
எனக்கும் பாகிக்குமிடையே உள்ள உறவு உனக்கு நல்லா தெரியும். அது தெரிஞ்சுதான் நீ அவளைக் கல்யாணம் செஞ்சே. டேய், எங்க ரெண்டு பேருக்குமிடையே இருந்த உறவு பல பிறவிகளின் தொடர்ச்சியா இருந்தது. அது தெரியாம நீ அவளைக் கொடுமைப்படுத்தினே. சரி... அது இருக்கட்டும். அவளுக்கு அதைத் தாண்டியும் சகிச்சிக்கிட்டு இருக்குற அளவுக்கு மனதைரியம் இருக்கு. அவ யார்னு உனக்குத் தெரியாது.”
“அவறாச்சா, என்னை மன்னிச்சிடுங்க...”
“உன்னை நான் மன்னிக்கணுமா? இங்கே பாரு... சாராம்மா பயந்து போய் செத்து கிடக்கா. என்னோட பழைய பொண்டாட்டி. நீ அவ்வளவு சீக்கிரம் சாவேன்னு நான் நினைக்கல...”
அவர் குறுப்பை நெருங்கினார். அவரின் கழுத்தைப் பிடித்து நெறித்தார். சிறிது நேரத்தில் ஒரு கோழியைக் கொல்வதைப் போல கழுத்தை முறுக்கி, அவரைக் கீழே போட்டார். ஒரு சிறு அலறலோ அசைவோ எதுவும் இல்லாமல் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு செத்துக் கீழே விழுந்தார்.
அவறாச்சன் மெதுவாகப் படிகளில் இறங்கினார். கீழே வேலப்பன் அப்போதும் சுயநினைவில்லாமல் கிடந்தான்.
அவறாச்சன் வெளியே இருட்டில் நடக்க ஆரம்பித்தார்.
பொழுது புலரும் நேரத்தில்தான் வேலப்பன் கண்களைத் திறந்தான். அவன் முதலில் மாடிக்குச் சென்று பார்த்தான். அடுத்த நிமிடம் ஒரு அலறல் சத்தத்துடன் கீழே இறங்கி ஓடிவந்தான்.
வெளியே சென்று அவன் உரத்த குரலில் கத்தினான்: “ஆட்டக்களத்தில் அவறாச்சன் திரும்பி வந்திருக்காரு...”
“போடா, பைத்தியக்காரத்தனமா ஏதாவது உளறாதே.”
“நான் சொல்றது பைத்தியக்காரத்தனம்னு நினைக்கிறவங்க போய் பாருங்க. ஆட்டக்களத்தில் வீட்டுல ரெண்டு பேரை அவர் கொன்னு போட்டிருக்காரு!”- பைத்தியம் பிடித்தவனைப் போல அவன் சொன்னான்.
போலீஸ்காரர்களும் பொதுமக்களும் அங்கு போய் பார்த்தபோது, படுக்கையறையில் இரண்டு பிணங்கள் கிடந்தன. ஒன்று பயத்தால் இறந்ததென்றும், இன்னொன்று கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதென்றும் ‘போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’ சொன்னது.
கழுத்தில் இருந்த விரல் அடையாளங்கள் அவறாச்சனுடையவை தான் என்பதை நிபுணர்கள் கண்டுபிடித்தார்கள்.
அதற்குப் பிறகு அவறாச்சனை யாரும் பார்க்கவில்லை. ஆட்டக்களத்தில் வீட்டின் படுக்கையறையை விட்டு வெளியேறிய அவர் அந்த இருட்டில் அதற்குப் பிறகு எங்கு போனார் என்ற விஷயம் உண்மையாகவே சொல்கிறேன்- இதை எழுதுகின்ற ஆளுக்குக்கூட தெரியாது.
மன்னிக்க வேண்டும்!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook