Lekha Books

A+ A A-

திருப்பம்

thiruppam

கிழவர் கண்டப்பன் தன் மகனிடம் கேட்டார்:

"அவங்க சாணார் ஜாதியைச் சேர்ந்தவங்களாச்சே! அவங்க பெண்ணை நமக்குத் தருவாங்களா?"

"தருவாங்களா இல்லையான்றதை தெரிஞ்சிக்கணும்னா, நாம அவங்கக்கிட்டப் போயி கேட்க வேண்டாமா?"- கொச்சப்பன் முதலாளி தன் தந்தையிடம் இப்படியொரு எதிர் கேள்வியைக் கேட்டார்.

"அப்படிக் கேக்குறப்போ, தரமாட்டேன்னு அவங்க சொல்லிட்டா? அது நமக்கு அவமானமில்லையா?"

"நாம அங்கே போயி பொண்ணு கேட்க மாட்டோமான்னு இருக்காங்க அவங்க. போயி கேட்டா உடனே அவங்க பொண்ணை இங்கே கொண்டு வந்து விட்டுட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க"- கொச்சப்பன் முதலாளியின் மனைவி சங்கரிதான் இப்படிச் சொன்னாள்.

"அடியே சங்கரி... நீ அர்த்தமில்லாமப் பேசாதே. செத்தாலும் சாணார்களுக்குன்னு இருக்குற மரியாதையையும் மதிப்பையும் இன்னும் இழக்காம இருக்குறவர் வேலாயுதன் சாணார்"- கொச்சப்பன் முதலாளி தன் மனைவியைத் திட்டினார்.

"ஓ! சாணார்களுக்குன்னு இருக்குற மரியாதையாம்! மதிப்பாம்! கஞ்சி வச்சுக் குடிக்கிறதே எப்போதாவதுதான்.... சாணார்களுக்குன்னு இருக்குற மரியாதை, மதிப்பு எல்லாம் பழைய கதைகள்"- சங்கரி திருப்பி அடித்தாள்.

கிழவர் கண்டப்பன் சொன்னார்:

"கொச்சப்பா, ரவீந்திரனுக்குத் திருமணம் செய்ய வேறு யாராவது பொண்ணு கிடைக்கலையா? அவனுக்குப் படிப்பு இருக்கு. பணம் இருக்கு. பிறகு அவனுக்கு எங்கே இருந்தாவது பொண்ணு கிடைக்காதா என்ன?"

"சாணாரோட மகள்தான் வேணும்னு அவன் ஒத்தைக் கால்ல நிக்கிறான்."

"அவன் அந்தப் பொண்ணோட அழகுல மயங்கிப் போய் அப்படிச் சொல்றான். ஆனால், அவள் தன்னோட - தன் தந்தையோட- சாணார்களுக்குன்னு இருக்குற மிடுக்கோட வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா...."

கண்டப்பன் கூற வந்தது முழுவதையும் கூற சங்கரி விடவில்லை.

"வந்து நுழைஞ்சால் என்ன? இந்த வீட்டுக்குள்ளே அந்த மாதிரி மிடுக்கையும் கர்வத்தையும் வச்சிக்கிட்டு யாரும் வர முடியாது. அந்த குணத்தையெல்லாம் அவங்க தங்களோட வீட்டுல வச்சிக்கணும்."

கொச்சப்பன் முதலாளி தன் மனைவிக்கு அறிவுரை சொன்னார்:

"அடியே சங்கரி... அப்பா சொன்னது உண்மைதான். மாலேத்து சாணார்களைப் பற்றி உனக்குத் தெரியாது. கஞ்சிக்கு வழியில்லைன்னாலும், அவங்களோட கவுரவத்தை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்குறவங்க அவங்க. அப்பா மாலேத்து வீட்டுல வேலைக்காரனா இருந்தவரு."

ஆமாம். கண்டப்பன் மாலேத்துக் குடும்பத்தில் வேலைக்காரனாக இருந்தவர்தான். மாலேத்து சாணார்கள் ஊரில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தார்கள் அந்தக் காலத்தில். அவர்கள் கொலை செய்யக் கூட அஞ்சமாட்டார்கள். அந்தக் காலத்தில் பல கொலைச் செயல்களையும் அவர்கள் செய்தவர்கள்தான்.

ஈழவ ஜாதியில் நம்பூதிரிமார்கள் என்றால் சாணார்களும் பணிக்கர்களும்தான். மாலேத்துக்காரர்கள் சாணார்களாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல-பெரிய பணக்காரர்களாகவும் இருந்தார்கள். அந்த ஊரிலிருந்த நிலங்களும் வீட்டு மனைகளும் பாதிக்கு மேல் அவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன.

ஏரிக் கரையிலிருந்த அந்த பெரிய மாளிகையைப் போன்ற வீடும், தானியங்கள் வைத்திருந்த கட்டிடமும், தொழுவமும் இப்போதும் அங்கு இருக்கத்தான் செய்கின்றன. வேலாயுதன் சாணாரும் அவருடைய பிள்ளைகளும் அங்குதான் வசிக்கிறார்கள். சங்கரி கூறியதைப் போல 'கஞ்சி குடிப்பது எப்போதாவது ஒருமுறைதான்' என்றாலும் சாணார்களுக்கென்றே இருக்கிற கவுரவ குணத்தை அவர்கள் இப்போதும் பத்திரமாக காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேலாயுதன் சாணாரின் முன்னோர்கள், பலரையும் ஏரியில் கட்டிப் போட்டு மூழ்கச் செய்திருக்கிறார்கள். அதை எதிர்ப்பதற்கான தைரியம் யாருக்கும் இல்லை. அப்படி யாருக்காவது தைரியம் இருந்தால், அவர்களின் குரல் வெளியே வந்ததே இல்லை.

கண்டப்பன் மாலேத்து குடும்பத்தில் வேலைக்காரனாக இருந்தான். அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வதுதான் அப்போதைய கூலி வழக்கமாக இருந்தது. கண்டப்பனும் அவன் குடும்பமும் மாலேத்து குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு நிலத்தில் குடியிருந்தார்கள்.

கண்டப்பன் மாலேத்திற்கு வேலைக்குப் போகும் போது, அவனுடைய மகன் கொச்சப்பனும் உடன் செல்வான். வாசலில் அவன் அமர்ந்திருப்பான். நாய்க்குக் கொடுப்பதில் அவனுக்கும் கொஞ்சம் பங்கு கிடைக்கும். அப்போது அவனுக்குப் பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும்.

வேலாயுதன் சாணாரும் கொச்சப்பனும் கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்டவர்கள். கொச்சப்பன் மாலேத்து வாசலில் உட்கார்ந்திருக்கும் போது, வேலாயுதன் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் எடுத்து அவன் மீது எறிவான். வலி தாங்காமல் கொச்சப்பன் அழுவான். வேலாயுதனின் மிகவும் பிடித்தமான விளையாட்டாக அது இருந்தது.

வேலாயுதன் சாப்பிட்டு முடித்ததும், மீதி இருப்பதைக் கொச்சப்பனுக்குக் கொடுப்பான். ஆனால் மென்று துப்பியது, மீனின் முற்கள் எல்லாவற்றையும் பாத்திரத்தில் இட்டு, அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்துதான் அவன் கொச்சப்பனிடம் தருவான். இறுதியாக அதில் துப்பவும் செய்வான். எனினும், கொச்சப்பன் அந்த எச்சில் பாத்திரத்தை வழித்து நக்குவான். வேலாயுதன் அதைப் பார்த்துக் கொண்டே கையைத் தட்டி சிரித்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் கொச்சப்பன் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, வேலாயுதன் அம்மிக் குழவியை எடுத்துக் கொண்டு வந்து அவன்மீது வீசி எறிந்தான். கொச்சப்பனின் மார்பின் மீது அந்த அம்மிக் குழவி விழுந்தது. அவன் மயக்கமடைந்து தரையில் விழுந்தான். அதைப் பார்த்து கண்டப்பன் ஓடி வந்தான். தன் மகன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான். அப்போது வேலாயுதனின் தாய் சொன்னாள்:

"செத்துப் போயிருந்தான்னா, அவனை தரையில குழி தோண்டிப் புதைச்சிடு கண்டப்பா. இதுக்குப் போய் எதுக்கு இப்படிச் சத்தம் போட்டு கூப்பாடு போடுறே?"

கண்டப்பன் தன் மகனைத் தூக்கிக் கொண்டு நடந்தான். சிறிது நேரம் கழிந்ததும் கொச்சப்பனுக்கு சுய உணர்வு வந்துவிட்டது.

அதற்குப் பிறகு கொச்சப்பன் மாலேத்து வீட்டிற்குச் சென்றதில்லை. அவனுடைய தந்தையும் தாயும் அந்த வீட்டிற்குச் செல்ல அவனை அனுமதிக்கவும் இல்லை.

கண்டப்பன் மாலேத்து வேலைக்குப் போகும் போது அவனுடைய மனைவி தேங்காய் மட்டையிலிருந்து கயிறு பிரித்துக் கொண்டிருப்பாள். இப்படித்தான் அந்தக் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. நாற்றமெடுத்த தேங்காய் மட்டையை வாங்கிக் கொண்டு வந்து, அதை அடித்து, அதிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட கயிறை சாயங்கால நேர சந்தைக்கு கொண்டு போய் அவள் விற்பாள். அதில் கிடைக்கும் பணத்தில் உப்பும் மிளகாயும் மண்ணெண்ணெயும் மரவள்ளிக் கிழங்கும் வாங்குவாள்.

பச்சைத் தேங்காய் மட்டைக்கு விலை குறைவு. அதை நீரில் போட்டு வைத்தால், அதற்கு விலை கூடுதலாக இருக்கும். பச்சைத் தேங்காய் மட்டையை வாங்கி அதை அடித்து, அதிலிருந்து பிரித்துக் கயிறாக்கி விற்றால், பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்று கொச்சப்பன் நினைத்தான். அதைத் தன் தாயிடம் கூறி கொஞ்சம் காசு வாங்கி, தன் தந்தைக்கும் அதில் கொஞ்சம் கொடுத்தான். அதைக் கொண்டு அவன் பச்சைத் தேங்காய் மட்டைகள் வாங்குவதற்காகக் கிளம்பினான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel