Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 7

anbulla-theo

நான் அப்பாவைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். இரவு நேரங்களில் கூட நீண்ட தூரம் கையில் விளக்குடன் நடந்து சென்று நோய் வாய்ப்பட்ட மனிதர்களையும், மரணத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கும் மனிதனையும் போய்ப் பார்த்து அவர்களிடம் கடவுளைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பதை என் மனம் அசை போட்டுப் பார்க்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் ரெம்ப்ராண்டின் ‘தி ஃப்ளைட் டூ ஈஜிபட் இன் தி நைட்’, ‘பரியல் ஆஃப் ஜீசஸ்’ போன்ற ஓவியங்களைப் பார்க்கும்போது என்ன நினைப்பார்? ட்ரிப்பென்ஹ்யூவில் இருக்கும் அந்த ஓவியங்கள் மிகவும் உன்னதமானவை. நான் இதற்கு முன்பு வேறு எங்கும் பார்த்திராத பல ஓவியங்களை அங்கு பார்த்தேன். ஃபோடர் மியூசியத்தில் இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களைப் பற்றி அங்கிருந்தவர்களே சொன்னார்கள். உன்னால் முடியுமென்றால் இது விஷயமாக திரு.தெர்ஸ்டீக்கிடம் பேசிப் பார். அதைக் கடிதத்தில் எனக்குத் தெரியப்படுத்து. நான் என் வேலைகளை முடித்துவிட்டு தயாராக இருக்கிறேன். நீ இங்கு வந்த பிறகு அதைப் போய் பார்ப்போம்.

இந்த மாதிரியான ஓவியங்களை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. உன்னைப் பற்றியும் வீட்டில் உள்ள எல்லோரைப் பற்றியும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

நான் வேலை செய்யும்பொழுதே காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் எதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன். நான் யாரையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும், எந்த மாதிரி விஷயங்களால் அவர்கள் கவரப்பட்டிருக்கிறார்கள் போன்ற விஷயங்களை நான் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ‘ஓவியத்தை நன்றாக ஆராய்ந்து பார்’ என்ற வாசகத்தை நாம் மிகவும் சாதாணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த வார்த்தைக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது - அது எத்தனைப் பெரிய வழிகாட்டியாக இருக்கிறது என்பதை ஒரு நிமிடம் மனதில் நினைத்துப் பார்க்கிறேன். அந்த வார்த்தையை சிரமேற்கொண்டு நான் உன் வேலையில் தீவிரமாக ஈடுபட எண்ணுகிறேன். அப்படியென்றால் மட்டுமே முடிவற்ற அந்தப் பொக்கிஷத்திலிருந்து எத்தனையோ பழைய, புதிய விஷயங்களை நம்மால் கொண்டு வர முடியும்.

ஆன்ட்வெர்ப்பிற்கு நீ போயிருந்ததாக எனக்கு அப்பா எழுதியிருந்தார். அங்கு நீ என்னவெல்லாம் பார்த்தாய் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆவலாய் இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு முன்பு நான் அங்குள்ள மியூசியத்தில் பழைய ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். ரெம்ப்ராண்ட்டின் ஒரு அழகான ஓவியத்தை இப்போதுகூட என்னால் மறக்க முடியவில்லை. எந்த விஷயத்தையும் மறக்காமல் ஒரு மனிதன் ஞாபகத்தில் வைத்திருப்பானேயானால், அது உண்மையிலேயே நல்ல ஒரு காரியம்தான். ஆனால், அது சாலையில் தெரியும் காட்சிகளைப் போலத்தான். தூரத்தில் இருக்கும் பொருட்கள் எப்படி சிறியதாகவும் தெளிவில்லாமலும் தெரியுமோ, அப்படித்தான் அவை நம் ஞாபகத்தில் இருக்கும்.  

ஒருநாள் நதியில் ஒரு நெருப்பு பற்றி எரிந்த சம்பவம் நடைபெற்றது. சாராயம் ஏற்றப்பட்டிருந்த ஒரு படகு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது நான் அங்கிளுடன் வாஸ்னாரில் இருந்தேன். பெரிய ஆபத்து எதுவும் நல்லவேளை நடக்கவில்லை. வெகு சீக்கிரமாகவே எரிந்து கொண்டிருந்த அந்தப் படகை மற்ற கப்பல்கள் நிற்கும் இடத்திலிருந்து மாற்றி வேறொரு இடத்திற்கு கொண்டு போய் கட்டிப் போட்டு விட்டார்கள். நெருப்பு ஜுவாலை உயர்ந்து எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வெளிச்சத்தில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கறுப்பு வர்ணத்தில் தெரிந்தார்கள். சுற்றிலும் நின்றிருந்த மற்ற சிறு படகுகள் கருப்பாக நீரில் தெரிந்தன. புகைப்படக் கண்காட்சியில் பார்த்த ஜாஸ் எடுத்த ‘கிறிஸ்துமஸ் பண்டிகை’, ‘நெருப்பு’ ஆகிய படங்களை உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? படகு நெருப்பில் எரிந்தது அந்த புகைப்படங்களைத்தான் எனக்கு ஞாபகப்படுத்தியது.

அந்தி வெளிச்சம் தெரிகிறது. ‘ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம்’ என்றார் டிக்கன்ஸ். அவர் சொன்னது சரியே. ஒரே மாதிரி மனதில் சந்திக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்று சேர்ந்து இருந்தார்களேயானால் அது உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம்தான். இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்தமர்ந்து கடவுளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார்களேயானால், அது உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட மாலை நேரம்தான். அப்போது அவர்களுடன் நிச்சயம் கடவுள் இருப்பார். இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்து எவன் அவற்றைப் பின்பற்றுகிறானோ, உண்மையிலேயே அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான். ரெம்ப்ராண்ட் தன் இதயத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷக் குவியலில் இருந்து செப்பியா, கரி, மை ஆகியவற்றால் உண்டாக்கிய அற்புதமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அது பிளீட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. பெத்தானியில் உள்ள வீட்டை எனக்கு அது ஞாபகப்படுத்தியது. அந்த அறைக்குள் மாலை நேர வெளிச்சம் ஜன்னல் வழியாக உள்ளே விழுந்து கொண்டிருக்கிறது. அப்போது கடவுளின் உருவம் அந்த அறைக்குள் சற்று இருட்டுக்குள் மூழ்கி, கடுமையாக இருப்பதைப் போல் நமக்குத் தோற்றம் தருகிறது. இயேசுவின் காலடியில் மேரி அமர்ந்திருக்கிறாள். அந்த இடம் அவளே தேர்ந்தெடுத்தது. அந்த இடத்தை அவளிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. மார்த்தா அதே அறையில் இருந்து கொண்டு வேறு ஏதோ வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். உன் ஞாபகம் சரியாக இருந்தால், அவள் நெருப்பை மூட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த ஓவியத்தை என்னால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. அது இந்த வாக்கியத்தை சொல்வதுபோல் எனக்குத் தோன்றும். ‘உலகத்திற்கு நானே விளக்காக இருக்கிறேன். என்னை யார் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் இருட்டில் நிச்சயம் நடக்க மாட்டார்கள். மாறாக, வாழ்க்கையின் வெளிச்சம் அவர்கள் மேல் விழும்.’

காதால் கேட்பவர்களுக்கு, இதயத்தால் புரிந்து கொள்பவர்களுக்கு, கடவுள் மேல் நம்பிக்கை கொள்பவர்களுக்கு அந்த அந்தி வெளிச்சம் பல விஷயங்களை சொல்லத்தான் செய்கின்றன. அதே அந்தி வெளிச்சம் ரைபெரே வரைந்திருக்கும். ‘இமிட்டேஷன் ஆஃப் ஜீஸஸ் க்ரைஸட்’ என்ற ஓவியத்திலும் ரெம்ப்ராண்ட்டின் இன்னொரு ஓவியமான ‘டேவிட் இன் ப்ரேயர் டு காட்’ என்பதிலும்கூட இருக்கிறது.

ஆனால், எப்போதுமே அந்த ஆசீர்வதிக்கப்பட்ட அந்தி வெளிச்சம் இருக்கும் என்று சொல்ல முடியாது. என்னுடைய கையெழுத்தை வைத்தே அதை நீ புரிந்து கொண்டிருக்கலாம். நான் மாடியில் விளக்கின் அருகில் அமர்ந்திருக்கிறேன். விருந்தாளிகள் சிலர் கீழே அமர்ந்திருக்கிறார்கள். என்னுடைய புத்தகங்களுடன் நான் அங்கு அமர்ந்திருக்க முடியாது. ஜான் அங்கிள் உன்னை மிகவும் விசாரித்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடல்

கடல்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel