
அவர் அந்த இக்கட்டான நிலையைப் பற்றித்தான் சமீப நாட்களில் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். உலகத்தில் இந்த மோசமான நிலை எப்படி வந்தது? தர்மம், பண்பாடு ஆகியவற்றை வைத்துக்கொண்டு எந்த ஒரு இடத்திற்கும் போக முடியவில்லை. எப்படிப்பட்ட வாதங்களைச் செய்தாலும், பலன் இல்லாமற் போகிறது. உலகம் முழுவதும் ஒரே ஆன்மா என்றால் இந்த வித்தியாசம் எதற்கு? என்ன காரணத்தால் ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் மிகவும் கடினமாக உழைத்தும், பட்டினி கிடந்து சாகிறான். இன்னொரு மனிதன் கை, கால்களை அசைக்காமல் பூமெத்தையில் படுத்து உறங்குகிறான்? இது ஒரே ஆன்மாவா இல்லாவிட்டால் பயங்கரமான இருள் நிறைந்த ஆன்மாவா? அறிவு பதில் கூறுகிறது: இங்கு அனைவரும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் தங்களுடைய பலம், முயற்சி ஆகியவற்றை அனுசரித்து உயர்வதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் மனம் கேட்கிறது: அனைவருக்கும் சரி நிகரான சந்தர்ப்பம் எங்கே இருக்கிறது? சந்தை கூடியிருக்கிறது. யார் வேண்டுமென்றாலும், அங்கிருந்து அவரவர்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கலாம். ஆனால், வாங்குவது கையில் பணம் இருப்பவர்கள் மட்டுமே. அனைவரின் கையிலும் பணம் இல்லையென்றால், எல்லாருக்கும் சரிநிகர் உரிமை என்று கூறப்படுவதற்கு அர்த்தம் என்ன? இப்படிப்பட்ட ஒரு மனக்குழப்பம் அவருடைய வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் உண்டானதில்லை. அவருடைய "இலக்கிய அறிவு''க்கு இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தோஷம் கிடைப்பது நடக்காத விஷயம். தனிப்பட்ட முறையில் இறுதி முடிவை எடுக்கச் செய்யும் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை அவருக்கு முன்னால் இதுவரை வந்ததில்லை. இந்த நேரத்தில், தினந்தோறும் பாதையில் கல் கிடப்பதைப் பார்த்து ஒதுங்கி நடக்கும் ஒரு மனிதனின் நிலையில் அவர் இருந்தார். இரவில் எவ்வளவு மனிதர்கள் கல்லில் தட்டி விழுவார்கள்! எவ்வளவு ஆட்களின் கையும் காலும் ஒடியும்! அதைப் பற்றி சிந்தனை உண்டாவதில்லை. ஆனால், ஒரு நாள் இரவு வேளையில் தானே கல்லில் தட்டி விழுந்து காயம் உண்டாகும்போது, அந்தக் காரியம் நடக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று உள்மனம் கட்டளை போட, தடைகளைப் பாதையில் இருந்து நீக்குவதற்கு அவன் தயாராகிறான். தேவகுமாரனுக்கு இப்போது குழப்பம் உண்டாகியிருக்கிறது. நீதி எங்கே இருக்கிறது? ஒரு ஏழை ஏதாவதொரு வயலில் இருந்து நான்கு கதிர்களை அறுத்து பசியைப் போக்கினால், சட்டம் அவனுக்கு தண்டனையை அளிக்கும். ஒரு வசதி படைத்தவன் பட்டப்பகலில் கொள்ளையடித்தால், அவனுக்கு பரிசு கிடைக்கும். சில மனிதர்கள் பல வகைப்பட்ட ஆயுதங்களை எடுத்து, பலவீனமானவர்களாகவும் எதுவுமே செய்ய இல்லாதவர்களாகவும் இருக்கும் தொழிலாளிகளை பயமுறுத்தவும், அடிமைப்படுத்தவும் செய்கிறார்கள். அபராதம், வட்டி என்று கூறி அவர்களை ஏமாற்றுகிறார்கள். பெரிய அளவில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேட்டையாடுவதிலும் ஈடுபட்டு பணத்தைக் கண்டபடி வாரி இறைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இதுதான் நீதியா? இதுவா கடவுள் படைத்த உலகம்?
ஆமாம்... தேவர்கள் எப்போதும் இருப்பார்கள். எப்போதும் இருந்திருக்கிறார்கள். அவர் இப்போது உலகம் நீதி தர்மங்களை அனுசரித்து நடந்து கொண்டிருப்பதாக கண்டு கொண்டிருக்கிறார். உயிரை விட்டால் இந்த உலகத்தை விட்டுப் போகலாம். ஆனால், நீங்கள் தேவன் என்று கூறுவீர்களா? இல்லை... கோழை என்று கூறுவீர்கள். சுயநலவாதி என்று கூறுவீர்கள். நீதியைப் பின்பற்றியும், அதற்காக உயிரை விடவும் செய்பவன்தான் தேவத்தன்மை கொண்டவன். அறிந்து கொண்டே அறியவில்லை என்று தர்மத்தை விட்டுத் தவறி நடக்கிறான். அவன் குருடன், மூடன். ஒரு விதத்திலும் தேவனாகப் போவதில்லை. இனி தேவனாக வேடம் போடுவதில் என்ன அர்த்தம்? தேவர்கள்தான் பக்தி, அதிர்ஷ்டம் ஆகியவை பற்றிய கதைகளைப் பரப்பி இந்த அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். மனிதர்கள் இந்த அநீதிகளை இதற்குள் முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் அல்லது அப்படிப்பட்ட சமூகத்தை அழித்திருந்தால், இப்படி வாழ்ந்து கொண்டிருப்பதை விட எவ்வளவோ நன்றாக வாழ்ந்திருக்கலாம். அது மட்டுமல்ல- மனிதர்களில் மனிதனாக வேண்டும். இம்சை செய்யும் உயிர்களுக்கு மத்தியில் அவற்றுடன் போராடுவதற்கு ஆயுதத்தை எடுக்க வேண்டும். அவற்றின் பிடிக்குள் சிக்கிக்கொள்வது கோழைத்தனமாகும். இப்போதிருக்கும் இந்த மிகப் பெரிய மனிதர்களும் மன்னர்களும் தங்களுடைய முன்னோடிகள் கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த சொத்துகளைத் தாறுமாறாகச் செலவழித்து சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அந்த சொத்துகளை விற்றது என்பது அப்படிப்பட்ட ஒரு செயல்தானே? பைத்தியக்காரத்தனத்தின் வெளிப்பாடுதானே? பெற்றோர்களுக்குப் பிண்டம் வைப்பதற்காக கயாவிற்குப் போனதும், இங்கே திரும்பி வந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டதும் தேவைதானா? இரவு வேளைகளில் கூட்டமாகச் சேர்ந்து பாட்டுச் கச்சேரி நடத்தியதும், நாடக சங்கம் உண்டாக்கி ஆயிரக்கணக்கான ரூபாய்களை அதற்காகச் செலவு செய்ததும் தவிர்த்திருக்க முடியாத ஒன்றா என்ன? அவை அனைத்தும் முழுமையான பைத்திக்காரத்தனம்தான். தன் பிள்ளைகளைப் பற்றிய சிந்தனை அவருக்கு எதனால் இல்லாமற் போனது? அவர் வெறுமனே கிடைத்த சொத்தைக் காற்றில் பறக்கவிட்டார் என்றால், பிள்ளைகள் வெறுமனே கிடைக்கக்கூடிய சொத்தை அனுபவிக்கக் கூடாதா? அவரால் இளமையின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், பிள்ளைகள் தவம் செய்ய வேண்டும் என்று இருக்கிறதா என்ன?
இறுதியில் அவருடைய எண்ணங்களுக்கு இந்த சிந்தனை சமாதானத்தை உண்டாக்கியது. இந்த அநீதி நிறைந்த உலகத்தில் தர்ம அதர்ம சிந்தனை என்பதே தவறானது. அது தற்கொலைக்கு நிகரானது. சூதாட்டத்தில் ஈடுபட்டோ, மற்றவர்களின் பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்திப் பொருள் சேர்ப்பதோ, சட்டப்போரைப் பயன்படுத்தி தடுக்கப்படக்கூடியதே. அவர் கடனுக்குப் பணம் தருபவனிடம் கடன்காரராக ஆனார் என்பதென்னவோ உண்மை. அந்தப் பொருட்களை நல்ல விலைக்கு விற்றுக் கடனை அடைத்து, மீதியை வைத்துக்கொள்ளலாம். சட்டம் கடன்காரர்களிடம் இப்படியொரு நீதியுடனாவது செயல்படுகிறதே. கடன்காரர்கள் சட்டத்தின் பலம் என்ன என்பதைப் பார்த்து கடன் கொடுத்தவர்களிடமிருந்து பொருட்களை மீட்க முயற்சிப்பதை அதர்மம் என்று குற்றம் சாட்டுவதற்கில்லை. இந்த முடிவுடன் அவர் நீதி நூல்களின் ஒவ்வொரு பிரிவையும் படித்துப் பார்த்து விஷயத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டார். இனி ஊசலாட்டம் இல்லை. இதனால் அவர் பின்பற்றி வரும் பண்பாட்டிற்குக் குறை உண்டாகி இருக்கலாம். ஆனால், அவர் ஒரு புதிய வாழ்க்கைக்கான மந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியுடன் இருந்தார். மனதைத் திறந்து சொன்னார்: "நீங்கள் என்னுடைய சொத்துகளைத் திருப்பித் தரவில்லையென்றால், பிள்ளைகள் வழக்கு போடுவார்கள்.''
கிரிதரதாசன் புதிய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதன். ஆங்கிலத்தில் நிபுணன். சட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook