Lekha Books

A+ A A-

ரதி நிர்வேதம் - Page 3

radhi-nirvedham

“உண்மையைச் சொன்னால் உனக்கு நல்லது. உண்மையைச் சொல்லிடு... இப்படிச் செய்யச் சொல்லி உன்கிட்ட யார் சொன்னது?’’

மீண்டும் அவள் என்னை முழுமையான ஒரு குழந்தையாகவே ஆக்கிவிட்டாள். எனக்கு இந்த மாதிரியான சிந்தனைகள் வரவே வராது என்பதைப்போல அவள் பேசிக் கொண்டிருந்தாள். சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் பதில் சொன்னேன்:

“யாரும் சொல்லிக் கொடுக்கல...’’

“பிறகு?’’

“பிறகு... அப்படிச் செய்யணும்னு எனக்கே தோணுச்சு’’ - நான் மகிழ்ச்சியுடன் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

“ச்சீ...’’ - நான் கூறியதை முடிப்பதற்குள் அவள் முகத்தை மூடிக்கொண்டு, அதை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள்.

“உனக்கே அப்படிச் தோணிச்சு... அப்படித்தானே? உன்னை நான் சும்மா விடமாட்டேன். உன் அம்மா ஒருத்திதான் கொஞ்சிக் கொஞ்சி சின்னப் பையனான உன்னை இப்படிப் பாழ்படுத்திட்டாங்க. அவங்கக்கிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்ல. உன் சித்தி பள்ளிக்கூடத்துக்கு வரட்டும்... நான் சொல்றேன்.’’

“அய்யோ!’’ - நான் அதிர்ச்சியடைந்து கத்தி விட்டேன். “சித்திக்கிட்ட மட்டும் சொல்லாதீங்க.’’

“அப்படின்னா... அவங்ககிட்ட பயம் இருக்கு.’’

“அவங்க என்னை அடிச்சுக் கொன்னுடுவாங்க.’’

“உன்னை அடிச்சுக் கொன்னால் எனக்கு என்ன?’’ - அவள் முகத்தை வெட்டிக் கொண்டு திரும்பி நடந்தாள். விரலை அப்போதும் ஊதிக் கொண்டு இருந்தாள். சிறிது தூரம் நடந்த பிறகு ஒரு பெரிய அதிகாரியைப் போல திரும்பி நின்று கொண்டு சொன்னாள்: “சின்னப் பையனே, இந்த சின்ன வயசுல கேடு கெட்டுப் போயிடக் கூடாது.’’

ஆடிக் குலுங்கியவாறு அவள் நடந்து சென்றாள்.

அமைதியின் ஆழத்தில், அவமானத்தின் அடிகள் வாங்கி நான் தலை குப்புற விழுந்து விட்டேன். அசைந்து கொண்டிருக்கும் கொடிகளின் இலைகள்... இலைகளின் நிழலில் அமர்ந்து சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கும் கிளிகள்... வெயிலின் மாறுபட்ட நிலைகள்... வயலில் இருந்து நெற்கதிரைத் தூக்கிக் கொண்டு பறந்து போகும் கிளிகள்... மேற்கு திசையில் ஏரியின் வெப்பமான அலைகள் கரையில் வந்து மோதி உண்டாக்கும் சத்தம்.

அந்த பாலைப் பூங்கொத்து அதே இடத்தில் கிடந்தது. சற்று இடம் மாறியிருந்தது. ஒன்றிரண்டு ஒற்றைப் பூக்கள் உதிர்ந்து போயிருந்தன. அவற்றை உச்சிக் காற்றுப் புழுதியில் இட்டு உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

2

மாலை நேரத்தில் நானும் கொச்சும்மிணியும் சேர்ந்து பாக்கு பறிப்பதற்காகச் சென்றோம்.

வெயில் மறைந்துபோன நிலம். பாக்கு மரங்களின் நீளமான நிழல்கள் இங்குமங்குமாக விழுந்து கிடந்தன. எல்லா மரங்களிலும் பழுத்த காய்களும் மலர்ந்த பூங்கொத்துகளும் ஆடிக் கொண்டிருந்தன.

காலில் செருப்பு அணிந்து உடுத்தியிருந்த வேட்டிக்குப் பின்னால் சிறிய அரிவாளை வைத்துக் கொண்டு கொச்சும்மிணி மரங்களின் உயரங்களுக்குச் சென்று காணாமல் போனான். நான் எவ்வளவு முயற்சி செய்தும் அவன் மேலே என்ன செய்கிறான் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு ஒரே இருட்டாக இருந்தது. ஒருவேளை ஒன்றோ இரண்டோ பாக்குகளை எடுத்து அவன் தன் மடிக்குள் மறைத்து வைத்திருக்கலாம். அதனால் ஒவ்வொரு மரத்திலிருந்து இறங்கியவுடன், நான் அவனுடைய வேஷ்டியை அவிழ்த்து சோதித்துப் பார்த்தேன். உள்ளே அரைக்கால் சட்டை அணியாமல் இருந்ததால் அவனுக்கு சிறிது வெட்கம் இருந்தது.

மனம் மிகவும் பதட்டத்தில் இருந்தது. சித்தி பள்ளிக் கூடத்திலிருந்து வந்திருந்தாள். அவளிடம் சொல்லியிருக்கும் பட்சம், அதைவிட இறப்பதே மேல். என் தாய்க்கு விஷயம் தெரிந்திருந்தால்கூட அதனால் பெரிய அளவில் பிரச்சினை இல்லை. எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதைப் போல அவள் இருந்துவிடுவாள். சித்தி அப்படியில்லை. எல்லோருக்கும் தெரியும்வண்ணம், கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி அடிக்க ஆரம்பிப்பாள். அவமானமாக இருக்கும்!

கொச்சும்மிணி ஒரு மரத்தில் இருந்து ஆடியவாறு இன்னொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தான். இடுப்பில், சிவந்து பழுத்த ஒரு பாக்கு குலை வாலைப் போல ஆடிக் கொண்டிருந்தது. எனக்கு அதில் கவனம் செலுத்தவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வேண்டுமென்றால் அவன் ஒன்றோ இரண்டோ பாக்குகளைக்கூட எடுத்துக் கொள்ளட்டும். இரண்டு பாக்குகள் என்பது எனக்கு பெரிய விஷயம் இல்லையே! அதைவிட எவ்வளவு பெரிய சம்பவம் இங்கு நடந்திருக்கிறது!

இந்த தடவை கீழே இறங்கும்போது, கொச்சும்மிணி கேட்டான்:

“என்ன, ஒரு மாதிரியா இருக்கீங்க?’’

“ஒண்ணுமில்ல...’’ - நான் சொன்னேன்.

“சும்மா சொல்லாதீங்க. என்னவோ இருக்கு.’’

“ம்... இருக்கு அதனால் என்ன?’’ - நான் எதுவுமே தெரியாதது மாதிரி நடித்தேன்.

“சொல்லட்டுமா?’’

“சொல்லு...’’

அவன் சிறிது நேரம் என்னவோ சிந்தித்தான். தொடர்ந்து அதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை வீசி எறிந்துவிட்டு, மிடுக்கான குரலில் ஒரு கேள்வியைக் கேட்டான்:

“உங்களுக்கு இப்போ என்ன வயசு நடக்குது?’’

“பதினேழு... அதற்கென்ன?’’

“சரி... அடுத்த மரத்துல இருந்து இறங்குறதுக்கு முன்னாடி நான் விஷயம் என்னன்னு சொல்றேன். உண்மையாக இருந்தால் ஒத்துக்கணும்.’’

“நிச்சயமா...’’

அவன் அடுத்திருந்த மரத்தை நோக்கி நடந்தான். பாக்கு மரத்தின் தடியைத் தொட்டு வணங்கிவிட்டு, அவன் மேல்நோக்கிச் சென்றான். பார்ப்பதற்கு, மேலேதான் உண்மை இருப்பதைப்போல தோன்றியது.

எனக்கு வியப்பாக இருந்தது. அவன் கூறிவிடுவானா? எது எப்படியோ, என்னைவிட அவனுக்கு மூன்று நான்கு வயதாவது அதிகம் இருக்குமே! அப்படியென்றால் அந்த அளவிற்கு அதிகமாக அனுபவமும் அவனுக்கு இருக்குமே!

மேலே எங்கோ ஓலைகள் அசைந்தன. மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. வயல் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்த மனித உருவங்கள் முற்றிலுமாக பார்வையிலிருந்து மறைந்து போயின. சந்தையில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு திரும்பி வரும் கொழுத்து தடித்த பெண்ணுக்குப் பின்னால் ஏதோ ஒரு சைக்கிள்காரன், நிறுத்தாமல் மணியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்.

ஆகாயத்தில் இருந்து ஒரு கேள்வி:

“நான் சொல்லட்டுமா?’’

“சொல்லு...’’ - நான் மேலே பார்த்து உரத்த குரலில் சொன்னேன்.

“உண்மையாக இருந்தால், நான் பத்து பாக்குகள் எடுத்துக் கொள்வேன்.’’

சிறிது நேரம் யோசனை செய்து விட்டு, அதை எடுத்துக் கொள்வதற்கு நான் சம்மதித்தேன்.

மேலே ஓலைகள் அசையாமல் இருந்தன. எந்தவிதமான அசைவும் இல்லாத இயற்கைச் சூழ்நிலையில் இருட்டு ஆக்கிரமித்திருந்தது. பாக்கின் ஓடுகளை உறிஞ்சிக் குடிப்பதற்காக அங்கு பறந்து வந்திருந்த வவ்வால்களின் ஏமாற்றம் நிறைந்த சிறகடிப்புகள்... வாழைத் தோப்பில் குடை செய்யப் பயன்படும் பனைகளைச் சுற்றியும் வவ்வால்கள் காட்சியளித்தன.

ஆகாயம் கேட்டது:

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel