Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 6

anbulla-theo

லண்டன் தெருக்களில் மணம் கமழும் வயலட் மலர்களை எங்கு பார்த்தாலும் விற்கிறார்கள். அந்தப் பூக்கள் வருடத்திற்கு இரண்டு முறை இங்கு பூக்கின்றன. திருமதி.ஜோன்ஸுக்காக நான் கொஞ்சம் மலர்களை வாங்கினேன். அதை அவரிடம் தந்தால், அவ்வப்போது நான் குழாயில் புகை பிடிப்பதை, குறிப்பாக - சாயங்கால வேளைகளில் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது - அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விடுவார் என்பது என் எண்ணம்.

தியோ, சீக்கிரம் நீ நன்கு குணமாக வேண்டும். அம்மா உன்னுடன் இருக்கும்போது இந்தக் கடிதத்தைப் படி. உங்கள் இருவருடனும் நான் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். திரு.ஜோன்ஸ் தன்னுடைய சர்ச்சில் எனக்கு வேலை தருவதாக சொன்னதற்காக நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்பதை நான் சொல்லவே வேண்டியதில்லை. நான் என்ன விரும்புகிறேனோ அதை படிப்படியாக அடைந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் உன்னைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். உனக்கும் உன்னுடன் உட்கார்ந்திருக்கும் அம்மாவுக்கும் தனித்தனியாக கையை நீட்டுகிறேன் - குலுக்குவதற்கு. ரூஸ் குடும்பத்தினருக்கும், எனக்குத் தெரிந்த எல்லோருக்கும், குறிப்பாக - திரு.தெர்ஸ்டீக்கிற்கும் என் அன்பை வெளிப்படுத்து. லண்டனுக்குப் போய் வந்த அந்த நீண்ட நடைக்குப் பிறகு அம்மா பின்னிய அந்த ஒரு ஜோடி காலுறையைத்தான் நான் அணிந்தேன் என்றும், அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன என்பதையும் நான் கூறியதாக அம்மாவிடம் கூறு.

இன்று காலையில் சூரியன் மீண்டும் அழகாக உதித்தது. அதை நான் ஒவ்வொரு நாளும் பையன்களை எழுப்பும்போது பார்க்கிறேன். வணக்கம்.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

டார்த்ரெ, ஹாலண்ட், ஏப்ரல் 16, 1887

அன்புள்ள தியோ,

உன் கடிதம் கிடைத்தது. நன்றி, தைரியமாக இரு. கடவுள் உன் மனதிற்குத் தேவையான பலத்தைத் தருவார். இன்று வீட்டிலிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்திருக்கிறது. அதில் அப்பா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நாம் இருவரும் சேர்ந்து ஆம்ஸடர்டாமுக்குப் போய் கார் அங்கிளைப் பார்க்க முடியுமா என்று என்னைக் கேட்டு எழுதியிருக்கிறார். நீ வருவதாக இருந்தால், நான் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கே தி ஹேக்கிற்கு வந்து விடுகிறேன். நாம் இருவரும் சேர்ந்து அடுத்த நாள் காலையில் முதல் ட்ரெயினிலேயே ஆம்ஸ்டர்டாம் சென்று விடுவோம்.

நாம் இதை செய்வதுதான் சரி என்று என் மனதிற்குப் படுகிறது. அப்பா இதை மிகவும் விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். மேலும் நாம் இருவரும் சேர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையை செலவழித்ததாகவும் இருக்கும். ஒரு இரவு முழுக்க உன்னுடன் தங்க முடிந்தால் தங்குகிறேன். இல்லாவிட்டால் ஏதாவதொரு ஹோட்டலைப் பார்த்து நான் போய் தங்கிக் கொள்கிறேன். இது விஷயமாக உடனடியாக ஒரு அஞ்சலட்டையில் எழுதிப் போடு. நாம் இருவரும் சீக்கிரம் சேர பார்ப்போம்.

இன்று மதியம் மிகவும் தாமதமாக ஒரு நீண்ட நடையை நான் மேற்கொண்டேன். அப்படிப் போனால் என்ன என்று என் மனதிற்குத் தோன்றியது. முதலில் சர்ச்சை சுற்றிலும், அதற்குப் பிறகு புதிய சர்ச்சைத் தாண்டியும், பிறகு மில்கள் இருக்கும் சாலை வழியாகவும்... அந்த சாலையை ஸ்டேஷனுக்கு அருகில் நடக்கும்போதே ஒருவர் பார்க்கலாம். இந்த இடங்களை சுற்றிப் பார்க்கிறபோது அவை என்னென்னவோ நம்மிடம் சொல்வதைப் போல் இருக்கிறது. ‘தைரியமாக இரு. பயப்படாதே’ என்று அவை சொல்வதாக எனக்குத் தோன்றும். என்னுடைய வாழ்க்கையை முழுமையாக கடவுள் சேவைக்கும் அவரின் சொற்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் அர்ப்பணிக்கக்கூடிய சூழ்நிலை சீக்கிரம் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக நான் தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். என் வார்த்தைகளை அவர் காது கொடுத்து கேட்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மனதில் முழுமையான நம்பிக்கையுடன் நான் இதைச் சொல்கிறேன். யாராவதொருவர், நடைமுறையில் இது நடக்காது என்று சொல்வார்களேயானால், நான் அந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க ஆரம்பிக்கிறேன். எது நடக்காது என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அந்த எண்ணத்துக்குக் கீழே நான் புகுந்து உள்ளே நுழைகிறேன். அதற்குப் பிறகு என் மனம் கடவுளுடன் தொடர்பு கொள்கிறது. அவரால் முடியாதது உலகத்தில் என்ன இருக்கிறது? எது முடியாது என்கிறார்களோ, அது கடவுளால் முடியும் என்றாகிறது. அவர் இருக்கும்போது நடக்காமல் போகுமா?

இந்த விஷயத்தில் மட்டும் நான் வெற்றி பெற்றால், மனதிற்குள் இருக்கும் அந்தத் தாழ்வு மனப்பான்மை முழுமையாக இல்லாமல் போனால், எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏனென்றால் நான் மேற்கொண்ட காரியங்கள் எல்லாமே தோல்வியில் போய் முடிகின்றன. எனக்கு உண்டாகும் அதிர்ச்சிகளும் மனதில் ஆக்கிரமித்திருக்கும் கவலை அலைகளும் என்னை விட்டுப் போய், வாய்ப்பு, மனபலம் இரண்டும் முழு வடிவத்தில் என்னிடம் வந்து சேர்ந்தால் அப்பாவும் நானும் கடவுளுக்கு முழு மனதோடு நன்றி கூறுவோம். கை குலுக்குகிறேன். ரூஸைக் கேட்டதாகக் கூறு.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

ஆம்ஸ்டர்டாம், செப்டம்பர் 18, 1877

அன்புள்ள தியோ,

மெஸர்ஸ் குபில் அண்ட் கோவிற்காக வர்த்தகப் பயணத்தை நீ மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. உன்னை மீண்டும் பார்க்கப் போகிறேன் என்பதை நினைக்கும்போது மனதிற்கு இப்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பப்படுகிறேன். ஒரு முழு நாள் நானும் நீயும் சேர்ந்து இருப்பது மாதிரி ஒரு ஏற்பாட்டை நீ செய்யக்கூடாதா? அப்படி நீ செய்தாய் என்றால் ஒருநாள் முழுக்க அமைதியாக நாம் இருவரும் சேர்ந்து நம் நேரத்தை செலவழிக்கலாமே.

 இந்த வாரம் மெந்தெஸ் நகரத்தில் இல்லை. ஸோலில் இருக்கும் அவரின் பழைய மாணவரான ரெவ.ஸ்ரோடருடன் சில நாட்கள் இருப்பதற்காக அவர் போயிருக்கிறார். அதனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதில் நீண்ட காலமாக மனதில் ஒதுக்கி வைத்திருந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தேன். அது ட்ரிப்பன் ஹியூவிற்குச் சென்று ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களைப் பார்த்து வர வேண்டும் என்பதுதான். இன்று காலையிலேயே அங்கு போய்விட்டேன். அங்கு போனதற்காக உண்மையிலேயே மிகவும் சந்தோஷப்படுகிறேன். அங்கிருக்கும்போதே என் மனதிற்குள் நீயும் நானும் மீண்டுமொரு முறை இதை சேர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இந்த விஷயத்தைக் கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு ஒன்றோ இரண்டோ நாட்களை இதற்கென ஒதுக்க முடியுமா என்று பார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பார்

பார்

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel