Lekha Books

A+ A A-

மரியாவின் முதலிரவு

Mariyavin-mudhaliravu

வர்கள் சில மாலை வேளைகளில் நிஸாமுதீனில் ஒரு மொட்டை மாடியில் ஒன்று சேர்வார்கள்.

புகழ்பெற்ற சில பாடகர்களும் நாட்டியக் கலைஞர்களும் வசிக்கும் ஒரு இடம்தான் நிஸாமுதீன். கதக் குருவான நாராயண்லாலின் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ஹுமாயூனின் கல்லறையும் அதைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கும் ரயில் தண்டவாளங்களும் தெரியும். கீழே அதிக ஆள் நடமாட்டமில்லாத பாதையின் ஓரத்தில் ஒரு கொன்றை மரம் இருக்கிறது.

கல்லறையின் சுவரையொட்டி தண்டாவளத்தை நோக்கி ஒரு ஒற்றையடிப்பாதை இருக்கிறது. காலையில் கிராமங்களிலிருந்து தண்டவாளத்தைத் தாண்டி ஒற்றையடிப்பாதை வழியாக காய்கறி விற்பவர்கள் நிஸாமுதீனுக்கு வருவார்கள். குளிர்காலத்தில் அவர்களின் கூடைகளில் வெண்ணெய் நிறத்திலுள்ள காலிஃபிளவர் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் அவன் குரு நாராயண்லாலின் வீட்டிற்குச் சென்றான். இரு பக்கங்களிலும் நெருக்கமாக இருக்கும் வீடுகள். அமைதியாக இருந்த பாதை வழியாக நடந்து குருவின் வீட்டிற்கருகில் போனபோது சாரங்கியின் இசை கேட்டது. விடுமுறை நாட்களில் குருவின் வீடு இசைமயமாக இருக்கும். அவன் மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது மாடிக்குச் சென்றான். அழைப்பு மணியில் விரலை வைத்தபோது பழமை வாய்ந்த கதவு ஓசை உண்டாக்கியவாறு திறந்தது. கதவுக்குப் பக்கத்தில் குரு நாராயண்லாலின் சிஷ்யை மந்தாகினி நின்றிருந்தாள்.

‘‘நீங்க வந்தது நல்லதாப்போச்சு’’ - மந்தாகினி சொன்னாள்: ‘‘குருஜி உங்களைப் பற்றி இப்போதான் பேசிக்கிட்டு இருந்தாரு.’’

மொட்டை மாடியில் நிறம் மங்கிப்போன ஒரு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக அங்கு காணப்படும் பிரம்பு நாற்காலிகள் மாற்றப்பட்டிருந்தன. இளம் வெயிலில் காய்ந்து கொண்டே கோவிந்த்மோகன் சாரங்கி மீட்டிக் கொண்டிருந்தார்.

‘‘குருஜி எங்கே?’’

‘‘உள்ளே இருக்கார். தியானம் செய்துக்கிட்டு இருக்கார்.’’

இன்று குரு நடனமாடப் போகிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான். நடனமாடும் நாளன்று அவர் நீண்ட நேரம் மவுன விரதத்தில் இருப்பார். குருவிற்காகக் கொண்டு வந்திருந்த உயர்ந்த பழங்கள் இருந்த பெரிய பொட்டலத்தை மந்தாகினியிடம் தந்த அவன் மொட்டை மாடியில் போய் நின்றான். கொன்றை மரத்தின் கிளைகள் மொட்டை மாடிமீது சாய்ந்து கொண்டிருந்தது. முதல் தடவையாக அவன் குருவின் வீட்டிற்கு வரும்போது இந்த மரம் மிகவும் சிறியதாக இருந்தது. அவன் அதை நினைத்துப் பார்த்தான். அதற்கு அப்போது இரும்பு கேட்டின் உயரம் மட்டுமே இருந்தது. ஆடு, மாடுகள் தின்று அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதைச்சுற்றி தகரத்தால் ஆன ஒரு மறைப்பு வைக்கப்பட்டிருந்தது. முனிசிபாலிட்டிக்காரர்கள்தான் அப்படிச் செய்திருந்தார்கள். தண்டாவளத்தைக் கடந்து காய்கறி விற்பவர்கள் நடந்து வரும் பாதை வழியேதான் கால்நடைகள் நிஸாமுதீனுக்கு வரும்.

‘‘என்ன, உட்காராமலே இருக்கீங்க?’’

‘‘ஒண்ணுமில்ல, மந்தாகினி.’’

மொட்டை மாடியில் சுற்றியிருக்கும் சுவருக்கு அருகில் நின்று கொண்டு பார்த்தால் நிஸாமுதீன் முழுவதும் தெரியும். மரங்கள் பசுமையாகப் படர்ந்திருக்க இங்குமங்குமாய் பழமையான வீடுகள், சுவர்கள் தெரிந்தன. ஹுமாயூனின் கல்லறைக்கு மேலே புறாக்கள் பறந்து கொண்டிருந்தன.

சாரங்கி வாசித்துக் கொண்டிருந்த கோவிந்தமோகன் இலேசாகத் தலையைக் குனிந்தவாறு கண்களைச் சிமிட்டி அவனுக்கு வணக்கம் சொன்னார். அவர் ஒரு வெள்ளை நிற லக்னோ, குர்தா அணிந்திருந்தார். குரு நாராயண்லாலுடன் மேடையில் இருக்கும்போது அவர் ஒரு பட்டு குர்தா அணிந்திருப்பார். அதன் கழுத்திலும் கைகளின் ஓரங்களிலும் பட்டு நூல்களால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

‘‘நாளை குருஜியின் நிகழ்ச்சி இருக்கு. தீன்மூர்த்தி ஹால்ல...’’ - மந்தாகினி சொன்னாள். ‘‘உங்களுக்கு கார்டு கிடைச்சிடுச்சில்ல?’’

‘‘இல்ல...’’ - அவன் சொன்னான்: ‘‘நான் உடல்நலம் சரியில்லாத என் தாயைப் பார்க்க ஊருக்குப் போயிருந்தேன்.’’

‘‘உங்க அம்மா உடம்புக்கு என்ன?’’

‘‘வயசானதுனால வர்ற உடல்நலக்குறைவுதான். அம்மாவுக்கு வயசு எழுபதைத் தாண்டிருச்சு.’’

‘‘நான் சத்தர்பூர் கோவிலுக்குப் போறப்போ உங்க அம்மாவுக்காக வேண்டிக்கிறேன்’’ என்றாள் மந்தாகினி.

‘‘உங்க அம்மாவோட பேர் என்ன?’’

‘‘தேவகியம்மா’’ என்றான் அவன். பிறகு தன் மனதிற்குள் அவன் தாயின் பெயருடன் சேர்த்துச் சொன்னான்: ‘‘மங்கலத்து வீட்டு கருணாகரன் நம்பியாரின் மனைவி தேவகியம்மா.’

அழைப்பு மணி மீண்டும் ஒருமுறை ஒலித்தது. இந்தமுறை அவன் சென்று கதவைத் திறந்தான். நிஸாமுதீனில் வசிக்கும் உருது கதாசிரியர் ஸர் ஃபரஸ் ஹுஸைன் அங்கு நின்றிருந்தார். அவர் சட்டைக்கு மேலே ஒரு காதி கோட் அணிந்திருந்தார்.

‘‘நான் தாமதமாயிடலையே?’’

‘‘இல்ல....’’ - மந்தாகினி சொன்னாள்: ‘‘குருஜி தியானத்துல இருக்காரு.’’

ஸர் ஃபரஸ் ஹுஸைன் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு தரை விரிப்பில் கால்களை மடக்கிக் கொண்டு உட்கார்ந்தார். அவரின் கை, கால்கள் நல்ல நீளத்தைக் கொண்டிருந்தன.

‘‘நீங்க ஏன் நின்னுக்கிட்டே இருக்கீங்க?’’ - மந்தாகினி சொன்னாள். ‘‘இங்கே உட்காருங்க.’’

அவன் பாதிச்சுவருக்கு அருகில், சாய்ந்து கிடக்கும் கொன்றை மரத்தின் கிளைகளுக்குப் பக்கத்தில் விரிப்பில் அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்தான். அவள் புடவை உடுத்தியிருந்தாள். மொட்டை மாடியில் நடனம் ஆடும்போது புடவையை மாற்றிவிட்டு வெள்ளை நிற குர்தாவை அணிந்து கொள்வாள். நடனம் மேடையில் என்றால் கண்களைக் கவரும் வண்ண ஆடைகளையும் அதற்குப் பொருத்தமான அணிகலன்களையும் அணிந்திருப்பாள். இந்த விஷயத்தில் அவள் நடனம் ஆடும் ஆண்களுடன் வாதம் செய்வதுகூட உண்டு. நிறைய நகைகளையும் பிரகாசமான ஆடைகளையும் விட்டுவிட்டு எளிமையான ஆடைகள் அணிந்து நடனம் ஆடும்படி அவன் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வாள்.

இப்போது மரப்படியிலிருந்து மொட்டைமாடிக்கு வரும் வாசல் கதவு திறந்தே கிடக்கிறது. பெண்களும் ஆண்களும் அடங்கிய விருந்தினர்கள் திறந்த கதவு வழியாக வந்து விரிப்பில் உட்காருகிறார்கள்.

‘‘நான் போய் ஆடையை மாற்றிட்டு வர்றேன்.’’

மந்தாகினி எழுந்தாள். குருஜி மொட்டை மாடியில் நடனம் ஆடும்போது அவளும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடுவாள். ஒரு உயர்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியின் மனைவியான மந்தாகினி குரு நாராயண்லாலின் சிஷ்யை மட்டுமல்ல; எல்லாமும்தான். அவள் அவருடைய வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வாள். அவருக்கு உணவு செய்து கொடுப்பாள். நடக்கும்போது அவருடன் செல்வாள். ஒருமுறை குருஜிக்கு காய்ச்சல் வந்தபோது அவள் தன்னுடைய வீட்டிற்கே போகாமல் இரவு முழுவதும் குருவின் அருகிலேயே உறங்காமல் இருந்து அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள்.

தியானம் முடிந்து குரு நாராயண்லால் மேலே வந்தார். அவரின் ரசிகர்கள் அவரைத் தொழுதவாறு எழுந்து நின்றனர்.

‘‘அம்மாவுக்கு எப்படி இருக்கு?’’

‘‘நலமா இருக்காங்க.’’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel