Lekha Books

A+ A A-

அன்புள்ள தியோ - Page 3

anbulla-theo

 ‘உலகம் அழியலாம். ஆனால், உணர்வுகள் அப்படியேதான் இருக்கும்’, ‘நம்மிடமிருக்கும் நல்ல விஷயங்களை யாராலும் எடுத்துப் போக முடியாது’, ‘முடிவற்ற வாழ்க்கை மீது நீர் பொழிந்து கொண்டே இருக்கிறது’ போன்ற வாசகங்கள் இருக்கத்தானே செய்கின்றன. நாமும் கடவுளைத் தொழுவோம். ஆனால், இந்த விஷயங்களைப் பற்றி மிகவும் ஆழமாக நாம் சிந்தித்து திரிய வேண்டாம். போகப் போக உனக்கே இதைப் பற்றி தெளிவாகப் புரியும். கடவுளின் வேலைக்காரர்களில் கடைசி ஏழையாக நாம் இருந்தால் போதும். இதுதான் வாழ்க்கையில் நம்முடைய பங்கு. ஆனால், நாம் அதை விட்டு வேறெங்கோ தூரத்தில் நின்றிருக்கிறோம். நம் கண் தனித்துவம் கொண்ட கண்ணாக மாற வேண்டும் என்று பிரார்த்திப்போம். அப்படியென்றால்தான் நம்முடைய உடல் பிரகாசிக்கத் தொடங்கும்.

ரூவையும், என்னைப்பற்றி விசாரித்தவர்களையும் கேட்டதாகக் கூறவும்.

உன்னுடைய அன்பு சகோதரன்,
வின்சென்ட்.

 

கலையைப் பற்றி நான் சொல்வதும் இதுதான். அதில் முழுமையாக உன்னை இழந்துவிடாதே. உன்னுடைய வேலையை ஈடுபாட்டுடன் செய். திரு.தெர்ஸ்டீக்கிற்கு மரியாதை கொடு. அதற்கு அவர் எவ்வளவு தகுதியானவர் என்பது இப்போது புரிவதைவிட பின்னர் உனக்கு அதிகமாக புரிய வரும்.

இதற்கு மேல் இதைப்பற்றி நீ சிந்திக்க வேண்டாம்.

உணவு விஷயம் எப்படி இருக்கிறது? எவ்வளவு சாப்பிட விருப்பப்படுகிறாயோ, அந்த அளவிற்கு சாப்பிடு. நாளைக்கு என் காலணிகளுக்கு பிரகாசம் தரவேண்டும்.

***

 பாரீஸ், செப்டம்பர் 25, 1875

அன்புள்ள தியோ,

பாதை குறுகலாக இருக்கிறது. அதனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதிருக்கிறது. நாம் போக நினைக்கும் இடத்தை பலர் எப்படிப் போய் அடைந்தார்கள் என்பதை ஒரு நிமிடம் மனதிற்குள் நினைத்துப் பார். வேறு வழியில்லை. அந்தக் குறுகலான பாதையில் நாம் போய்த்தான் ஆக வேண்டும். நாம் தினமும் செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காகச் செய்வோம். என்னவெல்லாம் நம்மால் செய்ய முடிகிறதோ அவற்றையெல்லாம் நாம் செய்வோம். அதற்கான வலிமை நம்மிடம் இருக்கவே செய்கிறது. கடவுள் நிச்சயம் நமக்குத் தர வேண்டிய பரிசைத் தருவார். அதை யாரும் தட்டிப் பறித்து விட முடியாது. நாம் அவரிடம் தினமும் அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆதலால், கிறிஸ்துவை நம்பக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும், அவன் ஒரு புதிய பிறவி எடுத்தவனே. அவனின் பழைய விஷயங்கள் எல்லாமே அவனை விட்டு போய்விட்டன. இப்போது இருப்பவை எல்லாமே புதியவையே.

கிறிஸ்துமஸ் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதுவரை பொறுமையாக இருந்ததுதானே ஆகவேண்டும். வெகு சீக்கிரமே அது வரத்தானே போகிறது.

தைரியமாக இரு. நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாகக் கூறு. என்மீது நம்பிக்கையாக இரு.

உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்

எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படங்களுக்கான பணத்தை அனுப்பி வைக்கிறேன். திரு.தெர்ஸ்டீக்கிற்கு எழுதுகிறபோது, தற்போது என்னிடம் பணம் கொஞ்சம் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதை தெரியப்படுத்துகிறேன். கேஷியரிடம் என்னுடைய சம்பளத் தொகையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்து வைத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான என்னுடைய பயணத்தின்போது எனக்கு நிறைய பணம் தேவைப்படும் அல்லவா? எது எப்படியோ, கூடிய சீக்கிரம் நான் பணத்தை அனுப்பி வைக்கிறேன்.

***

 பாரீஸ், பிப்ரவரி 19, 1876

அன்புள்ள தியோ,

உன்னுடைய கடைசி கடிதத்திற்கும் கடைசியாக வந்த பெட்டியில் அனுப்பி வைத்திருந்த கேட்டலாக்கிற்கும் நன்றி.

ஆன்டர்சனின் கதைகளை அனுப்பி வைத்ததற்காக நான் உனக்கு நன்றி சொன்னேனா என்பது ஞாபகத்தில் இல்லை. அப்படி நான் சொல்லியிருக்காவிட்டால், இப்போது கூறுகிறேன். இந்த வசந்த காலத்தின்போது வர்த்தகம் சம்பந்தமாக நீ பயணம் மேற்கொள்ளப் போவதாக வீட்டிலிருந்து தகவல் வந்தது. அதற்காக உன் மனதில் வருத்தம் இருக்காது என்று நினைக்கிறேன். அது ஒரு அருமையான விஷயம் என்றே நானும் நினைக்கிறேன். பயணம் செய்வதன்மூலம் எவ்வளவு அருமையான விஷயங்களை உன்னால் பார்க்க முடியும், அது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பதையும் நான் எண்ணி பார்க்கிறேன்.

அடுத்த தபாலில் நீ லாங்ஃபெல்லோவை எதிர்பார்க்கலாம். நேற்று மாலையில் க்ளாட்வெல் என்னுடன்தான் இருந்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அவர் என்னைத்தேடி வந்துவிடுவார். இருவரும் நேரம் போவதே தெரியாமல் கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்போம்.

‘ஹைப்பெர்ஷ’னை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால், அது ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பதை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். எலியட்டின் ஒரு அருமையான நூலை சமீபத்தில்தான் படித்து முடித்தேன். ‘ஸீன்ஸ் ஃப்ரம் க்ளெரிக்கல் லைஃப்’ என்ற அந்தப் புத்தகத்தில் மூன்று கதைகள் இருக்கின்றன. கடைசி கதையான ‘ஜானேயின் வருத்தம்’ என்ற கதை என் மனதை வெகுவாக உலுக்கிவிட்டது. ஒரு நகரத்தின் அழுக்கடைந்து போயிருக்கும் தெருக்களில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய வாழ்க்கையை நடத்தும் ஒரு பாதிரியாரைப் பற்றிய கதை அது. வீடுகளின் சிவப்பு கூரைகளையும், தோட்டங்களில் இருக்கும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளையும், ஏழை மக்களின் புகை படர்ந்த அடுப்புகளையும் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே அவரின் வாழ்நாள் ஓடிக்கொண்டிருக்கிறது. சரியாக சமைக்காத மாமிசமும், நீர் நிறைந்த உருளைக்கிழங்கும்தான் அவருக்கு சாப்பாடு. தன்னுடைய முப்பத்து நான்காவது வயதில் அந்த மனிதர் இறந்துவிடுகிறார். அவருடைய நீண்ட உடல் நலமற்ற வாழ்க்கையில் அவரை அக்கறையுடன் ஒரு பெண் கவனித்துக் கொள்கிறாள். அவள் மதுவிற்கு அடிமையானவள். அவருடைய அறிவுரையாலும், தன்மீது அவர் கொண்ட ஈடுபாட்டாலும் மதுவின் பிடியிலிருந்து அவள் மீளுகிறாள். அதற்குப் பிறகுதான் அவளின் மனதிற்கு அமைதியே கிடைக்கிறது. அவரை அடக்கம் செய்யும் இடத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு அத்தியாயத்தைப் படிக்கிறார்கள். அது சொல்கிறது- ‘நான்தான் இறுதி அடைக்கலம். நான்தான் வாழ்க்கை. என்மீது முழுமையான நம்பிக்கையை யார் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் இறந்தபிறகும்கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், மறுபடியும் சனிக்கிழமை மாலை வந்துவிட்டது. நாட்கள் எவ்வளவு விரைவாக நீங்கிக் கொண்டிருக்கின்றன. மிக விரைவிலேயே நான் இங்கிருந்து புறப்படும் நேரம் வரவிருக்கிறது.

ஸ்கார்பரோவிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. அன்பு வாழ்த்துக்களும், கை குலுக்கல்களும்.

என்றும் உன் அன்புச் சகோதரன்,
வின்சென்ட்.

***

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel