Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 23

thilakan endra magaathilagam

கதையின் நாயகனின் படுக்கைக்கு முன்னால் ஜவஹர்லால் வந்தார். அதுதான் உரிய நேரம். அங்கு பேசியே ஆக வேண்டும்... இனி ஒரு சந்தர்ப்பம் வராது. மனம் கண் விழித்தது. பணிவை விடாமல், தடுமாறாத குரலில் நோக்கத்தின் ஆழத்தை மனதில் தெளிவாக வைத்துக் கொண்டு அழைத்தார்: ‘ப்ரைம் மினிஸ்டர்ஜி... மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்....’ மருத்துவமனை வார்டில் அந்த அழைப்பு, இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலித்தது.

உயர் அதிகாரிகள் பதைபதைத்துப் போய் விட்டார்கள். அங்கிருந்த மற்ற நோயாளிகள் பயந்து விட்டார்கள். ஆனால், கதையின் நாயகனின் முகத்தில், எதையோ எதிர் பார்ப்பவனின் கலப்படமில்லாத ஆர்வத்தைக் காட்டும் கம்பீரம் மட்டும்... ‘கூடாது’ என்று அமைதியாக தடுத்த, எச்சரித்த விழிகளை, முகங்களை மீறிக் கொண்டு கேள்வி கேட்பதைப் போல தன்னை நோக்கி பார்த்துக் கொண்டிருந்த ஜவஹர்லாலிடம் சுருக்கமான வார்த்தைகளில் தான் கூற நினைத்ததை கூறினார்.

போர்க் களத்தில் பதுங்கு குழிக்குள் இருந்தபோது கடுமையான குளிர் பாதித்து, இரண்டு கால் பாதங்களும் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அவற்றை வெட்டி நீக்க வேண்டும் என்று ஒரேயடியாக ராணுவ டாக்டர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். தனக்கு அந்த விஷயத்தில் எதிர்ப்பு இருக்கிறது. தான் முழுமையாக நம்பக் கூடிய ஒரு சிவில் டாக்டரிடம் காண்பித்த பிறகுதான், சிகிச்சை பற்றி முடிவு செய்ய முடியும். அதற்கான சுதந்திரத்திற்கு அனுமதி தர வேண்டும். டிஸ்சார்ஜ் செய்ய அனுமதித்து, சர்வீஸிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, சொந்த ஊருக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்...

நேரு மிகவும் கவனமாக அவர் கூறியதைக் கேட்டார். ஒரு நிமிடம் சிந்தித்தார். கேள்வி கேட்க நினைப்பதைப் போல உடன் நின்று கொண்டிருந்த அதிகாரிகளின் வெளிறிப் போய் காணப்பட்ட முகங்களையே பார்த்தார். கைகளைப் பிசைந்து கொண்டே இரண்டு அடிகள் எடுத்து வைத்து நடந்தார். கதையின் நாயகனின் அருகில் வந்து, தோளில் கையை வைத்தவாறு அமைதியான குரலில் கூறினார்: ‘தேட் வில் பி டன்... நீங்கள் கூறியபடி நடக்கும்...’

வேண்டுகோளை அனுமதிப்பது என்பதோடு மட்டும் பிரதம அமைச்சர் நிறுத்திக் கொள்ளவில்லை. ராணுவ டாக்டர்கள் மட்டுமே இத்தகைய முடிவுகளை எடுத்துவிடக் கூடாதென்றும், நோயாளிக்கு நன்கு தெரிந்த ஒரு டாக்டரும் சேர்ந்து தீர்மானித்த முடிவின்படிதான் இறுதி காரியங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றும் அச்சம்பவத்தைத் தொடர்ந்து, வரும் காலத்திற்காக எழுதி வைத்தார். பிறகு அது சட்டமாகவே ஆகி விட்டது.

செயல்படும் சக்தி இழக்கப்பட்ட பாதங்களுடன் சொந்த ஊரில் வண்டியிலிருந்து இறங்கியபோது, வளையாத முதுகெலும்பின் பலத்தால், அந்த நெஞ்சுக்குள் இலட்சியம், தன்னம்பிக்கை ஆகியவை நிறைந்த பிடிவாதம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமே மூலதனமாக இருந்தது. காலம் அந்த தன்னம்பிக்கையை கனிவுடன் தழுவிக் கொண்டு வருடியது. சிகிச்சை வெற்றி பெற்றது. நோயின் பாதிப்பிலிருந்து குணமான கால்களை மண்ணில் அழுத்தமாக மிதித்து, நடிப்பின் வழியாக வாழ்வின் நான்கு முனை சந்திப்பிலிருந்து இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தபோது, வயது முப்பத்து இரண்டு... அல்லது முப்பத்து மூன்று....

சண்டை போட்டு... அதிலிருந்த ஆர்வம் சிறிதும் குறையாத நிலையில் இருக்கும் போராளியின் பிறவியை ஒரு நிமிட நேரம் கூட குறைபாடு இல்லாமல் எப்போதும் சீரான அளவில் வைத்துக் கொண்டிருந்தார் அந்த கதையின் நாயகன்.

எல்லா இடங்களிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடிய மனிதர்... சண்டை போடக் கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வீணாக்கியதில்லை. காரணங்களுடனும், காரணங்கள் இல்லாமலும் வாளை எடுத்தார். குறும்புத்தனங்களைக் கை விடாத முதிர்ச்சியடைந்த குழந்தை என்று நண்பர்கள் கூறியபோது, அவர்களுக்கு எதிராகவும் சீறினார். இறுதியாக... அந்தச் சண்டை தன்னுடன்தான் என்பதைப் புரிந்து கொள்ளும் காலம் வரை பொறுமையுடன் சண்டையின் உச்சிக்கு சாட்சியாக நின்று கொண்டிருந்தார். விழிப்புடன் இருந்த இறுதி நிமிடம் வரை சண்டை போட்டுக் கொண்டே இருந்தார் என்று யாரைப் பற்றியாவது நிகழ் கால சூழ்நிலையில் கூறுவதாக இருந்தால், அது அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரைப் பற்றி மட்டுமே... எல்லா சண்டைகளுக்கு மத்தியிலும் ஜவஹர்லாலின் நெஞ்சோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த சிவந்த ரோஜா மலரின் மீது கொண்ட ஆர்வத்தை அந்த மனிதர் தன் மனதிற்குள் அணையாமல் பத்திரமாக காப்பாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும். போர் வெறி கொண்டு சுவடுகள் வைத்து குதிப்பதற்கு கால்களை இறுதியாக தந்த அந்த மிகப் பெரிய மனதிற்கு நன்றி செலுத்தும் குணம்...

அரங்கத்திலும், நான்கு சுவர்களுக்குள்ளும் ஒரே மாதிரி, சிறிதளவு கூட போலித்தனமில்லாமல் இருந்த நடிப்பு அர்ப்பணிப்பை நெஞ்சில் வைத்துக் கொண்டு, காலம் அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரின் பெயரை தாளில் எழுதியது- சுரேந்திரநாத திலகன்.

திலகன் என்ற சுருக்கமான பெயர் மிகப் பெரிய நடிகர்களின் வரிசையில் இடம் பெற்றபோதும், அந்த மனிதரால் சண்டை போடாமல் இருக்க முடியவில்லை. அது பிறவியிலேயே உண்டான இயல்பு குணம். மரணத்தையே கூட போராக ஆக்கி, ஆரவாரம் செய்து, தன்னை அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலையை அழகாக பழிக்குப் பழி வாங்கிய நடிகராக இருந்தார் திலகன்.

வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரிசையில் அந்தப் பெயரை வாசிப்போம் என்று கூறுவதற்கில்லை. ஆனால், அரங்கிலும் திரையிலும் நடிப்பில் எந்தச் சமயத்திலும் தோற்றிராத மிகப் பெரிய நடிகர்களின் வரிசையில் காலம் அந்தப் பெயரை இடம் பெறச் செய்திருக்கிறது.

நடிப்புப் பாதையில் திலகன் நடந்து கடந்த வந்த அந்த நீண்ட தூரத்தில் இப்படியொரு பழைய கதை மறைந்திருக்கிறது என்பதும், அந்த கதையின் நாயகனாக வேடமிட்டவர் ஜவஹர்லால் நேரு என்பதும் கொண்டாடப்பட்ட வாழ்க்கை வரலாற்றின் குறிப்புகளில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சுரேந்திரநாத திலகனின் தாத்தாவின் சகோதரரின் மகன் சி.ஆர்.ஓமனக்குட்டன் கூறியபோது மட்டுமே, நமக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. ஓமனக்குட்டன் மாஸ்டருக்கு நன்றி.

திலகன் சண்டை போட்டவர்களும், திலகனுடன் சண்டை போட்டவர்களும், அந்தச் சண்டைகளும் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு விடும். ஆனால், அரங்கிலும் திரையிலும் அந்த நடிகர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்திய வாழ்வின் அடையாளங்களை மலையாள சமூகம் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும்.

வாழ்க சுரேந்திரநாத திலகன்!

 

 

தொடரும்...

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel