
கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்யும், பயண விரும்பியான மிகச் சிறிய பார்னக்கியைப் (ஒரு வகையான கடல்வாழ் உயிரினம்) பற்றியும்; பாறைகளின் இடைவெளிகளில் வாழும்- கறுத்து நீண்ட கைகளை நீட்டி இரைகளைப் பிடிக்கும் கனவா மீன்களைப் பற்றியும் அவள் பாடினாள். பட்டால் உருவாக்கப்பட்ட பாயைக் கொண்டிருக்கும் கப்பலைச் சொந்தமாக வைத்திருக்கும் முத்துச் சிப்பியைப் பற்றியும்; சந்தோஷமாக இருக்கும்போது யாரையும் மயக்குகிற வகையில் ‘ஹார்ப்’ வாசிக்கும் கடல்வாழ் ஆண்களைப் பற்றியும்; சிறிய டால்ஃபின்களைப் பிடித்து, அவற்றின் வழுவழுப்பான சரீரத்தில் ஏறிப் பயணம் செய்யும் குழந்தைகளைப் பற்றியும்; வெண்மையான நுரைகளில் ஓய்வெடுத்துக் கொண்டு, தேவைப்படும் நேரத்தில் மாலுமிகளுக்கு உதவியாக இருக்கும் கடல் கன்னிகளைப் பற்றியும்; வளைந்த தும்பிக்கையைக் கொண்ட கடல் சிங்கத்தைப் பற்றியும்; சிறந்த ஆன்மாக்களுடன் சேர்ந்து திரியும் கடல் குதிரைகளைப் பற்றியும் அவள் பாடல்கள் பாடினாள்.
கடல் கன்னி அவ்வாறு பாடிக்கொண்டிருக்கும் போது, ஆழங்களுக்குள் இருந்து பாடலைக் கேட்பதற்காக மீன்கள் மேலே வரும். மீனவன் அவற்றை வலை வீசிப் பிடிப்பான். வேறு சில மீன்களை அவன் ஈட்டியை எறிந்தும் பிடிப்பான். மீனவனின் படகு மீன்களால் நிறைந்திருப்பதைப் பார்த்ததும், அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே மீண்டும் கடலுக்குள் சென்று விடுவாள்.
எனினும், ஒருமுறைகூட அவள், அவன் தொடக்கூடிய அளவில் அருகில் வந்ததே இல்லை. அவன் பல நேரங்களில் அவளிடம் கூறியும், அதற்காக கெஞ்சிக் கேட்டுக் கொண்டும், அவள் அதை அனுமதித்ததே இல்லை. எப்போதாவது அவளைப் பிடிப்பதற்கு முயற்சிக்கும்போது, அந்த நிமிடத்தில் ஒரு நீர் நாயின் உடல் மொழியுடன் அவள் கடலுக்குள் தாவிச் சென்று விடுவாள். நாட்கள் செல்லச் செல்ல அவளுடைய குரல் அவனுடைய காதுகளுக்கு மிகவும் இனிமை நிறைந்ததாக ஒலித்தது. அவன் தன்னுடைய வலையையும், உரையாடலையும், தொழிலையும் மறக்கக் கூடிய அளவிற்கு அந்தக் குரல் இனிமையானதாக இருந்தது. சிவப்பு நிறச் செதில்களையும் பொன் நிறக் கண்களையும் கொண்ட மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. ஆனால், அவன் அவற்றை கவனிக்கவே இல்லை. அவனுடைய ஈட்டி பயன்படுத்தப்படாமல் பக்கத்திலேயே கிடந்தது. வலையை வீசிப் பிடிக்கப்படும் மீன்களைப் பாதுகாத்து வைக்கக் கூடிய ஒரு பாத்திரம் வெறுமனே கிடந்தது. பாடலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, கண்களை மூடிக்கொண்டு, வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, அவன் படகிலேயே படுத்திருப்பான். சுற்றிலும் பனிப்படலம் வந்து மூடுவது வரை, சந்திரன் உதயமாகி நிலவு வெளிச்சம் பரவும் வரை அவன் அதே இடத்தில் படுத்திருப்பான்.
ஒருநாள் அவன் கடல் கன்னியை வரவழைத்துச் சொன்னான்: “கடல் கன்னியே, உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீ என்னை மணமகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
ஆனால், கடல் கன்னி மறுப்பை வெளிப்படுத்துவதைப்போல இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டினாள். “உனக்கு இருப்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ஆன்மா.” அவள் சொன்னாள்: “நீ அதை விட்டுவிட்டு வந்தால் மட்டுமே, நான் உன்னைக் காதலிக்க முடியும்.”
"இந்த ஆன்மாவைக் கொண்டு எனக்கு என்ன பயன்? என்னால் அதைப் பார்க்க முடியவில்லை; தொடவும் முடியவில்லை. என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அப்படி இருக்கும் போது, நான் அதை விட்டு வந்தால் என்ன பிரச்சினை வரப் போகிறது? இன்னும் சொல்லப் போனால்- அப்படிச் செய்வதுதான் எனக்கு நல்லதும்கூட...” மீனவன் சிந்தித்தான். சந்தோஷத்தால் அவனுக்குள்ளிருந்து ஒரு சத்தம் வெளியே வந்தது. வண்ணம் பூசப்பட்ட படகிலிருந்து எழுந்து அவன் கடல் கன்னியை நோக்கித் தன்னுடைய கைகளை நீட்டினான்.
“ஆன்மாவை உதறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். நீ என்னுடைய மணமகளாக ஆவாய் அல்லவா? நான் மணமகனாகவும்... இந்தக் கடலின் ஆழங்களுக்குள் நாம் இருவரும் சந்தோஷமாக வாழ்வோம். நீ பாடல்களின் மூலம் கூறியவை அனைத்தையும் எனக்குக் காட்டவேண்டும். நீ விரும்பும் வண்ணம் நானும் நடந்து கொள்வேன். இனி நாம் வாழ்க்கையில் பிரியவே மாட்டோம்” என்றான் அவன்.
அவனுடைய சந்தோஷத்திற்காக அந்த கடல் கன்னி சிரித்தாலும், அவள் தன்னுடைய முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டிருந்தாள்.
"ஆனால், என்னுடைய ஆன்மாவை எப்படி உதறுவது?” இளைஞனான மீனவன் சிந்தித்தான். “சொல்... எப்படி அதைச் செய்ய முடியும்? வழி தெரிந்தால் போதும்... நான் அதை உதறி விடுவேன்...”
“ஹா! எனக்குத் தெரியாது.” கடல் கன்னி சொன்னாள்: “கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.” பதைபதைப்புடன் அவனைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, அவள் கடலுக்குள் மறைந்தாள்.
அடுத்த புலர்காலைப் பொழுதில், சூரியன் உதயமாகி ஒரு அடி உயரம் எழுவதற்கு முன்பே, இளைஞனான மீனவன் புறப்பட்டான். அவன் பாதிரியாரின் வீட்டுக்குச் சென்று, கதவை மூன்று முறை தட்டினான்.
சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்த பாதிரியார், வந்திருப்பது யார் என்பதைத் தெரிந்துகொண்டு, கதவின் தாழ்ப்பாளை நீக்கிவிட்டு சொன்னார். “வா.... உள்ளே வா...
இளைஞனான மீனவன் உள்ளே சென்று, தரையில் விரிக்கப்பட்டிருந்த புல்லாலான பாயில் முழங்காலிட்டு அமர்ந்தான். “ஃபாதர்.... நான் ஒரு கடல் வாழ் உயிரினத்தைக் காதலிக்கிறேன். மனதில் இருக்கும் ஆசை நிறைவேறுவதற்குத் தடையாக என்னுடைய ஆன்மா இருக்கிறது. ஆன்மாவை நான் எப்படி அகற்றுவது? சொல்லுங்கள்... உண்மையாகச் சொல்வதாக இருந்தால் எனக்கு அதனால் எந்தவொரு பயனும் இல்லை. என்னால் ஆன்மாவைப் பார்க்க முடியவில்லை. அதைத் தொடவும் முடியவில்லை. அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது...” வேத நூலை வாசித்துக் கொண்டிருந்த பாதிரியாருக்கு முன்னால் மீனவன் தன்னுடைய பிரச்சினையைக் கூறினான்.
அதைக் கேட்டு பாதிரியார் நெஞ்சில் அடித்துக் கொண்டார். “கஷ்டம் கஷ்டம்! உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. ஒருவேளை.... மூளையில் கோளாறு உண்டாக்கும் விஷச் செடிகள் எதையாவது சாப்பிட்டு விட்டாயா? மனித உடலில் மிகவும் புனிதமான பகுதியே ஆன்மாதான். கடவுள் நமக்கு நேரடியாகத் தந்திருக்கும் ஆன்மாவை மிகவும் புனிதத் தன்மையுடன் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். மனித ஆன்மாவை விட மதிப்புள்ள வேறு எதுவுமே இல்லை. குழந்தை, இன்னும் சொல்லப் போனால்- அதோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய அளவிற்கு வேறு எதுவுமே பூமியில் இல்லை. இந்த பூமியிலுள்ள தங்கம் முழுவதிற்கும் நிகரானது- மன்னர்களின் ரத்தினங்களைவிட விலை மதிப்பு கொண்டது... அதனால்... என் குழந்தையே! இதைப் பற்றி இதற்குமேல் சிந்திப்பதற்கே இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook