Lekha Books

A+ A A-

சாமக்கோழி

saamakozhi

நான் ஒரு சாமக்கோழி. இரவு நேரத்தில் மொத்த சிறையும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய அறையில் விழித்துக் கொண்டிருப்பேன் - ஆந்தையைப் போல. ஆந்தை அல்லது சாமக்கோழி.

இந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். சாமக்கோழியான எனக்கு இங்கே தனி மரியாதை இருக்கிறது. நான் ஒரு மனிதனைக் கொலை செய்தவன். நான் மரண தண்டனை விதிக்கப்பட்டவன்.

இங்கு இரவு நேரங்களில், நான் கொலை செய்த மனிதனின் ஆவி வருவதுண்டு. அப்போது நான் வியர்வையில் குளித்துப் போவேன். நரம்புகளில் பயத்தால் உண்டான குளிர் பரவும். நான் கயிற்றின் நுனியில் தொங்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய பயம் முடிவுக்கு வரும்.

எல்லோருக்கும் என்மீது ஏன் இந்தப் பச்சாதாபம்? எனக்கு இப்போது இருபத்து நான்கு வயது. அந்த வயதை நினைத்தா எல்லோரும் என்மீது பரிதாபப்படுகிறார்கள்? எனக்கு ஐம்பது வயது நடக்கிறது என்றால் யாராவது பரிதாபப்படுவார்களா?

இப்போது-

சிறை சூப்ரெண்ட்டின் பச்சாதாபம்... தலைமை வார்டருக்கும் மற்ற வார்டர்களுக்கும் பச்சாதாபம்... சிறை டாக்டருக்கு பச்சாதாபம்... அவ்வப்போது எனக்கு ஆறுதல் கூறுவதற்காக வரும் பாதிரியாருக்கு பச்சாதாபம்... இவற்றையெல்லாம்விட ஒருமுறை இங்கு வந்த சிறை ஐ.ஜி.கூட தன்னுடைய பரிதாப உணர்ச்சியை மறைத்து வைக்கவில்லை.

சிறை ஐ.ஜி. மிகவும் நல்லவர்.

மிடுக்கான ஒரு காவல்துறை அதிகாரி. ஒரு ஐ.பி.எஸ். படித்த மனிதர்.

ஒருநாள் காலையில் அவர் வந்தார். அவருடன் அவருடைய இரண்டு குழந்தைகளும் வந்திருந்தார்கள். ஏழெட்டு வயதைக் கொண்ட ஆண் குழந்தையும் நான்கைந்து வயது இருக்கக் கூடிய பெண் பிள்ளையும். பார்வையாளர்களில் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய சிறார்கள்.

சிறை ஐ.ஜி. கேட்டார்: ‘‘ஜோசப், நீ நல்லா இருக்கியா?’’

எனக்குச் சிரிப்பு வந்தது. நல்ல கேள்வி! மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்னிடம் கேட்கவேண்டிய கேள்விதான். சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் சொன்னேன்:

‘‘என்னுடைய நிலைமையில் இருக்கும் ஒரு ஆள் எந்த அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிக்கலாமோ, அந்த அளவுக்கு நான் சந்தோஷத்தை அனுபவிக்கிறேன், சார்.’’

‘‘உணவு?’’

‘‘புகார் சொல்ற அளவுக்கு இல்ல சார்.’’

‘‘சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகள்?’’

‘‘புகார் இல்லை சார்.’’

நான் இரும்புக் கம்பிகள் வழியாக என் கையை நீட்டினேன். நம்புங்கள். நான் ஒரு பாவம். அழகான எதையும் தொட விரும்புகிற பாவம்.

‘‘சார்...?’’

‘‘என்ன ஜோசப்?’’

‘‘உங்க பிள்ளைகள்தானே?’’

‘‘ஆமா...’’

‘‘நான் இவங்களைத் தொடலாமா சார்?’’

‘‘தாராளமா...’’ - ஐ.ஜி. புன்னகைத்தார். ஆனால், பிள்ளைகள் விலகி நின்றனர். அவர்களின் கண்களில் பயம் இருந்தது. நான் கொலைகாரன் என்ற விஷயம் அந்தப் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்குமோ? முன்கூட்டியே யாராவது அதைக் கூறியிருப்பார்களோ?

ஐ.ஜி. போனபிறகு தலைமை வார்டர் சங்குவண்ணன் என் சிறை அறைக்கு முன்னால் வந்தார். பெயர் சங்குப்பிள்ளை. எல்லோரும் சங்குவண்ணன் என்றுதான் அழைப்பார்கள். நரைவிழுந்த மீசைக்குச் சொந்தக்காரர்.

‘‘டேய் ஜோசப், நீ அந்தப் பிள்ளைகளை பயமுறுத்தினியா?’’

‘‘எந்தப் பிள்ளைகள்?’’

‘‘ஐ.ஜி.யோட பிள்ளைகளை. நான்தான் பார்த்தேனே! அழுதுகிட்டே போறாங்க.’’

‘‘கொஞ்சம் தொடட்டுமான்னு கேட்டேன்.’’

‘‘அது போதுமே! பிள்ளைகளுக்கு இன்னைக்கு காய்ச்சல் வரப்போகுது. நீ ஒருத்தனைக் கொலை செய்தவன்ற உண்மை பிள்ளைகளுக்குத் தெரியும்.’’

‘‘அது எப்படித் தெரியும் சங்கு வண்ணா?’’

‘‘ஐ.ஜி. முதல்ல அலுவலகத்துல ரெஜிஸ்டரையும் ஃபைலையும் பார்த்துக் கொண்டு இருந்தப்போ, பிள்ளைகளுக்குக் காட்சிகளைச் சுற்றிக் காட்டினது குட்டிக் குறுப்புதான் அவர் சொல்லியிருப்பார்.’’

குட்டிக் குறுப்பு என்ற வார்டரின் உண்மைப் பெயர் கருணாகரக் குறுப்பு. அவர் ஒரு ஒற்றை மனிதர். ஒரு பீமன் என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும். பெரிய உடம்பைக் கொண்டவர் என்பதால் யாரோ அவருக்கு குட்டிக் குறுப்பு என்று பெயரிட்டிருக்க வேண்டும்.

அவரைப் பார்க்கும்போது பயம் தோன்றும். ஆனால், குட்டிக் குறுப்பின் மனம் தும்பைப்பூவை ஒத்தது. சில நேரங்களில் எனக்கு ரகசியமாக பீடி தந்திருக்கிறார். வேறுசில சுதந்திரங்களையும் எனக்கு அவர் அனுமதித்திருக்கிறார். குட்டிக் குறுப்பு தந்த தாளில்தான் நான் எழுதுகிறேன். கொலைக் குற்றவாளியான நான் மற்ற குற்றவாளிகளுடன் பேசக்கூடாது என்றும்; அவர்களுடன் சேர்ந்து இருக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது. எனினும் அவர்களை வேலை செய்யக் கொண்டு செல்லும்போது, சில நேரங்களில் என்னையும் குட்டிக்குறுப்பு கொண்டு செல்வார். நான் நிலத்தைக் கொத்துவேன். புல் வெட்டுவேன். வேறு வேலைகளையும் செய்வேன். தனியாகச் சிறை அறைக்குள் கிடக்கும் எனக்கு சந்தோஷத்தை அளித்த நிமிடங்கள் அவை.

ஒருநாள் குட்டிக் குறுப்பு குற்றவாளிகளை வைத்துப் பூந்தோட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். நானும் அதில் இருந்தேன். நான் மிகவும் ஆர்வத்துடன் பாத்திகள் அமைத்தேன். விதைகளைத் தூவினேன். அப்போது வார்டர் ஹமீத் அங்கே வந்தார். ஹமீத் கேட்டார்: ‘‘டேய் ஜோசப், இது பூ பூத்து, அதைப் பார்க்குறதுக்கு நீ இருப்பியா?’’

நான் சொன்னேன்: ‘‘நான் இல்லைன்னா, வேற யாராவது பார்ப்பாங்க. அது போதாதா?’’

ஹமீத் சொன்னார்: ‘‘ஜோசப், உன்னை வருத்தப்பட வைக்கணும்ன்றதுக்காக நான் அந்தக் கேள்வியைக் கேட்கல தெரியுதா? இவையெல்லாம் பூத்தபிறகுதான் நீ போவே!’’

சங்கு வண்ணனுக்கும், குட்டிக் குறுப்பிற்கும் ஹமீத்திற்கும் சிறை சூப்ரெண்ட் கோமஸிற்கும் புரோகிதருக்கும் நான் ஒரு ஆச்சரியமான மனிதன். நான் இங்கு வந்து நூற்றி இருபது நாட்கள் ஆகி விட்டன. என்னுடைய முடிவுக்குப் பல நாட்கள் தீர்மானிக்கப்பட்டன. நடக்கவில்லை. என்னுடைய முடிவு மாறி மாறிப் போய்விட்டது. கடவுளின் சவுகரியக் குறைவு. என்னுடைய சிறு சிறு உடல்நலக் கேடுகள் - இவைதான் அதற்குக் காரணம்.

என்னுடைய முடிவு இப்படி நீண்டுகொண்டு போவது ஒரு ஆச்சரியமான விஷயம்தானே? வேறு காரணங்களைக் கொண்டும் நான் ஒரு ஆச்சரியமான பிறவியாக அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

நான் மலர்களை விரும்புகிறேன். சிறு குழந்தைகளைத் தொட ஆசைப்படுகிறேன். அவ்வப்போது பாட்டுகளை முணுமுணுக்கிறேன். நீல வானத்தைப் பற்றியும் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவதைப் பற்றியும் பேசுகிறேன். இப்படிப்பட்ட நான் ஒரு மனிதனை எப்படிக் கொலை செய்தேன். அதற்கான தைரியம் எனக்கு எப்படி வந்தது?

சங்கு வண்ணன் இருக்கும்போது ஹமீத் ஒருநாள் கேட்டார்: ‘‘எப்படி உனக்கு அந்த தைரியம் வந்தது?’’

வழக்கைப் பற்றிய முழுத் தகவல்களும் குட்டிக் குறுப்பிற்கும் சங்கு வண்ணனுக்கும் சூப்ரெண்ட் கோமஸுக்கும் நன்றாகத் தெரியும். அதாவது - நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்த தகவல்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel