Lekha Books

A+ A A-

நீலக்கடல்

neelakadal

ப்ரொஃபஸர் ரேணுகாதேவி சிங்கப்பூரில் நடக்கப் போகிற பொருளாதார மேதைகள் பங்குபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளத் தீர்மானித்திருப்பதை அறிந்தவுடன், அவளுடைய உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். ரேணுகா ஒரு இதய பாதிப்பிலிருந்து தப்பித்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன.

இரத்த அழுத்தத்திற்காகவும் சர்க்கரை வியாதிக்காகவும் ஒவ்வொரு நாளும் மருந்துகள் உட்கொண்டும் பத்திய உணவு சாப்பிட்டுக் கொண்டும் மிக எச்சரிக்கையுடன் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு வயதான கன்னிப் பெண்தான் அவள். ஐம்பத்தைந்து வயது ஆனவுடன் தான் வசித்துக் கொண்டிருந்த பணியிலிருந்து ஓய்வெடுத்து தன் மனதிற்கேற்ற சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டு அதில் வாழ்க்கைக்கான திருப்தியை அடைந்து கொண்டிருந்த பெண். இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுரைகள் கூறுபவள். வாரத்தில் ஒரு முறையாவது விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கும் பெண்களை ஒன்றுகூட்டி அரசாங்கத் தலைமையகத்திற்கு அருகில் அவர்களை ஒரு ஊர்வலமாக அழைத்துச் செல்லும் பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. செய்தி ஊடகங்களுக்கு மிகவும் விருப்பமானவள். இப்படிப் பல முகங்களைக் கொண்ட ரேணுகாதேவி நகரத்தைவிட்டு போகிறான் என்றால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுமா இல்லையா? வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் கலாச்சார எதிர்ப்பாளர்கள் பெண்களை அவமானப்படுத்துவார்களா இல்லையா! அவள் நகரில் இல்லையென்றால் யாருடைய கம்பீரக் குரல் அக்கிரமங்களுக்கும் அநீதிக்கும் எதிராக தெருக்களிலும் மேடைகளிலும் இன்மேல் கேட்கும்? ரேணுகாதேவி ஒரு வாரத்திற்கு என்றல்ல ஒருநாள் கூட நகரை விட்டு போகக் கூடாது என்று அவளின் விசிறிகள் உரத்த குரலில் கூப்பாடு போடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் இனத்திற்கு பாதுகாப்பு தருவதற்கு ஒரு பெண் இல்லை என்ற நிலை உண்டாகிவிடும். அவள் ஊரில் இல்லையென்றால் நகரில் செயின் அறுக்கும் சம்பவங்களும், கற்பழிப்பும் அதிகமாகிவிடும்.

ரேணுகா திருமணமாகாத பெண்ணாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம் வறுமையோ, அழகுக் குறைவோ அல்ல. பொருளாதார வசதிபடைத்த தந்தைக்கு ஒரே மகளாகப் பிறந்து எல்லாவித வசதிகளையும் அனுபவித்து வளர்ந்த பெண் அவள். ஆனால், மற்ற பெண்களிலிருந்து தான் மாறுபட்டவள் என்பதை சிறு வயது முதற்கொண்டே மனதில் வைத்துக் கொண்டிருப்பவள் அவள் என்பதும் உண்மை. அசாதாரணமான அறிவுத்திறன் படைத்த ஒரு ஆண் கிடைக்கும்வரை தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்பதில் அவள் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். தான் விரும்பக்கூடிய மனிதனை மட்டுமே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை ரேணுகா ஒருமுறை தன் தந்தையிடம் கூறவும் செய்தாள். ஒரு சராசரி மனிதனின் மனைவியாகவும் அவன் குழந்தைகளின் தாயாகவும் வாழ்வதைவிட திருமணமே செய்து கொள்ளாமல் அதே நேரத்தில் மன அமைதியுடன் தனக்குச் சொந்தமான வீட்டில் தனக்குப் பிரியமான புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பது எவ்வளவோ மேல் என்று அவள் அப்போதே முடிவு செய்துவிட்டிருந்தாள். இப்படி குடும்ப வாழ்க்கை என்னவென்று தெரியாமல், காதல் என்னவென்று தெரியாமலே ரேணுகா வளர்ந்தாள். அழகானவளாக, அழகு இல்லாதவளாக, இளமை பூத்துக் குலுங்குபவளாக, இளமை இல்லாதவளாக.

தன்னுடைய தலை முடியில் நரை தோன்றிய பிறகும் ரேணுகாவிற்கு கவலை என்ற ஒன்று உண்டாகவேயில்லை. கண்ணாடியில் தன்னுடைய உருவத்தைப் பார்த்தவாறு அவள் சொல்வாள்.

‘பரவாயில்லை. என் முகத்துல சுருக்கங்கள் இன்னும் விழல...’

அவள் மிகவும் விலை மதிப்புள்ள ஆடைகளை அணிய பிரியப் பட்டாள். பின்னி நிறுவனத்தின் பட்டாடைகள் மீது ரேணுகாவிற்கு அதிக விருப்பம். ஓரத்தில் மெல்லிய ஜரிகை போட்ட, இளம் நிறத்தில் இருக்கும் புடவைகளை அவள் மிகவும் விரும்புவாள். வான நிறம், மயிலிறகு வண்ணம், கடல் நீலம் ஆகிய வண்ணங்களில் வந்திருக்கும் ஒரு புதிய பட்டுப் புடவை ஜவுளிக்கடைக்கு வந்தால், அந்தக் கடையின் உயர் அதிகாரி ரேணுகாவிற்கு உடனடியாகத் தொலைபேசி மூலம் அந்தத் தகவலைக் கூறுவார். அந்தப் புடவையின் விலை இரண்டாயிரம் ரூபாயாக இருந்தாலும், அதை ரேணுகா கட்டாயம் வாங்கவே செய்வாள். அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது நன்றாகவே தெரியும். புது ஆடைகளிலிருந்து கிளம்பிவரும் அந்தத் தனிப்பட்ட மணம் ரேணுகாவைப் பித்துப் பிடிக்கச் செய்தது. மது அருந்தியதைப் போல் ஒரு போதை நிலையை அவள் புதிய பட்டாடைகளை அணியும்போது உணர்ந்தாள். தன்னுடைய சதைப் பிடிப்பு இல்லாத கன்னங்களில் அவள் சந்தன வாசனை கொண்ட ஒரு பவுடரைத் தேய்ப்பாள். அதைத் தவிர வேறு எந்த அழகுப் பொருளையும் அவள் பயன் படுத்தமாட்டாள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியில் ஆலிலைக் கிருஷ்ணனின் உருவம் ‘லாக்கெட்’ வடிவில் மாட்டப்பட்டிருக்கும். தன்னுடைய மனதில் அமைதியற்ற நிலை உண்டாகும்போது அந்த லாக்கெட்டைக் கையால் தடவிக் கொள்வது அவளின் வழக்கம். படுக்கும்போது தனியாக ஏதாவதொரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போது அவள் ‘கிருஷ்ணா... குருவாயூரப்பா என்னை காப்பாத்தணும்’ என்று மெதுவான குரலில் கூறுவாள். கன்யாஸ்திரீகள் தாங்கள் இயேசு கிறிஸ்துவின் மனைவிகள் என்று மனதில் கற்பனை பண்ணிக் கொள்வதைப் போல ரேணுகா தான் ஸ்ரீகிருஷ்ணனின் பத்தாயிரத்தெட்டு மனைவி மார்களில் ஒருத்தி என்று நினைத்துக் கொண்டு அதில் நிம்மதி அடைவாள். ‘உடல் சம்பந்தமில்லாத’ விஷயங்களில் மட்டுமே அவளுக்கு எப்போதும் ஆர்வம். தன்னுடைய நிர்வாண உடம்பைப் பற்றி தெளிவாக அறிந்திருந்த ரேணுகா அதை இன்னொரு மனிதன் முன்னால் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை தனக்கு எந்தக் காலத்திலும் வராமல் இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டினாள். புதினங்களிலும், உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களை விளக்கக் கூடிய நூல்களிலும், ஆண் - பெண் உறவைப் பற்றி அவள் படித்திருக்கிறாள். ஆனால், அதைப் படிக்கும்போது வெறுப்புடன்தான் அவள் படிப்பாள். அப்படிப்பட்ட ஒரு தகுதியற்ற செயலில் தான் எந்தக் காலத்திலும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதை அவள் எப்போதோ தீர்மானித்து விட்டிருந்தாள். தன்னுடைய உடம்பின் ரகசியங்களை சிதையில் எரியும்போது நெருப்பு மட்டும் தெரிந்து கொள்ளட்டும் என்றெண்ணினாள் அவள்.

“பெரியம்மா சிங்கப்பூருக்குப் போக தீர்மானிச்சாச்சு... அப்படித் தானே?” தங்கையின் மகளும் இருபத்தொரு வயது நிறைந்தவளுமான சிவா அவளைப் பார்த்துக் கேட்டாள். அவளை ரேணுகாவிற்கு மிகவும் பிடிக்கும் வாரத்தில் ஒரு நாள் - ஞாயிற்றுக்கிழமை அவள் ரேணுகாவுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிடுவாள். மற்ற நாட்களில் அவள் தான் தங்கியிருக்கும்  ஹாஸ்டலிலேயே தங்கிவிடுவாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel