
“எப்படி சொல்ற?”
அந்தர்ஜனம் அன்றைய சம்பவத்தைச் சற்று மெருகேற்றிச் சொன்னாள்:
“லட்சம் கோழிகளோட கூட்டம் இருந்தாலும், அதுல எந்தக் கோழிக்கு நோய் இருக்குன்னு தெளிவா சொல்லக் கூடிய ஆளு.”
“யாரு?”- நாராயணன் அலட்சியமான குரலில் முனகினான்.
அவனுடைய மொத்த ஆர்வமும் தன்னுடைய மனைவிமீது இருந்தது. தேனிலவுக் காலமாயிற்றே!
காமசாஸ்திர விதிகளின்படி நாராயணன் அவளுடன் இன்பம் காண தயாராகிக் கொண்டிருந்தபோது உமாதேவி கேட்டாள்:
“உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா?”
ஆனந்தக் கயிறு அறுந்த கோபத்தில் கணவன் கேட்டான்:
“எதுல?”
“கோழி வளர்க்குறதுல...”
“மண்ணாங்கட்டி! இங்கும் அதே பேச்சுதானா? உமா, உனக்கு கோழி மேல அப்படி என்ன ஈடுபாடு?”- அவன் கேட்டான்.
“பிறகென்ன? சுவாரசியமான ஒரு விஷயமாச்சே அது! பணமும் கிடைச்ச மாதிரி இருக்கும்.”
“சரிதான்...”- நாராயணனும் ஒத்துக் கொண்டான். செயல் தொடர்ந்தது.
“உங்களுக்கு விருப்பம் இருக்குறது மாதிரி தெரியல...” அந்தர்ஜனம் குறைப்பட்டாள்.
‘பெரிய தொந்தரவா இருக்கே பகவானே!’- நாராயணன் மனதிற்குள் கூறினான். அவளை கோழிப் பண்ணைக்கு அனுப்பி வைத்ததே தப்பான ஒரு விஷயமாகி விட்டது! திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கின்றன. அதற்குள் அவளுடைய ஆர்வம் முழுவதும் வேறொரு விஷயத்தில் இருக்கிறது.
அவனுக்கு அதைப் பார்த்து வெறுப்பாக இருந்தது. கோழிகள் மீதும் வெறுப்பு தோன்றியது.
எனினும், தலையணை மந்திரம் பலித்தது. உமாதேவி கோழி மீது கொண்ட காதல் படிப்படியாக நாராயணனுக்கும் படர்ந்தது.
உமாதேவி ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் கோழிகளுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டாள். ஒவ்வொரு இரவிலும் தன் கணவனிடம் கோழிகளைப் பற்றி மேலும் மேலும் அதிகமாகக் கூறிக் கொண்டே இருந்தாள்.
நாராயணனும் காலப்போக்கில் ஒரு கோழிப் பிரியனாகிவிட்டான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனும் கோழி வளர்க்கும் இடத்திற்குப் போக ஆரம்பித்தான். தன் தம்பியைப் போல கோழிகள் மீது அன்பு செலுத்த முயற்சித்தான். அவற்றுக்குத் தீவனத்தைப் பிரித்துப் போட்டான். முட்டை வியாபாரத்தில் கவனம் செலுத்தினான்.
முட்டை வியாபாரம் வளர்ந்திருந்த காலமது. வியாபாரத்திற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகப் பண்ணை வகையில் ஒரு சைக்கிளையும் வாங்கியிருந்தான்.
சைக்கிளுக்குப் பின்னால் முட்டைக் கூடையை வைத்துக் கொண்டு தேவதத்தன் நகரத்தில் பயணித்தான்.
பொரிஞ்ஞும் அவனுடைய ஆட்களும் கிண்டல் பண்ணினார்கள்: ’முட்டை! முட்டை!’
தேவதத்தன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு அது அவமானமாகத் தோன்றவில்லை. வேலை இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதைவிட இது எவ்வளவோ மேல்! வேலை செய்பவர்களைவிட அதிக வருமானம் சம்பாதிக்கலாம். இதில் என்ன கேவலம் இருக்கிறது! இன்னொருவனிடம் கை நீட்டி சம்பளம் வாங்குவதைவிட மரியாதையானது இதுதான்.
கிண்டல் பண்ணிய ஆட்கள் முட்டையைக் கடனாகக் கேட்டார்கள். விலையைக் குறைத்துத் தரும்படி கேட்டார்கள்.
அதற்குச் சம்மதித்த தேவதத்தன் கேட்டான்:
“இப்போ கேலி பண்ண வேண்டியதுதானே?”
அதற்கு அவர்கள் சிரித்தார்கள். எனினும், தேவதத்தன் இல்லாத நேரத்தில் அவனையும் அவனுடைய சகோதரர்களையும் கேலி பண்ணவே செய்தார்கள்.
“மூணு பேருக்கும் பைத்தியம். மூத்த திருமேனி கொண்டு வந்திருக்கிற அந்தர்ஜனத்திற்கும் கோழி பைத்தியம்...”
“தேவதத்தனுக்குக் கோழியோட முகச்சாயல் அப்படியே இருக்கு.”
அந்தக் கருத்து சிரிப்பலைகளை உண்டாக்கியது.
மக்களின் எண்ணத்தைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் தேவதத்தனும் உமாதேவி அந்தர்ஜனமும் சில நேரங்களில் நாராயணனும் கடுமையாக உழைத்தார்கள். கோழிப்பண்ணை வளர்ந்தது. கோழிகளின் எண்ணிக்கை கூடியது. வியாபாரம் வளர்ந்தது. வருமானம் அதிகமானது. வங்கிச் சேமிப்பு வளர்ந்தது.
திருமேனிமார்கள் சந்தோஷப்பட்டார்கள். ஒரு திருமேனி மட்டும் கவலையில் இருந்தான். உண்ணி சங்கரன்!
காதலில் உண்டான ஏமாற்றம்தான் அவனுடைய கவலைக்குக் காரணம்.
அய்யருடைய மகள் காதல் கடிதம் எழுதுவதில்லை. அவனுக்காகக் காத்து நிற்பதில்லை. சிறிதும் எதிர்பாராமல் வழியில் பார்த்தால் ஒதுங்கி நடந்து போகிறாள்.
அவள் தன்னைவிட்டு விலகி விலகிச் செல்வதைப் பார்த்து உண்ணி மனதில் கவலைப்பட்டான். அதற்கான காரணத்தைதான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் ஒருமுறைகூட அவளிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதேயில்லை. இரவு நேரங்களில் அவள் பலமுறை வந்திருக்கிறாள். ஒருமுறைகூட அவன் தன்னுடைய மரியாதையை விட்டுக் கொடுத்ததில்லை. ஆரம்ப நாட்களில் அவன் பயந்து அவளிடமிருந்து விலகியே நின்றான். பயம் இல்லாமற் போன பிறகு கூட மரியாதையை விடாமல் காப்பாற்றிக் கொண்டுதான் இருந்தான். மொத்தத்திலேயே ஒன்றிரண்டு தடவைதான் அவளை அவன் தொடவே செய்திருக்கிறான். அதுகூட அவளுடைய உற்சாகத்தால்தான் நடைபெற்றது.
ஒருமுறைதான் அவன் எல்லையையே மீறினான். மெதுவாக முத்தம் கொடுத்துவிட்டான்.
அந்த விஷயத்தில்கூட அவள்தான் முதற்காரணமாக இருந்தாள். அவள் அவனுடன் படுத்தாள். கிச்சு கிச்சு மூட்டினாள். முடியை வருடினாள். கட்டிப் பிடித்தாள். அவனுக்கு முத்தம் தந்தாள். அதற்குப் பிறகுதான் அவன் அவளுக்கு முத்தம் தந்தான்.
அதற்குப் பிறகு எதுவுமே செய்யவில்லையே! பிறகு எதற்குக் கோபம்?
ஒருவேளை அவர்களுடைய இரவு நேர சந்திப்பு விஷயம் அவளுடைய வீட்டிற்குத் தெரிந்திருக்குமோ?
அவளிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு அவன் நடந்தான். இறுதியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவன் மட்டும் தனியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவன் வேகமாக நடந்து அவளுக்கு அருகில் போய் நின்றான்.
“ஜெயா...”
அவள், அவன் அழைத்ததைக் காதுகளிலேயே வாங்கவில்லை. திரும்பிப் பார்க்கவுமில்லை.
“ஜெயா, என்மீது கோபமா?”
அவள் பேசாமல் நடந்தாள்.
“ஜெயா, என்னை மறந்துட்டியா? இல்லாட்டி உன் அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சா? என்னைப் பார்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரா? சண்டை போட்டாரா?”
அய்யரின் மகள் முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு நடந்தாள். இறுதியில் அவன் திரும்பத் திரும்ப அழைக்கவே, அவள் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் வெறுப்பும் கோபமும் இருந்தன. வெறுப்பான குரலில் அவள் சொன்னாள்:
“என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க, மிஸ்டர்”
கவலையில் மூழ்கிய காதலன் கண்ணீரில் குளித்த இரவுகளை எண்ணினான்.
நிலைமை இப்படி இருக்கும்போது ஒருநாள் காலையில் வெங்கிட்டராமன் வீட்டிற்குள் வந்தான். ஏதோ பயங்கரமாக வெடிக்கப் போகிறது என்றெண்ணி பயந்து உண்ணி வீட்டுக்குள்ளேயே இருந்தான். எனினும், ஆர்வத்தை அடக்க முடியாமல் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook