Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 2

anbulla-theo

இங்க்லாண்டுக்கு வந்த பிறகு படம் வரைய வேண்டும் என்ற ஆவல் தற்காலிகமாக நின்று போயிருக்கிறது. எனினும், மிக விரைவிலேயே படம் வரைவதைத் தொடர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஜனவரி 1, 1875ஆம் தேதி அனேகமாக இன்னொரு பெரிய இடத்திற்கு மாறுவோம் என்று நினைக்கிறேன். திரு.ஒபாக் தற்போது பாரீஸில்தான் இருக்கிறார். இன்னொரு வர்த்தகத்தை எடுக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக அவர் அங்கு வந்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி நீ இப்போது யாரிடமும் பேச வேண்டாம்.

நீ நலமாக இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சீக்கிரம் உன் கடிதத்தை எதிர்பார்க்கிறேன். படங்களை ஏ, மிகவும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறாள். பௌட்டன், மேரி, ஜேக் ஆகியோரின் கை வண்ணங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அது ஒரு நல்ல விஷயம்தானே? ஆனால், அவள் விரும்புகிற ஒன்றைக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகவே இருக்கிறது. எது எப்படியோ, ஹாலண்டில் இருப்பதைவிட இங்கிருப்பதே அவளுக்கு நல்லது என்று என் மனதிற்கு படுகிறது. வணக்கம்.

வின்சென்ட்.

ஏ.யுடன் நான் இங்கு இருப்பது என்பது எவ்வளவு இனிமையான ஒரு விஷயம் என்பதை உன்னால் உணர முடியும். படம் நல்ல முறையில் வந்து சேர்ந்தது என்று திரு.தெர்ஸ்டீக்கிடம் கூறு. நான் அவருக்கு விரைவில் ஒரு கடிதத்தை தனியாக எழுதுகிறேன் என்பதையும் அவரிடம் தெரியப்படுத்து.

***

 லண்டன், மார்ச் 6, 1875,

அன்புள்ள தியோ,

நன்றாக இருக்கிறாய் அல்லவா? ‘ஆதம் பீட்’டில் இருந்த பெண்களை நீ மிகவும் பாராட்டி இருந்தாய். அதை நானும் ரசித்தேன். மைக்கேல் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் இருந்த வெட்டவெளியும், மலை வழியே கிராமத்திற்குள் போகும் மணல் பாதையும், பாசி படர்ந்த கூரையைக் கொண்ட, சுண்ணாம்பு அல்லது களிமன் பூசப்பட்ட குடிசைகளும் காவி மண் மேட்டின் இரு புறங்களிலும் இங்குமங்குமாய் வளர்ந்திருக்கும் அடர்த்தியான முட்புதர்களும், அவற்றுக்கு மேலே தெரியும் இருண்டு போன வானமும், அதன் மூலையில் தெரியும் ஒளிக்கீற்றும்...

ஆனால், மைக்கேலின் ஓவியத்தில் இருந்ததைவிட இதில் உணர்வுகள் மேலும் கூர்மையாக வெளிப்பட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அடிக்கடி சொல்லக்கூடிய கவிதையைக் கொண்ட புத்தகம், ரெனா வரைந்த ‘ஜீசஸ்’ மிச்லெ வரைந்த ‘ஜோன் ஆஃப் ஆர்க்’, ‘லண்டன் நியூஸ்’ஸில் இருந்த கோரோவின் படம் (அதே படம் என்னுடைய அறையிலும் இருக்கிறது) ஆகியவற்றை நாங்கள் அனுப்பும் பெட்டியில் நான் வைத்திருக்கிறேன்.

லண்டனுக்கு நீ விரைவில் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

வாழ்க்கை சாதாரணமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதற்காக நீ வருத்தப்படாதே. என் வாழ்க்கை கூட அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்பது நீண்டது. வெகு சீக்கிரம் ஒரு நல்ல நேரம் வந்து சேரும். அப்போது அந்த நேரம் உன்னை நீ நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்குக் கொண்டு செல்லும்.

வணக்கம். நம் நண்பர்கள் எல்லோரையும் கேட்டதாகக் கூறு, உறுதியான கை குலுக்கலுடன், வின்சென்ட்.

***

பாரீஸ், ஜூலை 24, 1875

அன்புள் தியோ,

சில நாட்களுக்கு முன்பு தே நிட்டி வரைந்திருந்த ஒரு ஓவியம் எங்களுக்கு வந்தது. ஒரு மழை நாளின்போது லண்டன் நகரம் எப்படி இருக்கும் என்பதை அந்த ஓவியத்தில் அற்புதமாக அவர் தீட்டியிருந்தார். வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் பாராளுமன்ற கட்டிடமும் மழை பெய்து கொண்டிருக்கும்போது பார்க்க எப்படி இருக்கும் என்பதை ஓவியத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தை கடந்துபோய் வந்து கொண்டிருந்தவன் நான். வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் பாராளுமன்ற கட்டிடமும் சூரியன் மறைகிற நேரத்தில் எப்படி தோற்றம் தரும் என்பதை கண்கூடாக ஒவ்வொரு நாளும் நான் பார்த்திருக்கிறேன். காலை நேரத்தின்போது, குளிர் காலத்தில், பனிப்படலம் போர்த்தியிருக்கும் போது பனிக்கட்டிகள் விழும் காலத்தில் - இப்படி ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலமும் பாராளுமன்ற கட்டிடமும் எப்படி தங்களை வெளிப்படுத்தும் என்பதை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

அந்த ஓவியத்தைப் பார்த்தபோது லண்டனை நான் எந்த அளவுக்கு நேசித்திருக்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது. அப்படி உணர்ந்ததற்காக ஒரு விதத்தில் நான் பெருமைப்பட்டுக் கொள்கிறேன். நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். லண்டனுக்கு நீ அனுப்பப்படுவாய் என்பதில் நிச்சயமாக நான் நம்பிக்கை கொள்ளவில்லை. ரக்கே வரைந்த ‘வாழ்க்கையின் வசந்த காலம்’, ‘நள்ளிரவு’ ஆகியவற்றை அனுப்பி வைத்ததற்காக நன்றி. முதல் படம் மிகவும் அருமையாக இருந்தது. இரண்டாவது ஓவியம் முஸ்ஸேயின் ‘செப்டம்பர் இர’வை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதை உனக்கு அனுப்பி வைக்கும் ஆவல் எனக்கு இருக்கிறது. ஆனால், தற்போது அது என் கைவசம் இல்லை. நேற்று தி ஹேக்கிற்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் உனக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி இருக்கிறேன். அன்னாவும் லிபெயும் வீட்டில் இருப்பதாக அறிந்தேன். அவர்களைப் பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.

எப்போதும் போல மகிழ்ச்சியாக இரு. உன் கடிதத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். அழுத்தமான கைகுலுக்கலுடன்,

உன் அன்பு சகோதரன்,
வின்சென்ட்.

***

 பாரீஸ், செப்டம்பர் 17, 1875

அன்புள்ள தியோ,

மத ரீதியான உணர்வுகளும், இயற்கையின் அழகும் வெவ்வேறுதானா என்ற எண்ணம் பலருக்கும் பல நேரங்களில் உண்டாகி விடுகிறது. இவை இரண்டிற்குமிடையே மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

உலகில் உள்ள எல்லோருமே இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள் தான். அதே நேரத்தில் கடவுள்தான் எல்லாவற்றுக்கும் மூலம் என்றும், அவர்தான் அனைத்துக்கும் சக்தியாக இருப்பவரென்றும், அவரை ஆத்மார்த்தமாகவும் உண்மையுடனும் வழிபட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நம் பெற்றோர்கூட அத்தகைய எண்ணத்தைக் கொண்டவர்களே. வின்சென்ட் அங்கிள்கூட இந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel