Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 20

thilakan endra magaathilagam

திலகன்: நடிப்புக் கலையின் தலைமைச் சிற்பி

நன்றி : ‘நானா’ வார இதழ்

தமிழில் : சுரா

த்தாலியின் ‘மறுமலர்ச்சி காலம்’ மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை, நினைவில் நின்று கொண்டிருக்கக் கூடிய ஒன்று. மைக்கேல் ஆஞ்சலோ, லியானார்டோ டா வின்ஸி, ரூபன் ஆகியோர் வாழ்ந்த காலமது. தலைமுறைகள் எவ்வளவோ மாறி வந்து விட்டாலும், ‘மறுமலர்ச்சி காலம்’ உண்டாக்கிய உயர்வான வெளிச்சத்தைப் பரப்பும் கோபுரம், இப்போதும் ஒளியைத் தந்து கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு உன்னதம் நிறைந்த, மிகச் சிறந்த காலகட்டமாக அது இருந்தது.

மலையாளிகளின் சினிமா வரலாற்றிலும் அப்படிப்பட்ட ஒரு காலகட்டம் இருந்தது. எழுபதுகளில் ஆரம்பித்து, எண்பதுகளில் வளர்ந்து, தொண்ணூறுகளில் இந்திய திரையுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய தன்மைகள் கொண்ட அடையாளங்களாக மாறிய, ஏராளமான திரைப் படங்களும் புதிய அம்சங்களும் பிறந்து கலாச்சாரப் புரட்சியாக மாறிய காலகட்டம் அது. மிகச் சிறந்த திறமைகளைக் கொண்ட பல இயக்குனர்களையும், பல நடிகர் – நடிகைகளையும் அந்த காலகட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் உலகத் தரம் கொண்டவர்களாக இருந்தார்கள். உலகத்தில் உள்ள எந்த நடிகருடனும் இணையாக நிற்கக் கூடிய திறமை கொண்ட நட்சத்திரங்கள் இந்தச் சிறிய கேரளத்தில் உருவானார்கள். திறமை கொண்ட நிறை குடங்களாக அவர்கள் இருந்தார்கள். அந்த நடிகர்களின் கூட்டத்தில் என்றைக்கும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய மனிதராக திலகன் இருந்தார். நடிப்பதற்காக மட்டுமே பூமியில் பிறந்த ஒரு தனி மனிதன்... ஆட்களின் கூட்டத்தில் தனியாக நடந்து சென்ற மனிதர்... கலை, சொந்த வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை – எதற்கு முன்னாலும் எந்தச் சமயத்திலும் கீழ்ப்படியாத கறாரான மனிதர்...

சிற்பத்தின் அழகை மனதிற்குள் உருவாக்கிக் கொண்டு நடந்த மிகப் பெரிய சிற்பியான பெருந்தச்சனையும், கனவுகளை மனதில் நிறைத்துக் கொண்டு புதிய தலைமுறையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ‘கிரீட’த்தின் போலீஸ்காரனான தந்தையையும், அன்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் கண்டிப்பு நிறைந்த முள் முனைகளை மட்டுமே வெளியே காட்டும் ‘ஸ்ஃபடிக’த்தின் ஆசிரியரையும் மறக்க முடியாத மனிதர்களாக ஆக்கி, நடிப்புக் கலையின் ஆழம் என்ன என்பதை நமக்கு உணர்த்திய நடிகராக இருந்தார் திலகன்.

நாடகம் அவருடைய உயிராக இருந்தது. வாழ்வே நாடகமாக இருந்தது என்று கூறினாலும், தவறல்ல. நாடக அரங்கின் பல சோதனைகளும் பயிற்சிகளும் பிறந்த போதிலிருந்தே இருந்த ரசனைகளுடன் ஒன்று சேர்ந்தபோது, திலகன் என்ற அசாதாரணமான திறமைசாலி உருவானார்.

ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய எல்லாவித தகுதிகளும் திலகனிடம் இருந்தன. எந்த விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்றக் கூடிய உணர்ச்சிகள் நிறைந்த தைரியம் அவரிடம் முக்கியமாக இருந்தது. ஒரு வகையில் அது ஒரு தார்மிக கோபமாகவே அவரிடம் குடி கொண்டிருந்தது என்றே கூறலாம். பிறகு... கொடை என்று கூறும் அளவிற்கு இருந்த அவருடைய குரல்... தனியாக அது விலகி நின்றது. அத்துடன் தனித்துவம் நிறைந்த அசைவுகள்... எப்படிப்பட்ட அசைவுகளையும் எந்த உணர்வுகளையும் அனாயாசமாக வெளிப்படுத்தக் கூடிய முகம்... குரலைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும், அசைவில் அனாயாச தன்மையை வெளிப்படுத்துவதிலும் ஒரு ‘திலகன் டச்’ இருக்கவே செய்தது. ஒரு புருவத்தின் அசைவில் கூட உணர்ச்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நாடக அரங்கிலிருந்து பெற்ற அந்த அனுபவங்கள், பிற்காலத்தில் கதாபாத்திரங்களுடன் நூறு சதவிகிதம் ஒன்றிச் செல்வதற்கு திலகனுக்கு உதவின. போலீஸ்காரனாக ஆனபோதும், சிற்பியாக ஆன போதும், தாத்தாவாக ஆன போதும், ஆசிரியராக ஆனபோதும், அரசியல்வாதியாகவும், வில்லனாகவும் ஆனபோதும் நாம் கதாபாத்திரங்களை மட்டுமே பார்த்தோம். திலகனின் நடிப்புத் திறமை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதை நாம் பார்க்கலாம்.

முதல் வகுப்பில் படித்தபோது மேடையில் ஏறிய திலகனின் நடிப்புத் திறமையின் பிரகாசத்தை சமீபத்தில் திரைக்கு வந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ வரை நம்மால் பார்க்க முடிந்தது. ஒரு கிராமத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையிலிருந்து நடிப்புப் பாடத்தைப் படித்து, மேற்படிப்பிற்கு கொல்லம் எஸ்.என். கல்லூரியை அடைந்தபோது, திலகனுக்கு முன்னால் புதிய ஒரு உலகம் திறந்தது. அரசியல், நடிப்பு ஆகியவை அங்கு படிக்கக் கூடிய விஷயங்களாக இருந்தன. அன்று சுரேந்திரநாத திலகனாக இருந்த மனிதர் ‘திலக’னாக மாறியது நாடகங்களில் தீவிரமாக ஈடுபட்டபோதுதான்... கேரளத்தின் பெரும்பாலான நாடக கம்பெனிகளிலும் திலகன் நடிகராகவும் இயக்குனராகவும் செயலாற்றியிருக்கிறார். ஆயிரக்கணக்கான மேடைகளில் நடித்து கலக்கிய திலகன் முதல் தடவையாக படவுலகிற்கு வந்தது பி.ஜெ.ஆண்டனியின் ‘பெரியார்’ திரைப் படத்தின் மூலம்தான். தொடர்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் மாறுபட்ட தன்மைகளும் முத்திரைத் தன்மைகளும் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் இதயங்களில் அடையாளங்களாக மாறின. அபூர்வ கதாபாத்திரங்களின் பிறப்பு... அங்கீகாரங்கள் ஒவ்வொன்றாக தேடி வந்தன. தாமதமாக நடந்தது என்றாலும், திலகனிடமிருந்த நடிப்புத் திறமையை உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தெரிந்து கொண்டார்கள். 1988ஆம் ஆண்டில் ‘ருதுபேதம்’ படத்தின் மூலம் சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (தேசிய விருது). ‘ஏகாந்தம்’ திரைப்படம், தேசிய விருது குழுவினரின் சிறப்பு பாராட்டிற்கு வழி வகுத்தது. 1990, 1994 வருடங்களில் சிறந்த நடிகருக்கான மாநில விருதுகள் கிடைத்தன. மாநில அரசாங்கம் அளிக்கும் சிறந்த இரண்டாவது நடிகருக்கான விருதை ஏழு முறைகள் பெற்றிருக்கிறார். 2005ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனைகளுக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது அளித்து அவருக்குச் சிறப்பு சேர்த்தது.

விவாதங்களின் நண்பனாக இருந்தாலும், திலகன் மலையாளிகளின் எல்லா காலங்களிலும் விரும்பக் கூடிய நடிகராக இருந்தார். எதற்கும் பயப்படாத அந்த ‘தான் என்ற எண்ணம்’ அந்த நடிகரின் தனித்துவ குணத்தின் சிறப்பைக் குறைத்துவிடவில்லை. எனினும், நோய் அவரை ஆக்கிரமிக்க ஆரம்பித்து சில நாட்கள் ஆகிவிட்டன. நோயுடன் பலமாக போராடினார் என்றாலும், முழுமையாக மருத்துவமனை படுக்கையில் போய் விழுந்தது செப்டெம்பர் 22ஆம் தேதிதான். எதனிடமும் தோல்வியைச் சந்திக்காத திலகன் இறுதியில் இயற்கையின் செயலுக்கு அடி பணிய வேண்டி வந்தது. அந்த மிகப் பெரிய கலைஞன் தன்னுடைய அழியாத முத்திரைகளை இருக்கச் செய்துவிட்டு, என்றென்றைக்குமாக விடைபெற்றுக் கொண்டார்.

அந்த பதிவுகள் ஒவ்வொரு மலையாளியின் மனதிலும் எந்தக் காலத்திலும் சிறிதும் மறையாமல் நிலை பெற்று நின்றிருக்கும்.

காலம் எவ்வளவு கடந்து சென்றாலும், அதை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு யாராலும் முடியாது. பெயர் என்ற அளவில் திலகன் ஒரு திறமைமிக்க நடிகராக இருந்தார். அந்த நினைவிற்கு முன்னால் துக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் உறவினர்களும் நண்பர்களும் திரைப்பட அபிமானிகளும் இருக்கிறார்கள். எவ்வளவு அழித்தாலும், அழியாத நினைவுகளைத் தந்து விட்டுச் சென்ற அந்த மகத்தான கலைஞனைப் பற்றிய நினைவிற்கு முன்னால் கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் எல்லோருடைய துக்கங்களையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடன் நாங்களும் அந்த துக்கத்தில் பங்கு கொண்டு, தலை குனிந்து நிற்கிறோம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel