Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 5

anbulla-theo

இளமை எனக்குள் பாய்ந்தோடுவதைப் போல் நான் உணர்ந்தேன். அப்போது வாயிலிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வார்த்தையுமே கடவுளிடம் வேண்டிக் கொள்வதாகவே இருந்தன. இயற்கையுடன் ஒன்றிப் போகாத எல்லாமும் இதயத்தை விட்டே காணாமல் போனது. ஓ... களைப்படைந்த ஆன்மாக்கள் அங்குதான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. விரக்தியடைந்து போன மனிதன் அங்குதான் தன்னுடைய இளமை சக்தியைத் திரும்பப் பெறுகிறான். என்னுடைய உடல் நலமற்ற நாட்கள் என்னை விட்டு கடந்து போய்விட்டன. அதற்குப் பிறகு வந்த ஒரு மாலை நேரம்... நெருப்பு முன்னால் எரிந்து கொண்டிருக்க, நான் உட்கார்ந்திருந்தேன். கால்களை சாம்பலில் வைத்துக்கொண்டு, கண்களை நட்சத்திரங்களின் மேல் வைத்துக்கொண்டு நான் இருந்தேன். நட்சத்திரம் தன்னுடைய கதிரை சிம்னி அடுப்பில் இருந்த ஓட்டை வழியே அனுப்பி என்னை ‘வாவா’ என அழைத்தது. நெருப்புக்கு முன்னால் அமர்ந்து ஜுவாலைகள் எழுவதையும், கண் சிமிட்டுவதையும், ஒன்றையொன்று ஒடுக்க பார்ப்பதையும், கண்களால் பார்த்தவாறு நான் கனவில் மிதந்திருந்தேன். மனித வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் அப்போது என் மனதில் வந்து அலை மோதிய வண்ணம் இருந்தன. பிறந்து, வேலை செய்து, அன்பு செலுத்தி, வளர்ந்து, மறைந்து... இதுதானே மனித வாழ்க்கை.

இனிவரும் நாட்களில் நான் பாடங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்று திரு.ஜோன்ஸ் சொல்லிவிட்டார். ஆனால், நான் அவரின் சர்ச்சில் பணியாற்றலாம் என்றார். மக்களை சந்தித்து பேசலாம் என்றார். கடவுள் என்னை தன்னுடைய கருணையால் ஆசிர்வதிக்கட்டும். நான் லண்டனுக்கு நடந்து சென்ற விஷயத்தை இப்போது உன்னிடம் கூறப் போகிறேன். இங்கிருந்து நான் காலை பன்னிரண்டு மணிக்கு கிளம்பினேன். நான் அடைய வேண்டிய இடத்தை அடைந்தபோது மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஆகிவிட்டது. ஸ்ட்ரேன்ட்டைச் சுற்றியுள்ள அந்தப் பகுதியில் நான் நடந்து சென்றபோது, எனக்குத் தெரிந்த பலரையும் அங்கு சந்தித்தேன். அந்தப் பகுதியில்தானே பெரும்பாலான ஓவியக் காட்சியகங்கள் இருக்கின்றன. அப்போது உணவு நேரம். ஆதலால் பெரும்பாலானவர்கள் தெருக்களிலேயே இருந்தார்கள். சிலர் அலுவலகத்தை விட்டு வந்து கொண்டிருந்தார்கள். சிலர் அலுவலகத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். முதலில் ஒரு இளம் பாதிரியாரைப் பார்த்தேன். இங்கு மதத்தை முன்பு பரப்பிக் கொண்டிருந்த இளைஞர் அவர். அப்போது அவர் எனக்கு நன்று அறிமுகமாகி இருந்தார். திரு.வேலியிடம் பணிபுரியும் ஒருவரைப் பார்த்தேன். வேலி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே கூட பார்த்தேன். அவர் வீட்டிற்கு நேரம் கிடைக்கிறபோது சாதாரணமாக நான் போவதுண்டு. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. என்னுடைய பழைய நண்பர்களான திரு.ரெட்டையும், திரு.ரிச்சர்ட்ஸன் பாரீஸல் இருந்தார். அப்போது நானும் அவரும் பே லாக்கே வரை நடந்து சென்றிருக்கிறோம்.

அதற்குப் பிறகு நான் வைஸ்லிங்கிற்குச் சென்றேன். அங்கு இரண்டு சர்ச் ஜன்னல்களுக்கான படங்களைப் பார்த்தேன். ஒரு ஜன்னலுக்கு நடுவில் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண்ணின் படம் இருந்தது. புனிதமான முகத்தைக் கொண்டிருந்த பெண் அவள். அந்தப் படத்திற்கு மேலே ‘நீ நினைத்தது நடக்கும்’ என்ற வாசகங்கள் இருந்தன. அடுத்த ஜன்னலில் அந்தப் பெண்ணின் மகளுடைய படம் இருந்தது. ‘நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதன்மேல் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் இதுவரை பார்க்காததொன்றின் மீதுகூட முதலில் வைக்க வேண்டியது நம்பிக்கைதான்’ என்ற வாசகங்கள் அந்தப் படத்திற்கு மேலே குறிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த குபில் அன்ட் கம்பெனியின் காட்சியகத்தில் அழகான படங்களையும் ஓவியங்களையும் பார்த்தேன். கலை வெளிப்பாட்டின் மூலமாக ஹாலண்டைப் பார்த்தது எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.

நகரத்தில் திரு.க்ளாட்வெல்லையும் புனித பால் சர்ச்சையும் போய் பார்த்தேன். நகரத்திலிருந்து லண்டனின் இன்னொரு மூலைக்குச் சென்றபோது ஒரு பையனைப் பார்த்தேன். உடல்நலமில்லாததால் அவன் திரு.ஸ்டோக்ஸின் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிவிட்டிருந்தான். நான் பார்க்கும்போது அவன் நன்றாகவே இருந்தான். அப்போது அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். திரு.ஜோன்ஸுக்கு பணம் வாங்கும் இடத்திற்கும் சென்றேன். லண்டனின் புறநகர் பகுதிகள் மிகவும் அழகாக இருந்தன. சிறு சிறு வீடுகளுக்கும் தோட்டங்களுக்கும் மத்தியில் இருந்த திறந்தவெளியில் சர்ச்சோ, பள்ளிக்கூடமோ அல்லது பணிமனைகளோ இருந்தன. அவைகூட புல், மரங்கள், செடிகள் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தன. மொத்தத்தில்- மாலை நேரத்தில் போர்த்தியிருந்த மென்மையான பனிப்படலத்துக்கு மத்தியில் மறைந்து கொண்டிருந்த சூரியனை அந்தச் சூழலில் பார்க்கும்போது மனதிற்கு சுகமாக இருந்தது.

நேற்றைய மாலைப்பொழுது இப்படியென்றால் அதற்குப் பிறகு நான் கண்ட லண்டன் காட்சிகளை நீயும் பார்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நான் பிரியப்பட்டேன். மாலை மயங்கிய பிறகு நகரத்தின் தெருக்களில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. அப்போது எல்லோரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கண்ணில் கண்ட ஒவ்வொன்றுமே அது சனிக்கிழமை இரவு என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன. இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் ஒரு அமைதி நிலவியதையும் உணர முடிந்தது. நாளை வரப்போகும் ஞாயிற்றுக்கிழமையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வம் அங்கிருந்த ஒவ்வொன்றிலுமே தெரிந்தது. அந்த பரபரப்பான தெருக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்ற விடுமுறை தேவைதான். அந்த ஆறுதல் அவசியம்தான்.

நகரம் இருட்டில் மூழ்கியிருந்தது. வரிசையாக சர்ச்சுகளைக் கடந்து கொண்டே நடப்பது என்பது ஒரு அழகான அனுபவம்தான். நேரம் அதிகமாகிவிட்டதால் ஸ்ட்ராண்டில் நான் பஸ்ஸில் ஏறி பயணம் செய்தேன். திரு.ஜோன்ஸின் சிறிய சர்ச்சைத் தாண்டிய பிறகு தூரத்தில் இன்னொரு சர்ச்சைப் பார்த்தேன். அந்த நேரத்திலும் அங்கு ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நான் அந்த சர்ச்சுக்குள் நுழைந்தேன். மிகவும் அழகான சிறிய கத்தோலிக்கன் சர்ச் அது. நான் போனபோது சில பெண்கள் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு இருளடைந்து போயிருந்த பூங்காவிற்கு வந்தேன். அதைப்பற்றி முன்பே உனக்கு நான் எழுதியிருக்கிறேன். அங்கிருந்து பார்த்தபோது தூரத்தில் ஐல்வர்த்தின் விளக்குகளும், அங்கிருக்கும் சர்ச்சும், கல்லறையும், அங்கு தேம்ஸ் நதிக்குப் பின்னால் வளர்ந்திருக்கும் வில்லோ மரங்களும் தெரிந்தன.

நாளை என்னுடைய புதிய வேலைக்காக இரண்டாவது முறையாக ஒரு சிறு சம்பளத்தை வாங்கப் போகிறேன். அதைக் கொண்டு புதிதாக ஒரு ஜோடி காலணிகளையும் ஒரு புதிய தொப்பியையும் வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அதற்குப்பிறகு கடவுளின் ஆசியுடன் எங்கேயாவது காலாற நடந்து போய் வர வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel