Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 14

thilakan endra magaathilagam

திரையை நீக்கி வந்த திறமைசாலி

-    இயக்குனர் கெ.ஜி.ஜார்ஜ்

    தமிழில்: சுரா

திலகனை முதல் தடவையாக நான் பார்த்தது அவருடைய சொந்த ஊரான முண்டக்கயத்தில்தான். பார்த்தது மட்டுமல்ல- ‘உள் கடல்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தையும் அளித்தேன். எங்களுடைய உறவின் மிகச் சிறந்த ஒரு ஆரம்பமாக அது இருந்தது.

‘யவனிக’ என்ற திரைப்படத்திற்குப் பிறகு திலகன் என்ற நடிகர் என் மனதில் நீக்க முடியாத ஒரு பிம்பமாக நிலை பெற்று நின்று விட்டார். ‘யவனிக’ படத்திற்கு அடுத்து ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்று நினைத்தபோது, எந்தவித அனுமதியும் கேட்காமலேயே திலகன் என்ற திறமைசாலி மனதின் கதவை அகல திறந்து, வந்து கொண்டிருந்தார். திலகனுக்குப் பொருத்தமான ஒரு வேடம் இருக்கும் பட்சம், அதை அவருக்குத் தராமல் என்னால் படத்தை ஆரம்பிக்கவே முடியாது. திலகன் என்ற மனிதரும் நடிகரும் எனக்கே தெரியாமல் என்னுடைய வாழ்வின் பகுதியாக ஆகிவிட்டார்கள். ஒரு இயக்குனருக்கும் நடிகருக்குமிடையே இருக்கக் கூடிய இரசாயன உறவு எங்களுக்கிடையே பலமாக இருந்தது. ‘உள் கடல்’ படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும், அதற்குப் பிறகு வந்த ‘யவனிக’யில் வக்கச்சன் முதலாளி என்ற கதாபாத்திரம் திலகனின் நடிப்பு வாழ்க்கையின் முக்கிமான ஆரம்பமாக மாறியது என்று நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமான புகழைப் பெற்றுத் தந்த படம் ‘லேகயுடெ மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த படம் ‘யவனிக’தான். நாடகத்தையும், நாடகக்காரர்களையும் பார்த்து வளர்ந்தது காரணமாக இருக்க வேண்டும்.

பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற காலத்தில், நான் சங்ஙனாசேரியில் தங்கியிருந்தேன். வீட்டிற்கு மிகவும் அருகிலேயே பாப்பச்சன் என்பவரின் கீதா தியேட்டர்ஸின் பயிற்சிப் பட்டறை இருந்தது. அவர்கள் நாடகப் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, பார்வையாளனாக நான் போய் அங்கு உட்கார்ந்திருப்பேன். படிப்படியாக அவர்களுடன் சேர்ந்து நானும் எப்போதும் பயணம் செய்தேன். கீதா தியேட்டர்ஸில் திலகன் உறுப்பினராக இருந்தார். ‘யவனிக’யில் திலகன் ஏற்று நடித்த வக்கச்சன் முதலாளி என்ற கதாபாத்திரம், பாப்பச்சனை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதே. கிட்டத்தட்ட பதினொரு திரைப்படங்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். ‘உள் கடல்’ படத்தைத் தொடர்ந்து கோலங்கள், பிறகு... யவனிக, லேகயுடெ மரணம் ஒரு ஃப்ளாஷ் பேக், ஆதாமின்றெ வாரியெல்லு, பஞ்சவடிப்பாலம், இரகள், கதைக்குப் பின்னில், மற்றொராள், ஈ கண்ணி கூடி... பிறகு... மிகவும் கடைசியாக செய்த ‘இலவங்கோடு தேசம்’. நான் தயாரித்த ‘மகா நகர’த்திலும் திலகனுக்கு வேடமிருந்தது.

‘கோலங்கள்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. பிரதான கதாபாத்திரமான அதை திலகனைத் தவிர வேறொரு ஆளிடம் ஒப்படைப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. மது அருந்துவது என்பதை வாழ்வின் ஒரு நிரந்தர அம்சமாகவே ஆக்கிக் கொண்ட அந்த கதாபாத்திரத்தை திலகன் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கினார். நானும் திலகனும் செய்த அருமையான திரைப்படங்களில் ஒன்று ‘கோலங்கள்’. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் அந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது.

தன்னுடைய அபிப்ராயத்தை யாரிடமும் மனம் திறந்து கூறுவதற்கு தயங்காத நடிகர் அவர். யாருடைய முகத்தையும் பார்த்து தன்னுடைய அபிப்ராயம் இதுதான் என்பதைத் தெளிவாக அவர் கூறுவார். யாருடனும் சண்டை போட வேண்டும் என்று அவர் விரும்பியதேயில்லை என்ற உண்மை திலகனை மிகவும் நெருக்கமாக தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். வெள்ளித் திரையில் நாடக மேடையின் திறமையை வெளிப்படுத்திய நடிகராக திலகன் இருந்தார். நடிப்பு விஷயத்தில் நாடகத் துறையின் அடிப்படை அம்சங்களை சிறந்த முறையில் கொண்டிருந்த நடிகர்... அவருடைய நடிப்பும் வசனத்தைப் பேசும் முறையும் மிகவும் பண்பட்டவையாக இருந்தன. அதன் மொத்தம்தான்- அந்த நடிகரின் மகத்துவம்...

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel