
கேமராவிற்கு முன்னால் நடிப்புப் போட்டி
-இயக்குனர் டி.கெ.ராஜீவ்குமார்
தமிழில் : சுரா
‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ என்ற திரைப் படத்தில் நடிப்பதற்காக வந்தபோது, திலகன் அண்ணன் ஒரே ஒரு விருப்பத்தை மட்டும் என்னிடம் வெளியிட்டார். அவருக்கு இதய சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதன் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், அதை காரணம் காட்டி ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அவர் கேட்கவில்லை.
‘ராஜீவ் குமார், அதிகாலை நான்கு மணிக்கு வந்துவிட வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டாலும், நான் வருவேன். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் எனக்கு உறுதிமொழி தர வேண்டும். நான் இல்லாதபோது மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியைக் கூட எடுக்கக் கூடாது. அந்த பெண் நடிப்பதை நான் பார்க்க வேண்டும்’- அவர் கூறினார்.
‘அது என்ன அண்ணே? நீங்கள் வரும்போது, நாங்கள் ஒன்றோ இரண்டோ ஷாட்கள் மட்டுமே பாக்கி வைத்திருந்தால்தானே உங்களுக்கு எளிதாக இருக்கும்?’ – நான் கேட்டேன்.
‘அந்தப் பெண் டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ். அந்தப் பெண்ணுக்கு முன்னால் நாம் தோற்று விடக் கூடாது. நான் பயப்படக் கூடிய ஒரு நடிகை – மஞ்சு. சில நேரங்களில் நாம் சிறிதும் எதிர்பாராத தளத்திற்கு அந்தப் பெண் உயரச் சென்று நடித்து விடுவாள்.’
அதுதான் திலகன். ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், தன்னுடன் சேர்ந்து நடிப்பவர்களைவிட சிறப்பான முறையில் அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்கு இருந்தது. அதற்காக தன்னுடன் நடிப்பவர்களை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். அதையும் தாண்டி செல்ல வேண்டுமென்று முயற்சி செய்வார்.
முதல் திரைப் படமான ‘சாணக்ய’னிலிருந்து என்னுடைய ஆறு திரைப் படங்களில் திலகன் அண்ணன் நடித்திருக்கிறார். திலகனை மனதில் நினைத்துக் கொண்டுதான் ‘சாணக்ய’னில் வரும் வில்லனான முதலமைச்சர் கதாபாத்திரத்தையே உருவாக்கினேன். கமலஹாசனைத் தீர்மானிப்பதற்கு முன்பே திலகனை முடிவு செய்திருந்தேன். ‘சாணக்யன்’ படத்தின் கதையைக் கூறுவதற்காகச் சென்றபோதுதான் நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறோம். அந்தச் சமயத்தில் அவர் கேட்டுக் கொண்டபடிதான் ஷம்மி திலகன் என்னுடைய உதவி இயக்குனராக ஆனார். பிறகு பல நேரங்களிலும் ஷம்மியைப் பற்றிய விஷயங்களை அவர் என்னிடம் கலந்து பேசியிருக்கிறார்.
முகத்தை மட்டுமே காட்டக் கூடிய க்ளோஸ்-அப் ஷாட்களில் பொதுவாக நடிகர் – நடிகைகள் கைகளை அசைத்து நடிக்க மாட்டார்கள். ஆனால், க்ளோஸ் – அப்பில் கூட உடல் முழுவதையும் அசைத்து நடிக்கக் கூடிய மனிதராக இருந்தார் திலகன். எந்த அளவிற்கு மிகவும் நெருக்கமாக க்ளோஸ் – அப்பை எடுத்தாலும், கைகள் முகத்தோடு சேர்ந்து மேலே வரும். சில படங்களில் நாம் எழுதும் உரையாடல்கள் அந்த அளவிற்கு நன்றாக இல்லை என்று நமக்கே தோன்றும். ஆனால், அதைப் பேசி நடிக்கும்படி திலகன் அண்ணனிடம் கூற வேண்டும். அவர் அதை பேசுவதைக் கேட்கும்போது, அது நாம் எழுதியதுதானா என்று ஆச்சரியப்பட்டு விடுவோம். அதுதான் திலகன்.
எந்த திரைப் படத்தில் நடித்தாலும், புதியதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற வெறிதான் அந்த நடிகரை முன்னோக்கிக் கொண்டு சென்றது. அவருடன் அரை டஜன் திரைப் படங்கள் செய்தும், எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு என்ற ஒன்று உண்டானதே இல்லை.
சில விஷயங்களில் திலகன் அண்ணனுக்கென்று தெளிவான தீர்மானங்கள் இருந்தன. திரைக்கதை முன் கூட்டியே கிடைக்கவில்லையென்றால், சண்டை போடுவார். நடிப்பதற்காக செல்லும் காட்சிக்கு முன்பும் பின்பும் இருக்கும் காட்சி என்ன என்பதைக் கூற வேண்டும். நடிக்கும் காட்சி படத்தில் எந்தப் பகுதியில் வருகிறது என்பதையும் விளக்கிக் கூற வேண்டும். காட்சியை எடுத்து முடிக்கும் வரை, அவர் திரைக் கதையை வாசித்து, உரையாடல்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பார். கேமராவிற்கு முன்னால் வந்து நின்று விட்டால், அதற்குப் பிறகு அவர் கதாபாத்திரமாக மாறி விடுவார். உரையாடலை ‘ப்ராம்ப்ட்’ செய்யும் பழக்கம் அவருக்கு கிடையாது. ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ படத்தின் இறுதி காட்சிகளைப் படமாக்கியபோது, குட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் அந்த நடிகரின் நடிப்பைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தங்குவதற்காக தரப் பட்டிருந்த அறை மோசமாக இருக்கிறது என்றோ, ஷாட் எடுப்பதற்கு தாமதமாகி விட்டது என்றோ கூறி அவர் கோபப்படுவதில்லை. வாழ்க்கையில் எவ்வளவோ போராடி வளர்ந்த மனிதர் அவர். பழைய கதைகளைப் பற்றி கேட்டால், கூறுவார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், ஒரு தனியார் தொலைக்காட்சியின் ‘ரெக்கார்டிங்’ நேரத்தில் நாங்கள் இறுதியாக சந்தித்து உரையாடினோம். அதற்குப் பிறகு சுய உணர்வற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்த திலகன் அண்ணனைத்தான் நான் பார்த்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook