Lekha Books

A+ A A-

மீனவனும் அவன் ஆன்மாவும்

Meenavanum Avan Aanmaavum

ளைஞனான மீனவன் எல்லா மாலை வேளைகளிலும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வான்.

கரையிலிருந்து காற்று வீசும்போது, குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவனுக்கு எதுவுமே கிடைக்காது. அதிகபட்சம், சிறிய அளவில் ஏதாவது மீன்கள் கிடைக்கும்; அவ்வளவுதான். காரணம்- கறுத்த சிறகுகளை வீசிக் கொண்டு அங்கு வரும் கடுமையான காற்றைப் பார்ப்பதற்காக கடலின் அலைகள் உயர்ந்து வந்து கொண்டிருக்கும். அதே நேரம்- கரையை நோக்கி காற்று வீசும் சமயத்தில், ஆழங்களுக்குள்ளிருந்து மேலே வரும் மீன்கள், வலையின் கண்ணிகளின் வழியாக அவனுடைய வலைக்குள் நீந்தி வந்து சேரும். அவன் அவற்றைப் பிடித்து, சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வான்.

எப்போதும் மதிய நேரம் கடந்த பிறகு கடலுக்குச் செல்வதைப்போல, அன்றும் அவன் புறப்பட்டான். அன்று மாலை, வலை மிகவும் கனமாக இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. இழுத்துப் படகில் போட முடியாத அளவிற்கு அது மிகவும் கனமாக இருந்தது. சிரித்துக்கொண்டே அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்: "இன்று நீந்துவதற்காக இறங்கிய மீன்கள் அனைத்துமே என்னுடைய வலைக்குள் சிக்கிக் கொண்டன என்று தோன்றுகிறது. அல்லது மனிதர்களை ஆச்சரியப்பட வைக்கும் பயங்கரமான உயிரினங்கள் ஏதாவது மாட்டிக்கொண்டிருக்குமோ? அதுவும் இல்லையென்றால் மகாராணிகள்கூட விரும்பக்கூடிய வினோதமான உயிரினங்கள் ஏதாவது இருக்குமோ?” அவன் தன்னுடைய பலம் முழுவதையும் முரட்டுத்தனமான கயிற்றில் பயன்படுத்தினான். கண்ணாடிப் பாத்திரத்தின்மீது பூசப்பட்ட நீலநிறப் பளிங்கைப்போல நரம்புகள் அவன் கையில் எழுந்து காணப்பட்டன. பருமன் குறைவாக இருந்த கயிறைப் பிடித்து இழுத்தவாறு அவன் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தான். இறுதியில், வலையின் மேற்பகுதி மெதுவாக நீருக்கு மேலே வர ஆரம்பித்தது.

ஆனால், அதற்குள் மீன்கள் எதுவும் இல்லை. பயங்கரமான உயிரினங்களும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வினோதமான உயிரினங்கள்கூட எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த ஒரு கடல் கன்னியைப் பார்த்தான்.

அவளுடைய கூந்தல் பொன் நிறத்தில் இருந்தது. அந்தக் கூந்தலின் இழைகளைப் பார்க்கும்போது, கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்த சுத்தமான தங்கத்தைப்போல இருந்தது. அவளுடைய சரீரம் யானையின் தந்தத்தைப்போல வெண்மை நிறத்தில் இருந்தது. வால் பகுதி வெள்ளியும் முத்துக்களும் நிறைந்ததாக இருந்தது. அதில் கடலில் இருக்கும் பச்சை நிறப் புற்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவளுக்கு சங்கைப் போன்ற கன்னங்களும் பவளத்தைப் போன்ற அதரங்களும் இருந்தன. அவளுடைய குளிர்ச்சியான மார்பகங்களின்மீது குளிர்ந்த கடலின் அலைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. அலைகள் அவளுடைய கண்களின் இமைகளுக்குப் பிரகாசத்தை அளிந்தன.

இளைஞனான மீனவன் அவளைப் பார்த்ததும், ஆச்சரியமும் பரவசமும் அடைந்து அப்படியே நின்று விட்டான். அந்த அளவிற்கு அவள் பேரழகியாக இருந்தாள். அவன் தன்னுடைய கைகளை நீட்டி வலையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து அருகில் வரும்படி செய்தான். ஒரு பக்கமாக சாய்ந்து நின்றுகொண்டு, அவன் அவளுடைய தோளில் தட்டினான். அவனுடைய ஸ்பரிசம் பட்ட கடல் கன்னி ஒரு கடல் காகத்தைப்போல அழுது கொண்டே கண் விழித்தாள். பயம் கலந்த நீலநிறக் கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். இப்படியும் அப்படியுமாக அசைந்து தப்பித்துச் செல்வதற்காக முயற்சித்தாள். ஆனால், அவன் அவளை பலமாகப் பிடித்து, தன்னோடு நெருக்கமாக இருக்கும் வண்ணம் செய்தான். அப்படிப் பிடித்திருந்ததால், அவளால் விடுபட்டுச் செல்லமுடியவில்லை.

தப்பித்துச் செல்வதற்கு ஒரு வழியும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட கடல் கன்னி அழ ஆரம்பித்தாள். “தயவுசெய்து என்னைப் போக அனுமதி. நான் ஒரு மகாராஜாவின் மகள். என்னை விடு... வயதான அவர் அங்கு தனியாக இருக்கிறார்.” அழுதுகொண்டே அவள் கெஞ்சினாள்.

ஆனால், இளைஞனான மீனவன் சொன்னான். “நான் உன்னை விடுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நான் அழைக்கும்போதெல்லாம் நீ வருவதாகவும், எனக்காக பாட்டு பாடுவதாகவும் வாக்குறுதி அளிக்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே உன்னை போவதற்கு அனுமதிப்பேன். அந்த சமயத்தில் உன்னுடைய பாடலைக் கேட்பதற்காக வந்துசேரும் மீன்களால் என்னுடைய வலை நிறையுமே!”

“நான் வாக்குறுதி அளித்தால், என்னைப் போவதற்கு அனுமதிப்பாய் என்பது உறுதியானதுதானே?”  கடல் கன்னி அழுதுகொண்டே கேட்டாள்.

“உண்மையாகவே... நீ போவதற்கு நான் அனுமதிக்கிறேன்” மீனவன் சொன்னான்.

கடல் உயிரினங்கள் கூறக்கூடிய உறுதிமொழி கொண்ட வார்த்தைகளைக் கூறி, அவன் அழைக்கும் போதெல்லாம் தான் வருவதாக அவள் சத்தியம் செய்து கொடுத்தாள். அவனுடைய பிடியிலிருந்து விடுதலை பெற்ற கடல் கன்னி இனம்புரியாத பயத்தால் நடுங்கிக்கொண்டே நீருக்கு அடியில் வேகமாகப் பாய்ந்து சென்றாள்.

2

தினமும் மதியத்திற்குப் பிறகு மீனவன் கடலுக்குச் செல்வான். அங்கு சென்று அவன் கடல் கன்னியை அழைப்பான். நீருக்கடியிலிருந்து மேலே வரும் அவள் அவனுக்காக பாட்டு பாடுவாள். அப்போது

அவளைச் சுற்றி டால்ஃபின்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும். தலைக்கு மேலே கடல் காகங்கள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும்.

அவளுடைய பாடல் மிகவும் இனிமை நிறைந்ததாக இருந்தது. இடுப்பில் வைத்திருக்கும் குஞ்சுகளுடன் குகைகளிலிருந்து குகைகளை நோக்கிப் பயணிக்கும் கடல்வாழ் உயிரினங்களின் கூட்டத்தைப் பற்றியும்; மன்னர் கடந்து செல்லும்போது சங்கு ஊதி ஓசை உண்டாக்கும் பச்சை நிற தாடியும், உரோமங்கள் நிறைந்த நெஞ்சையும் கொண்ட ட்ரைட்டன்கள் என்று அழைக்கப்படும் கடல்வாழ் மனிதர்களைப் பற்றியும்; மஞ்சள் நிற மணலில் மலர்ந்து கொண்டிருக்கும் இளஞ்சிவப்பு நிற செடிகளும்; பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏறும் தாவரங்களும்; வெள்ளி நிறப் பறவையைப்போல வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் மீன் குஞ்சுகளும்; நாள் முழுவதும் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கும் மென்மையான தொங்கும் பகுதிகளைக் கொண்ட பவளப் புற்றுகளும் நிறைந்த கடலின் தோட்டத்தைப் பற்றியும் அவள் பாடுவாள். செதில்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான பனிக்கட்டித் துண்டுகளுடன், வடக்கு திசைக் கடலிலிருந்து அங்கு வரும் மிகப்பெரிய திமிங்கிலங்களைப் பற்றியும் அவள் பாடினாள்.

கப்பலில் செல்லும் வணிகர்களை வசீகரிக்கக்கூடிய இனிய கதைகளைக் கூறி, கடலில் விழச் செய்யும் ஸைரன் என்ற கடல் கன்னியும், ஆழங்களுக்குள் மூழ்கும் கப்பல்களும், அவற்றின் மிகப்பெரிய பாய் மரங்களும், குளிர்ந்து மரத்துப்போய் பாய்மரத்தின் கயிறில் தொங்கிக் கொண்டிருக்கும் மாலுமிகளும், கப்பலின் திறந்து கிடக்கும் சாளரங்கள் வழியாக நுழைந்து செல்லும் மாக்கெரல் என்ற காற்றும் அவளுடைய இசைக்கான விஷயங்களாக ஆயின.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel