை வேண்டுமானாலும் கூறலாம். அந்த ஆணவ எண்ணத்தை சாத்தப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் உரத்த குரலில் கத்தியவாறு கேட்டான்.
"பயப்படுவியா?''
"எதற்கு?''
"பயப்படுவியான்னு கேட்கிறேன்.''
"எதற்கு?''
"கல்யாணம் பண்ணினவனுக்கு பயப்படுவியான்னு கேட்கிறேன்.''
"கல்யாணம் பண்ணினவனுக்கு பயப்படணுமா?''
"கடவுள் மேல் சத்தியமா, பூனையை நான் கொல்வேன்.''
"கொல்லக்கூடாது.''
"கொல்வேன்.''
"கொல்லக் கூடாதுன்னு சொல்றேன்.''"உயர்ந்த ஜாதின்றதை வச்சுக்கிட்டு பூனையைக் கொல்லக் கூடாதுன்னு சொல்லக்கூடாது.''
"நான் அதை வளர்ப்பேன்.''
பெண் சண்டை போடுகிறாள். தன்னைத் திருமணம் செய்தவனிடம் கொஞ்சம் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணமில்லை! தன்னை காயப்படுத்திய பூனையை அவள் வளர்க்கப் போகிறாளாம். சிறிதளவு அறிவு இருந்தால்கூட அப்படிக் கூறுவாளா? உயர்ந்த ஜாதி என்பதால் அவளுக்கு சிறிதும் பயமில்லை. ஒன்பது பூனைகளைக் கொன்றபோது, யாரும் வந்து கையைப் பிடிக்கவில்லை. ஆனால், இப்போது ஒரு பெண் வந்து தடுக்கிறாள்.
"நான் இங்கேயிருந்து போயிடுவேன்'' - சாத்தப்பன் சொன்னான்.
"போங்க.''
"போவேன்.''
"தாராளமா...''
"தெய்வங்கள்மீது சத்தியம் பண்ணிச் சொல்றேன், நான் போயிடுவேன்.''
"போக மாட்டீங்க.''
"அப்படின்னா... பாரு. என்மேல விருப்பம் இல்லாதவளுடைய வீட்டில் நான் இருக்க மாட்டேன்'' - சாத்தப்பன் அதைக் கூறிவிட்டு, வெளியேறினான்.
"நில்லுங்க...'' - குஞ்ஞம்மா உரத்த குரலில் சொன்னாள்.
"வேண்டாம்... பூனையை வளர்த்துக்கோ.''
"நில்லுங்க... நில்லுங்க... சொல்றதைக் கேளுங்க'' - குஞ்ஞம்மா நீட்டி நீட்டிச் சொன்னாள். ஆனால், சாத்தப்பன் திரும்பி வரவில்லை. உரலில் குத்தும்போது தரையை இடிக்கிற மாதிரியான சத்தம் அகன்று அகன்று போவதை அவள் கேட்டாள். குஞ்ஞம்மா உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதாள். நடுங்கிக் கொண்டே எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் ஜூவாலை அங்கு வெளிச்சத்தின் அலைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.
சாத்தப்பன் அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு கத்தினான். அவன் இடப் பக்கமோ வலப் பக்கமோ பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான். ஒரு சூறாவளியைப்போல மிகவும் வேகமாக அவனுடைய நடை இருந்தது. இந்த உலகத்தில் நீதியும் நேர்மையும் இல்லை என்று அவன் நினைத்தான். எல்லாரும் சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பூனையைக் கொல்வதற்குக்கூட யாரும் அனுமதிக்க மறுக்கிறார்கள். வழி முழுவதும் அவன் முணு முணுத்துக் கொண்டே இருந்தான். "எல்லாரும் சொன்னார்கள் - ஜாதிக்காரனும் ஜாதியில்லாதவனும் சேரக்கூடாது, சேரக்கூடாதுன்னு. இருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். கணவனின் பலம் கிடைத்துவிட்டது. அவள் உயர்ந்த ஜாதின்னா, அவளுடைய வீட்டில் வச்சிக்கணும்.''
சாத்தப்பன் கோவிந்தக் குறுப்பின் வீட்டிற்குச் சென்றான். குறுப்பு இரவு உணவு சாப்பிட்டு முடித்து கையைக் கழுவிக் கொண்டிருந்தபோது, வாசல் படியின் அருகில் ஒரு அசைவுச் சத்தம் கேட்டது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook