
ஆற்றுக்கு அப்போது அளவிட முடியாத ஆழமும் யானையைக் கூட தூக்கி எறியக்கூடிய பலம் பொருந்திய நீரோட்டமும் இருந்தன.
ஆற்றின் கரையிலிருந்து அரை பர்லாங் தூரத்தில் உயரமான ஒரு நிலமும், அந்த நிலத்தில் ஒரு பழமை வாய்ந்த பகவதி ஆலயமும் இருப்பதைப் பார்க்கலாம். நேற்று இரவு குடித்து, சுயநினைவு இல்லாத நிலையில் அந்த ஆலயத்தின் வாசலில் வந்து படுத்துறங்கிய இக்கோரன், ஒரு பெரிய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான்.
அவன் எழுந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான்.
"அய்யோ! அய்யோ!" - அந்தக் கூக்குரல் மிகவும் பரிதாபமாக அதே நேரத்தில்- படிப்படியாக வலிமையை இழந்து அவனுடைய காதுகளில் வந்து மோதியது. அக்கரையிலிருந்துதான் அந்தக் குரல் வருகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். அவன் அந்தப் பக்கம் உற்றுப் பார்த்தான்.
அக்கரையில் நீரை நோக்கித் தாழ்ந்திருந்த கொம்பு ஒன்றில் யாரோ தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. கரை புரண்டு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நீர் அந்தக் கொம்பையும் அதில் தொங்கிக் கொண்டிருந்த உருவத்தையும் கீழ்நோக்கி சிறிது நேரம் இழுத்துக் கொண்டு போகும். அங்கிருந்து கொம்பும் அந்த உருவமும் காற்றோடு சேர்ந்து முன்பிருந்த இடத்திற்கு மீண்டும் வருவார்கள். அப்போதுதான் அந்தக் கூக்குரல் கேட்டது. மீண்டும் முன் சொன்ன மாதிரி நடக்கும்... உயிருக்கும், மரணத்திற்கும், மனித உயிருக்கும், ஆற்றுக்கும் இடையில் நடக்கும் அந்தப் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியதாக இருந்தது.
அந்த மனித உயிரைக் காப்பாற்ற இக்கோரன் அக்கரைக்குப் போய் ஆக வேண்டும்.
அதிர்ஷ்டவசத்தால் அந்தக் கோவிலுக்கருகில் ஒரு படகு கிடந்தது. சிறுவர்கள் வெயில் காலத்தில் குளிப்பதற்குப் பயன்படுத்திய ஒரு சிறு படகு அது. நீரில் துளாவுவதற்கு ஒரு தென்னை மரத்தின் மடலை இக்கோரன் கையில் எடுத்தான். அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட அவன் தாமதிக்கவில்லை. ஆபத்துடன் போராடுவது என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான். அவன் தானிருந்த இடத்திலிருந்து சுமார் ஒரு பர்லாங்க தூரம் மேல்நோக்கி படகைக் கொண்டு போனான். பிறகு படகில் ஏறி வேகமாக அதைச் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் படகு இப்படியும் அப்படியுமாக ஆடியவாறு பல சர்க்கஸ் வித்தைகளையும் காட்டியது. எனினும், அவன் நீரோட்டத்திற்கேற்றபடி அதைச் செலுத்தி, ஆற்றுக்கே தெரியாமல் அதை நெறிப்படுத்தினான். கஷ்டப்பட்டு முன் சொன்ன இடத்தை அடைந்தான். மேலும் சிறிது கீழே போனால், தானும் படகும் பயங்கரமான ஒரு சுழலில் சிக்கிச் சாகப் போவது உறுதி என்பது அவனுக்குப் புரிந்தது. அதனால் அவன் அந்த இடத்திலேயே படகை கரையின் பக்கம் கொண்டு போனான்.
கீழேயிருந்த அந்தப் பயங்கரமான சுழலின் மேற்பகுதியில்தான் அந்த உருவம் தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது அது ஒரு பெண் என்பதை இக்கோரன் புரிந்து கொண்டான். அவளை மூழ்கச் செய்து கொண்டிருந்த நீரோட்டம் அவளை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தது. அவளை நீரிலிருந்து உயர்த்திக் கொண்டிருந்த கொம்பு மட்டுமே அவளுக்கு ஆதாரமாக இருந்தது. நீருக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக அவளே சில நேரங்களில் கொம்பைப் பிடித்திருந்த தன் பிடியை அவளே விடுவிக்க முயற்சித்தாலும், அவளுடைய நீளமான கூந்தல் கொம்பில் சுற்றிக் கொண்டதால் அவளால் அந்தப் பிடியை விட முடியவில்லை.
அவளுடைய உயிர் அந்தக் கொம்பில் ஊசலாடிக் கொண்டிருப்பதை இக்கோரன் உணர்ந்து கொண்டான். அந்தக் கொம்பும் நீரோட்டத்தின் வேகமும் சேர்ந்து ஒரு இழுபறிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது அவள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த வேதனையுடன் கொம்பைப் பிடித்து மேலே உயரப் பார்ப்பாள். ஆனால், அதற்கான பலம் அவளிடம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. நீரைக் குடித்துக் குடித்து அவளுடைய வயிறு வீங்கிக் கொண்டே வந்தது.
இக்கோரன் கரை வழியாக அந்தக் கொம்பு இருக்கும் இடத்திற்குச் சென்றான். கண் இமைக்கும் நேரத்தில் அவளைக் காப்பாற்றுவதற்கு ஒரு வழியை அவன் கண்டுபிடித்தான். முன் சொன்ன கொம்பிலிருந்து சுமார் முப்பதடி கீழே இன்னொரு இடத்தில் கூட்டமாக கொம்புகள் மணலில் சாய்ந்தவாறு நின்றிருந்தன. அவன் ஒரே நிமிடத்தில் அதன் மீது வேகமாக ஏறி, நீரில் சாய்ந்திருந்த கொம்பை ஒரு கையால் இறுகப் பிடித்தான். இன்னொரு கையை நீட்டி அந்தக் கொம்பும் பெண்ணும் நீரில் மூழ்கி மேலே வருவதற்காக அவன் காத்திருந்தான். அந்தக் கொம்பும் அதில் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணும் நீருக்குள் காணாமல் போனார்கள். இக்கோரன் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான். நீருக்குள்ளிருந்து பெண்ணின் தலை மேலே வருவதைப் பார்த்தவுடன், அவன் அவளுடைய கூந்தலை கையை நீட்டிப் பிடித்து, அதைக் கத்தியால் அறுத்து, 'கொம்பை விடு' என்று சொன்னான். அவள் தன் பிடியை விட்டாள். இக்கோரன் நீர் வழியாக அவளை தன்னை நோக்கி இழுத்தான். பிறகு அவளை ஒரு கையால் தூக்கி தனக்கு அருகில் அந்தக் கொம்பின் மீது உட்கார வைத்தான்.
அப்போதும் ஆபத்தான கட்டம் கடக்கவில்லை. அவளையும் வைத்துக் கொண்டு அந்தக் கொம்பு வழியாகக் கீழே இறங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சொல்லப் போனால் இரண்டு பேர்களின் எடையையும் தாங்க முடியாத அந்தக் கொம்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட ஒரு ஆபத்தை இக்கோரன் முன்கூட்டியே சிறிது கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. மொத்தத்தில் இரண்டு பேரும் ஒன்றாக நீருக்குள் போய் விழும் நிலை உண்டானது. இக்கோரனுக்கு வேறு எந்த வழியும் தோன்றவில்லை. கடைசியில் நீர் தன்னை ஆக்கிரமிப்பதற்கு முன்பு நீரை தான் ஆக்கிரமிப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தான் இக்கோரன். அவளிடம் தைரியமாகத் தன்னை இறுகப் பற்றிக் கொள்ளும்படி கூறிவிட்டு அவன் மெதுவாக நீரை நோக்கி இறங்கினான்.
அவன் அவளையும் தாங்கிக் கொண்டு நீரைக் கிழித்துக் கொண்டு தன்னிடமிருந்த சகல சக்தியையும் பயன்படுத்தி கரையை நோக்கி அவன் நீந்தத் தொடங்கினான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook