Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 8

anbulla-theo

உனக்கு நல்லது நடக்கட்டும். சீக்கிரம் எனக்கு கடிதம் எழுது, விரைவில் உன்னை எதிர்பார்க்கிறேன். உன்னை மீண்டும் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நாம் நிறைய விஷயங்களைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது. வெகு விரைவில் திறக்கப்பட இருக்கிற பொருட்காட்சியை இந்தக் கோடையின்போது நாம் போய் பார்ப்போம். ரூஸ் குடும்பத்தை மிகவும் கேட்டதாகக் கூறு. வணக்கம். கை குலுக்கலுடன்.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

லேக்கன், ப்ரஸ்ஸல்ஸின் புறநகர் பகுதி, நவம்பர் 15, 1878

அன்புள்ள தியோ,

நாம் இருவரும் சேர்ந்திருந்த அந்த மாலை நேரம் மிகவும் வேகமாக ஓடிவிட்டதைப்போல எனக்குத் தோன்றுகிறது. மீண்டும் உனக்கு கடிதம் எழுத வேண்டும்போல் எனக்கு இருந்தது. உன்னை மீண்டும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் உண்டானதற்கும், உன்னுடன் பேசிக் கொண்டிருந்ததற்கும் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அந்த நாள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட நாள்தான். கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த நாள் போய்விட்டாலும், மனதில் அந்த நினைவு எப்போதும் தங்கி நிற்கும். ஒருநாளும் அந்த கணங்களை மறக்கவே முடியாது. விடுமுறை எடுத்துவிட்டு, நான் நடந்து வரலாம் என்று போனேன். குறுகிய தூரத்திற்கு அல்ல, நீண்ட தூரத்திற்கு. வழியெங்கும் நிறைய பட்டறைகள் இருக்கினற்ன. பார்ப்பதற்கு அவை அழகாக இருக்கின்றன. குறிப்பாக- மாலை நேரங்களில் விளக்குகளுக்கு மத்தியில் அந்தப் பணிமனைகளைப் பார்க்கிறபோது அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அங்கிருக்கும் தொழிலாளிகளும், வேலை செய்பவர்களும் நாம் அவர்களுடன் பேசினால் பேசுகிறார்கள். நான் அவர்களுடன் பேசும்போது அவர்கள் சொன்னார்கள்- ‘பகல் நேரங்களில் கடுமையாக வேலை செய்ய வேண்டும். இரவில்தான் நாம் வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லையே.’

அந்த நேரத்தில் தெருவை சுத்தம் செய்பவர்கள் தங்களின் வண்டிகளை வீதிகளின் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். அந்த வண்டிகளில் வெள்ளை நிற குதிரைகள் பூட்டப்படடிருந்தன. வரிசையாக அந்தக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் பாதை ஆரம்பிக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வெள்ளை குதிரைகள் சில பழங்கால ஓவியங்களை, அவை பெரிய கலைத்தன்மை கொண்டதாக இல்லாமல் இருக்கலாம், என் மனதில் ஞாபகப்படுத்தின. ஆனால், என்னிடம் அவை மிகப்பெரிய தாக்கத்தையும், ஈடுபாட்டையும் உண்டாக்கியதென்னவோ உண்மை. நான் எதை சொல்கிறேன் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? ‘ஒரு குதிரையின் வாழ்க்கை’ என்பதைத்தான் கூறுகிறேன். அந்த ஓவியத்தில் ஒரு வெள்ளை குதிரை இருக்கும். மிகவும் மெலிந்து போய், வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைத்ததன் விளைவாக மிகவும் தளர்ந்து போய் அது காணப்படும். அந்த அப்பிராணி குதிரை ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் யாருக்குமே இல்லாமல் தான் மட்டும் தனியே நின்றிருக்கும். அது நின்றிருக்கும் இடத்தைச் சுற்றிலும் காய்ந்து போன புல் இருக்கும். அருகில் ஒரு வயதான மரம் சூறாவளியால் வளைந்து சாய்ந்து கிடக்கும். நிலத்தில் ஒரு மண்டையோடு கிடக்கும். தூரத்தில் ஒரு குதிரையின் பழைய எலும்புக்கூடு... அந்த எலும்புக் கூட்டுக்குப் பக்கத்தில் குதிரையின் தோலை உரித்து விற்பவனின் குடிசை. அதற்கு மேல் ஓவியத்தில் இருப்பவை- அதிர்ந்து கொண்டிருக்கும் வானம், குளிர்காலம், வெளிச்சம் அதிகமில்லாத பகல், இருண்டு போன சீதோஷ்ண நிலை...

உண்மையிலேயே மனதிற்கு மிகவும் வருத்தத்தையும் சோகத்தையும் தரக்கூடிய காட்சி அது. அதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நாமும் ஒருநாள் இப்படி மரணம் என்ற பள்ளத்தாக்கைத் தாண்டத்தானே வேண்டியிருக்கிறது என்று கட்டாயம் நினைப்பார்கள். மரணத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. அந்தப் புதிருக்கான விடை கடவுளுக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் இறந்தவர்களுக்கு மீண்டும் புதுவாழ்வு இருக்கிறது என்பதைத் தன்னுடைய வார்த்தைகளில் அவர் கூறியிருக்கிறார்.

அப்பிராணி குதிரை, முன்பு அவனுக்கு உண்மையாக உழைத்த உயிர், பொறுமையாக, அதே நேரத்தில் தைரியமாக நின்று கொண்டிருக்கிறது. அது தன்னுடைய கடைசி நேரத்திற்காக காத்திருக்கிறது. இந்தக் குதிரைகளைப் பார்த்தபோது எனக்கு அந்த ஓவியம்தான் ஞாபகத்தில் வந்தது.

குதிரை வண்டிக்காரர்களின் தோற்றத்தைப் பார்த்தேன். அழுக்கடைந்த ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். வறுமையின் பிடியில் அவர்கள் பலமாக சிக்கிக் கிடப்பதை பளிச்சென என்னால் பார்க்க முடிந்தது. அவர்களைப் பார்த்தபோது மாஸ்டர் தெக்ரூவின் ‘பென்ச் ஆஃப் தி புவர்’ என்ற ஓவியம்தான் என் மனக்கண்ணில் தோன்றியது. இந்த மாதிரியான வறுமைக் கோலங்களைப் பார்க்கிற போது மனரீதியாக நான் அதிர்ச்சியடைந்து போகிறேன். வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு பரிதாப நிலையை நான் உணர்கிறேன். வறுமை, கஷ்டம், தனிமை - எல்லாவற்றையும் பார்க்கிறபோது மனதில் தாங்க முடியாத துயரம்தான் உண்டாகிறது. இந்த மாதிரியான நேரங்களில்தான் நம் மனம் கடவுளை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது. நான்கூட கடவுளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறேன். அப்பா அடிக்கடி சொல்லுவார்- ‘மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணம் உண்டாகிறதென்றால் அந்த எண்ணம் உண்டாகும் ஒரே இடம் சர்ச் மட்டுமே. வேறு எந்த இடத்திலும் அந்த எண்ணம் உண்டாவதாக நான் நினைக்கவில்லை. அங்குதான் நாம் உண்மை எதுவென்று நன்கு புரிந்திருக்கிறோம். நாம் இருவரும் சேர்ந்து மியூசியத்தைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தெக்ரூவின் ஓவியங்களையும், லெஸ் வரைந்த ஓவியங்களையும், வேறு சில ஓவியங்களையும் - குறிப்பாக கூஸ்மேனின் கைவண்ணத்தையும் பார்க்க முடிந்ததற்காக நான் மனப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன். நீ எனக்குத் தந்த இரண்டு படங்களையும் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ‘தி த்ரீ மில்ஸ்’ என்ற ஓவியம் உன்னிடம்தானே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தொகையை நீயே கட்டிவிட்டாய். பாதியாவது என்னைக் கட்ட நீ விடவில்லையே. நீ இந்த ஓவியத்தை உன்னிடம் இருக்கும் மற்ற ஓவியங்களுடன் சேர்த்து வைத்து பாதுகாக்க வேண்டும். அதன் பிரதி எடுத்தது சரியில்லாமல் இருந்தால்கூட, அது ஒரு மிகச்சிறந்த ஓவியம் என்பதில் சந்தேகமில்லை. இத்துடன் ‘சார்பனேஜ்’ என்ற அவசர அவசரமாக வரைந்த சிறு ஓவியத்தை நான் இணைத்திருக்கிறேன்.

என் வழியில் நான் பார்த்த விஷயங்களை வைத்து பல ஓவியங்களை வரைய என் மனம் விழைகிறது. ஆனால், அவற்றை வரைவதாக இருந்தால், என்னுடைய அன்றாட வேலைகள் மிகவும் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை ஆரம்பிக்காமல் இருப்பதே நல்லதென்று நினைக்கிறேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel