Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 17

thilakan endra magaathilagam

திலகன் கண்களில் கண்ணீர்... என் கண்களிலும்தான்...

-பல்லாவூர் உண்ணிக்கிருஷ்ணன் (பத்திரிகையாளர்)

தமிழில்: சுரா

ருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு –

‘சூப்பர் ஸ்டார்’ மாதமிருமுறை வரக் கூடிய சினிமா பத்திரிகை பிரசுரம் சம்பந்தமாக எர்ணாகுளம் லூஸியா ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது, நான் என் மனதில் திட்டமிட்டிருந்தேன் – கார் விபத்தில் காயம் ஏற்பட்டு சிட்டி மருத்துவமனையில் படுத்திருந்த திலகன் அண்ணனை ‘ஏதாவது வகையில்’ ஒரு முறை போய் பார்க்க வேண்டும் என்று. ‘ஏதாவது வகையில்’ என்ற வார்த்தைக்கு எண்பதுகளில் முக்கியத்துவம் இருந்தது.

அன்று ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நண்பர்கள் எல்லோரும் திலகன் அண்ணனை போய் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய தீர்மானத்தை எதிர்த்தார்கள். நேர்காணலுக்காகச் சென்ற ஒரு மிகப் பெரிய பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளரையே அவர் அவமானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டார் என்று ஒரு நண்பர் கூறினார். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சில சினிமா பத்திரிகையாளர்கள் திலகனைப் படவுலகத்திலிருந்து ‘அவுட் ஆக்குவோம்’ என்று கூட அறிவித்தார்கள்.

ஒரு பத்திரிகை நிருபர் இந்த மாதிரி கூறி விட்டார் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு பத்திரிகை துறையில் பணியாற்றக் கூடிய எல்லோரிடமும் பகையை வெளிப்படுத்த வேண்டுமா? இந்த ஒரே ஒரு கேள்வியைத்தான் நான் திலகன் அண்ணனை நேரில் பார்த்து கேட்க வேண்டுமென்று நினைத்தேன்.

நண்பர்கள் வெளியே சென்ற பிறகு, நான் ஹோட்டலின் வரவேற்பறையிலிருந்து மருத்துவமனைக்கு ஃபோன் பண்ணினேன். அறையில் திலகனின் மகன் ஷம்மியின் குரல்... ரிஸீவர் திலகன் அண்ணனின் கைக்கு மாறியது.

‘ஹலோ... நான் ‘சூப்பர் ஸ்டார்’ மாதமிருமுறை வரக் கூடிய பத்திரிகையிலிருந்து பேசுகிறேன். எப்போது நேரில் பார்க்கலாம்?’

‘வெல்கம்... நாளை மதியம் இரண்டு மணிக்கு...’

சந்தோஷத்தில் என்னால் மூச்சு விடவே முடியவில்லை. எனினும், ஒரு பதைபதைப்பு...

மறுநாள் சரியாக இரண்டரை மணிக்கு சிட்டி மருத்துவமனையை அடைந்தேன். வடக்கு மூலையில் இருந்தது 208 என்ற எண்ணைக் கொண்ட அறை. டாக்டரும் நர்ஸும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

தங்களுக்கு மிகவும் விருப்பமான நடிகரை வெளியில் இருந்தாவது பார்க்க முடிகிறதே என்று நின்று கொண்டிருந்தவர்கள்... கதவின் இடைவெளி வழியாக விசிட்டிங் கார்டை ஷம்மி திலகனின் கையில் கொடுத்தேன். சிறிது நேரம் கூட ஆகவில்லை. ஷம்மி கதவைத் திறந்து அறைக்குள் வரும்படி கூறினார். அறையின் வடக்கு பகுதியில் சுவருடன் சேர்த்து போடப்பட்டிருந்த கட்டிலில் கிழக்கு திசை நோக்கி தலையை வைத்து படுத்திருந்தார் திலகன் அண்ணன். உதட்டில் புன்னகை... கண்களுக்கு முன்னால் விசிட்டிங் கார்ட்...

‘நான் பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதில்லை என்ற விஷயம் தெரியுமல்லவா? சூப்பர் பிலிம் இண்டர்நேஷனலைச் சேர்ந்த ஆட்கள் அட்வான்ஸ் பணத்துடன் இங்கு வருவதாக கூறியிருந்தார்கள். அவர்கள்தான் வருகிறார்கள் என்று நினைத்தேன். ஸாரி...’

‘பேட்டி எடுப்பதற்காக வரவில்லை. எல்லா விஷயங்களும் மற்ற எல்லாரையும் விட எனக்கு மிகவும் நன்றாக தெரியும். ‘நிர்மால்யம்’ திரைப்படத்தில் வரும் வெளிச்சப்பாடைப்போல மனதில் நிறைந்து நிற்கும் திலகன் அண்ணனிடம் என்னுடைய இந்த கேள்வியைக் கேட்கவில்லை. ‘பஞ்சாக்னி’யில் வரும் ராமேட்டனிடம்தான்...’- ஒரு நிமிடம் நான் நிறுத்தினேன்.

‘பஞ்சாக்னி’யில் வரும் ராமேட்டன்...

அவருடைய கண்கள் நிறைந்து விட்டன. என்னுடைய கண்களும்...

‘ஷம்மி... அந்த நாற்காலியை இங்கே இழுத்துப் போடு...

மிகவும் அருகில் அமர்ந்தவுடன், இருவரும் மனதிலிருந்த கவலையின் சுமையைக் குறைத்தோம்.

‘உண்ணீ... என் குருநாதர் பி.ஜெ.ஆண்டனி ‘பெரியார்’ என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தைத் தந்த பிறகு, பதினேழு வருடங்களுக்குப் பிறகுதான் நான் மீண்டும் திரைப் படத்திலேயே நடித்தேன். பத்திரிகையாளர்களுக்கு மதுவையும் பெண்ணையும் கொடுத்து, பலரும் படவுலகிற்குள் நுழையவில்லையா? நான் என்னுடைய திறமைகளை வைத்து வளர்ந்தவன். பத்திரிகை நிருபர் என்ற மேலாடையை அணிந்து கொண்டு ஒருவன் மிரட்டினால், அதை நான் கேட்டுக் கொண்டு நின்று கொண்டிருக்க மாட்டேன். இப்போது நீங்கள் குறிப்பிட்டதைப் போல, அந்த நிழல் யுத்தத்தில் வேறு யாரையும் நான் கவனிக்கவில்லை. என் பக்கம் இருந்த தவறை யாரும் தைரியத்துடன் சுட்டிக் காட்டவில்லை. இல்லை... இனி எந்தச் சமயத்திலும் மற்ற பத்திரிகையாளர்களை அந்த ஆளைப் போல நினைக்க மாட்டேன்.’

ராமேட்டன் மீது என்னைவிட என் தந்தைக்குத்தான் விருப்பம் அதிகம். ஆர்.எஸ்.பி. கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவராக இருந்தாலும், அவருக்கென ஒதுக்கப்பட்ட அமைச்சர் பதவியையே வேண்டாம் என்று கூறிவிட்டு, பத்திரிகைத் துறையில் உறுதியாக காலூன்றி நின்ற முகுந்தன் மேனனின் மகன் நான் என்ற விஷயமே அப்போதுதான் அவருக்குத் தெரியும். ‘சமதா’வின் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஏரூர் வாசுதேவும், பி.ஜெ.ஆண்டனியும், வயலார் ராமவர்மாவும், மலயாற்றூர் ராமகிருஷ்ணனும், என் தந்தையும் சேர்ந்த நண்பர்களின் கூட்டங்கள் தன்னுடைய மனதில் கடந்து சென்றபோது, அவர்களைப் பார்த்து வளர்ந்த மகனின் கவலைச் சுமையை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘நடிகர் திலகனிடம் அல்ல... ‘பஞ்சாக்னி’யின் ராமேட்டனிடம்...’ என்ற தலைப்புடன் பிரகரமான ‘சூப்பர் ஸ்டார்’ இதழை திலகன் அண்ணனிடம் கொடுப்பதற்காக ஜோசப் பெருமாலியையும் அழைத்துக் கொண்டு நான் சென்றேன்.

மிகுந்த சந்தோஷத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெறும்போது, திலகன் அண்ணன் கூறினார்: ‘நான் எந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலும், அங்கு வந்து பார்க்க வேண்டும்.’ இருவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்து விட்டது. இதோ... அந்த மிகப் பெரிய புகழைச் சம்பாதித்த மனிதர் பயணமாகியிருக்கிறார் – அரங்கத்திலிருந்து. ஆனால்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel