![பாக்கன் paakkan](/images/pakkan-novel.jpg)
“பாக்கா... வா நாம் போகலாம். கச்சேரி நடக்கட்டும்.”
பாகவதரைப் பார்த்து அமதன் கூறினான்.
“ஸ்வாமி, சரஸ்வதி தேவிக்கு பிராமணனாயிருந்தாலும், புலையனாயிருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். இதை நீங்களும் ஒரு நாள் உணரத்தான் போகிறீர்கள். நாங்கள் வருகிறோம்.”
தன்னுடைய தந்திரம் பலித்துவிட்டது என்கிற பெருமிதத்துடன் நம்பூதிரியைப் பார்த்தார் பாகவதர்.
ஆனந்தம் மேலிட்டு நிற்கக் கூறினார் நம்பூதிரி.
“வாங்கோ... இனி கச்சேரி நடத்துவோம்...”
அன்று பௌர்ணமி நாள். பூர்ண சந்திரன் வானின் மையத்தில் நின்று புன்னகை செய்து கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றிலும் இருந்த மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் குளிரைத் தாங்கமாட்டாமல் முனகிக் கொண்டிருந்தன.
அமதனும், குஞ்ஞிப்பாக்கனும் அமதனின் மற்ற மாணவர்களும் வெளியே அமர்ந்து ஏதோ முக்கியமான விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கோவிலுள் இருந்து புறப்பட்டு வந்த ஒரு தேவகானம் அவர்களுடைய செவிகளில் விழுந்தது. தங்களுடைய செவியைத் தீட்டிக் கொண்டு அந்த கானத்தை மிகவும் உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கினர் எல்லோரும்.
ஸ்வரம் என்னவென்றும் தெரியாவிட்டாலும், அவர்களுடைய உள்மனத்தை அந்த கானம் தொட்டுக்கொண்டிருந்தது என்பது உண்மை.
“எல்லோரும் வாங்க. கோபுரத்தின் அருகே நின்னு பாட்டைக் கேட்போம்” அமதன் கூறினான். எல்லோரும் நடந்து சென்று கோபுரத்தின் அருகே நின்று உள்ளே பார்த்தனர்.
சந்நிதானம் பூட்டப்பட்டுவிட்டிருந்தது. பூசாரி போய் நிறைய நேரம் ஆகிவிட்டது போல் தோன்றியது. கோயிலில் கூடுகட்டி வாழும் குருவிகள் கீச் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. நிலவு வெளிச்சம் கோவில் சுவரில் விழுந்து கொண்டிருந்தது. இனிமையான அந்தக் காட்சியைக் கண்டு மெய் மறந்து நின்றிருந்தனர் அமதனும், அவன் நண்பர்களும்.
உள்ளே யார் இருக்கிறது என்று அறியும் ஆவலுடன் அவர்களுடைய கண்கள் நாலா பக்கமும் அலைந்து கொண்டிருந்தன. ஒருவரும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால், கானமழை மட்டும் கோவிலின் ஒரு பக்கத்திலிருந்து காற்றில் கலந்து வந்து அவர்களுடைய காதுகளுள் நுழைந்து கொண்டேயிருந்தது. அப்போது கானத்தின் ஸ்வரம் உயர்ந்தொலித்தது.
பகவதி ஸ்தோத்திரம் அது. பாட்டில் பக்திப்பிரவாகம் நிறைந்து ஒழுகிக் கொண்டிருந்தது. பாட்டைக் கேட்டு, அதன் இன்ப இசையில் மயங்கியோ என்னவோ கீச் கீச் சென மீண்டும் குரல் எழுப்பின பறவைகள்.
தாழ்ந்த குரலில் கேட்டான் குஞ்ஞிப்பாக்கன்.
“நான் வேண்டுமானால் உள்ளே போய் பார்க்கட்டுமா?”
“ஏன்? நாம் எல்லோரும் போவோம். ஆனால் யாரும் தப்பித் தவறி சப்தம் போட்டு விடக்கூடாது” -என்றான் அமதன்.
அவர்கள் கோவிலுள் காலடி எடுத்து வைத்து நுழைந்தார்கள்.
உள்ளே சந்நிதானத்தின் முன் சற்று மெலிந்த குட்டையான உருவமொன்று சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறது. கண்கள் மூடியிருக்கின்றன. எண்ணெய் காணாத நீண்டு தொங்கும் தலைமுடி- ஈரமுடன் காட்சியளிக்கும், கிழிந்துபோன ஆடை. சுருக்கமாகக் கூறினால், எளிமையின் இருப்பிடம், சற்று வித்தியாசமான தோற்றம்.
சிறிது நேரத்தில் கானம் நின்றது. அந்த மனிதர் கண்களை மூடிய நிலையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மூச்சுகூட நின்றுவிட்டதுபோல் தோன்றியது. அவரிடம் எந்தவிதமான அசைவும் காணப்படவில்லை.
கண்கள் லேசாகத் திறந்தன. ஒரு கீர்த்தனம் வாயிலிருந்து வெளிவந்தது- அது முடிந்ததும் மற்றொரு கீர்த்தனம். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நள்ளிரவு நேரத்தில், தன்னந்தனியாக, இந்தக் கோவிலுக்கு வந்து கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கும் இந்த மனிதர் யாராக இருக்க முடியும்? அமதனும், குஞ்ஞிப்பாக்கனும், மற்ற மாணவர்களும், மனதைப் போட்டுக் குழம்பிக் கொண்டார்கள்.
சங்கீதத்தின் ஒரு இனிய பிரபஞ்சத்தையே அங்கே சிருஷ்டித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். அந்த நாத மெய்நிலையில் லயித்துப்போய் மயங்கி நின்றன கோவிலும், கோவிலைச் சார்ந்த சூழலும். நட்சத்திரங்கள் கானத்தின் இசை வடிவில் ஐக்கியமாகி வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. நிலவு இசையின் இனிமையில் தோய்ந்து வானின் மையத்தில் எவ்வித சலனமுமின்றி அசையாமல் நின்று கொண்டிருந்தது.
கானம் முடிந்தது. எழுந்து நின்ற மனிதர் சந்நிதானத்தை நோக்கி இரண்டு கைகளையும் குவித்து வைத்துக்கொண்டு நின்றார். அப்போது அவருடைய பார்வையில் அமதனும், அவனுடைய மாணவர்களும் தெரிந்தார்கள்.
“நீங்க ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தீர்கள்” - அவருடைய குரலில் கோபமும் கலந்தொலித்தது.
“ஸ்வாமி, எங்களை மன்னித்து விடுங்கள்” -மிகவும் பணிவுடன் கூறினான் அமதன்.
அவர் வெளியே நடந்து செல்ல, அவருடைய அடியைப் பின்பற்றி நடந்து சென்றனர் அவர்கள்.
“நீங்க ஏன் என் பின்னாலேயே வரவேண்டும்”- அவர் குரல் சற்று உயர்ந்து ஒலித்தது.
யாரும் ஒன்றும் பேசவில்லை.
வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்தார் அந்த மனிதர்.
“நள்ளிரவு நேரத்தில் கூட என்னைத் தனியே இந்த உலக மக்கள் விடுவதா இல்லை. ஆமாம்... நீங்கல்லாம் யார்? உங்களுக்கென்ன வேணும்?”
“என்னுடைய பெயர் அமதன். இவங்க எல்லாம் என் மாணவர்கள்.”
இதைக் கேட்டதும் அந்த மனிதரின் முகத்தில் ஒரு வகையான ஒளி பரவியது. ஏதோ வினோதமான பொருளொன்றைப் பார்ப்பதுபோல் அமதனின் முகத்தையே மேலும் கீழுமாகப் பார்த்தார்.
“ஆமாம்... நீதான் அமதனா!”
“ஆமாம்... நீங்கள் யார் ஸ்வாமி?”
இதைக் கேட்டதும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் அந்த மனிதர்.
“அமதா, நானொரு பைத்தியரக்காரன். எல்லோரும் என்னைப் பைத்தியக்கார பாகவதர் என்றுதான் அழைப்பார்கள்.”
அந்த மனிதர் இப்படிக் கூறியதும், அமதனுடைய முகத்தில் ஆச்சரியத்திற்கான அறிகுறிகள் தோன்றின. அவனுடைய மாணவர்களுடைய முகங்களிலும்தான். பைத்தியக்கார பாகவதரைப் பற்றி அவர்கள் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார்கள். கோவிலுக்குத் தென்புறமுள்ள பெரிய தம்புரானின் இரண்டாவது மருமகன்தான் அவர். இளமைக் காலத்திலேயே வீட்டை விட்டு ஓடிய இவர், பத்து வருடங்களுக்குப் பின்னர்தான் ஊர் திரும்பினார். ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து, சங்கீதம் கற்று, சொந்த ஊர் திரும்பிய அவர் இரண்டு சங்கீதக் கச்சேரிகள் நடத்தினார். அவருடைய பெயர் நாடு முழுமையும் பரவியது. கச்சேரி நடத்த விரும்பியவர்கள் ஈ போல மொய்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர் ஒப்புக் கொண்டால்தானே? எவ்வளவு வற்புறுத்திக் கூறியும், தீர்மானமாக மறுத்தது மட்டுமல்லாமல், தன்னைத் தேடி வந்தவர்களைத் திரும்பிப் பார்க்க முடியாத அளவில் விரட்டியும் விட்டு விட்டார். மருமகன் தம்புரான் என்றுதான் அப்போது இவரை எல்லோரும் அழைப்பார்கள்.
தனியே இருக்கும் சமயங்களில் எல்லாம் எதைப் பற்றியாவது நினைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருப்பார். சில நேரங்களில் தனக்குள்ளேயே ஏதாவது முனகிக் கொள்வார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook