
பகல் வேளையில் எங்கோ சிறுவர்கள் பறக்கவிட்ட ஒரு பட்டம் நூல் அறுந்து ஒரு மரக்கிளையில் சிக்கிக் கிடப்பதைப் பார்த்தேன். மழைநீர் பட்டுத் தாள் முழுவதும் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அதிகாலைக் காற்று அதுவும் என்னைப் போல நடுங்கியது.
அழுகை வந்தது. என் ரது அக்காதான் அந்த மரக்கிளையில் சாய்ந்து விழுந்து கிடந்து நடுங்குகிறாள் என்பதைப் போல எனக்குத் தோன்றியது. முன்பு எவ்வளவு அழகாக அந்தப் பட்டம் இருந்திருக்கும்!
ஒரு மாட்டு வண்டி கடந்து சென்றது. வெட்டிக் குளங்கரை கோவிலில் நடை திறக்கும் நேரமாக இருக்க வேண்டும். மணியோசைகள் கேட்டன.
ரதீ! ரதீ! என் மனம் அழுதது.
இறக்கக்கூடாது! வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் இந்த வீட்டிற்கு வரும் போது, என் தந்தையும் தாயும் உறங்கும் உயிரற்ற நிலத்திலிருந்து கவலைகள் நிறைந்த காற்று வீசி வரும் போது, அதில் ரது அக்காவின் உடலின் வாசனை மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும்!
தலைக்கு மேலே ஒரு ஒற்றைக் கிளி பறந்து போனது- ஒரு ஊசி போகும் வேகத்தில், நிற்காமல் ஓசை உண்டாக்கியவாறு.
நான் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.
தூரத்தில் மழை நின்று விட்டிருந்த மேகங்கள் அற்ற, சிவப்பு நிற ஆகாயத்தில் அது போய் கலக்கும் வரை நான் அங்கேயே நின்றிருந்தேன்.
பிறகு-
கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook