Lekha Books

A+ A A-

விண்வெளிப் பயணம்

vinveli-payanam

1

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு

தோ.... கடல் பரப்பு நிலப்பரப்பைவிட உயர்ந்து விட்டது. பூமியின் நான்கில் மூன்று பாகங்களும் நீருக்கடியில் போய்விட்டன.

மனிதர்கள் மலைகளின் உச்சியில் வசிக்க ஆரம்பித்து விட்டார்கள். வருடத்தில் இரண்டு கால நிலைகளே இருந்தன - கோடை காலமும் குளிர்காலமும். ஒன்பது மாதங்கள் வெப்பமாகவும் மூன்று மாதங்கள் குளிராகவும் இருந்தன.

கோடைகாலத்தில் மிகவும் பலமான நெருப்புக் காற்று அடித்துக் கொண்டிருந்தது. அதனால் பள்ளிக் கூடங்கள் குளிர்காலத்தில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒன்பது மாதங்கள் விடுமுறை! நான்கு வருடங்கள் ஆகும்போது மட்டுமே ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு நடக்கும். ஒரு மாணவன் எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெறுவதற்கு நாற்பது வருடங்கள் ஆகும். பி.ஏ.வில் தேர்ச்சி பெற ஐம்பத்தாறு வருடங்கள்.

பூமி முன்பு மாதிரியே சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் ஒருதடவை சுற்றுவதற்கு மூன்று நாட்கள் தேவைப்படும். பகலுக்கும் இரவுக்கும் முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு நீளம் அதிகமாக இருந்தது.

வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் மனிதர்களும் மிருகங்களும் பகல் நேரத்தில் தூங்குவார்கள். இரவில் கண் விழித்திருப்பார்கள். ஆந்தை, வவ்வால், நரி ஆகிய இரவு நேரத்தில் விழித்திருக்கும் உயிரினங்கள் பகலில் சுற்றித் திரிந்து விட்டு இரவு வேளையில் தூங்கின. மனிதர்களின் நிறம் அடர்த்தியான கருப்பு நிறமாக ஆனது. வெள்ளை நிறம் கொண்ட மனிதர்களையும் வெள்ளை நிறம் கொண்ட யானைகளையும் எங்கும் பார்க்க முடியவில்லை. புராண நூல்களில் வெள்ளை நிற மனிதர்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. அதனால் அப்படிப்பட்ட மனிதர்களும் ஒரு காலத்தில் இந்த உலகத்தில் இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

பாகிஸ்தானின் தலைநகரம் அப்டாபாத்தாகவும் இந்தியாவின் தலைநகரம் அல்மோராகவும் ஆனது. இலங்கை வானொலியின் சத்தமே எங்கும் கேட்கவில்லை. இலங்கை நீருக்குக் கீழே போய்விட்டது. அங்கு இருந்த மக்கள் கேரளத்திலிருந்த மலைகளிலும் காடுகளிலும் அபயம் தேடினார்கள். அவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமை கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

பிரிட்டிஷ் தீவுகளின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. ஸ்காட்லேண்டின் மலைகளில் ஆங்கிலேயர்கள் சிலர் வாழ்கிறார்கள். அவர்கள் ஆடுகளை மேய்த்துத்தான் தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானும் நீருக்குக் கீழே போய்விட்டது. ஃப்யூஜியாமாவிற்கு அருகில் சில ஜப்பான்காரர்களைப் பார்க்க முடிந்தது.

காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. அரேபியர்கள் சுவிட்சர்லாண்டில் பேரீச்சம் பழத்தை விவசாயம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். எண்ணெய் கிணறுகளைக் கூறித்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர்களே நடைபெற்றன. அந்த எண்ணெய் கிணறுகள் இப்போது நீருக்குக் கீழே இருந்தன.

பூமியின் மக்கள் தொகை ஒன்றரை கோடியாக சுருங்கியது. உலகத்திலேயே ஒரே ஒரு மொழிதான் இருந்தது - மலைவாழ் மக்களின் மொழி.

ராகம்கூட ஒன்றே ஒன்றுதான் - மலைவாழ் மக்களின் ராகம்! எல்லோருக்கும் சேர்த்து ஒரே ஒரு மதம்தான் இருந்தது - மலைவாழ் மக்களின் மதம்!

இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகள் நீருக்கு அடியில் போய்விட்டன. அதனால் மலைகளின் உச்சியில் அமைச்சர்களின் கார்கள் நின்று கொண்டிருந்தன. மனிதர்கள் மீன் வலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பம்பாய் நீருக்கடியில் இருந்தது. கராச்சி எங்கு இருக்கிறது என்று தகவலே கிடைக்கவில்லை. மீன் பிடிப்பவர்கள் வலைகளை எறியும்போது கிடைக்கக்கூடிய அழகான கார்களைப் பார்த்து அந்த இடங்களில் அமைச்சர்கள் வாழ்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். லாகூர் இருந்த இடத்திலிருந்து சுறா மீன்களும் கராச்சி இருந்த இடத்திலிருந்து அமெரிக்கன் சுறா மீன்களும் கிடைக்கின்றன. டில்லி இருந்த இடத்திலிருந்து கொம்பு முளைத்த சுறா மீன்களும் லக்னோ இருந்த இடத்தலிருந்து கவிதை பாடும் மீன்களும் கிடைக்கின்றன. அலிகார் பல்கலைக் கழகமும் பனாரஸ் பல்கலைக் கழகமும் தங்களின் கலாச்சாரங்களை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு நீருக்கடியில் இருக்கின்றன. அஞ்ஜுமன்தர்வி உருது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு மகர மீன் வசிக்கிறது. அகில இந்திய இந்தி இலக்கிய அமைப்பு அலுவலகத்தில் கடல் பாம்புகள் வசித்துக் கொண்டிருக்கின்றன.

மக்கள் தொகை ஒன்றரை கோடியாகக் குறைந்துவிட்டது என்றாலும், போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

2

இமயமலையில் பேராசிரியரும் நான்கு பிள்ளைகளும்:

நான்காவது பையன் இரும்பாலான சிறுவன்

லைகளின் உச்சியில் அணு நிலையங்களை அமைத்து அங்கிருந்து ராக்கெட்டுகளை அனுப்புகிறார்கள். உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குழு ‘உலகம் முழுவதும் எங்களுக்குத் தேவை’ என்று கூறுகிறது. ‘தர மாட்டோம்’ என்று எதிர் குழு கூறுகிறது. மூன்றாவது குழுவில் ஒரே ஒரு ஆள் மட்டுமே இருக்கிறான். தான் வாழ வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கம். ஆனால், மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மூன்றாவது பிரிவில் இருப்பவர் வயதான ஒரு பேராசிரியர், மிகப்பெரிய விஞ்ஞானி. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள். பேராசிரியர் இமயமலையின் சிகரமான காஞ்சன் ஜங்காவில் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் உர்ஃபி (பதினேழு வயது), இரண்டாவது மகள் நாஸ் (பதினான்கு வயது), மூன்றாவது மகள் மோகினி (பன்னிரண்டு வயது), நான்காவது மகன் ஜிம்மி (எட்டு வயது). ஜிம்மி சாதாரணமானவன் அல்ல. பேராசிரியர் எட்டு வருடங்கள் மிகவும் சிரமப்பட்டு இரும்பால் உண்டாக்கிய குழந்தை அவன்.

ஜிம்மிக்கு எல்லா உறுப்புகளும் இருக்கின்றன. எல்லாமே இரும்பால் ஆனவைதான். அவனுக்கு இதயம் ஒன்றே ஒன்றுதான். இருந்தாலும் மூளை இரண்டு இருக்கின்றன. ஒரு மூளை செயல்படாமல் இருக்கும்போது, இன்னொரு மூளை வேலை செய்து கொண்டிருக்கும். அதேபோல இரண்டு வயிறுகள் இருக்கின்றன. ஒரு வயிற்றில் உணவுப் பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பான். இரும்பு மனிதன்தானே? பசி அதிகமாகத் தோன்றும். மின்சக்தி பயன்படுத்தித்தான் அவன் நடக்கிறான். மற்ற பிள்ளைகளைப்போல ஜிம்மியும் விளையாடுவான், சிரிப்பான், பள்ளிக்கூடத்திற்குச் செல்வான், படிப்பான். ஆசிரியர்களிடமிருந்து அடி வாங்கவும் செய்வான்.

அவனுக்கு அடி வாங்கியது மாதிரியே தெரியாது. இரும்பாயிற்றே! மூத்தவர்கள் கூட ஜிம்மியுடன் வம்பு தும்பு பேச பயப்படுவார்கள்.

அவனுடைய மூளையில் ஒரு சிறிய டைனமோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டைனமோவிற்கு நூறு வருடங்கள் செயல்படுவதற்கான செயல்திறன் இருக்கிறது. அதனால் ஜிம்மியின் ஆயுட்காலம் நூறு வருடங்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel