
"அப்படி அல்ல. தவறான எண்ணங்கள் வேண்டிய அளவிற்கு இருக்கின்றன.''
"பெண் அழகைப் பார்ப்பதில்லை. ஆண்கள் அழகில் விழுவார்கள். அதனால்தான் அவனை நம்ப முடியாது. என் வீட்டிற்கு எத்தனையோ அழகை வழிபடுபவர்கள் வருகிறார்கள். ஒருவேளை, இந்த நேரத்தில் கூட யாராவது வரலாம். நான் அழகிதான். இதில் ஆணவத்திற்கு இடமே இல்லை. ஆனால், அழகு என்ற காரணத்தைக் கூறி யாரும் என்னை விரும்புவதை நான் விரும்பவில்லை.''
சந்தகுமாரன் அதிர்ச்சியடைந்துவிட்டான். "என்னை அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நினைக்கவில்லை அல்லவா?''
திப்பி ஆர்வத்துடன் சொன்னாள்: "நான் உங்களை எனக்கு விருப்பமானவர்களின் கூட்டத்தில் நினைத்ததே இல்லை.''
சந்தகுமாரன் அவமானமாக உணர்ந்தான். "இது என்னுடைய துரதிர்ஷ்டம்.''
"நீங்கள் இதயத்தைத் திறந்து பேசுவதில்லை. உங்களுடைய மனதைப் புரிந்துகொள்ள முடியாததைப் போல நான் உணர்கிறேன். நீங்கள் எப்போதும் திரையைப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டத்தில் இருக்கிறீர்கள்.''
"இதேதான் உங்களைப் பற்றி நான் நினைப்பதும்...''
"என்னிடம் ரகசியம் எதுவும் இல்லை. நான் மனம் திறந்து கூறுகிறேன். என்னுடைய இதயத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடிய ஆணை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆமாம்... காதல் உணர்வு எனக்குள் மிகவும் ஆழத்தில் இருக்கிறது. ஆழமுள்ள நீரில் மூழ்கத் தெரிந்தவனுக்கே அது கிடைக்கும். அதற்குத் தேவையான வெறியை உங்களிடம் நான் பார்க்கவில்லை. நான் இதுவரை வாழ்க்கையின் ஒளிமயமான பக்கத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். இனி தியாகமும் வேதனைகளும் நிறைந்த இருட்டான பக்கத்தையும் பார்க்க வேண்டும். ஒருவேளை, அந்த வாழ்க்கையில் எனக்கு மிக சீக்கிரமே வெறுப்பு தோன்றலாம். ஆனால், ஏதோ ஒருவகைப்பட்ட அடிமைத் தனம்- எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பதாக இருந்தாலும்- அதாவது சட்டப்படியான வஞ்சனை அல்லது வியாபாரத்தைச் சொல்லி நடத்தப்படும் கொள்ளையை, வாழ்க்கையின் அடிப்படையாக வைப்பதை என் மனசாட்சி ஒத்துக்கொள்ளாது. தியாகம், கடுமையான முயற்சி ஆகியவை கொண்ட வாழ்க்கைதான் எனக்கு உயர்வானதாகத் தோன்றுகிறது. இன்று நாடு, சமுதாயம் ஆகியவற்றின் மோசமான நிலையைப் பார்த்து பரிதாபப்படாமல் இருக்க பைத்தியம் பிடித்தவர்களால் மட்டுமே முடியும். சில நேரங்களில் எனக்கு என் மீதே வெறுப்பு தோன்றுகிறது. பாபுஜிக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தன் சிறிய குடும்பத்திற்காக மட்டும் வாங்குவதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு தொழிலும் இல்லாத நான் இந்த அளவிற்கு வசதிகளுடன் சந்தோஷத்துடன் வாழ்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? இவை எல்லாவற்றையும் புரிந்து கொண்டிருந்தும், செயல்படக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. இந்த சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை என்னைச் செயல்பட முடியாதவளாக ஆக்கிவிட்டிருக்கிறது. என்னுடைய நடத்தையில் செல்வச் செழிப்பு எந்த அளவிற்கு வெளிப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் புறப்பட்டவுடனே முழுமை செய்யப்படவில்லையென்றால், நான் பைத்தியமாகிவிடுவேன். அறிவால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் விலக்கப்பட வேண்டியது என்று சொன்னாலும், மதுவை விலக்க முடியாத குடிகாரனின் நிலைமையில் நான் இருக்கிறேன். அவனுடையதைப் போலவே என்னுடைய மனமும் செயல்பட முடியாமல் போயிருக்கிறது.''
திப்பியின் முகத்தில் குழப்பங்கள் தெரிந்தன. அவளுடன் இதயத்தைத் திறந்து பேசுவதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவள் இரக்கத்துடன் கேட்பதற்கு பதிலாக கிண்டல் பண்ண முயற்சிப்பாள் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவளுடைய இதயத்தின் சத்தம்தான் கேட்பதைப் போல தோன்றியது. அவளுடைய கண்கள் நனைந்திருந்தன. முகத்தில் ஒரு அமைதியான கம்பீரமும் அழகும் பரவிவிட்டிருந்தன. கட்டுப்பாடு தன்னை விட்டு விலகிச் செல்வதை சந்தகுமாரன் உணர்ந்தான். ஒரு பிச்சைக்காரன் நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, பிச்சை போடும் மனிதனின் மனநிலையைப் புரிந்துகொண்டு மனதில் உள்ளதைக் கூற முயற்சிக்காததைப்போல அது இருந்தது.
அவன் சொன்னான்: "என்னுடைய சிந்தனையும் இதே மாதிரிதான் இருக்கிறது. அப்படியென்றால் நான் நினைத்ததைவிட எவ்வளவோ அதிகமாக உங்களை நெருங்கி விட்டிருக்கிறேன்.''
திப்பியின் முகம் மலர்ந்தது. "நீங்கள் என்னிடம் இதுவரை இதைச் சொல்லவில்லை.''
"நீங்களும் இப்போது மட்டும்தான் மனம் திறந்து கூறியிருக்கிறீர்கள்.''
"நான் பயப்படுறேன். மக்கள் இப்படிச் சொல்லுவார்கள்- "நீங்கள் இந்த அளவிற்கு மதிப்புடன் வாழ்ந்துவிட்டு, இந்த வகையில் காரியங்களைப் பேசுகிறீர்களே" என்பார்கள். செல்வச் செழிப்பைக் காட்டக்கூடிய என்னுடைய பழக்க வழக்கங்களை விட்டு விலகிச் செல்வதற்கு ஏதாவது வழிமுறைகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்திப் பார்க்க நான் தயாராகவே இருக்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி உள்ள புத்தகங்கள் ஏதாவது கையில் இருந்தால் எனக்குத் தாருங்கள்.''
சந்தகுமாரன் இயல்பான குரலில் சொன்னான்: "நான் உங்களுடைய சிஷ்யனாக ஆக ஆரம்பித்துவிட்டேன்.''
அவன் அர்த்தத்துடன் அவளைப் பார்த்தான்.
திப்பி கண்களைத் தாழ்த்தவில்லை. அவனுடைய கையைப் பிடித்தவாறு சொன்னாள்: "நீங்கள் விளையாட்டுத்தனமாக ஆக்கி விட்டீர்கள். சிரமங்களைச் சந்திப்பதற்கு உரிய தைரியம் கொண்டவளாக என்னை ஆக்க வேண்டும். ஒரு பெண்ணாக ஆகிவிட்டதற்காக நான் என்னை நானே குறை கூறிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் என்னுடைய மனம் இந்த அளவிற்கு பலவீனமாக ஆகியிருக்காது.''
அந்த நேரத்தில் அவளுக்கு சந்தகுமாரனிடமிருந்து மறைத்து வைப்பதற்கு எதுவுமே இல்லாததைப் போலவும், விலக்கி வைப்பதற்கு எதுவுமே இல்லாததைப் போலவும் தோன்றியது.
சந்தகுமாரன் கம்பீரமான குரலில் சொன்னான்: "பெண்களுக்கு ஆண்களைவிட தைரியம் இருக்கிறது, மிஸ் திரிவேணி.''
"சரிதான்... முடியுமென்றால் இந்த உலகத்தின் போக்குகளில் ஒரு மாறுதல் உண்டாக்க உங்களுக்கு விருப்பமில்லையா?''
சுத்தமான மனதிற்குள்ளிருந்து புறப்பட்டு வந்த அந்தக் கேள்விக்கு கற்பனை செய்து பதில் கூறியபோது சந்தகுமாரனின் குரல் நடுங்கியது. "எதுவும் கேட்க வேண்டாம். மனிதன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, நிம்மதியாக இருக்கிறான்.''
"பெரும்பாலான இரவு வேளைகளில் நான் இந்த பிரச்சினையைப் பற்றி சிந்தித்தவாறே படுத்து உறங்கியிருக்கிறேன். இதையே தான் கனவு காண்கிறேன். இந்த உலகத்தில் உள்ளவர்கள் எந்த அளவிற்கு சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். சமூகம் முழுவதையும் வழி நடத்திச் செல்ல வேண்டிய சட்டங்கள், குறைந்த அளவில் இருக்கும் சில மனிதர்களின் சுயநலத்திற்காக வளைத்து நொறுக்கப்படுகின்றன.''
சந்தகுமாரனின் முகம் இருண்டது: "அதற்கான நேரம் வருகிறது.''
அவன் எழுந்து நின்றான். மூச்சு விடுவதற்கு அவன் சிரமப்படுவதைப் போலத் தோன்றியது. அவனுடைய கபடம் நிறைந்த மனம் அந்தக் கள்ளங்கபடமற்ற சூழ்நிலையில் தன்னுடைய பலவீனத்தை உணர்ந்து கிழிந்து போவதைப் போல தோன்றியது. தர்ம சிந்தனை கொண்ட மனதில் அதர்ம சித்தனைகள் நுழைந்தாலும், அதனால் அங்கு இருக்க முடியாததைப் போல இருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook