Lekha Books

A+ A A-

ரதி நிர்வேதம் - Page 6

radhi-nirvedham

என்னுடைய கண்கள் அகலமாக விரிந்தன. அந்த அவலட்சணமான மனிதனை இறுக அணைத்து ஒரு முத்தம் தர வேண்டும்போல எனக்கு அந்த நிமிடத்தில் தோன்றியது.

“அப்படின்னா நாம அதையே செய்வோம்... என்ன?’’ - கொச்சும்மிணி கேட்டான்.

அப்போதுதான் அந்த வித்தையைச் செயல்படுத்துவது பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு மாதத்திற்குள் என்னுடைய கல்லூரி அட்மிஷன் விஷயம் சரியாகிவிடும். ஓணான் ஜோடிகள் தூள் தூளாகி சாம்பலாகப் பல மாதங்கள் ஆகும்.

ஒரு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து வேரைப் பதித்து வைக்கலாம் என்றால், அதிலும் ஆபத்து இருக்கிறது. ரது அக்காவிற்குப் பதிலாக அவளுடைய தாய் அந்தப் பக்கமாக நடந்து வந்துவிட்டால்...?

எனக்கு அதை நினைத்துப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. எங்களுடைய கிராமத்திலேயே மிகவும் நீளமான நாக்கினைச் கொண்ட பெண்ணாக அவள் இருந்தாள். ஆண்களே வெட்கப்படுகிற அளவுக்கு அவள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவாள். யாருக்கும் கூச்சப்படாத குணத்தைக் கொண்டவள் அவள்.

“அப்படின்னா நீங்க ஒரு காரியம் செய்யிங்க... எது எப்படியோ, நாம நாளையில இருந்து ஓணானைப் பிடிக்க முயற்சிப்போம். எவ்வளவு சீக்கிரமா காரியம் நடக்குதுன்னு பார்ப்போம்.’’

நான் சொன்னேன்: “அது நிறைவேற நிறைய நாட்கள் ஆகும் என்றுதானே நீ சொன்னே? எனக்கு இனியும் அதிக நாட்கள் இல்லையே!’’

“அப்படின்னா ஒண்ணு செய்வோம். மந்திரச் செயல் செய்த சாம்பல் விலைக்குக் கிடைக்குதான்னு பார்ப்போம்.’’

“ஓ... அப்படி எங்கே கிடைக்கும்?’’

“மனதைத் தளரவிட வேண்டாம். கிடைக்கும் என்று என் மனசு சொல்லுது. நாம பணிக்கர் அய்யாவைப் போய்ப் பார்ப்போம்.’’

எங்களுடைய கிராமத்திலேயே சக்தி படைத்த மந்திரவாதி பணிக்கர்தான். பணத்தைக் கொடுத்தால் அவரிடமிருந்து கிடைக்காத ரகசிய மருந்துகள் எதுவும் இல்லை.

“ஆனால் பெரிய விலையைத் தர வேண்டியது இருக்குமே!’’ - நான் அதில் அடங்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினையை வெளியிட்டேன். அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது.

“இது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். உங்களுக்குன்றதுக்காக சம்மதிக்கிறேன். எனக்கு கட்டாயம் ஒண்ணும் இல்லை.’’

அவன் கோபப்படுவதைப்போல தோன்றியது. அவனுடைய குரலில் எரிச்சல் கலந்திருந்தது. நான் மென்மையான குரலில் கேட்டேன்.

“அப்படின்னா என்ன தர வேண்டியது இருக்கும்?’’

“அதை இப்போ எப்படிச் சொல்ல முடியும்? போனாத்தான் தெரியும்.’’

“இருந்தாலும்... உத்தேசமா...?’’

“ஒரு ஐந்து ரூபாயாவது தேவைப்படும். அந்த ரூபாய்ல விஷயத்தை முடிக்க நாம பார்க்கணும்.’’

நான் கவலையில் மூழ்கிவிட்டேன். அதைப் பார்த்தவுடன் சமாதானப்படுத்துகிற விதத்தில் அவன் சொன்னான்: “எது எப்படி இருந்தாலும் ஓணான் கிடைக்குதான்னு நாம பார்ப்போம். கிடைத்துவிட்டால் பரவாயில்லை... பெரிய அளவில் கைச்செலவு இல்லாமல் காரியம் நடந்து விடும்.’’

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, என் தாயின் வெற்றிலைப் பெட்டிக்குள் இருந்து ஐந்து ரூபாயைத் திருடுவதற்காக நான் ஓடினேன்.

இதற்கிடையில் எப்போதோ வசந்தம் என் வீட்டு வாசலில் ஒரு வண்ணக் கண்ணாடிப் பாத்திரத்தைப்போல வந்து விழுந்து, உடைந்து சிதறி விட்டிருந்தது.

ஏழு லட்சம் நிறங்கள் சிதறிப் பரவி, கண்ணில் பார்க்கும் செடிகள், மரங்கள் ஆகியவற்றின் கிளைகளில் போய் ஒட்டிக் கொண்டிருந்தன. மேகங்கள், நிர்வாணமாக்கப்பட்ட கிராமத்து இளம் பெண்களைப் போலத் திரண்டு, பிரகாசமாக உருண்டு விளையாட ஆரம்பித்தன. எல்லா மரங்களும் கிளைகளைச் சேர்த்துக் கொண்டு சதா நேரமும் இளமையான காற்றை அணைத்து அதைச் செல்லவிடாமல் நிறுத்திக் கொண்டிருந்தன. மரக்கிளைகளில் இருந்து பிடியை விடுவித்துக் கொண்டு பாய்ந்து ஓடிய காற்றின் குழந்தைகள், பெண் கிளிகளின் ஆண் கிளிகளின் சிறகுகளுக்கு நடுவில் அபயம் தேடின.

நான் நிலத்தின் ஏதாவதொரு மூலையில் எல்லா நேரங்களிலும் பதுங்கி நடந்து செல்ல ஆரம்பித்தேன். பாம்புகள் வசிக்கும் நிலத்தின் ஓரங்களிலும் பாலை மரங்களின் அடிப்பகுதியிலும் விசாலமாகப் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்த கிளிமூக்கு மாமரத்தின் நிரலிலும் நிறைய ஓணான்கள் உடலுறவு கொண்டவாறு கிடந்தன. இடையில் அணில்களும், ஆனால் ஒன்றைக்கூட சாண உருண்டைக்குள் கொண்டுவர என்னால் முடியவில்லை. மிகவும் நெருங்கிப் போகும்போது அவை தங்களைத் தேடி வந்திருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு, அருகில் சென்றவுடன் உடலுறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மரங்களையோ புல்வெளியையோ தேடி ஓடி மறைய ஆரம்பித்தன. ஒருமுறை வீட்டின் வடக்குப் பகுதியில் இருந்த மரத்திற்குக் கீழே ஒரு ஓணான் ஜோடியை கிட்டத்தட்ட பாதி அளவு நான் பிடித்துவிட்டேன்.

ஆனால், சாணம் அவற்றின் வால் பகுதியில் போய் விழுந்துவிட்டதால் இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து ஓடி மரத்தின் மேல் போய் உட்கார்ந்துகொண்டு என்னைப் பார்த்து கிண்டலாக ஓசை உண்டாக்கின.

என் தாய் ஒரு நாள் நிலப்பகுதியில் நான் இங்குமங்குமாக அலைந்து கொண்டு எதைத் தேடுகிறேன் என்று கேட்டாள். உடனடியாக என்னால் பதில் கூற முடியவில்லையென்றாலும், அங்கிருக்கும் காய்களைப் பறிப்பதற்காகத்தான் நான் நடந்து திரிகிறேன் என்று சொன்னபோது, என் தாய் அதை நம்பினாள். எனினும் அதற்காக என்னை அவள் திட்டினாள்:

“ச்சே... என்ன வெட்கக் கேடு! கல்லூரிப் போவதற்காக இருக்குற பையன் சின்னப் பிள்ளைகளைப்போல காட்டுக் காயைப் பறிப்பதற்காக நடந்து திரியறான். உன்னோட இந்த குணமெல்லாம் எப்படா மாறும்?’’

 

ரது அக்காவும் அவளுடைய தாயும் பெரும்பாலான நாட்களில் வீட்டிற்கு வருவார்கள். மகள் வந்தால் பிரச்சினை இல்லை. என் தாயிடம் எதையாவது பேசிக் கொண்டு இருந்துவிட்டு, ஏதாவதொரு வார இதழை எடுத்துக் கொண்டு இடத்தைவிட்டுக் கிளம்பி விடுவாள். அவளுடைய தாய் முற்றிலும் வேறு மாதிரி நடப்பாள். அந்தப் பெண் வந்துவிட்டால், நான் எப்போதும் இருக்கக்கூடிய மதிய உறக்கத்தில் இருந்து கண் விழித்து விடுவேன்.

கண் விழித்துப் படுத்திருக்கும்போது, ஊரில் இருக்கக்கூடிய இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோரைப் பற்றிய - அன்றுவரை இருக்கக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு நீண்ட விளக்கத்தைக் கேட்கலாம். இப்போதைய இளைஞர்கள் எல்லோரும் மிகவும் மோசமானவர்கள் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆடு மெல்வதைப்போல வெற்றிலை போடுவதற்கு மத்தியில், தன்னுடைய மகள் ஒருத்தியைத் தவிர இந்த உலகத்தில் இருக்கும் எல்லா இளம்பெண்களையும் பற்றி அவள் மிகவும் மோசமாகப் பேசுவாள்.

கணவன் இல்லாமல் இருப்பதால்தான் அவளுக்கு இந்த அளவிற்கு பொறாமை இருக்கிறது என்று கொச்சும்மிணி ஏற்கெனவே கூறியிருக்கிறான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel