
அவர் கண் விழிக்கும் போது என்னிடம் கூறுகிறார்:
‘நீயும் நீ வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமும் எல்லையற்ற கடலின் எல்லையற்ற கரையின் ஓரு மணல் மட்டுமே.’
நான் என்னுடைய கனவுகளில் அவரிடம் கூறுவேன்:
‘எல்லையற்ற அந்த கடல் நான்தான். எல்லா உலகங்களும் என்னுடைய கரையிலிருக்கும் மணல் மட்டுமே.
கடலும் காட்டிலிருக்கும் காற்றும் எங்களுக்கு வார்த்தைகள் தருவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு, சிறகடிகும், அலைந்து திரியும், கணக்கற்ற ஆசைகள் கொண்ட உயிர்களாக இருந்தோம் நாங்கள்.
இப்போது எங்களுடைய நேற்றின் குரல்களை மட்டும் வைத்துக் கொண்டு நாட்களின் பழமையை எப்படி எங்களால் வெளிப்படுத்த முடியும்?
ஒரு முறை மட்டும் ஸ்ஃபிங்ஸ் பறவை வாயைத் திறந்து பேசியது.
‘ஒரு சிறு மணல் ஒரு பெரிய மணல் பரப்பு ஒரு பெரிய மணல் பரப்பு ஒரு சிறு மணல். இப்போ நாம் மீண்டும் அமைதியாக இருப்போம்.’
அது சொன்னதை நான் கேட்டேன். ஆனால், எனக்கு எதுவும் புரியவில்லை.
ஒரு நாள் நான் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். இதுவரையிலும் பிறந்திராத அவளுடைய எல்லா குழந்தைகளையும் பார்த்தேன்.
அந்தப் பெண் என்னுடைய முகத்தைப் பார்த்தாள். அவள் பிறப்பதற்கு முன்பே இறந்து போன என்னுடைய எல்லா முன்னோர்களைப் பற்றியும் அவள் எனக்கு சொன்னாள்.
உருண்ட கல்லான என்னை அற்புதமான இந்த குளத்திற்குள் தெய்வம் எறிந்தது. அப்போது கணக்கற்ற நீர் வளையங்களால் குளத்தின் மேற்பகுதியை நான் தொந்தரவு செய்தேன்.
ஆனால், ஆழத்தை அடைந்தபோது நான் எந்தவித அசைவும் இல்லாதவனாக ஆனேன்.
நல்ல கேட்கும் சக்தி கொண்ட, அதே சமயம் வாய் பேச முடியாத ஒரு மனிதரை நான் ஒரு நாள் சந்தித்தேன். ஒரு போராட்டத்தில் அந்த மனிதரின் நாக்கு இழக்கப்பட்டு விட்டது.
ஊமையாக ஆவதற்கு முன்னால் என்னென்ன போராட்டங்களையெல்லாம் அவர் நடத்தினார் என்ற விஷயங்கள் எனக்கு இப்போது தெரியும்.
அவர் மரணமடைந்ததால், நான் சந்தோஷமே அடைந்தேன்.
காரணம்- எங்கள் இருவரை மட்டுமே வைத்திருக்கக் கூடிய அளவிற்கு பெரிதல்ல, இந்த உலகம்.
எகிப்தின் தூசிகளுக்கு நடுவில் பேச்சு எதுவும் இல்லாமல், காலமாற்றங்கள் தெரியாமல் நீண்ட காலம் நான் கிடந்தேன்.
அப்போது சூரியன் எனக்கு உயிர் தந்தது. நான் கண் விழித்து எழுந்தேன். நீல நதியின் கரை வழியாக நடந்தேன்.
பகல்களுடன் சேர்ந்து நான் பாடினேன். இரவுகளுடன் சேர்ந்து நான் கனவு கண்டேன்.
இப்போது ஆயிரம் காலடிகளால் என்னை சூரியன் அழுத்தி மிதிக்கிறது - எகிப்தின் தூசிகளுக்குள் என்னை மீண்டும் புதைப்பதற்காக.
ஆனால், என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய சூரியனால் என்னை மீண்டும் அழுத்தி மிதிக்க முடியவில்லை.
நான் இப்போதும் நேராக தலை நிமிர்ந்து நிற்கிறேன். உறுதியான சுவடுகளுடன் நீல நதியின் கரை வழியாக நான் நடந்து செல்கிறேன்.
எண்ணற்ற சூரியன்களின் அசைவை ஒட்டி நாம் காலத்தைக் கணக்கிடுகிறோம். அதாவது - அவர்களின் பைக்குள் இருக்கும் சிறிய இயந்திரங்களின் துணை கொண்டு.
இப்போது கூறுங்கள்: ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், எப்போதாவது எப்படியாவது நாம் சந்திக்க முடியுமா?
புனித நகரத்திற்குச் செல்லும் வழியில் நான் இன்னொரு புனிதப் பயணியைப் பார்த்தேன். நான் அவரிடம் கேட்டேன்:
‘புனித நகரத்திற்குச் செல்லும் பாதை இதுதானா?’
‘ஆமா... என்னைப் பின் தொடர்ந்து நடந்து வாங்க. ஒரு பகலும் இரவும் முடியிறதுக்கு முன்னால் நீங்க புனித நகரத்தை அடைந்து விடலாம்‘- அந்த மனிதர் சொன்னார்.
நான் அவரைப் பின்பற்றி நடந்தேன். எத்தனையோ பகல்களிலும் எத்தனையோ இரவுகளிலும் நாங்கள் நடந்தோம். எனினும், புனித நகரத்தை நாங்கள் அடையவே இல்லை.
அதற்குப் பிறகும் அவருக்கு என் மீது கோபம்! தவறான வழியில் நடந்ததில்! இந்த விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
ஏழு முறைகள் நான் என் மனதைத் திட்டினேன்.
உயரத்தை அடைய அவள் அடக்கமாக ஆனபோது.
முடவர்களுக்கு மத்தியில் அவள் நொண்டிக் கொண்டே நடந்தபோது.
சிரமங்கள் நிறைந்தது, எளிதானது - இவற்றில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டபோது, எளிமையானதை அவள் தேர்ந்தெடுத்தபோது.
அவள் ஒரு தவறு செய்து மற்றவர்களும் அதே தவறைச் செய்ய வேண்டும் என்று விரும்பியபோது.
தன்னுடைய பலவீனத்தால் அவள் பொறுமையாக இருந்து, அந்தப் பொறுமையே தன்னுடைய பலம் என்று மார்தட்டிச் சொன்னபோது.
முகத்தின் அழகற்ற தன்மை முகமூடிகளில் ஒன்று என்பது தெரியாமல் அவள் இருந்தபோது.
ஏழாவதாக - அவள் ஒரு துதிப்பாட்டு பாடி, அதையே சிறந்த ஒரு குணமாக எண்ணியபோது.
சொர்க்கம்.... அதோ அங்கு இருக்கிறது. அந்தக் கதவுக்குப் பின்னால்... அடுத்த அறையில்.
ஆனால், நான் அதன் திறவுகோலைத் தொலைத்து விட்டேன். ஒருவேளை, எங்கோ வைத்துவிட்டு அதை நான் மறந்திருக்கலாம்.
ஒரு நாள் நான் ஒரு கவிஞரிடம் சொன்னேன்: ‘நீங்க இறப்பது வரை உங்களின் மதிப்பு என்னன்று உங்களுக்கு தெரியாது.’
‘ஆமாம்... மரணம் எப்போதும் எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விடுகிறது. அப்போ என்னுடைய மதிப்பு என்னன்னு உங்களுக்கு தெரியிறதா இருந்தால், என் நாக்கின் மீது இருப்பதை விட இதயத்திலும், கையில் இருப்பதை விட அதிகமாக விருப்பங்களிலும் இருப்பது மட்டுமே அதற்கு காரணம்.’
கவிஞர் பதில் சொன்னார்.
உங்களின் மிகவும் பளபளப்பான ஆடைகள் இன்னொரு மனிதர் நெய்தது.
இருப்பதிலேயே சுகமான தூக்கம் உங்களுக்கு இன்னொரு மனிதரின் வீட்டில்தான்.
உண்மை அதுவாக இருக்க, நீங்கள் எப்படி இன்னொரு மனிதரிடமிருந்து உங்களைப் பிரித்துப் பார்க்க முடியும்?’
பகலில் சூரியனுக்கு முன்னால் நீங்கள் சுதந்திரமானவர்தான். இரவில் நட்சத்திரங்களுக்கு முன்னாலும்.
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் இல்லாதபோதும் நீங்கள் சுதந்திரமானவர்தான்.
ஆனால், நீங்கள் நேசிக்கும் மனிதனுக்கு நீங்கள் அடிமை. நீங்கள் அவன் மீது நேசம் வைத்திருப்பதால், உங்களை நேசிப்பவனும் உங்களுக்கு அடிமையே. அவன் உங்களை நேசிப்பதால்.
இரக்க குரணம் கொண்ட ஓநாய் செம்மறி ஆட்டை அழைத்தது:
‘எங்க வீட்டுக்கு ஒரு முறை வருகை தந்து எங்களை பெருமைப் படுத்தலாமே?’
‘உங்க வீட்டுக்கு வர்றதுனால நாங்களும் பெருமை அடைவோம், அது உங்களின் வயிறாக இருந்தால்...!’
செம்மறி ஆடு பதில் சொன்னது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook