Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 9

anbulla-theo

‘சார்பனேஜ்’ என்ற அந்த ஓவியத்தில் குறிப்பிட்டுக் கூறும்படி எதுவுமில்லை. ஆனால், அதை நான் வரைந்ததற்கான காரணம் - அதைப் பார்ப்பவர்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை பார்க்கும் மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதே. அவர்கள் வித்தியாசமான மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நான் சொல்லுவேன். அந்த சிறு வீடு சாலையை விட்டு மிகவும் தூரத்தில் இல்லை. அங்கிருக்கும் பெரிய நிலக்கரி ஷெட்டை ஒட்டி இருக்கும் சிறு அதையே அது. வேலை செய்யும் தொழிலாளிகள் ரொட்டி சாப்பிடுவதற்காகவும் பீர் குடிப்பதற்காகவும் மதிய உணவு நேரத்தில் அந்த சிறு அறையைத் தேடி வருவார்கள்.

இங்க்லேண்ட்டில் இருக்கும்போது, நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கும் இடத்தில் போய் பணியாற்ற வேண்டும் என்று இவன்ஜெலிஸ்ட் வேலைக்கு நான் மனு போட்டேன். ஆனால், என்னுடைய வயது இருபத்தைந்தாவது இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். பைபிளின் அடிப்படைகளில் ஒன்று என்று கூறுவதானால், ‘இருட்டிலிருந்து உண்டாகும் வெளிச்சம்’ என்ற வாசகத்தைத்தான் சொல்ல வேண்டும். இந்த வாசகம் யாருக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும்? நீயே யோசித்துப் பார். இருட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத்தான் நிலக்கரிச் சுரங்கங்களில் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் -இந்த வாசகம் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? இந்த வாசகத்தை அவர்கள் விரும்புவதோடு நின்று விடாமல், அதை முழுமையாக நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. பெல்ஜியத்திற்குத் தெற்கே ஹெனால்ட் பகுதியில் ஃப்ரென்ச் எல்லைவரை, ஏன் - அதையும் தாண்டி என்றுகூட சொல்லலாம் போரினேஜ் என்ற பெயரில் ஒரு இடம் இருக்கிறது. அங்கு இருக்கும் நிலக்கரிச் சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மண்ணியலைப் பற்றி நான் வைத்திருந்த சிறு புத்தகமொன்றில் அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது- ‘போரின்ஸ் (மான்ஸுக்கு மேற்கே இருக்கும் போரினேஜில் வசிப்பவர்கள்) என்றழைக்கப்படும் மனிதர்கள் அங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிகிறார்கள். இந்தச் சுரங்கங்கள் பூமிக்கு 300 மீட்டருக்குக் கீழே இருக்கின்றன. தினமும் இந்தத் தொழிலாளர்கள் சுரங்கங்களுக்குள் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது, அவர்கள் மீது நமக்கு பரிதாபமும், மதிப்பும் கட்டாயம் தோன்றும். பகல் வெளிச்சத்தை போரினேஜில் இருக்கும் தொழிலாளி பார்க்கவே முடியாது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவன் சூரிய பார்க்கிறான். மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்கு வெளிச்சத்தில் குறுகலான ஒரு சத்துக்குள் தன்னுடைய உடம்பை வளைத்துக் கொண்டு, சரியாக சொல்வதாக இருந்தால்- ஊர்ந்தவாறு அவன் அங்கு வேலை செய்கிறான். பல்வகை ஆபத்துக்களையும் தன்னைச் சுற்றிலும் வைத்துக் கொண்டுதான் அந்தத் தொழிலாளி பூமிக்குள்ளிருந்து நிலக்கரியை எடுக்கிறான். ஆனால், பெல்ஜியம் நிலக்கரித் தொழிலாளி மகிழ்ச்சியாகவே இருக்கிறான். காரணம்- அந்த வாழ்க்கைக்கு அவன் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டதுதான். இருட்டில் வழிகாட்டக்கூடிய விளக்கை தலையில் இருக்கும் தொப்பியில் அணிந்துகொண்டு சுரங்கத்திற்குள் இறங்கும் தொழிலாளி தன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்படைத்து விடுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்தான் அவன் கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்கிறார். அவர்தான் அவனின் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுகிறார்.

போரினேஜ் லெஸினேக்கு தெற்கில் இருக்கிறது. அங்கு போனால் கல் குவாரிகளை நிறைய பார்க்கலாம்.

அங்கு கிறிஸ்தவ மத பிரச்சாரகராக செல்ல நான் மனப்பூர்வமாக விரும்பினேன். அதற்கென ரெவ.தேயாங்க், ரெவ.பீட்டர்ஸென் இருவரும் தந்த மூன்று மாத பயிற்சிகூட எனக்கு முடிந்துவிட்டது. செயின்ட்பால் மதத்தைப் பரப்புவதற்கு முன்பு அரேபியாவில் மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார். அதே போன்று மூன்று வருடங்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமானால், அந்த இடத்தில் நான் தெரிந்து கொள்ளும் விஷயங்களாலும், பல விஷயங்களை கூர்மையாக கவனிக்க நேர்வதாலும், வெளியே வரும்போது குறிப்பிட்டுக் கூறும்படியான சில தகுதிகளுடன்தான் வருவேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு முழுமையான நம்பிக்கையுடன்தான் நான் இந்த வார்த்தைகளைக் கூறுகிறேன். கடவுள் மட்டும் எனக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கச் செய்தாரேயானால், என்னுடைய பயிற்சியாலும் அனுபவத்தாலும் இப்போதிருப்பதைவிட மிகச்சிறந்த ஒரு மனிதனாக என்னால் மாறிக்காட்ட முடியும்.

இந்த விஷயத்தைப் பற்றி நாம் பலமுறை பேசிய பிறகும்கூட, அதை மீண்டும் உனக்கு நான் எழுதுகிறேன்.

போரினேஜில் ஏற்கனவே ப்ராட்டஸ்டன்ட் இனத்தவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள்கூட இருக்கின்றன. மதப்பிரச்சாரகராக எனக்கு வேலை கிடைக்கும் பட்சம், பைபிளை மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூற என்னால் முடியும். அங்கிருக்கும் ஏழைகளுக்குத்தான் இது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது. இது தவிர, மக்களுக்கு பாடம் சொல்லித் தரவும் என்னால் முடியும்.

செயின்ட் கில்லுக்கு நீ போயிருக்கிறாய் அல்லவா? நான் ஏற்கனவே அங்கு போயிருக்கிறேன். ஆல்ஸெம்பெர்க் என்ற மலைக்கு வலது பக்கத்தில் செயின்ட் கில்லின் கல்லறை இருக்கிறது. அங்கு இடத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென எப்போதும் இருக்கும். அங்கிருந்தவாறு நாம் முழு நகரத்தையும் பார்க்கலாம்.

இன்னும் சிறிது தாண்டி போனால், ஒரு காட்டை அடையலாம். அந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மலைச் சரிவுகளில் பழமையான வீடுகள் இருக்கும். பாஸ்பூம் வரைந்திருக்கும் ஓவியங்களில் காட்சியளிக்கும் குடிசைகளைப்போல் அவை இருக்கும். எல்லா வகையான வயல் வேலைகளையும் நாம் அங்கு பார்க்கலாம். தானியங்களை விதைப்பது, உருளைக் கிழங்கைத் தோண்டி எடுப்பது, முள்ளங்கியைக் கழுவுவது, விறகு பொறுக்குவது - எல்லாமே பார்க்க அழகாக இருக்கும். மான்மார்த்ரேயை எனக்கு அது ஞாபகப்படுத்தும். பழமையான வீடுகளில் பசுமையான கொடிகள் படர்ந்திருக்கும். சிறு சிறு வீடுகள் நிறைய இருக்கும். வீடுகளுக்கு மத்தியில் ஒரு கடுகு விவசாயம் செய்யும் மனிதனின் வீட்டை நான் பார்த்திருக்கிறேன். திய் மேரியின் ஓவியத்தைப் பார்ப்பதைப்போல் அந்த வீடு இருக்கும். ஆங்காங்கே கல் குவாரிகள் இருக்கும். அதன் வழியே சாலைகள் வளைந்து வளைந்து செல்லும். குதிரைகள் வெள்ளை நிறத்தில் சிவப்பு வர்ண குஞ்சத்தைக் கட்டியவாறு வண்டியை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கும். குதிரை வண்டியை ஓட்டுபவன் நீல நிறத்தில் மேற்சட்டை அணிந்திருப்பான். ஆடு, மாடு மேய்ப்பவர்கள்கூட அங்கு தென்படுவார்கள். கருப்பு ஆடைகள் அணிந்திருக்கும் பெண்கள் வெள்ளை நிற தொப்பிகளை அணிந்திருப்பார்கள். தெக்ரூவின் ஓவியங்களை ஞாபகப்படுத்துவார்கள் அவர்கள். சில இடங்களில் போய் வேலை செய்கிறபோது நமக்கு வீட்டு ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel