Lekha Books

A+ A A-

திலகன் என்ற மகாதிலகம் - Page 12

thilakan endra magaathilagam

அதிரும் குரல் அமைதியாகிவிட்டது

-திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.சிவபிரசாத்

தமிழில்: சுரா

1935ஆம் ஆண்டில் பிறந்த சுரேந்திர நாத திலகன் (77) கேரளத்திலுள்ள பத்தனம்திட்ட மாவட்டத்தில் இருக்கும் ப்ளங்கமான் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஒரு நாடக நடிகர் என்ற நிலையில் அவர் தன்னுடைய திறமையை 1950, 1960, 1970களில் நடத்தப்பட்ட ‘சரஸய்யா’ ‘துலாபாரம்’ ஆகிய நாடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். 1980களில் திரைப்படவுலகம் அவரை ஏற்றுக் கொள்ள, அவர் மம்மூட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் சேர்ந்து நடித்தார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் திலகன் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. 1988ஆம் ஆண்டிலும் 2007ஆம் ஆண்டிலும் தேசிய விருதுகளும், ஒன்பது தடவைகள் கேரள மாநில அரசாங்கத்தின் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன. அவருக்கு 2009ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது.

நான் 1986ஆம் ஆண்டில் தயாரித்த ‘மிழிநீர் பூவுகள்’ என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு கால்நடை மருத்துவர் பாத்திரத்தில் திலகன் நடித்தார். திலகனுக்கு ஏற்ற புதிய ஷூக்களை அப்படத்தில் பணிபுரிந்த காஸ்ட்யூமர் தயார் செய்யாமல் போகவே, என்னுடைய பாதங்களைப் பார்த்த திலகன் சாதாரணமான குரலில் ‘உங்கள் காலணிகளை எனக்கு தருகிறீர்களா?’ என்று கேட்டார். அவருடைய அடக்கமும், சமயோசித அறிவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. இருபத்து ஆறு வருடங்கள் கடந்தோடி விட்டன. நான் இன்னும் அந்த ஷூக்களை வைத்திருக்கிறேன்.

அதே படத்திற்காக அவர் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார். அப்போது கேரளத்தில் நல்ல மழைக் காலம்.

அது – ஜூன் மாதம். வெப்பம் அளிக்கக் கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு, திலகன் சென்னையில் கால் வைத்தபோது, இங்கு தாங்க முடியாத அளவிற்கு உஷ்ணம்.... மின்சார வெட்டு என்பது பல மணி நேரங்கள் இருந்தன. ஏவி.எம். கார்டன் தியேட்டரில்தான் அவருக்கு வேலை.

இங்கு வந்து சேர்ந்த அரை மணி நேரத்திற்குள், திலகன் வியர்வையில் குளித்துவிட்டார். நல்ல காற்றை அனுபவிப்போமே என்ற எண்ணத்துடன் நான் வெளியே வந்தேன். இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு நான் திரும்பி வந்தபோது, திலகன் இடுப்பு வரை வேட்டியைக் கட்டிக் கொண்டு முழு வீச்சில் ‘டப்பிங்’கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, முதல் விமானத்தைப் பிடித்து ஊருக்குக் கிளம்பினார். தான் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறையைக் கூட அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு அவரிடம் எளிமை இருந்தது!

அவருடைய முதல் காதலே அவருடைய கார் மீதுதான். கேரளத்திற்குள் நீண்ட தூரம் பயணம் செய்து படப்பிடிப்பிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை எப்போதெல்லாம் உண்டாகிறதோ, அப்போது தானே காரை ஓட்டிக் கொண்டு அங்கு அவர் கிளம்பி விடுவார்.

மிகச் சிறந்த நாடக நடிகராக இருந்ததால், அவருக்கு எந்தச் சமயத்திலும் உரையாடலை ‘ப்ராம்ப்ட்’ செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அந்த ஏற்ற இறக்கங்கள் கொண்ட அருமையான குரல் அவருடைய சொத்தாக இருந்தது. திரையுலகிற்குள் நுழைந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தான் முத்திரை பதிப்பதற்கு மூல காரணமாக இருந்த நாடகம் என்ற ஏணியை அவர் எந்தக் காலத்திலும் மறந்ததில்லை. திலகனுடன் இணைந்து நடிப்பதை ஒரு மிகப் பெரிய கொடுப்பினை என்றே நெடுமுடி வேணு நினைத்தார். ஒரு நாடக நடிகர் என்ற முறையில், அவர் மீது மிகப் பெரிய மரியாதையை வேணு வைத்திருந்தார்.

சென்ற வருட தேசிய விருது குழு ஒரு மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு நடிகரை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்த செயலின் மூலம் திலகனின் கனவும் கவலையும் நிறைவேறின. ஃபிலிம்ஃபேர் விருது குழுவும் அதையே பின்பற்றியது.

திலகனுடன் தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் டாக்டர் ராஜேந்திரபாபு. அவருடைய தந்தை சி.ஜி.கோபிநாத்தின் பீப்புள்ஸ் தியேட்டர்ஸ் நடத்திய ‘அக்னி கோலம்’, ‘குருதி காலம்’, ‘தபஸ்’ போன்ற நாடகங்களில் திலகன் பிரதான நடிகராக இருந்திருக்கிறார். திலகனைப் பற்றி புகழ்வதற்கு ஏராளமான விஷயங்கள் ராஜேந்திரபாபுவிடம் இருக்கின்றன.

மோகன்லால் நடித்த ‘ஸ்படிகம்’, சுரேஷ்கோபி நடித்த ‘யுவ துர்க்கி’ ஆகிய பத்ரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களுக்கும் ராஜேந்திரபாபுதான் திரைக்கதாசிரியர். தன்னை வளர்த்து விட்டதே திலகன்தான் என்கிறார் அவர். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால், திலகன் தன்னுடைய வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை விஜயா மருத்துவமனைக்குச் சென்றபோது, அவருடன் ராஜேந்திரபாபுவும் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய இதயத்தில் சில தடைகள் இருப்பதை டாக்டர்கள் கவனித்திருக்கிறார்கள். உடனடியாக அவர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதை திலகன் தள்ளிப்போட முயன்றபோது, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். செரியன் ‘சார், உங்களுக்கு நீங்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், உலகமெங்கும் இருக்கும் மலையாளிகளுக்கு நீங்கள் வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அந்த வார்த்தைகள் இறுதியாக திலகனை அறுவை சிகிச்சையை நோக்கி செல்லும்படி செய்தன. டாக்டர் ராஜேந்திரபாபு அவருடைய படுக்கைக்கு அருகில் இருந்து கொண்டு, உதவியிருக்கிறார்.

திலகன் மரணமடைந்த செய்தி காதில் விழுந்ததும், இயக்குனர் ஹரிஹரன் அழுதுவிட்டார். ‘தென்னிந்திய திரையுலகத்தின் ஆலமரம் சாய்ந்து விட்டதே!’ என்றார் அவர்.

தென்னிந்தியாவின் நான்கு மொழி திரைப்படங்களிலும் திலகன் நடித்திருக்கிறார். அவர் எப்போதும் உரிய நேரத்திற்கு வேலைக்கு வந்துவிடுவார். தனக்கு பேசப்பட்ட சம்பளத்தை வாங்குவதில் அவர் மிகவும் கறாராக இருப்பார் என்று பொதுவாக பேசப்பட்டாலும், என்னுடைய எல்லா தயாரிப்புகளிலும் அவர் எந்தச் சமயத்திலும் பணம் விஷயத்தில் அழுத்தம் கொடுத்ததே இல்லை. தன்னுடைய நன்றியை அவர் வெளிப்படுத்தக் கூடிய முறை அதுதான்!

‘பரிணயம்’ படத்தில் வரக் கூடிய பிராமணராக இருந்தாலும், ‘பஞ்சாக்னி’யில் வரும் பத்திரிகையாளராக இருந்தாலும், ‘சர்க்கம்’ படத்தில் வரும் ஆயுர்வேத டாக்டராக இருந்தாலும் – என்னுடைய படங்களில் தான் ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களுக்கும் திலகன் தன்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் அளித்திருக்கிறார். சொல்லப்போனால் – ‘பஞ்சாக்னி’ படத்திற்காக அவருக்கு மாநில அரசாங்கத்தின் விருது கிடைத்தது. எனினும், ‘கிரீடம்’ படத்தில் அவர் ஏற்று நடித்த அச்சுதன் நாயர் என்ற போலீஸ் கதாபாத்திரத்திற்காகவும், ‘பெருந்தச்சன்’ படத்தில் அவர் தச்சனாக நடித்ததும் எல்லா காலங்களிலும் எல்லோராலும் நினைக்கப்படும்.

‘சத்ரியன்’ தமிழ் படத்தில் தன் சொந்தக் குரலை அளித்து தன்னுடைய திறமையை திலகன் நிரூபித்திருக்க, தமிழ்த் திரைப்படவுலகம் திலகனின் குரலுக்கு பதிலாக சிறிதும் பொருத்தமற்ற குரல்களைக் கொண்டு திலகனுக்கு ‘டப்’ செய்து, அந்த கதாபாத்திரங்களை பாழ் செய்தது. அவர் செய்த குறிப்பிடத்தக்க தமிழ் படங்கள் – அலிபாபா, மேட்டுக்குடி, நீ வேணும்டா செல்லம், கருப்பு வெள்ளை, அரவிந்தன்.

இந்த சாதனை புரிந்த நடிகரை நடிப்பிலிருந்து சிறிது காலம் விலக்கி வைத்தது தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்குத்தான் இழப்பு! கேரள அரசாங்கம் அவருடைய மருத்துவமனை செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டதுடன், அவரின் இறுதிச் சடங்குகளை அரசாங்க மரியாதையுடன் நடத்தியிருக்கிறது. இக்கட்டான நிலை உண்டானபோது, அரசாங்கம் அவரைத் தாங்கியிருந்தால், திலகன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel